விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-2)


விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-2)
இந்தச் சூழ்நிலையிலும் இந்தியா மீண்டும் உணர்ச்சி பெற்றெழுந்து, உலக நாகரீகத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்கைத் தரத் தயராக இருப்பதைக் காண்கிறோம். அதன் விளைவாகத்தான், ஏதோ இயற்கையே வற்புறுத்தி அனுப்பியதுபோல் நான் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று பிராச்சாரம் செய்ய நேர்ந்தது. காலம் கனிந்திருப்பதை உணர வேண்டும். ஒவ்வொன்றும் நல்ல சகுனமாகவே காணப்படுகிறது. இந்தியத் தத்துவம் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகள் மீண்டும் வெளியே சென்று உலகை வெல்ல வேண்டும். எனவே நம் முன் உள்ள பிரச்சினை பரிமாணத்தில் நாளுக்குநாள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. நாம் நமது நாட்டை மறுமலர்ச்சி பெறச் செய்தாக வேண்டும், அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல; நான் ஒரு கற்பனாவாதி, இந்து இனம் உலகம் முழுவதையும் வெல்ல வேண்டும் என்பதே என் ஆவல்.

பிற நாடுகளை வென்று ஆட்சிபுரிந்த எத்தனையோ பேரரசுகள் இருந்தன. நாம் கூட எத்தனையோ நாடுகளை நம் குடையின் கீழ் ஆண்டிருக்கிறோம். ஆனால் நமது வெற்றியை மதம் மற்றும் ஆன்மீகத்தின் வெற்றி என்றே வர்ணிக்கிறார் மாமன்னரான அசோகர். இந்தியா மீண்டும் உலகை வெல்ல வேண்டும். இதுவே என் வாழ்க்கைக் கனவு. இங்கே எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய கனவைக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தக் கனவு நனவாகும்வரை ஓயாதீர்கள்.

முதலில் நமது நாட்டைச் சரி செய்வோம், பிறகு உலகைச் சீர்படுத்த முயற்சிக்கலாம் என்று உங்களிடம் சிலர் கூறலாம். ஆனால் நான் தெளிவான மொழியில் உங்களுக்குச் சொல்கிறேன்: பிறருக்காக வேலை செய்யும்போது தான் நீங்கள் சிறப்பாக வேலை செய்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் சிறப்பாகப் பணியாற்றியது எப்போது? எப்போது நீங்கள் பிறருக்காக உழைத்தீர்களோ, அப்போதுதான்; உங்கள் கருத்துக்களைக் கடல்களுக்கு அப்பாலும் எடுத்துச்சென்று அன்னிய மொழிகளிலும் பரப்புவதற்கு முயன்றபோதுதான். மற்ற நாடுகளுக்கு ஒளியைத் தருகின்ற அத்தகைய முயற்சி எந்த அளவிற்கு உங்கள் நாட்டிற்கும் உதவும் என்பதற்கு, இங்கே கூடியுள்ள கூட்டமே சான்று. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் போகாமல் என் கருத்துக்களை இந்தியாவிற்குள் மட்டுமே கூறியிருந்தால், இப்போது ஏற்பட்டுள்ளதில் நாலில் ஒரு பங்கு பலன்கூட விளைந்திருக்காது. நம் முன் உள்ள மகத்தான லட்சியம் இது. ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். உலகம் முழுவதையும் இந்தியா வெல்ல வேண்டும், அதற்குக் குறைந்த எதுவும் நம் லட்சியமல்ல. நாமெல்லாம் அதற்குத் தயாராவோம், அதற்காக நம் நரம்புகள் ஒவ்வொன்றையும் முறுக்கேற்றுவோம்.

அன்னியர் வரட்டும், படைகளைக் கொண்டுவந்து குவிக்கட்டும். பொருட்படுத்த வேண்டாம். இந்தியாவே நீ எழு!
உன் ஆன்மீகத்தின் மூலம் உலகத்தை வெற்றிகொள்! ஆம், இந்த மண்ணில் முதலில் முழங்கியதைப் போல், அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும். பகை பகையை வெல்ல முடியாது. உலகாயதத்தையும் அதன் விளைவான எல்லா துன்பங்களையும் உலகாயதத்தால் வெற்றிக்கொள்ள முடியாது. படைகள் படைகளை வெல்ல முயலும்போது துன்பங்கள் பெருகுவதும் மனித சமுதாயம் மிருக நிலைக்குப் போவதும்தான் நிகழ்கின்றது. ஆன்மீகம் மேலை நாடுகளை வென்றாக வேண்டும்.

