இந்து சமயம் பகுதி-5


இந்து சமயம் பகுதி-5
அவர்கள் கண்ட முதல் கருத்து , புற உலகை அறிகின்ற கண்களாலோ புலன்களாலோ சமயத்தைப்பற்றி எதுவும் அறிந்துகொள்ள முடியாது என்பதுதான். அந்தக் குறையை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் குறை உடலையும் ஒழுக்கத்கத்தையும் பற்றியதாக இருந்தது. இந்த ரிஷிகளில் ஒருவர் கூறினார் இந்தப் பிரபஞ்சத்தின் காரணம் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய வித்தியாசம் எழுந்துவிட்டது. ஏன்? ஏனெனில் நீங்கள் புலன் நுகர்ச்சிப் பொருட்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவற்றுடனும் சமயச்சடங்குகளுடனும் திருப்தி அடைந்து விடுகிறீர்கள் . ஆனால் நானோ அப்பால் உள்ள புருஷனைக் கண்டு விட்டேன்.

உங்களிடம் நான் விவரித்துக் கொண்டிருக்கும் ஆன்மீகக் கருத்துக்களின் வளர்ச்சியோடு கூடவே வளர்ச்சியுற்ற இன்னொரு விஷயத்தைப் பற்றியும் கூற வேண்டும். ஆனால் நான் சுட்டிக்காட்டத்தான் முடியும் . ஏனெனில் அதற்கு நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கும் சம்பந்தமில்லை. ஆகவே அதை நான் அதிகம் விவரிக்கப் போவதில்லை . அதுதான் சடங்குகளின் வளர்ச்சி. ஆன்மீகக் கருத்துக்கள் கூட்டல் விகிதத்தில் வளரவளர சடங்குகளைப் பற்றிய கருத்துக்கள் பெருக்கல் விகிதத்தில் வளர்ந்தன. பழைய மூடநம்பிக்கைகள் சடங்குத் தொகுதிகளாக உருவெடுத்து, அதிகரித்துக் கொண்டே போய், கடைசியில் இந்துவின் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட அழிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டன. அவை இன்னும் இருக்கின்றன. அவை நம் வாழ்க்கையின் எல்லா பகுதிகளுக்குள்ளும் புகுந்து நம்மைப் பிறப்பிலிருந்தே அடிமைகள் ஆக்கிவிட்டன.

இருந்தும் மிகப் பழங்காலத்திலிருந்தே, இதற்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இவற்றிற்கு எதிராக உள்ள ஒரு மறுப்பு இது. சடங்குகளின் மீதுமோகம் சில, நேரங்களில் குறிப்பிட்ட ஆடைகளை அணிவது குறிப்பிட்ட வழியி ல் உண்பது பகட்டான பூஜைகள் போன்ற கேலிக்கூத்துகள் எல்லாம் சமயத்தின் புறப்பகுதி மட்டுமே. இங்கு நீங்கள் புலன் நுகர்ச்சியோடு திருப்தியடைந்து விடுகிறீர்கள். அதற்கு மேல் செல்வதில்லை.

நம்மிடமுள்ள ஒரு பெரிய குளைபாடு இது : ஆன்மீக விஷயங்களையும் புலன்களைக் கொண்டுதான் அளக்கிறோம். தத்துவம் கடவுள் அப்பாற்பட்ட விஷயங்கள் என்பதைப் பற்றியெல்லாம் ஒருவன் கேட்கிறான். எத்தனையோ நாள் கேட்டபின் , கடையில் அவனது கேள்வி எதுவாக இருக்கும் தெரியுமா? இந்த ஆன்மீகம் எனக்கு எவ்வளவு பணம் தரும்? எவ்வளவு புலனின்பத்தைத் தரும்? ஏனெனில் அவனது இன்பங்கள் எல்லாம் புலன்களிலேயே. அது இயல்புதான் ஆனால் உண்மைக்கும் நமக்கும் நடுவில் உள்ள திரைக்கான காரணங்களுள் ஒன்று இந்தப் புலனின் பங்கள் தாம் என்கிறார் எங்கள் ரிஷி ஒருவர் . சடங்குகளின் மீது மோகம் புலனுகர்ச்சி, பல்வேறு கொள்கைகளை வகுத்தல் - இவை நமக்கும் உண்மைக்கும் இடையில் ஒரு திரையைப் போட்டுவிட்டது. திரை என்கின்ற இந்தக் கருத்து ஒரு மாபெரும் மைல்கல். இதை நாம் கடைசிவரையி ல் கொண்டு செல்ல வேண்டும். இதுதான் கடைசியில் வேதாந்தம் கூறும் மாயை என்னும் அற்புதமான கொள்கையாக உருவெடுத்தது. இந்தத் திரைதான் வேதாந்தத்தின் விளக்கமாக இருக்கப்போகிறது. - உண்மை எப்போதும் இருந்தது, இந்தத் திரை அதை மறைத்துக் கொண்டிருந்தது.

இவ்வாறு இந்தப் பண்டைய ஆரிய சிந்தனை யாளர்கள் புதிய விஷயம் ஒன்றைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வதைக் காண்கிறோம். புற உலகில் எவ்வளவு ஆராய்ந்தாலும் தங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது என்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ஊழிக்காலம்வரை தேடினாலும் பலன் இல்லை என்பது அவர்களுக்கு விளங்கியது. ஆகவே அவர்கள் இந்த வேறு முறையைப் பின்பற்றினார்கள். புலன்களின் ஆசைகள், சடங்குகளிலுள்ள பற்றுதல் - இவை யாவும் உண்மைக்கும் தங்களுக்கும் இடையே ஒரு திரையைப் போட்டுவிட்டன. அந்தத் திரையை எந்தக் சடங்காலும் விலக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். சொந்த மனத்தையே ஆராய வேண்டும் தங்கள் உள்ளேயே உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது புலனாயிற்று. புறவுலகம் பயனற்றுப் போகவே அவர்கள் உண்மையான தத்துவம் ஆயிற்று.

