வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதைச் செயல்முறைப் படுத்தலும்!


வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதைச் செயல்முறைப் படுத்தலும்!
13 பிப்ரவரி1897 அன்று பச்சையப்பா ஹாலில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

நமது மக்களையும் நமது மதத்தையும் குறிப்பதற்கு சாதாரணமாக ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது - இந்து. நான் வேதாந்தம் என்று எதைக் கூறுகிறேனோ அதைப் புரிந்துகொள்வதற்கு, இந்து என்ற சொல்லைச் சற்று விளக்க வேண்டியுள்ளது. பழங்கால பாரசீகர்கள் ஸிந்து நதியை ஹிந்து நதி என்று அழைத்தார்கள். சம்ஸ்கிருதத்தின் ஸ என்ற சப்தம் பழங்கால பாரசீகத்தில் ஹ என்று மாறிற்று. எனவே ஸிந்து ஹிந்து வாயிற்று. கிரோக்கர்களுக்கு ஹ வை உச்சரிப்பது கஷ்டமாயிருந்தது. ஆதலால் ஹ வையும்அவர்கள் விட்டுவிட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எனவே இந்தியர்களானோம். சிந்து நதிக்கு மறுகரையில் வாழ்பவர்கள் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர். பழங்காலத்தில் அந்த வார்த்தையின் பொருள் எதுவாகவும் இருந்திருக்கலாம் ஆனால் இன்று அது தன் எல்லா வேகத்தையும் இழந்துவிட்டது. எனெனில் சிந்துநதிக்கு இக்கரையில் இன்று வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; இந்துக்கள் உள்ளனர், அவர்களைத் தவிர முகம்மதியர்கள்,பார்சிகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் சமணர்கள் முதலியவர்களும் வசிக்கினறனர். எனவே ஹிந்து என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டால் அது இவர்கள் அனைவரையும் குறிக்க வேண்டும், மதக்கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் அனைவரையும் ஹிந்து என்று சொல்ல முடியாது. எனவே நமது மதத்திற்கு ஒரு பொதுப் பெயர் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். பல்வேறு நெறிகள், பல்வேறு கருத்துக்கள், பல்வேறு சடங்குகள் ,பல்வேறு வழிபாட்டு முறைகள் இவற்றின் ஒரு தொகுப்புபோல் உள்ளது நமது மதம் ஒரு தனித் தலைமை இல்லை ஒரு தனி பெயரில்லை, ஒரு தனித்தலைமை இல்லை ஒரு தனி அமைப்பு எதுவும் இல்லை . நமது மதப் பிரிவுகள் எல்லாம் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒரு வேளை இது ஒன்றுதான் சாஸ்திரங்களாகிய வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். வேதங்களை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்து என்று அழைக்கின்ற உரிமை ஒருவேளை இல்லை என்பது நிச்சயம்.

வேதங்கள் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். கர்ம காண்டம் பலவிதமான யாகங்களையும் சடங்குகளையும்பற்றிக் கூறுகிறது. தற்காலத்தில் அவற்றுள் பலவும் வழக்கத்தில் இல்லை. வேதங்களில் ஆன்மீக உபதேசங்கள் அடங்கிய பகுதியான உபநிடதங்களும் வேதாந்தமும் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகிறது. துவைதி, விசிஷ்டாத்வைதி, அத்வைதி என்ற வேறுபாடின்றி, நமது ஆச்சாரியர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இவற்றை மிகவுயர்ந்த பிரமாணமாக ஒப்புக் கொள்கின்றனர். எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் தத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரும் உபநிடதங்களையே தங்கள் பிராமாண சாஸ்திரமாகக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத எந்தப் பிரிவும் வைதீகத்திற்குப் புறம்பாகி விடுகிறது. எனவே தற்காலத்தில் நாடு முழுவதுமுள்ள இந்துக்களை ஒரு பெயர்கொண்டு அழைக்கலாமெனில் அது ஒருவேளை வேதாந்தி அல்லது வைதீகர் என்பதாகத்தான் இருக்கும். இவற்றுள் எதை வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வேதாந்தக் தத்துவம் அல்லது வேதாந்தம் என்ற வார்த்தைகளை இந்தப் பொருளில் தான் நான் பயன்படுத்துகிறேன்.