தாங்கள் ஒரு தேசிய இனமான நிலைநிற்க வேண்டுமானால், அதற்குத் தேவையானது ஆன்மீகம் என்பதைப் பிற நாட்டினர் மெல்ல மெல்ல அறிந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது யார்? இந்தியாவின் மகத்தான ரிஷிகள் விட்டுச்சென்ற செய்திகளை உலகத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பரப்புவதற்கான மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? இந்தச் செய்தி உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைவதற்காகத் தங்கள் அனைத்தையும் தியாகம் செய்யக்கூடிய மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? உண்மையைப் பரப்புவதற்கு அத்தகைய துணிச்சலான பெருமக்கள்தாம் தேவை. வீரமிக்க அத்தகைய செயல் வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் வேதாந்தத்தின் மகத்தான உண்மைகளை அங்கே பரப்புவதில் உதவ வேண்டும். இது உலகின் தேவை, இதைச் செய்யாவிடில் உலகம் அழிந்துபோகும். மேலை உலகம் முழுவதுமே எரிமலையின் மீது உள்ளது, அது நாளைக்கே வெடிக்கலாம், நாளைக்கே சிதறிக் தூள் தூளாகலாம். அவர்கள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேடினார்கள், ஆனால் நிம்மதி கிடைக்க வில்லை. இன்பக் கோப்பையின் அடிவரை குடித்துப் பார்த்தார்கள், அது வெறுமை என்பதைக் கண்டுவிட்டார்கள். இந்தியாவின் ஆன்மீகக் கருத்தக்கள் மேலை நாடுகளில் ஆழமாக ஊடுருவும்படி நாம் வேலை செய்ய வேண்டிய தருணம் இதுதான். அதனால் சென்னை இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு நான் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்கிறேன். நாம் வெளியே சென்றாக வேண்டும், உலகை ஆன்மீகத்தாலும் தத்துவத்தாலும் வென்றாக வேண்டும். இதைச் செய்வோம் அல்லது செத்து மடிவோம்; வேறு வழியில்லை. இந்தியச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும். நம் தேசிய வாழ்வுக்கு, விழிப்புற்ற சக்தி பெற்ற தேசிய வாழ்விற்கான நிபந்தனை இதுவே.

ஆனால் ஆன்மீகச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்துவிடக் கூடாது. உயிருணர்வு அளிக்கக் கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீகச் சிந்தனைகள் என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற மூட நம்பிக்கைகளை அல்ல.அந்த மூட நம்பிக்கைகளை ஒரேயடியாக இந்த மண்ணிலிருந்தே பிடுங்கி ஏறிய வேண்டும். அவை மீண்டும் தலையெடுக்கவே கூடாது. இந்த மூட நம்பிக்கைகள்தான் நம் இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம், நம் மூளையைப் பலவீனப்படுத்தும் இவைதான். உயரிய கருத்துக்களைச் சிந்திக்கும் திறனற்ற, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்த, சுறுசுறுப்பை இழந்த, கண்டகண்ட மூடநம்பிக்கைகளை மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துத் தன்னைத்தானே பாழ்படுத்திக் கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கே இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் நம் கண்முன் உள்ளன. அவற்றுள் ஒன்று வடிகட்டின உலகாயதம்; மற்றொன்று அதற்கு நேர் எதிரான வடிகட்டின மூட நம்பிக்கை. இரண்டையும் நாம் தவிர்த்தாக வேண்டும். இன்றைய மனிதன் மேலைநாட்டு அறிவு பெற்றவுடனே தன்னை எல்லாம் தெரிந்தவனாக எண்ணிக்கொள்கிறான்; நமது புராதன ரிஷிகளைப் பார்த்து கேலிச் சிரிப்புச் சிரிக்கிறான். அவனுக்கு இந்துச் சிந்தனை எல்லாம் வெறும் குப்பை, தத்துவம் எல்லாம் குழந்தையின் வெறும் உளறல், மதம் என்பது முட்டாள்களின் மூட நம்பிக்கை.