வேதாந்தத்தின் அடிக்கல் இதுவே. வேதாந்தத் தத்துவம் இங்கிலிருந்து தான் தொடங்குகியது இங்கே எல்லா கேள்விகளும் ஆராய்ச்சிகளும் அகத்திலேயே நடைபெறுவதை போகப் போகக் காண்கிறோம் உண்மையை எந்த சமயத்திலும் தேட வேண்டாம் அது இங்கே மனித ஆன்மாவில் அற்புதங்களுக்கு எல்லாம் அறிபுதமான மனித ஆன்மாவில் இருறுக்கிறது; அறிவுக் களஞ்சியமும். வாழ்க்கையில் சுரங்கமுமான மனித ஆன்மாவில் இருக்கிறது . அதை இங்கே தேடுங்கள் என்று தோடக்கத்திஙலயே அவர்கள் பிரகடனம் செய்ததுபோல் தோன்றியது.

இங்கே இல்லாதது அங்கே இருக்க முடியாது, வெளியே தெரிவது உள்ளே இருப்பதன் மங்கலான பிரதிபலிப்பை என்பதைப் படிப்படியாக ஆராய்ந்து அவர்கள் கண்டார்கள். பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள கடவுள் என்ற பழமையான கருத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு, கடவுளைப் பிரபஞ்சத்திற்குள் வைத்தார்கள். பின்னர்,. அவர் பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ளவர் அல்ல, பிரபஞ்சத்திற்குள் உள்ளேயே இருப்பவர் என்றாகியது. இறுதியில் அவரை அங்கிருந்து அகற்றித் தங்கள் இதயத்தில் நிறுவினார்கள். அவர் மனித இதயத்தில் அவனது ஆன்மாவிற்கு ஆன்மாவாக மெய்ப் பொருளாக விளங்குகிறார்.

வேதாந்தத் தத்துவத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், பல உயர்ந்த கருத்துக்களை அறிய வேண்டும். முதலில் அது கான்ட் ஹெகல் போன்றோர் கூறுகின்ற பொருளில் உள்ள தத்துவம் அல்ல. அது ஒரு புத்தகம் அல்ல ஒருவர் எழுதியது அல்ல. தொடர்ந்து பலர் எழுதியவையே வேதாந்தம். சிலவேளைகளில் ஒரு நூலில் ஐம்பது விஷயங்கள் இருக்கும். அவை சரியாக வரிசைப்படுத்தப் பட்டிருக்கவும் செய்யாது. எண்ணங்கள் அங்கங்கே குறித்து வைக்கப்பட்டிருக்கும், அவ்வளவு தான். சிலவேளைகளில் பல பிற விஷயங்களுக்கு இடையில் ஒர் அற்புதமான கருத்தைக் காண்கிறோம். ஆனால் ஒன்று உபநிடதக் கருத்துக்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே போகின்றன. ஒவ்வொரு ரிஷியின் மனமும், அது எப்படி இயங்கியதோ, அப்படியே அந்தப் பழைய பண்படாத மொழியில் வர்ணத்தினால் தீட்டப்பட்டதுபோல் உள்ளது. மிகவும் பண்படாமல் இருந்த கருத்துக்கள், வரவர நுட்பமாகி, வேதாந்தத்தின் குறிக்கோளை அடைகின்றன. இந்தக் குறிக்கோளுக்கு ஒரு தத்துவப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அது ஒளிமிக்க தேவர்களைத் தேடுவதாக ஆரம்பித்தது. பிறகு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைத் தேடுவதாக ஆரம்பித்தது. பிறகு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைத் தேடுவதாக ஆயிற்று. கடைசியில் அந்தக் தேடலே வேறு பெயர் பெற்றது தத்துவ ரீதியாகப் பார்க்கப்பட்டது; எதைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்தது ஆகுமோ அதை அந்த அனைத்தின் ஒருமையைத் தெரிந்துகொண்டார்கள்.

