ராஜ யோகம் பகுதி-2


ராஜ யோகம் பகுதி-2
1
மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான், எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான <உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக்கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின் மூலமே கிடைக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப்படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங்களால் முடியும். இதுதான் ரகசியம்.

மனத்தைப் புறப்பொருட்களின்மீது குவிப்பது எளிது. இயல்பாகவே மனம் வெளிநோக்கு கொண்டது. ஆனால் மத ஆராய்ச்சி, மனஇயல், தத்துவம் இவற்றில் அவ்வாறு இல்லை. ஏனெனில் இங்கே அறிபவனும் அறியப்படும் பொருளும் ஒன்றே. அறியப்படும் பொருளான மனம் உள்ளே இருக்கிறது. இந்த மனத்தை ஆராயவும் மனம்தான் வேண்டும். மனமே மனத்தை ஆராய்கிறது. மனத்திற்குத் தன்மையே நோக்கும் தன்மை உண்டு என்பது நமக்குத் தெரியும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில் ஏதோ ஓர் இரண்டாம் மனிதனைப்போல் தனியாக நின்று, நான் பேசுவதை அறியவும் கேட்கவும் செய்கிறேன். ஒரே நேரத்தில் நீங்கள் வேலை செய்யவும் சிந்திக்கவும் செய்கிறீர்கள். அப்போது மனத்தின் ஒரு பகுதி விலகி நின்று நீங்கள் சிந்திப்பதை நோக்குகிறது. மனத்தின் ஆற்றல்களைக் குவித்து அதன் மீதே திருப்ப வேண்டும். அப்போது எவ்வாறு கதிரவனின் கதிர்களின் முன்னால் காரிருள் தன் ரகசியங்களை வெளிப்படுத்துகிறதோ, அவ்வாறு இந்த ஒருமுகப்பட்ட மனமும் தன் ஆழங்களிலுள்ள ரகசியங்களில் ஊடுருவிச் செல்கிறது. இவ்வாறு நாம் நம்பிக்கையின் அஸ்திரவாரத்திற்கு, உண்மையான, சரியான மதவுணர்விற்கு வருகிறோம். நமக்கு ஆன்மா உண்டா, இல்லையா? வாழ்வு என்பது ஐந்து நிமிடத்திற்கா அல்லது என்றென்றைக்குமா? பிரபஞ்சத்தில் ஒரு கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பவற்றையெல்லாம் நமக்கு நாமே உணர்ந்துகொள்வோம். அவையெல்லாம் நமக்கு வெளிப்படுத்தப்படும். இதைக் கற்பிக்கிறது ராஜயோகம். எப்படி மனத்தை ஒருமைப்படுத்துவது, நமது சொந்த மனங்களின் அடியாழத்திலுள்ள அறைகளை எப்படிக் கண்டுபிடிப்பது, பிறகு அங்குள்ள எண்ணத் திரள்களைப் பொதுமைப்படுத்தி அவற்றிலிருந்து எப்படி நமக்கென்று முடிவுகளைக் காண்பது என்பவற்றைக் கற்பிப்பதே ராஜயோகத்தின் நோக்கம். ஆதலால் அது நமது மதத்தைப் பற்றியோ, நாம் ஆத்திகர்களா, நாத்திகர்களா, கிறிஸ்தவர்களா, யூதர்களா, பவுத்தர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. நாம் மானிடர், அது போதும் , மதத்தைத் தேடும் உரிமையும் ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. காரணம் என்ன என்று கேட்கும் உரிமையும், விடையைத் தானே காணும் <உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் அதற்காக அவன் சிறிது பாடுபட வேண்டும்.