இதற்கு மாறாக இன்னொருவன் இருக்கிறான். அவன் கல்வியறிவு பெற்றவன். ஆனால் ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுதான் சரி என்று சாதிப்பவன் அவன் சகுனத்திற்கும் கூட அது இது என்று விளக்கங்கள் தருகின்ற மற்றோர் எல்லையை நோக்கி ஓடுகிறான் அவன். விசித்திரமான தனது இனம் ஆகட்டும், விசித்திரமான தனது கிராம வழக்கம் ஆகட்டும் - இவை பற்றிய ஒவ்வொரு மூட நம்பிக்கைக்கும் தத்துவ விளக்கம் தேவையா, இல்லை உவமான உவமேயங்களுடன் விளக்கம் தேவையா, எல்லாம் அவனிடம் உண்டு. இன்னும் என்னென்ன விளக்கங்கள் வைத்திருக்கிறானோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராமத்தின் மூட நம்பிக்கையும் அவனுக்கு வேத விதி. அவனைப் பொறுத்தவரை, அவைகளைப் பின்பற்றுவதைச் சார்ந்து தான் தேசிய வாழ்க்கையே இருக்கிறது. இத்தகையவர்களிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது, அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும். ஆனால் மூட நம்பிக்கை மட்டும் நுழைந்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது, மூளை மழுங்கி விடுகிறது. வாழ்க்கை சீரழிவுப் பாதையில் போக ஆரம்பித்து விடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து விடுங்கள். துணிச்சலான வீரம் மிக்கவர்களே இப்போதுநமக்குத் தேவை. நமது தேவையெல்லாம் ரத்தத்தில் வேகம், நரம்புகளில் வலிமை, இரும்பை ஒத்த தசைகள், எஃகை ஒத்த நரம்புகள். பலவீனப் படுத்துகின்ற வளவளகொளகொள கருத்துக்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் தவிர்த்து விடுங்கள்.