3.இந்து சமயத்தின் பொது அடிப்படைகள்

புனிதமான ஆர்யாவர்த்தத்தில் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படுவது இந்த இடம். நமது மகத்தான ரிஷியாகிய மனு குறிப்பிடுகின்ற பிரம்மாவர்த்தம் இதுதான். ஆன்மாவை அடைவதற்கான பெரும் துடிப்பு ஆம் வரலாறு காட்டுவதுபோல் எதர்காலத்தில் உலகத்தையே நிறைத்துப் பரவப் போகின்ற அந்தப் பேரார்வம் இந்தப் பூமியிலிருந்துதான் எழுந்தது. பெருநதிகளைப்போல் ஆன்மீகப் பேரார்வங்கள், பொங்கியெழுந்து ஒன்று சேர்ந்து, வலிமை பெற்று உலகம் முழுவதிலும் பயணம் செய்து, இடிபோன்ற குரலில் தங்களை அறிவித்துக்கொண்ட பூமி இதுதான். இந்தியாவிற்குள் நுழைந்த எல்லா ஊடுருவல்களையும் படையெடுப்புகளையும் முதன்முதலில் தாங்கிக் கொண்ட பூமி இதுதான். வெளியிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த காட்டுமிராண்டிகளின் ஒவ்வொரு தாக்குதலையும்தன் நெஞ்சில் முதலில் தாங்கிய வீர பூமிஇதுதான். அத்தனை துன்பங்களுக்குப் பிறகும் தன் பெருமையையும் வலிமையையும் முழுவதுமாக இழந்து விடாமல் இருக்கும் பூமி இதுதான். இங்கேதான் சாந்தமயயான நானக் தமது மகத்தான உலகம் தழுவிய அன்பைப் பிற்காலத்தில் போதித்தார். இங்குதான் அவரது விசாலமான இதயம் திறந்தது. உலகம் முழுவதையும் அணைத்துக்கொள்ள - இந்துக்களை மட்டுமல்ல முகமதியர்களையும் தழுவிக்கொள்ள - அவரது கைகள் நீண்ட இடம் இதுதான். நமது இனத்தின் கடைசி வீரர்களுள் ஒருவரும், மங்காப்புகழ் பெற்றவர்களுள் ஒருவருமான குரு கோவிந்த சிங் தம்முடையவும், தமது அன்பிற்குரியவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடையவும் ரத்தத்தைச் சமயத்திற்காகச் சொரிந்தார் யாருக்காக ரத்தம் சிந்தினாரோ அவர்களால் புறக்கணிக்கப்பட்ட பின்னரும் தமது நாட்டிற்கு எதிராக ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல், நெஞ்சில் அடிபட்டுக் காயமுற்ற சிங்கம்போல் மரணத்தை எதிர்நோக்கித் தென்னாடு செல்வதற்காக அவர் பின்வாங்கியது இந்தப் பூமியில்தான்.

ஐந்து நதிகள் பாயும் நாட்டின் குழந்தைகளே இங்கே, நமது இந்தப் புராதன பூமியில் உங்கள் முன்னால் நான் நிற்கிறேன் - ஆசிரியனாக அல்ல ஏனெனில் கற்பிப்பதற்காக எனக்குத் தெரிந்தது மிகவும் சொற்பமே. மேற்கில் வாழும் சகோதரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைச் சொல்வதற்காக அவர்களுடன் தன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கிழக்கிலிருந்து வருகின்ற ஒருவனாக மட்டும் இங்கு நிற்கிறேன். நமக்குள் நிலவும் வேறுபாடுகளைக் கண்டறிய நான் இங்கு வரவில்லை நாம் எங்கு ஒன்றுபடுகிறோம் என்பதைக் காணவே வந்திருக்கிறேன். எந்த அடிப்படையில் வளர்ந்து நாளுக்கு நாள் வலிமை காண முடியும் என்பதை அறியவே நான் முயல்கிறேன். அழிவு வேலைகளை அல்ல ஆக்க வேலைகளை உங்கள் முன் வைக்கவே நான் வந்திருக்கிறேன். விமர்சித்துக் கொண்டிருப்பதற்கான நாட்கள் கழிந்துவிட்டன, ஆக்க வேலைகளுக்காக நாம் காத்திருக்கின்ற வேளை இது. விமர்சனம், ஏன், கடுமையான விமர்சனம்கூடச் சிலவேளைகளில் உலகிற்குத் தேவைதான் ஆனால் அது அப்போதைக்கு மட்டுமே. எல்லா காலத்திற்கும் தேவைப்படுவது வளர்ச்சியும் ஆக்கமுமே தவிர குறைகூறுவதும் அழிவும் அல்ல. ஏறக் குறைய கடந்த நூறு ஆண்டுகளாகவே நமது நாட்டில் விமர்சன வெள்ளம் கரைபுரண்டுதான் ஓடிக்கொண்டிருக்கிறது நமது குறைபாடுகளின் மீது மேலை விஞ்ஞானம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்தக் குறைபாடுகளும் மலினங்களும் மற்ற எல்லாவற்றையும்விட வெளிப்பட்டுத் தெரிகின்றன.

எனவே இயல்பாகவே நம்நாட்டின் எல்லா இடங்களிலும் மகத்தான அறிவுஜீவிகள் தோன்றினார்கள். அவர்களின் இதயங்களில் சத்திய நாட்டமும் நியாய உணர்ச்சியும் நாட்டுப்பற்றும் குடிகொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்கள் சமயத்தின் மீதும் தெய்வத்தின்மீதும் அவர்களுக்கு ஆழ்ந்த அன்பு இருந்தது. இந்த மாமனிதர்களின் உள்ளத்து உணர்ச்சிகள் மிகவும் ஆழமானதாக இருந்தன; அவர்களின் அன்பு மிகவும் ஆழ்ந்ததாக இருந்தது. எனவே தாங்கள் எதை யெல்லாம் தவறு என்று நினைத்தார்களோ அதையெல்லாம் விமர்சித்தார்கள். கடந்த காலத்தின் இந்த மகத்தான உள்ளங்களுக்குப் பெருமைகள் சேர்வதாக அவர்கள் எவ்வளவோ நன்மையைச் செய்தார்கள். ஆனால் இன்றைய குரல் நம்மிடம் போதும் என்று சொல்லியவாறு வருகிறது. போதிய அளவிற்கு விமர்சனம் செய்தாகிவிட்டது.குற்றம் கண்டுபிடித்தாலும் போதிய அளவிற்குச் செய்தாகிவிட்டது. இப்போது புதுப்பிக்கவும் புனரமைப்பதற்குமான காலம் வந்திருக்கிறது; சிதறிக் கிடக்கின்ற நம் சக்திகளை யெல்லாம் திரட்டி ஒரு மையத் தில் குவித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏறக்குறைய தடைபட்டுப் போய்விட்ட இந்த நாட்டின் முன்னேற்றப் பயணத்தை அதன்மூலம் வழி நடத்துவதற்கான காலம் வந்திருக்கிறது. இந்த வீடு சுத்தமாக்கப்பட்டு விட்டது இனி இதில் புதிதாகக் குடியேறலாம். பாதை சீரமைக்கப்பட்டுவிட்டது, ஆரியர்களின் குழந்தைகளே, முன்னேறிச் செல்லுங்கள்.