இதுவரை நாம் பார்த்ததிலிருந்து ராஜயோகப் பயிற்சிக்கு எந்தவிதமான நம்பிக்கையும் தேவையில்லை என்பது தெளிவாகிறது. நீங்களே கண்டறியாததுவரை எதையும் நம்பாதீர்கள். இதுதான் ராஜயோகம் போதிப்பது. உண்மை நிலைநிற்க எந்த ஊன்றுகோலும் தேவையில்லை. நமது விழிப்புநிலை உண்மைகளை நிரூபிக்கக் கனவுகளோ கற்பனைகளோ தேவையா என்ன? நிச்சயமாக இல்லை! ராஜயோகத்தைப் பயில நீண்ட காலமும் நீடித்த பயிற்சியும் சார்ந்தது. ஆனால் பெரும்பகுதி மனத்தைச் சார்ந்தது. மனம் எந்த அளவிற்கு நெருக்கமாக உடலுடன் தொடர்புள்ளது என்பதைப் பின்னர் காண்போம்.

மனம் என்பது உடலின் ஒரு நுண்பகுதி மட்டுமே என்பதையும் மனம் உடலின்மீது செயல்படுகிறது என்பதையும் நாம் நம்புவதானால் உடலும் மனத்தின்மீது செயல்படுகிறது என்று கொள்வது நியாயமானது. உடல் நோயுற்றால் மனமும் சஞ்சலமடைகிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனமும் நலமாக வலிமையாக இருக்கிறது. கோபம் வரும்போது மனம் சஞ்சலமடைகிறது. அது போலவே மனம் கலங்கினால், உடல்நலமும் கெடுகிறது. மக்களுள் பெரும்பாலோரைப் பொறுத்தவரை மனம் ஏறக்குறைய உடலின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அவர்களின் மனம் மிகக்குறைவாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்கள் விலங்குகளிலிருந்து மிகச் சிறிது மட்டுமே வேறுபட்டுள்ளனர். அது மட்டுமல்ல. அவர்களுள் பலருக்கும் கட்டுப்பாட்டு ஆற்றல், தாழ்ந்த விலங்குகளைவிடச் சிறிதளவே அதிகமாக உள்ளது. நமக்கு நம் மனத்தின்மீது மிகச் சிறிதளவே கட்டுப்பாடு உள்ளது. அந்தக் கட்டுபாட்டைக் கொண்டுவருவதற்கு, உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவதற்கு உடலைச் சார்ந்த சில உதவிகள் வேண்டும். போதிய அளவிற்கு உடம்பை அடக்கியபின், மனத்தை வசப்படுத்த முயலலாம். மனத்தை வசப்படுத்தினால் அது நமது கட்டுப்பாட்டிற்குள் வரும். அதன்பின்னர் நாம் விரும்புவதுபோல் அதனை வேலை செய்ய வைக்கலாம். அதைக் கட்டாயப்படுத்தி, நாம் விரும்புவதுபோல் அதன் ஆற்றல்களை ஒருமைப்படுத்தலாம்.

அகவுலகம் அல்லது நுண்ணுலகின் தூல வடிவமே புறவுலகம் என்கிறான் ராஜயோகி. சூட்சுமமாக இருப்பது தான் எப்போதும் காரணமாகவும்
தூலம் எப்போதும் காரியமாகவும் இருக்கும். எனவே புறவுலகம் காரியம்; அகவுலகம் காரணம். அதுபோலவே அகத்தில் உள்ள நுண்ணிய சக்திகளின் தூலப் பகுதிகளே புறசக்திகள், இந்த அகசக்திகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கையாள்வது எப்படி என்று அறிந்துகொண்டவனுக்கு இயற்கை முழுவதுமே வசமாகும். பிரபஞ்சம் முழுவதையும் கட்டுப்படுத்த முனைகிறான் யோகி. அதற்குக் குறைந்த எதையும் அவன் நாடுவதில்லை. இயற்கைநியதிகள் என்று நாம் அழைக்கிறோமே, அவை தன் மீது எந்த ஆதிக்கமும் செலுத்தாத, அவை அனைத்தையும் கடந்த ஒரு நிலையை அடைய அவன் விரும்புகிறான். அக மற்றும் புற இயற்கை அனைத்திற்கும் அதிபதியாக விழைகிறான். மனித இனத்தின் முன்னேற்றம். நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும்.