ரகசிய வித்தைகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை. வேதாந்தத்திலோ,வேதங்களிலோ, சம்ஹிதைகளிலோ, புராணங்களிலோ, மர்மமாக ஏதாவது இருக்கிறதா? மதத்தைப் போதிக்க பழங்கால ரிஷிகள் எந்த ரகசிய சங்கங்களை வைத்திருந்தார்கள்? மகத்தான உண்மைகளை மனித குலத்திற்கு அளிப்பதற்காக அவர்கள் மாய ஜாலமோ மந்திர ஜாலமோ செய்ததாக எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? மர்ம வித்தைகளை நாடுவதும் சரி, மூட நம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள். சீரழிவின் அடையாளங்கள்; மரணத்தின் அடையாளங்கள். அவற்றை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள், உங்கள் சொந்தக் கால்களில் நில்லுங்கள். மகத்தான, மிகவும் அதிசயப்படத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது கருத்துக்கள் செல்கின்றவரை, அவைகளை நாம் இயற்கையைக் கடந்தவை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவற்றுள் எதுவுமே மர்மமானதில்லை. மத உண்மைகள் மர்மமானவை என்றோ, பனி மூடிய இமயத்தில் இருக்கின்றன ஏதோ ரகசிய சங்கங்களின் சொத்துக்கள் என்றோ, பனி மூடிய இமயத்தில் இருக்கின்ற ஏதோ ரகசிய சங்கங்களின் சொத்துக்கள் என்றோ இந்த மண்ணில் ஒருபோதும் உபதேசிக்கபட்டதில்லை. நான் இமயமலைகளில் இருந்திருக்கிறேன். நீங்கள் அங்கே இருந்ததில்லை , இங்கிருந்து அது பல நூறு மைல்கள் தொலைவில் உள்ளது. நான் ஒரு துறவி, கடந்த பதினான்கு ஆண்டுகளாக பயணம் செய்தபடியே இருக்கிறேன். இத்தகைய ரகசிய சங்கங்கள் எதுவும் அங்கு எங்குமே இல்லை. இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாத்திகர்களாகி விடுங்கள், அது உங்களுக்கும் நல்லது, உங்கள் இனத்திற்கும் நல்லது. ஏனென்றால் அதன் மூலம் நீங்கள் வலிமை பெறுவீர்கள். ஆனால் இவையோ, சீரழிவையும் மரணத்தையும் தவிர எதுவுமல்ல. வலிமை வாய்ந்த மனிதர்கள் இந்த மூட நம்பிக்கைகளில் காலம் கழிப்பதும், கேடுகெட்ட இந்த மூட நம்பிக்கைகளை விளக்குவதற்குக் கதைகளைக் கண்டுபிடிப்பதில் நேரம் முழுவதையும் செலவழிப்பதும் மனித குலத்திற்கே அவமானம் ! தைரியமாக இருங்கள், எல்லாவற்றையும் இப்படி விளக்க முயலாதீர்கள். நம் உடம்பில் புண்களும் ரணங்களும் இருக்கலாம். இவற்றை அகற்ற வேண்டும், வெட்ட வேண்டும், அழித்துவிட வேண்டும். அதுபோல் நம்மிடம் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்பது உண்மை. அவை நமது மதத்தையோ நமது தேசிய வாழ்க்கையோ நமது ஆன்மீகத்தையோ அழித்துவிடாது. மதத்தின் ஒவ்வொரு கோட்பாடும் பாதுகாப்பாகவே இருக்கிறது. இந்த ரணங்களை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ, அந்த அளவுக்கு இந்தக் கோட்பாடுகளும் மகத்தான பெருமையோடு ஒளி வீசும். அந்தக் கோட்பாடுகளை உறுதியாகப் பற்றுங்கள்.

ஒவ்வொரு மதமும் தன்னை உலகம் தழுவிய மதம் என்றே உரிமை பாராட்டுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன்- அப்படி ஒன்று இருக்கவே முடியாது. அப்படி ஒன்று இருந்து அத்தகைய உரிமை கொண்டாட இயலும் என்றால், அது நமது மதமாக மட்டுமே இருக்கமுடியும், வேறு எந்த மதமாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொன்றும் மனிதர்களை, ஒருவரையோ சிலரையோ நம்பியிருக்கிறது. அந்த மதத்தினர் வரலாற்று மனிதராகக் கருதுகின்ற ஒருவரைச் சுற்றியே அந்த மதங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தங்கள் மதத்திற்கு வலிமை என்று அவர்கள் நினைக்கின்ற அது உண்மையில் பலவீனமாகும். ஏனென்றால் வரலாற்று மனிதராகத் கருதப்படுவர் வரலாற்று மனிதர் அல்ல என்று நிரூபித்துவிட்டால் போதும், அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட மதம் அப்படியே சிதறிப்போகும். இந்த மதங்களை உருவாக்கியவர்களிலன் வாழ்க்கையில் இப்பொழுதே பற்றியோ தீவிரமான சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் இவர்களின் வார்த்தைகளை மட்டுமே அத்தாட்சியாகக் கொண்ட அந்ந மத உண்மைகள் எல்லாம் காற்றில் கரைந்து மறைந்கின்றன.

நமது மதத்தில் அவதார புருஷர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனாலும் நமது மத உண்மைகள் அவர்கள் யாரையும் நம்பி இருக்கவில்லை. கிருஷ்ணரின் பெருமை அவர் கிருஷ்ணராக இருந்தார் என்பதில் இல்லை, வேதாந்தத்தின் மகத்தான ஆச்சாரியராக இருந்தார் என்பதிலேயே உள்ளது. அவர் அப்படி வேதாந்த ஆச்சாரியராக இல்லாதிருந்தால், புத்தரின் பெயர் இந்தியாவிலிருந்து மறைந்து போனதைப்போல் அவரது பெயரும் அழிந்திருக்கும். இவ்வாறு நமது சார்பு எப்போதும் கோட்பாடுகளிடமே தவிர தனி மனிதர்களிடம் அல்ல.