பெரியோர்களே, இந்த நோக்கம்தான் என்னை உங்களிடம் வரச் செய்தது. நான் எந்தக் கட்சியையோ எந்தப் பிரிவையோ சேர்ந்தவன் அல்ல என்பதை முதலிலேயே உங்களிடம் தெளிவாகக் கூறிவிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை அவையெல்லாம் மகத்தானவை பெருமை மிக்கவை அவற்றிலுள்ள நல்ல வற்றையும் உண்மையானவற்றையும் நான் என் வாழ்நாள் முழுவதும் தேடி வருகிறேன். இன்றிரவு இது சம்பந்தமான சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எந்தக் கருத்தில் நாம் இணைய முடியும் என்பதைக் கண்டறிவதும் முடியுமானால் இணைவதற்கான ஓர் அடிப்படையைக் காண்பதும், இறையருளால் அத்தகைய அடிப்படையைக் கண்டறிய முடிந்தால் அதை ஏற்றுக்கொண்டு, கொள்கையளவிலிருந்து அதைச் செயல்முறை நிலைக்குக் கொண்டு வருவதும்தான் என்திட்டம்.

நாம் இந்துக்கள். இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. அந்தச் சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத்தையும் நான் ஏற்றுக் கொள்ள வில்லை. பழங்காலத்தில் அந்தச் சொல் சிந்து நதியின் மறுகரையில் வாழ்பவர்கள் என்று பொருள்பட்டது நம்மை வெறுப்பவர்களுள் பலர் தற்போது அதற்கு மோசமான பொருள் கூறலாம். ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை. இந்து என்ற சொல் எவையெல்லாம் பெருமை மிக்கதோ, எவையெல்லாம் ஆன்மீகமோ அவற்றைக் குறிக்கிறதா அல்லது வெட்கப்படத்தக்க ஒன்றின் பெயராக, தாழ்த்தப்பட்ட பயனற்ற நம்பிக்கையற்ற ஒன்றைக் குறிக்கின்ற ஒன்றாகத்தான் நிலைபெறுமா என்பது நம்மைப் பொறுத்துதான் உள்ளது.

இன்று இந்து என்ற சொல் மோசமான எதையாவது குறிப்பதாக இருக்குமானால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடியாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம். நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கைக் கோட்பாடுகளுள் ஒன்றாக உள்ளது. இதுவரை பிறந்ததுள்ள கர்வம் மிக்கவர்களுள் நான் ஒருவன் உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன் - இந்தக் கர்வம் என் பெருமையின் காரணமாக அல்ல எனது பாரம்பரியத்தின் பெருமைக்காகவே ஆகும். கடந்த காலத்தைப்பற்றி நான் அதிகமாகப் படிக்குந்தோறும், நான் பின்னோக்கிப் பார்க்குந்தோறும் இந்தக் கர்வம் என்னிடம் மேலோங்குகிறது. அது எனக்கு வலிமையைத்தருகிறது; ஆழ்ந்த நம்பிக்கை நிறைந்த தைரியத்தைத் தருகிறது; பூமியின் தூசியிலிருந்து என்னை உயர்த்துகிறது; நமது அந்த மகத்தான முன்னோர்கள் வகுத்துச்சென்றுள்ள சீரிய திட்டங்களைச் செயல்படுத்த வைத்திருக்கிறது. அந்தப் புராதன ஆரியர்களின் குழந்தைகளே! நீங்களும் அத்தகைய கர்வம் கொள்ளுங்கள்! உங்கள் முன்னோர்களிடம் அத்தகைய நம்பிக்கை உங்கள் ரத்தத்தில் பொங்கட்டும், அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொர் அம்சத்திலும் கலந்து பரவட்டும், உலகின் கதிமோட்சத்திற்காக அது செயல்படட்டும்!

நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்வதான தனியொரு கருத்தைக் கண்டுபிடிக்கும் முன் நமது தேசிய வாழ்வின் பொது அடிப்படையை நினைவுகூர வேண்டியது அவசியம். ஒவ்வொரு மனிதனிடமும் தனித்துவம் இருப்பதுபோல் நாடுகளுக்கும் தனித்துவம் இருக்கிறது. ஒருவன் சில விஷயங்களில் மற்றவனிடமிருந்து வேறுபடுவதைப் போல் அவனுக்கென்று சில தனி குணங்கள் இருப்பதைப் போல் ஓர் இனமும் மற்றோர் இனத்திலிருந்து சில குறிப்பிட்ட பண்புகளில் வேறுபடுகிறது. இயற்கையின் திட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பங்கை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது, அதற்காக அவனது முன்வினை அவனுக்கென்று ஒரு குறிப்பிட்ட வழியை வகுத்துக் கொடுக்கிறது. நாடுகள் விஷயமும் அப்படியே ஒவ்வொரு நாடும் நிறைவேற்றுவதற்கென ஒரு லட்சியம் உள்ளது. ஒவ்வொரு நாடும் அளிப்பதற்கான ஒரு செய்தி உள்ளது. ஒவ்வொரு நாடும் சாதிப்பதற்கான ஒரு பணியும் உள்ளது. எனவே நம் இனத்தின் பணி எது, நிறைவேற்ற வேண்டிய லட்சியம் எது, நாடுகளின்ங அணிவகுப்பில் அதன் இடம் எது, நாடுகளின் அணிவகுப்பில் அதன் இடம் எது, இனங்களின் ஒற்றுமைக்காக அது அளிக்க வேண்டிய பங்கு எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது.