இயற்கையை ஆள வெவ்வேறு இனத்தினர் வெவ்வேறு வழிகளில் முயன்றனர். ஒரு சமுகத்தில் சிலர் புற இயற்கையையும், வேறு சிலர் அக இயற்கையையும் அடக்கியாள முயல்வதுபோல் இனங்களுள்ளும் சிலர் புற இயற்கையையும் சில அக இயற்கையையும் கட்டுப்படுத்த விரும்புகின்றனர். அக இயற்கையையும் கட்டுப்படுத்தவதால் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ புற இயற்கையைக் கட்டுப்படுத்துவதால் நாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர். இரண்டு கூற்றுகளின் எல்லைவரை சென்றோமானால் இரு சாரார் கூறுவதும் சரியே, ஏனெனில் இயற்கையில் அகம், புறம் என்ற பாகுபாடு இல்லை. இவை கற்பனையில் மட்டுமே காணப்படுகின்ற பொய்யான வரம்புகள். தத்தம் ஞானத்தின் எல்லையை அடையும் போது இரு சாராரும் ஒரு மையத்தில் சந்தித்தே தீர வேண்டும். ஒரு பவுதீக விஞ்ஞானி வெளியுலக விஞ்ஞான அறிவை அதன் கடைசி எல்லைக்குக் கொண்டு போகும்போது அது தத்துவத்தில் கரைவதைக் காண்கிறான். அதேபோல், உள்ளது ஒன்றே, மனம் என்றும் ஜடப்பொருள் என்றும் அவன் கருதுகின்ற வேறுபாடு உண்மையில் இல்லாதது என்பதையும் காண்கிறேன்.

எந்த ஒன்றிலிருந்து பல தோன்றினவோ, எந்த ஒன்று பலவாக இருக்கின்றதோ, அந்த ஒன்றை அந்த ஒருமையைக் காண்பதே எல்லா சாஸ்திரங்களின் முடிவான நோக்கம், ராஜயோகம் அகவுலகில் ஆரம்பிக்கிறது. அக இயற்கையை ஆராய்கிறது. அதன் மூலம் அகம், புறம் இரண்டையும் கட்டுப்படுத்த முயல்கிறது. இந்த முயற்சி மிகவும் தொன்மையானது. இந்தியா அதன் சிறப்பிடமாக இருந்து வருகிறது. மற்ற நாட்டினரும் இந்த முயற்சியில் ஈடுபடவே செய்தனர். மேலை நாடுகளில் இது ஒரு ரகசிய முறையென கருதப்பட்டது. இதனைப் பயின்றவர்கள் சூனியக்காரிகள், மந்திரவாதிகள் என்று கருதப்பட்டு எரிக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர் இந்தியாவிலோ பல காரணங்களால் இது யாருடைய கைகளில் அகப்பட்டதோ அவர்கள் அதில் தொண்ணூறு சதவீதத்தை அழித்தனர். எஞ்சியதைப் பரம ரகசியம் என்று மறைத்து விட்டனர்.

இந்தக் காலத்தில் மேலைநாட்டில் பலர் யோக ஆசிரியர்களாகப் புறப்பட்டுள்ளனர். இவர்களுடைய கதை இந்தியாவில் உள்ளவர்களைவிட மோசம். இந்தியர்களுக்காவது ஏதோ கொஞ்சம் தெரியும். இந்த நவீன ஆசிரியர்களுக்கோ ஒன்றும் தெரியாது.

ரகசியம் என்றோ அற்புதம் என்றோ யோக நெறியில் ஏதாவது சொல்லப்படுமானால் அதை உடனே நீக்கி விட வேண்டும். வலிமையே வாழ்வில் சிறந்த வழிகாட்டி. மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது. சாஸ்திரங்களுள் மிகச் சிறந்த ஒரு விஞ்ஞானமான யோகத்தை அது ஏறக்குறைய அழித்தே விட்டது. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே நன்றாக விவரிக்கப்பட்டு, அமைக்கப்பட்டு, போதிக்கப்பட்டு வருகிறது. இதில் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை என்னவென்றால் உரையாசிரியர் எந்த அளவிற்கு நவீன காலத்தைச் சேர்ந்த வராக இருக்கிறாரோ, அந்த அளவிற்கு அதிகம் தவறுகள் செய்கிறார். எந்த அளவிற்கு காலத்தால் முந்தியவரோ அந்த அளவிற்கு அவர் அறிவுபூர்வமானவராக இருக்கிறார். நவீன உரையாசிரியர்களுள் பலர் பலவகைப்பட்ட ரகசிய முறைகளைப்பற்றிப் பேசுகின்றனர். இவ்வாறு ஒரு சிலரின் கையில் யோக சாஸ்திரம் அகப்பட்டுக்கொண்டது. அவர்கள் அதன்மீது பகல் வெளிச்சமும் அறிவாராய்ச்சியின் முழுஒளியும் படாமல் செய்து அதனை ரகசிய வித்தையாக்கி விட்டனர். தங்களுக்கே ஆற்றல்கள் எல்லாம் சொந்தமாக வேண்டும் என்பதே அவர்கள் அவ்வாறு மறைத்ததன் நோக்கம் ஆகும்.