அவதார புருஷர்கள் என்பவர்கள் கோட்பாடுகளின் திரண்ட வடிவமாக அவற்றை வாழ்ந்துகாட்ட வருபவர்களே தவிர வேறல்ல. கோட்பாடுகள் இருக்குமானால் பின்பற்ற ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோர் வருவார்கள். கோட்பாடு பாதுகாப்பாக இருக்குமானால் புத்தரைப் போன்றோர் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் பிறப்பார்கள். கோட்பாடுகள் அழிந்து போகுமானால், மறக்கப்படுமானால், வரலாற்று மனிதர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரைப் பற்றிக் கொண்டு தேசிய வாழ்க்கை முழுவதுமே இயங்க நேருமானால் அந்த மதத்தின் நிலை, அந்தோ பரிதாபம்! அதற்கு ஆபத்தே வந்து சேரும்.

நமது மதம் ஒன்றுதான் தனி மனிதர்களைச் சார்ந்திருக்கவில்லை. அதே வேளையில், லட்சக்கணக்கான மனிதர்களுக்கு அதில் இடமும் உண்டு, இன்னும் எத்தனையோ நுழைப்பதற்குப் போதுமான இடமும் நமது மதத்தில் உள்ளது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கோட்பாடுகளின் விளக்கமாக இருக்க வேண்டும். இதை நாம் மறக்கக் கூடாது. நமது இந்தக் கோட்பாடுகள் பத்திரமாக உள்ளன; அதைப் பத்திரமாகப் பாதுகாப்பதும் காலங்காலமாக அதில் சேரும் மலினங்களிலிருந்து அதைப் பேணுவதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடைமையாகும்.

திரும்பத்திரும்ப எத்தனையோ முறை நமது இனம் சீரழிவுகளுக்கு உள்ளானபோதும் இந்த வேதாந்தக் கோட்பாடுகள் ஒரு சிறிதும் மாசுபடாமல் இருப்பது ஆச்சரியம்தான். எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் யாருக்கும் அவைமீது சேற்றை வாரி இறைக்கும் துணிச்சல் இல்லை. உலகிலேயே மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டவை நமது சாஸ்திரங்களே, பிற மத நூல்களுடன் ஒப்பிடும்போது இவைகளில் இடைச் செருகல்கள் இல்லை, மூலப்பாடத்தை மாற்றும் சித்திர வதைகள் இல்லை, முக்கியமாக கருத்துக்களின் சாரத்தை அழிக்கும் வேலையும் இல்லை. தோன்றிய காலத்தில் இருந்ததைப்போல் அப்படியே இருந்தவாறு, அது மனித மனங்களை லட்சியத்தை நோக்கி , குறிக்கோளை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நூல்களுக்கு பல்வேறு உரையாசிரியர்கள், மகத்தான ஆச்சாரியர்கள் உரை எழுதியிருக்கிறார்கள், மகத்தான ஆச்சாரியர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நெறிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றுக்கொன்று முரணானவைபோல் தோன்றுகின்ற கருத்துக்களையும் இந்த வேதங்களின் காணலாம். சில பகுதிகள் முற்றிலுமாக துவைதக் கருத்தைக் கூறுகின்றன, மற்றவை அத்வைதத்தைக் மட்டுமே கூறுகின்றன. துவைத உரையாசிரியர்கள் வேறு வழி தெரியாமல், அத்வைதப் பகுதிகளை அப்படியே அமுக்க விரும்புகிறார்கள். மத போதகர்களும் புரோகிதர்களும் அவைகளுக்கு துவைதப் பொருள் கூற விரும்புகின்றனர் அத்வைத உரையாசிரியர்களோ துவைதப் பகுதிகளை அதுபோல் செய்ய விரும்புகின்றனர். இது வேதங்களின் தவறு அல்ல. வேதங்கள் முழுவதுமே துவைதபரமானவை என்று நிரூபிக்க முயல்வது முட்டாள் தனம். வேதங்கள் முழுவதையும் அத்வைதமாகக் காட்ட முயல்வதும் அதைப் போன்ற முட்டாள் தனமானமே. வேதங்கள் துவைதமாகவும் அத்வைதமாகவும் உள்ளன.