சில நாகங்களின் தலையில் மாணிக்கம் இருக்கும் என்றும் அது இருக்கும்வரை அதை யாராலும் கொல்ல முடியாது என்றும் கதை சொல்வதை நாம் குழந்தைப் பருவத்தில் கேட்டிருக்கிறோம். அரக்கர்களின் கதையும் உள்ளது. அவர்களின் உயிர் சில சிறிய பறவைகளின் உடம்பில் இருக்கும், அந்தப் பறவைகள் பத்திரமாக இருக்கும் வரை அந்த அரக்கர்களைக் கொல்ல முடியாது. துண்டுதுண்டாக வெட்டினாலும் என்னதான் செய்தாலும் அவர்களைச் சாகடிக்க முடியாது. நாடுகளின் விஷயமும் அதுபோல் தான் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தேசிய வாழ்வு மையம் கொண்டிருக்கின்ற ஒர் இடம் உள்ளது. அங்குதான் அந்த நாட்டின் வாழ்க்கை இருக்கிறது. அதைத் தொடாதவரை அந்த நாடு அழியாது.

இந்த விளக்கத்தின் கண்னோட்டத்தில் உலக வரலாறு காட்டும் அதிசயத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். நமது இந்தப் பொன்னாட்டின் மீது காட்டு மிராண்டிகளின் படையெடுப்புகள் அலை அலையாகப் புரண்டு வந்தன, அல்லாஹு அக்பர் என்னும் ஒலி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வானையே நிறைத்துப் பரவியது, தன் உயர் எந்தக் கனம் போகுமோ என்பது தெரியாமல் ஒவ்வொர் இந்துவும் உறைந்து போயிருந்தான். சரித்திரப் பிரசித்தி பெற்ற உலக நாடுகளில் மிக அதிகமான துன்பங்களுக்கு உள்ளானதும் மிக அதிகமான முறை கீழடக்கப் பட்டதுமான நாடு இது. என்றாலும் நாம் ஏறக்குறைய அப்படியே , அதே இனமாக தேவையானால் அத்தகைய துன்பங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சந்திப்பதற்குத் தயராக இருக்கிறோம். அது மட்டுமல்ல நாம் வலிமையோடு இருப்பதுடன் , வெளிநாடுகளுக்குச் செல்லவும் தயராக இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் சமீப காலத்தில் தெரியும் செய்கின்றன. ஏனென்றால் விரிவடைவது தானே வாழ்வின் அறிகுறி.

நமது லட்சியங்களும் சிந்தனைகளும் முன்புபோல் நம் நாட்டு எல்லைக்குள் அடங்கிக்கிடக்கவில்லை என்பதை இன்று காண்கிறோம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவை அணிவகுத்து வெளியே செல்கின்றன, பிற நாடுகளின் இலக்கியங்களில் ஊடுருவுகின்றன, மற்ற நாடுகளில் தனக்குரிய இடத்தைப் பெறு கின்றன, சில நாடுகளில் அதிகார பீடத்தில் கூட இடம் பிடித்திருக்கின்றன. இதற்கான விளக்கம் என்னவென்றால் உலகின் ஒட்டுமொத்த முன்னோற்றத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது, மேன்மையதனது, மனிதனின் மனத்தை ஆக்கிரமிக்க முடிந்தவற்றுள் மிகமிக நுண்மையானது. அது தத்துவமும் ஆன்மீகமும் ஆகும். நம் முன்னோர்களும் பல வழிகளில் முயன்றார்கள், இது நமக்குத் தெரியும். மற்ற நாட்டினரைப் போல் புறவுலக ரகசியங்களை அறிய முற்பட்டார்கள். ஈடிணையற்ற அறிவு வளம் கொண்டவர்களான நமது மகத்தான இனத்தினர், அதில் உலகம் கற்பனையில்கூடக் காணஇயலாத அதிசயங்களை நிகழ்த்தி இருப்பார்கள். ஆனால் அதைவிட உயர்ந்த ஒன்றிற்காக அந்த முயற்சியைக் கை விட்டு விட்டார்கள். அந்த உயர்ந்தவைதான் வேதங்களில் எதிரொலிக்கின்றன - யார் மாறாமல் இருக்கிறாரோ, அவரை நாம் அறியச் செய்வது தான், அனைத்திலும் மகத்தான அறிவு மாறக்கூடிய நிலையற்ற இயற்கையைப் பற்றிய மரணமும் துன்பமும் துயரமும் நிறைந்த உலகைப்பற்றிய அறிவியல் மகத்தானது, மகத்தானதுதான். ஆனால் நம் முன்னோர்களின் கருத்துப்படி மாற்றமே இல்லாத ஆனந்த மயமான இறைவனைப் பற்றிய அறிவுதான் அனைத்திலும் நுண்மையான அறிவியல் . அதில் மட்டுமே அமைதி உள்ளது, அதில் மட்டுமே நிலையான வாழ்வு உள்ளது, அதில் மட்டுமே முழுமை உள்ளது, அதில் மட்டுமே துன்பங்கள் எல்லாம் ஒழிக்கின்றன.