இங்கு நான் முதலில் சொல்ல வேண்டுவது நான் கற்பிப்பதில் ரகசியம் எதுவும் இல்லை என்பதுதான். எனக்குத் தெரிந்த ஏதோ சிறிதை உங்களுக்குச் சொல்கிறேன். எனது அறிவால் ஆராய்ந்து தெளிவுபடுத்த முடிந்த அளவு அதைச் செய்வேன். எனக்குத் தெரியாதது என்று வரும்போது சாஸ்திரங்கள் சொல்வதை அப்படியே சொல்வேன். குருட்டுத்தனமாக நம்புவது தவறு. உங்கள் அறிவையும் உங்கள் ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்த வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் இவையெல்லாம் நிகழ்கின்றனவா இல்லையா என்று பார்க்க வேண்டும், வேறு எந்த விஞ்ஞானத்தையும் கற்பது போலவே இந்த விஞ்ஞானத்தையும் நீங்கள் பயில வேண்டும். இதில் ரகசியமோ அபாயமோ எதுவும் இல்லை. இதில் உண்மை என்று இருப்பதைப் பொதுத் தெருவில் பட்டப்பகல் வெளிச்சத்தில் போதிக்கலாம். இதில் எதையாவது ரகசிய விந்தையாக்க முயன்றால் அது ஆபத்திலேயே முடியும்.

தொடர்ந்து போகுமுன் ராஜயோகத்திற்கு அடிப்படையாகிய சாங்கியத் தத்துவத்தின்படி ஒரு காட்சி அல்லது பிரத்தியட்ச ஞானம் உண்டாகும் முறை இதுவே. புறப் பொருட்களின் தூண்டுதல்கள் புறப்பொறிகள் வாயிலாக மூளையில் அவற்றிற்கு உரிய மையங்களுக்கு அல்லது புலன்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. புலன்கள் இந்தத் தூண்டுதல்கள் மனத்திற்குக் கொண்டு செல்கின்றன. மனம் புத்தியிடம் சேர்க்கிறது. புத்தியிலிருந்து புருஷன்(அல்லது ஆன்மா) அதை ஏற்றுக் கொள்கிறான். அப்போது காட்சி உண்டாகிறது. பின்னர் புருஷன் ஆணையிடுவதுபோல் கட்டளைகள் பிறப்பிக்கிறான். அவற்றிற்கேற்ப கர்மேந்திரியங்கள் செயல்புரிகின்றன. புருஷனைத் தவிர மற்றவை அனைத்தும் ஜடப் பொருட்கள். ஆனால் மனம் புறப்பொருட்களைவிட மிக நுண்ணிய ஜடப்பொருள் ஆகும், மனம் எந்த மூலப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளால் தான் நுண்ஜடப் பொருளான தன்மாத்திரைகளும் ஆக்கப்பட்டுள்ளன. இவையே தூலமாகி புறப்பொருட்கள் ஆகின்றன. இதுவே சாங்கியம் கூறும் மன இயல் ஆகும்.