இந்தக் கருத்தை இன்னும் சிறிது தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் சமீப காலங்களில் வேதாந்தத் தத்துவத்தின் அத்வைத நெறியைக் குறிக்கவே வேதாந்தம் என்ற சொல்லைப் பலரும் பயன்படுத்துகின்றனர், ஆனால் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பல்வேறு தத்துவப் பிரிவுகளுள் அத்வைதமும் ஒன்று, எவ்வளவுதான் . இது நமக்குத் தெரியும். விசிஷ்டாத்வைதிகளும் அத்வைதிகளைப் போலவே உபநிடதங்களைப் போற்றுகின்றனர்; அத்வைதியைப்போல் வேதாந்தத்தையே பிரமாண சாஸ்திரமாகக் கொண்டுள்ளனர். துவைதிகளும் அப்படியே. அவ்வாறே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும். ஆனால் வேதாந்தம் என்றாலே அத்வைதம் என்று தான் பொதுவாக மக்கள் நினைக்கின்றனர். ஒரு வேளை அதற்கு ஒரு காரணமும் இருக்கலாம். நமது சாஸ்திரங்களை விளக்க ஸ்மிருதிகளும் புராணங்களும் ஏற்பட்டன, வேதங்களுக்கு உள்ள அதிகாரம் இவற்றிக்கு இல்லை. புராணங்களும் ஸ்மிருதிகளும் வேதங்களின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வேறுபடுமானால் வேதங்களின் எந்தப் பகுதியிலிருந்தேனும் வேறுபடுமானால் வேதங்களையே பின்பற்ற வேண்டும், ஸ்மிருதியை விலக்கி விட வேண்டும் என்பது நியதி. மகத்தான அத்வைதத் தத்துவ போதகரான சங்கரரின் உரைகளிலும் அவரது தத்துவ விளக்கங்களிலும் பெரும்பாலும் உபநிடதங்களே பிரமாணமாக கொள்ளப்படுகின்றன. வேதங்களில் அரிதாகக் காணப்படுகின்ற ஏதோ ஓரிரு கருத்துக்களை விவரிப்பதற்கு மட்டுமே ஸ்மிருதி கையாளப்படுகிறது.மாறாக, மற்ற பிரிவினர் ஸ்மிருதி களை அதிக மாகவும் வேதங்களைக் குறைவாகவுமே ஆதாரமாகக் கொள்கிறார்கள். நாம் துவைத நெறிகளைப் பார்க்கப் பார்க்க அங்கே ஸ்மிருதிகள்தான் அளவுக்கு அதிகமாக மேற்கோள் காட்டப்படுவது தெரிகிறது: சில இடங்களிலோ ஒரு வேதாந்தியிடமிருந்து எதிர்பார்க்க முடியாத கருத்துக்கள் கூடக் காணப்படுகின்றன. இவ்வாறு துவைத நெறிகளில் புராணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால்தானோ என்னவோ அத்வைதிகள் சரியான வேதாந்திகள் என்று கருதப்பட்டு வந்தார்கள் போலும்.

அது எப்படியிருந்தாலும் வேதாந்தம் என்ற சொல் இந்தியாவில் மத வாழ்க்கை முழுவதற்குமே பொருந்துவதாக இருக்க வேண்டும்.வேதாந்தம் என்பது வேதங்கள்தாம் இருப்பவற்றுள் மிகப் பழமையானவை வேதங்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். தற்கால அறிஞர்களின் கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் வேதங்களின் சில பகுதிகள் ஒரு காலத்திலும் பிற பகுதிகள் வேறு காலத்திலும் எழுதப்பட்டதாக ஒப்புக்கொள்ள இந்துக்கள் தயாராக இல்லை. அவை ஒரே சமயத்தில் உண்டாக்கப் பட்டவை என்ற தங்கள் கருத்தையே அவர்கள் நம்புகிறார்கள். வேறு விதமாகச் சொல்வதானால் அவை ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை, எப்போதும் இறைவனின் திருவுள்ளத்தில் அவை இருக்கின்றன என்பதே அவர்கள் கருத்து.

வேதாந்தம் என்பது இந்தியாவிலுள்ள துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் முதலிய அனைத்தையும் தன்னுள் கொண்டதாக இருக்கிறது. வேதாந்தம் என்ற சொல்லால் இதையே நான் குறிப்பிடுகிறேன். பௌத்தம், சமணம் போன்றவற்றின் சில பகுதிகளைக் கூட, அவர்கள் விரும்பினால் நாம் அதற்குள் இடம் கொடுக்கலாம். ஏனெனில் நம் இதயம் அதற்குப் போதுமான விசாலமானதாக இருக்கிறது. நம் தயாராகத்தான் இருக்கிறோம், ஆனால் அவர்கள் வர மாட்டார்கள். தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் பௌத்தத்தின் சாரம் முழுவதும் உபநிடதங்களிலிருந்தே எடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். ஏன் அவர்களின் நல்லொழுக்கக்கோட்பாடுகள், அற்புதமானவை, மகத்தானவை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்களே, அந்த நல்லொழுக்கக் கோட்பாடுகள் கூட ஏதோவோர் உப நிடதத்தில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதைக் காணலாம். அவ்வாறே, சில விசித்திரக் கொள்கைகள் தவிர சமணர்களின் சிறந்த கோட்பாடுகள் அனைத்தும் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டவையே.