மிஞ்சிப்போனால் அறிவியல்கள் நமக்கு உணவும் உடையும் தரலாம், பிறர்மீதுசெலுத்துவதற்கான அதிகார பலம் தரலாம்; சக மனிதர்களை எப்படி வெல்வது, எப்படி ஆள்வது பலவீனர்களைப் பலமானவர்கள் எப்படி அடக்குவது என்பதையெல்லாம் கற்றுத் தரலாம். நமது முன்னோர்கள் விரும்பியிருந்தால் கட்டாயமாக இத்தகைய அறிவியல்களைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவற்றை நாடாததற்காக நாம் இறை வனைப் போற்றுவோம். அந்த அறிவியல்களை நாடாமல் அவற்றைவிட மேன்மையான அளவற்ற மடங்கு உன்னத மான அளவற்ற மடங்கு ஆனந்தம் தருகின்ற மறுபக்கத்தை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள். இன்று அது தேசியப் பண்பாகிவிட்டது. ததந்தையிடமிருந்து மகனுக்கு என்ற ரீதியில் பரம்பரைபரம்பரையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து இன்று அது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது. ,நம் வாழ்வோடு வாழ்வாகியுள்ளது நம் நரம்புகளில் ஓடுகின்ற ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு துளியிலும் அதிர்ந்து, நம் இயல்பாகவே ஆகிவிட்டது. அதன் காரணமாக சமயம், இந்து இந்த இரண்டும் ஒரே பொருளைத் தருகின்ற சொற்களாகி விட்டன.

இதுதான் நமது தேசிய பண்பு, இதை யாரும் அசைக்க முடியாது. வாளுடனும் நெருப்புடனும் வரும் காட்டுமிரண்டிகளும் சரி மிருகத்தனமான சமயங்களைப் பரப்ப வரும் காட்டுமிராண்டிகளும் சரி இவர்களில் யாராலும் அந்தச் சாரத்தை அந்த மாணிக்கத்தைத் தொட முடியாது இந்த இனத்தின் உயிர் இருக்கின்ற பறவை யைக் கொல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை. இதுவே இந்த இனத்தின் உயிர்நாடி இந்த உயிர்நாடி இருக்கும்வரை சூரியனின் கீழ் உள்ள எந்தச் சக்தியாலும் இந்த இனத்தை அழிக்க முடியாது , உலகின் எல்லா சித்திரவதைகளும் துன்பங்களும் நம்மை வருத்தாமல் கடந்து சென்றுவிடும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றவை அனைத்திலும் மகோன்னதமான ஆன்மீகத்தை நாம் பற்றிக்கொண்டிருக்கும் வரை நாமும் பிரகலாதனைப்போல் அக்கினியில் குளித்தெழுந்து வெளிவந்து விடுவோம்.

ஓர் இந்து ஆன்மீக உணர்வின்றி இருப்பானானால், அவனை நான் இந்து என அழைக்க மாட்டேன் பிற நாடுகளில் மனிதனுக்குப் பெரும்பாலும் அரசியல்தான் முதன்மையானதாக இருக்கும் அதனுடன் ஏதோ சிறிது சமயமும் இருக்கும் ஆனால் இந்தியாவில் நமது வாழ்க்கையின் முதற்கடமை முக்கியக் கடமை ஆன்மீகம் தான். அதற்குப் பிறகு நேரம் இருந்தால் மற்றவை இடம் பெறும். இதை மனத்தில் கொண்டால், நம் நாட்டு நலனிற்காக நாம் கடந்த காலங்களில் செய்ததும், இனி வரும் காலங்களிலும் செய்ய வேண்டுவதும் நம் இனத்தின் எல்லா ஆன்மீக சக்திகளையும் கண்டுபிடிப்பதே என்பது ஏன் என்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும். சிதறிக் கிடக்கின்ற ஆன்மீக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவி ல் தேசிய ஒருமைப்பாட்டை கொண்டுவர முடியும். ஆன்மீகம் என்ற ஒரே ராகத்திற்கு ஏற்ப இசைந்து துடிக்கின்ற இதயம் கொண்டவர்களின் சங்கமத்தால்தான் இந்த நாட்டைஉருவாக்க முடியும்.