புதிய கருத்துக்களின் துணையில் அதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவை இறுதியான லட்சியத்திற்கு அழைத்துச் செல்கின்ற இருவேறு கொள்கைகள். மனத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு துவைதம், அத்வைதம் ஆகிய இரண்டு கருத்துக்களும் தேவை. அதனால் தான் வேதங்கள் இரண்டையும் உபதேசிக்கின்றன.மனித இனத்தின் மீது கொண்ட கருணையின் காரணமாக வேதங்கள் உயர் லட்சியத்தை அடைய பல்வேறு படிக்களைக் காட்டியுள்ளன. குழந்தைகளைக் குழப்புவதற்காக வேதங்கள் பயன்படுத்துகின்ற ஒன்றுக்கொன்று முரணான வீண் வார்த்தைகள் அல்ல அவை. அவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களுக்கும் தேவையானவையே.

நமக்கு உடம்பு இருக்கும்வரை, உடம்பும் நாமும் ஒன்றே என்ற கருத்தில் நாம் மயங்கியிருக்கும் வரை,நமக்கு ஐம்புலன்கள் உள்ளதுவரை, அவற்றால் வெளியுலகை உணரும்வரை சகுணக் கடவுள் அவசியமே. இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கும் வரை மகத்தான ஆச்சாரியரான ராமானுஜர் நிரூபித்ததுபோல் இறைவன்,இயற்க்கை, ஜீவாத்மா போன்ற கருத்துக் களையும் ஏற்றேயாக வேண்டும். முக்கோணத்தின் ஒரு பக்கத்தை ஏற்றால், அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்; நம்மால் அதைக் தவிர்க்க முடியாது. எனவேபுறவுலகைக் காணும்வரை சகுணக் கடவுளையும் ஜீவாத்மாவையும் மறுக்க முயல்வது சுத்தப் பைத்திக்காரத்தனம்.

ஆனால் ரிஷிகளின் வாழ்வில் சில வேளைகளில், மனம் தன் எல்லைகளைக் கடந்து சென்றது போலாகிறது, மனிதன் இயற்க்கைக்கு அப்பால் செல்கிறான், அதை அடைய முடியாமல் வார்த்தைகளும் மனமும் எந்த இடத்திலிருந்து திரும்புகின்றனவோ என்று சுருதிகள் சொல்லுகின்தே, வார்த்தைக்கும் மனத்திற்கும் எட்டாதது அந்த இடத்தையும் கடந்து செல்கிறான் அங்கே கண்கள் பார்க்க முடியாது காதுகள் கேட்க முடியாது, அதை அறிந்தோம் என்றும் சொல்ல முடியாது. அறியவில்லை என்றும் சொல்ல முடியாது , அங்கே மனித ஆன்மா எல்லா எல்லைகளையும் கடக்கிறது. அப்பொழுது, அப்பொழுது மட்டுமே மனித ஆன்மாவில் அத்வைத உணர்வு ஒளிர்கிறது - நானும் பிரபஞ்சம் முழுவதும் ஒன்று, நானும் பிரம்மமும் ஒன்றே. இந்த நிலையை ஞானத்தாலோ தத்துவத்தாலே மட்டும்தான் நாம் அடைய முடியும் என்பதல்ல. அதன் சில அம்சங்களை பக்தியின் வலிமை யாலும் பெற முடியும். பாகவதத்தில் இதற்கு சான்று உள்ளது. கோபியரைவிட்டு கண்ணன் பிரிந்து சென்று விட்டான் அவனுடைய பிரிவுத் துயரால் கோபியர் துடிக்கின்றனர், கண்ணனைப் பற்றிய நினைவு அவர்கள் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதிந்த அவர்கள் தங்கள் உடம்பையே மறந்துவிட்டார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களே கிருஷ்ணன் என்று நினைத்து, தங்களையே கிருஷ்ணனாக அலங்கரித்துக் கொண்டு, கிருஷ்ணன் விளையாடுவதைப்போல் விளையாடினார்கள். எனவே ஒன்றாகும் இந்த நிலை பக்தியின் மூலமாகவும் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

பழைய காலத்தில் பாரசீக சூஃபி கவிஞர் ஒருவர் இருந்தார். அவர் தமது பாடல் ஒன்றில் கூறுகிறார்:

நான்என் காதலியிடம் வந்தேன், கதவு மூடியிருந்தது.