இந்திய மதக் கருத்துக்களில் பிற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் முளை எல்லாமே உபநிடதங்களில் உள்ளன. தகுந்த ஆதாரம் எதுவும் இன்றியே, சில வேளைகளில், உபநிடதங்களில் பக்திக் கருத்துக்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் சொல்வது முற்றிலும் தவறென்பது உபநிடதங்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும். ஒவ்வோர் உபநிடதத்திலும் பக்திக்கருத்துக்கள் வேண்டிய அளவு உள்ளது நீங்கள் சற்று தேடிப்பார்க்க வேண்டும், அவ்வளவுதான். பிற்காலத்தில் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் முழு வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற. சில கருத்துக்கள் உபநிடதங்களில் விதை நிலையில் உள்ளன. ஒரு குறிப்பு ஒரு திட்டம் அங்கே உள்ளது. புராணங்களில் அவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இன்று முழுமையாக வளர்ச்சி பெற்றுள்ள எந்த இந்திய லட்சியத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றும் உபநிடதங்களிலிருந்தே தோன்றியுள்ளன. உபநிடதங்களை ஒழுங்காகப் படிக்காமல், பக்திக் கருத்து வெளிநாட்டிலிருந்து வந்தது என்று நிலை நாட்டச்சிலர் முயல்கிறார்கள். அவர்களின் முயற்சியை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இவையெல்லாம் தவறென்று நிரூபிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். பிரேமை என்று பக்திக் கருத்துக்கள் என்னென்ன உண்டோ அவை எல்லாமே உபநிடதங்களில், உபநிடதங்களில் ஏன் சம்ஹிதைகளிலேயே உள்ளன. காலப்போக்கில் பக்தி லட்சியங்கள் வளர்ந்து வருகின்றன, அவ்வளவுதான் சம்ஹிதைகளில் அங்கங்கே பயமும் வேதனையும் நிறைந்த மதத்தின் சுவட்டைக் காண முடிகிறது. வருணம் அல்லது வேறு ஒரு தேவனின் முன்னால், வழிபடுபவர்கள் நடுங்கி நிற்பதை அங்கங்கே நாம் பார்க்கிறோம். பாவம் என்ற கருத்தின் காரணமாக அவர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாவதையும் அங்கே நாம் காண முடியும். ஆனால் இத்தகைய விஷயங்களை விவரிக்க உபநிடதங்களில் இடம் இல்லை, பயத்தை அடைப்படையாகக் கொண்ட மதம் உபநிடதங்களில் இல்லை. அங்குக் காணப்படும் மதம் அன்பை அடிப்படையாகக் கொண்டது, அறிவையும் அடிப்படையாகக் கொண்டது.

இந்த உபநிடதங்களே நமது சாஸ்திரங்கள். இவை பலவாறாக விளக்கப்பட்டுள்ளன. நான் முன்னரே கூறியதுபோல் வேதங்களுக்கும் தொடர்ந்து வந்துள்ள புராண இலக்கியங்களுக்கும் தோன்றுமானால் புராணங்கள் தாம் வழிபட வேண்டும் ஆனால் இன்று நடைமுறையில் நாம் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு புராணங்களையும் பத்துப் பங்கு மட்டுமே வைதீக முறைகளையும் பின்பற்றி வருகிறோம். மிகவும் முரணான பல பழக்கவழக்கங்கள் நம்மிடையே நிலவுகின்றன. மதம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தமது சமுதாயத்தில் உள்ளன. இவற்றுக் கெல்லாம் இந்து சாஸ்திரங்களின் சம்மதமும் இல்லை இன்னும் சில பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் உள்ளன; அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கிறோம், பார்க்கவும் வியப்பாக இருக்கிறது. இவற்றிற்கு வேதங்கள் ஸ்மிருதிகள்,புராணங்கள் எவற்றின் சம்மதமும் கிடையாது; இவை வெறும் வட்டார வழக்கங்கள். எனினும் அந்தச் சிறு வழக்கம் கூட அழிந்து போகுமானால், தான் ஓர் இந்துவாக நிலைக்க முடியாது என்றே ஒவ்வொரு பாமர கிராமவாசியும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் ஒன்றுதான் அந்தச் சிறிய வட்டார வழக்கமும் ஒன்று தான். தான் செய்வதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை அவற்றை விட்டுவிட்டால் தனக்கு எவ்விதத் தீங்கும்நேரிடாது; மாறாக தான் ஒரு சிறந்த மனிதனாவதற்கே அது துணை செய்யும் என்பதை சாஸ்திரங்களில் படித்தாலும் அவன் உணர்வதில்லை

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,