இந்த நாட்டில் போதிய அளவு சமயப் பிரிவுகள் உள்ளன. தற்காலத்தில் போதுமானவை உள்ளன, எதிர்காலத்திலும் போதுமானவை தோன்றும். இது நமது சமயத்தின் சிறப்புத் தன்மையாகும். நமது சமயத்தின் நுண் தத்துவங்கள் நம் தலைகளுக்கு மேல் விரிந்து கிடக்கும் வானம்போல் பரந்தவை இயற்கையைப் போல் நிலையானவை; அவற்றின் மீது எத்தனையெத்தனையோ விதமான விளக்கங்கள் எழுதுகின்ற அளவிற்குப் பரந்த போக்கு கொண்டவை. எனவே இங்கே சமயப் பிரிவுகள் இயல்பாக இருந்தே தீரும். ஆனால் இருக்கத் தேவை யற்றது எது என்றால் அவற்றுக்கிடையே சண்டை பிரிவுகள் இருந்தேயாக வேண்டும் ஆனால் பிரிவினைவாதம் கூடாது பிரிவினைவாதத்தால் இந்த உலகம் முன்னேறப் போவதில்லை ஆனால் பிரிவுகள் இல்லையென்றால் உலகிற்கு முன்னேற்றம் இல்லை. ஏதோ ஒரு கூட்டத்தினர் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. உலகம் முழுவதும் ஏறக்குறைய எல்லையற்றுப் பரந்திருக்கும் சக்தியை ஏதோ சிலரால் கையாளமுடியாது. எனவே அந்த வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் உள்ளாகிறோம். இதுவே பல பிரிவுகள் உண்டாக ஏதுவானது ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்துவதற்காக சமயப் பிரிவுகள் இருக்கட்டும். ஆனால் இந்தப் பிரிவுகள், இந்த வேறுபாடுகள் வெறும் தோற்றம் மட்டுமே, இந்த எல்லா வேறுபாடுகளுக்கு இடையிலும் சமரசத்தின் ஓர் இழை ஊடுருவி நிற்கிறது, ஓர் அழகிய ஒருமைப்பாடு அனைத்துள்ளும் நிலவுகிறது என்று நமது சாஸ்திரங்கள் முழங்கும் போது சமயச் சண்டைகள் தேவைதானா? ஏகம் ஸத்விப்ரா; பஹுதா வதந்தி உள்ளது ஒன்றே ரிஷிகள் அதனைப் பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள், என்றுதான் நமது மிகப் புராதன நூல்கள் கூறுகின்றன. எனவே எல்லா சமயப் பிரிவினைவாதப் போராட்டங்களும் சண்டைகளும் இருக்குமானால் பொறாமையும் வெறுப்பும் நிலவுமானால் அது நமக்குத்தான் இழிவு. மேன்மைமிகு முன்னோர்களின் வழித்தோன்றல்கள் என்று இது அவமானமே தவிர, வேறல்ல.

வைணவர், சைவர், சாக்தர், காணபத்யர் முதலிய யாரானாலும் புராதன வேதாந்தினாலும் நவீனப் பிறிவுகளைச் சேர்ந்தவரானாலும் பழங்காலத்தின் கடுமையான பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆனாலும் நவீன சீர்திருத்தப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆனாலும் குறிப்பிட்ட சில கோட்பாடுகளை ஏற்றுக்கொள்பவர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றே என்று நான் கருதுகிறேன் . இந்து என்று தங்களை அழைத்து கொள் கின்ற எல்லோரும் இந்தக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள்.

இந்த கோட்பாடுகளை விளக்குவதிலும் விரித்துரைப்பதிலும் வேறுபாடுகள் இருக்கலாம். அந்த வேறுபாடுகள் இருந்தேயாக வேண்டும் அவை அனுமதிக்கப்படவே வேண்டும் . ஏனெனில் எல்லோரையும் நமது நிலையுடன் சேர்த்துக் கட்டிப் போடுவதல்ல நமது அளவுகோல். எல்லா மனிதர்களும் நமது கருத்துக்களின் படி வேலை செய்ய வேண்டும் நமது வழி முறைகளின் படி வாழ வேண்டும் என்று வற்புறுத்துவது பாவம். சமய ரகசியங்களின் அழிவற்ற உபதேசங்களே வேதங்கள் என்ற முதல் கருத்தை இங்குள்ள அனைவரும் ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்தப் புனித இலக்கியங்கள் இயற்கையைப் போலவே தோற்றமும் முடிவும் இல்லாதவை என்பதை நாம் அனைவரும் நம்புகிறோம். இந்தப் புனித நூல்களின் சன்னதியில் நிற்கும் போது நமது சமய வேற்றுமைகளும் சமயப் போராட்டங்களும் ஒழிந்துவிடும் என்றும் நாம் நம்புகிறோம். சமய வேற்றுமைகளை எல்லாம் முறையீடு செய்யும் இறுதி இடமான உயர்நீதி மன்றம் இந்த வேதங்களே என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வேதங்கள் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் பல்வேறு கருத்துக்களைக் கொள்ளலாம். அதன் ஒரு பகுதியை மற்றப் பகுதியைவிட மேலானதாக ஒரு பிரிவு கருதலாம்; ஆனால் வேதங்களின் திருமுன்னர் நாம் அனைவரும் சகோரர்கள் இந்த வழிபாட்டிற்குரிய நிலையான அற்புதமான வேதங்களிலிருந்தே இன்று நாம் பெற்றிருக்கும் நல்லதும் புனிதமானதும் தூய்மையானதும் ஆகிய அனைத்தும் வந்திருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் போது, அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல.

நல்லதுநாம் இவை எல்லாவற்றையும் நம்பவதாவனால் முதன்முதலில் இந்தக் கருத்து நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை பரப்பப்படட்டும். இது உண்மை என்றால் வேதங்கள் அவற்றிற்கு எப்போதும் உரியதான நாமும் நம்புவதான தலைமை இடத்தைப் பெறட்டும். ஆகையால் முதலில் வேதங்கள்.

நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற இரண்டாவது கருத்து கடவுள் படைப்பவர் அவர், அண்டங்கள் அனைத்தையும் காக்கின்ற சக்தி அவர், குறிப்பிட்ட காலங்களில் அவரிடமே அவை ஒடுங்குகின்றன, மற்றக் காலங்களில் அவரிடமிருந்தே வெளிவந்து பிரபஞ்சம் எனப் படும் இந்த அற்புதக் கோலமாக வெளிப்பட்டு நிற்கிறது. கடவுள் பற்றிய விளக்கத்தில் நாம் வேறுபடலாம். ஒருவர் முற்றிலும் சகுணமான கடவுளை நம்பலாம். இவர்கள் எல்லோருமே வேதங்களிலிருந்துதான் அத்தாட்சி பெறு கிறார்கள். இவையெல்லாம் இருந்தும் நாம் அனைவரும் கடவுளை நம்புவர்கள். அதாவது எதிலிருந்து எல்லாம் வந்ததோ எதில் எல்லாமே வாழ்கிறதோ இறுதியில் எல்லாம் எங்கே திரும்பியே தீர வேண்டுமோ அந்த மாபெரும் அற்புதமான எல்லையற்ற சக்தியிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அவனை இந்து என்றே அழைக்க முடியாது. இது சரியென்றால் இந்தக் கருத்தை நாடு முழுவதும் பரப்ப முயற்சிப்போம்.