நான் கதவைத் தட்டினேன், உள்ளிருந்து ஒரு குரல் வந்தது-

யார் அங்கே?

நான்தான் என்றேன், கதவு திறக்க வில்லை.

மறுமுறை கதவைத் தட்டினேன். அதே குரல்,யார் அங்கே? என்று கேட்டது.

நான் இன்னார் என்று சொன்னேன். கதவு திறக்கப்படவில்லை

மூன்றாவது முறையும் நான் கதவைத் தட்டினேன்

அதே குரல் கேட்டது: யார் அங்கே?

என் அன்பே, நீயேதான் நான் என்றேன்,

கதவு திறந்தது.

எனவே பல படிகள் இருக்கின்றன. பழைய உரையாசியர்களுக்கு இடையே சச்சரவுகள் இருந்தாலும், நாம் சண்டையிட வேண்டியதில்லை. அந்த உரையாசிரியர்கள் அனைவரும் நம்மால் மதிக் கப்பட வேண்டியவர்கள். அறிவிற்கு எல்லை எதுவும் இல்லை. முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி எல்லாம் அறிகின்ற தன்மை என்பது யாருக்கும் தனிப்பட்ட சொத்தாக இருக்கவில்லை. அன்று மகான்களும் ரிஷிகளும் இருந்தார்கள் என்றால், இன்றும் பலர் இருந்தாக வேண்டும். அன்று வியாசர்களும் வால்மீகிகளும் சங்கரர்களும் இருந்தார்கள் என்றால், நீங்கள் ஒவ்வொருவரும் ஏன் ஒரு சங்கரராகக் கூடாது ? இது நமது மதத்தின் நினைவில்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியக் கருத்தாகும். பிற எல்லா மத சாஸ்திரங்களுக்கும் தெய்வப் பேருணர்வே பிரமாணமாகக் கூறப்படுகிறது, ஆனால் இந்தப் பேருணர்வு ஏதோ சிலருக்கு மட்டுமே ஏற்படும், உண்மைகள் அவர்களின் மூலம் தான் சாதாரண மக்களுக்கு வந்தன. மற்ற அனைவரும் அதற்கு அடிபணிந்தாக வேண்டும். நாசரேத்தின் ஏசுவிற்கு அவ்வாறு உண்மை உதித்தது, நாம் அனைவரும் அவருக்கு அடிப்பணிய வேண்டும். மந்திரத்தைத் தரிசித்த, சிந்தனைகளை நேரில் கண்ட இந்திய ரிஷிகளிடம் உண்மை மலர்ந்தது. அந்த உண்மைகள் எதிர்காலத்தில் எல்லா ரிஷிகளிடமும் தோன்றும். வாய்ச்சொல் வீரர்களிடமோ, புத்தகப் புழுக்களிடமோ, பண்டிதர்களிடமோ, மொழி வல்லுனர்களிடமோ அந்த உண்மை தோன்றுவதில்லை. சிந்தனைகளை நேரில் காண்கின்ற ரிஷிகளிடம் மட்டுமே அது தோன்றும். அதிகமான பேச்சாலோ மிகவுயர்ந்த அறிவாலோ சாஸ்திரங்களைப் படிப்பதாலோ ஆன்மாவை அடைய முடியாது . பாருங்கள் இதை நம் சாஸ்திரங்களே கூறுகின்றன உலகத்தில் உள்ள வேறு எந்த மதத்தின் சாஸ்திரத்திலாவது, நமது சாஸ்திரங்கள் சொல்வது போல் இவ்வளவு தைரியமாக அந்த சாஸ்திரங்களையே படிப்பதால் கூட நீங்கள் ஆன்மாவை அடைய முடியாது என்று கூறப்பட்டுள்ளதா? மனம் திறந்து சொல்லுங்கள்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,