எனது சிந்தனைகள் (பகுதி-4)

எனது சிந்தனைகள் (பகுதி-4)
அந்தப் பண்டிதர்கள் பூர்வ மீமாம்ச சாஸ்திரங்களை மிக நன்றாகக் கற்றவர்கள் என்பதை, அவர்கள் சென்ற பிறகு சீடர் சுவாமிஜியிடமிருந்து தெரிந்து கொண்டார். சுவாமிஜி வேதாந்தமாகிய உத்தர மீமாம்ச தத்துவத்தை எடுத்துக் கூறிஞான நெறியே உயர்ந்தது என்பதை விளக்கினார். பண்டிதர்கள் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

தமது தவறுக்காக பண்டிதர்கள் சிரித்ததைப்பற்றிக் குறிப்பிட்ட சுவாமிஜி, தாம் பல வருடங்கள் சம்ஸ்கிருத மொழியைப் பேசாததால் தான் அந்தத் தவறு ஏற்பட்டது என்று கூறினார். அந்தப் பண்டிதர்களைச் சிறிதும் அவர் குறை கூறவில்லை. விவாதத்தின் போது முக்கியப் பொருளிலிருந்து விலகி இலக்கணப் பிழை ஒன்றிலுள்ள குற்றத்தைக் காட்ட முயல்வதை மேலை நாட்டினர் நாகரீகக் குறைவாகக் கருதுவார்கள் என்பதைத் தெரிவித்தார். பின்னர் நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே, தவிர மொழியழகைப் பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் நாட்டில் அரிசியைப் பார்க்காமல் உமியைப்பற்றிதான் சண்டைபோடுவது வழக்கம் என்று சொல்லிவிட்டுச் சீடருடன் சம்ஸ்கிருதத்தில் உரையாட ஆரம்பித்தார். சீடரும் ஓரளவு சம்ஸ்கிருதத்தில் மறுமொழி கூறினார். இருப்பினும் சுவாமிஜி அவரை ஊக்குவிப்பதற்காகப் புகழ்ந்து பேசினார். அன்று முதல் சுவாமிஜி கூறியதற்கிணங்கச் சீடர் சுவாமிஜியுடன் அவ்வப்போது சம்ஸ்கிருதத்தில் பேசுவார்.

நாகரீகம் என்பது என்ன, என்ற கேள்விக்கு வடை யாக சுவாமிஜி அன்று பின்வருமாறு கூறினார்:

ஆன்மீகத்தில் ஒரு நாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால் மட்டும் ஒரு நாட்டினரை நாகரீகம் படைத்தவர்கள் என்று கூறிவிட முடியாது இந்தக் காலத்து மேலை நாகரீகம் நாள்தோறும் மக்களின் தேவைகளையும் துன்பங்களையும்தான் பெருக்கிகொண்டு போகிறது. மாறாக பழைய இந்திய நாகரீகம் ஆன்மீகம் முன்னேற்றத்திற்குரிய வழிகளைக் காட்டியதன் மூலம் உலகியல் தேவைகளை முற்றிலுமாக நீக்காவிட்டாலும் பெருமளவிற்குக் குறைத்தது. இந்த இருவகை நாகரீகத்தையும் சமன்படுத்துவதற்காகவே இந்த யுகத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார். இன்று மனிதர்கள் செயல்புரிவதில் வல்லவர்களாக இருப்பதுடன் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தையும் அடைய வேண்டியிருக்கிறது.

இந்திய நாகரீகம், மேலை நாகரீகத்துடன் இணைவதால் உலகில் ஒரு புது யுகம் தோன்றும் என்பதை சுவாமிஜி விளக்கலானார்:

நல்லது, இன்னொரு விஷயம் ஒருவன் ஆன்மீக வாழ்வில் ஈடுபடுந்தோறும் அவன் பிறரிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்றும் பிற விஷயங்களைப்பற்றி அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரக் கூடாது என்றும் மேலை நாட்டினர் எண்ணுகின்றனர். எனதுசொற்பொழிவுகளில் பரந்த கருத்துக்களைக் கண்ட பாதிரிகள் மிகவும் வியந்தனர்: சொற்பொழிவின் முடிவில் நான் நண்பர்களுடன் பேசிச் சிரிப்பதைக் கண்டு மலைத்தேவிட்டனர். அவர்களுள் சிலர் என்னிடம் வந்து நேராகவே சுவாமி, நீங்கள் ஒரு குரு சாதாரண மனிதர்களைப் போல் சிரிக்கவும் விளையாடவும் கூடாது. இந்த விளையாட்டுத்தனம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று கூறினார்கள். அதற்கு நான் அவர்களிடம் , நாங்கள் ஆனந்தத்தின் குழந்தைகள், கவலை தோய்ந்த முகத்துடனும் சிடுசிடுப்பாகவும் ஏன் இருக்க வேண்டும் ? என்று கூறினேன் என் வார்த்தைகளின் பொருளை அவர்கள் சரியாகப் புரந்துகொண்டார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

அன்று சுவாமிஜி பாவசமாதி நிர்விகல்ப சமாதி பற்றி எல்லாம் பல விஷயங்களைக் கூறினார். என்னால் முடிந்தவரை அவற்றைக் கீழே தருகிறேன்:

ஒருவன் அனுமனைப்போல் பக்தியை வளர்த்துக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பக்தி பாவனை தீவிரமாகுந்தோறும் அவனது மனநிலையும் நடவடிக்கைகளும் மட்டுமல்ல, உடல் கூட அவன் பக்தி செலுத்துபவரைப்போல் மாறத் தொடங்கிவிடும். ஓர் உயிரினம் மற்றொன்றாகப் பரிணமிக்கும் முறையும் இதுவே. இவ்வாறு பக்தன் ஏதாவது ஒரு பாவனையை ஏற்றுக்கொண்டு, படிப்படியாக இஷ்ட தெய்வத்தின் வடிவமாகவே ஆகிவிடுகிறான். ஒரு பாவனையின் இறுதி நிலையையே பாவ சமாதி என்கிறோம். ஞானநெறி சாதகன் நேதி நேதி என்னும் பாதையைப் பின்பற்றுகிறான் அவன் நான் இந்த உடலல்ல,மனமல்ல புத்தியல்ல என்று பழகி நிர்விகல்ப சமாதியை அடைகிறான். அப்போது அவன் தனியுணர்வில் நிலைபெறுகிறான் பக்தி நெறிகளின் வழியாக நிறைநிலையை அதாவது இறுதி நிலையை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள் தேவையாக இருக்கிறது. ஆன்மீகபாவனை சாம் ராஜ்யத்தின் மன்னரான ஸ்ரீராமகிருஷ்ணரோ பதினெட்டிற்குக் குறையாத பாவனைகளுள் அறுதி நிலையை அடைந்திருந்தார்.பாவமுகத்தில் இருந்திருக்காவிட்டால் தமது உடல் அழிந்துவிட்டிருக்கும் என்று அவர் கூறுவதுண்டு.

அன்றுசீடர் சுவாமிஜியிடம், சுவமாஜி நீங்கள்மேலைநாட்டில் எந்த வகையான உணவு உட்கொண்டீர்கள்? என்று கேட்டார்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,