நீங்கள் விரும்புகின்ற கோட்பாட்டைப் பரப்புங்கள் அதில் நமக்கொன்றும் கருத்துவேற்றுமை இல்லை, அதைப்பற்றி நாம் சண்டையிடப் போவதும் இல்லை ஆனால் நீங்கள் பரப்புது கடவுளைப் பற்றிய கோட்பாடாக இருக்கட்டும் அது ஒன்றுதான் நாம் வேண்டுவது. ஒரு கோட்பாடு மற்றதைவிட மேலானதாக இருக்கலாம், ஆனால் அவற்றுள் எதுவும் தீமையானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஒன்று நல்லது மற்றொன்று அதைவிட நல்லது, இன்னொன்று அதை விட நல்லது. ஆனால் கெட்டது என்ற ஒரு சொல்லே நமது சமய அகராதியில் இடம் பெறவில்லை. எனவே இறைவனின் திருநாமத்தைத் தாங்கள் விருப்பும் வழியிலேயே போதிக்கின்ற அனைவரையும் எம்பெருமான் ஆசீர்வதிப்பாராக. அவர் அதிகமாகப் போதிக்கப்படுகின்ற அளவு நம் இனத்திற்கு நல்லது. நம் குழந்தைகள் இந்தக் கருத்துடன் வளர்க்கப்படுவார்களாக இறைவனின் திருநாமம், ஏழைகள் மற்றும் தாழ்ந்தவர்கள், அது போலவே பணக்காரர்கள் மற்றும் உயர்ந்தவர்களின் வீடுகளில் எல்லாம் நுழையட்டும்.

நான் உங்களிடம் கூறப்போகும் மூன்றாவது கருத்து இது பிற இனத்தினர் கூறுவதுபோல் இந்த உலகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் படைக்கப் பட்டது, ஒரு குறிப்பிட்ட நாளன்று இது என்றென்றைக்குமாக அழியப் போகிறது என்பதை நாம் நம்புவ தில்லை அதைப் போலவே, இந்தப் பிரபஞ்சத்துடன் மனித ஆன்மாவும் வெறும் சூன்யத்திலிருந்து படைக்கப் பட்டது என்பதையும் நாம் நம்புதில்லை. இங்கே நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்கின்ற மற்றொரு கருத்து இருப்பதாகத் தோன்றுகிறது.

இயற்கை ஆதியும் அந்தமும் இல்லாதது; இந்தப் புறவுலகம் எதனால் ஆக்கப்பட்டுள்ளதோ அந்த ஜடப்பொருள் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அதன் நுண்நிலைக்குத் திரும்புகிறது; ஒரு குறிப்பிட்ட காலம்வரை அந்த நிலையிலேயே இருக்கிறது, அதன்பிறகு வெளித்தோன்றி, நாம் இயற்கை என்று அழைக்கின்ற இந்த எல்லையற்ற காட்சியை விரிக்கிறது என்பதை நாம் நம்புகிறோம். அலை போன்ற தான இந்த இயக்கம் காலம் என்ற ஒன்று தொடங்கும் முன்னரே காலங்காலமாக நடந்து வருகிறது இனியும் எல்லையற்ற காலத்திற்கு நடந்து கொண்டேயிருக்கும்.

அடுத்ததாக மனிதன் வெறும் ஜடப்பொருளாலான உடம்பு அல்ல என்பதை எல்லா இந்துக்களும் நம்புகிறோம். இந்த உடம்பிற்குள் மனம் என்னும் நுண்ணுடல் உள்ளது என்பதை மட்டும் அல்ல, அதற்கு அப்பாலும் ஏதோ மகத்தான ஒன்று இருக்கிறது என்பதையும் நாம் நம்புகிறோம். .உடம்பு மாற்றத்திற்கு உள்ளாகிறது, மனமும் மாறுகிறது. இவற்றிற்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றான ஆன்மா மாறாது. ஆன்மா என்ற சொல்லை என்னால் மொழிபெயர்க்க முடியாது, ஏனென்றால் எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அது தவறானதாக இருக்கும். அந்த ஆன்மா நுண்ணுடலான மனத்திற்கும் அப்பால் இருக்கிறது . அதற்கு ஆதியோ அந்தமோ கிடையாது. மரணம் என்பது என்ன வென்று அதற்குத் தெரியாது. இந்த ஆன்மா பல்வேறு உடல்களைத் தரிக்கிறது. மீண்டும் உடல் தரிக்கும் விருப்பம் இல்லாமல் போகும் போது அது சுதந்திரமாகிறது.அதற்குமேல் அது பிறப்பதில்லை. இந்த ஆன்மக் கோட்பாடு மற்ற எல்லா இனத்தவரின் கருத்திலிருந்து மாறுபட்ட மகத்தானஒன்று. ஆம் நமது சாஸ்திரங்கள் போதிக்கின்ற சம்சாரக் கோட்பாடு மற்றும் அழிவற்ற ஆன்மாக்களைப் பற்றிய கோட்பாடுகளைத்தான் இங்கே நான் குறிப்பிடுகிறேன். நாம் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற மற்றொரு கருத்து இது.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,