புறத்தேயுள்ள தூலப்பொருளுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடு என்பது தூலம் அல்லது சூட்சுமம் என்ற அளவில் மட்டுமே. ஜடப்பொருள் அல்லாதவன் புருஷன் மட்டுமே. மனம் ஆன்மாவின் கைகளில் ஒரு கருவிபோல் செயல்படுகிறது. இந்தக் கருவியின் மூலம் ஆன்மா புறப்பொருட்களுடன் தொடர்பு கொள்கிறது. மனம் தொடர்ந்து மறுபடியும் ஊசலாடியபடியும் உள்ளது. அதைப் பக்குவப் படுத்தினால், ஒரு புலனுடனோ, பல இந்திரியங்களுடனோ அது தன்னை இணைத்துக்கொள்ள இயலும். எதையும் பற்றாமல் இருக்கவும் அதனால் முடியும். உதாரணமாக ஒரு கடிகாரத்தில் மணியடிப்பதை நான் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது என் கண்கள் திறந்திருந்தாலும் ஒருவேளை நான் எதையுமே பார்க்கமாட்டேன். கேட்கும் புலனை மனம் பற்றியிருப்பதால், காணும் புலனை அது பற்றவில்லை என்பதை அது காட்டுகிறது. ஆனால் எல்லா புலன்களையும் ஒருங்கே பற்றியிருக்கின்ற தன்மை பக்குவப்பட்ட மனத்திற்கு உண்டு அது தன் ஆழங்களைத் தானே உள்நோக்கிக் காணும் சக்தியை உடையது. இத்தகைய அகநோக்கை அடையவே யோகி முயல்கிறான். மனத்தின் ஆற்றல்களைக் குவித்து, அதனை உள்ளே திருப்பி, உள்ளே என்ன நிகழ்கிறதென்று அறிய அவன் விரும்புகிறான். இதில் வெறும் நம்பிக்கை என்ற பேச்சே இல்லை. தத்துவ ஞானிகளுள் சிலர் கண்டறிந்த முடிவு இது.

கண்கள் காட்சிப் புலன் அல்ல என்றும் மூளையில் உள்ள நரம்பு மையங்களுள் ஒன்றே அந்தப் புலன் என்றும் நவீன உடலியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மற்றப் புலன்களும் இவ்வாறே, மூளை எந்தப் பொருளினால் ஆக்கப்பட்டுள்ளதோ அதே பொருளினால் தான் இந்த மையங்களும் ஆக்கப்பட்டுள்ளன. என்பது அவர்களின் கருத்து, சாங்கியர்களும் இதையே கூறுகின்றனர். முந்தியது பவுதீகப் பொருள் தொடர்பான முடிவு, பிந்தியது மன இயல் தொடர்பான முடிவு. ஆனால் இரண்டும் ஒன்றே. நமது ஆராய்ச்சிக்களமோ இதற்கு அப்பால் உள்ளது.
அந்த முறையைப் பின்பற்றியே அந்த விஞ்ஞானத்தை நாம் அறிய முடியும். ராஜயோகத்திற்கும் அவ்வாறே.

உணவு பற்றிய சில கட்டுப்பாடுகள் உள்ளன. மனத்தை மிகவும் தூய்மையாக்கும் உணவையே நாம் உட்கொள்ள வேண்டும். மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றால் இதன் உண்மையை நீங்கள் உடனடியாக அறியலாம். யானை பெரிய மிருகமாக இருந்தும், அமைதியாக சாதுவாக இருக்கிறது. சிங்கம், புலி இருக்கும் கூண்டுகளின் அருகில் சென்றாலோ அவை சஞ்சலத்துடன் அலைந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உணவு எத்தகைய வேறுபாட்டை உண்டாக்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. உடலில் செயல்படும் சக்திகள் எல்லாம் உணவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் ஒவ்வொரு நாளும் அதை அனுபவிக்கிறோம். பட்டினியாக இருந்தால் முதலில் உடல் பலவீனம் அடையும். பின்னர் பவுதீக சக்திகள் பாதிக்கப்படும், சில நாட்களுக்குப் பின் மன ஆற்றல்கள் தளரத் தொடங்கும். முதலில் ஞாபக சக்தி குறையும். பிறகு எதையும் சிந்திக்க முடியாத நிலை வரும், எதையாவது ஆராய்வது என்ற பேச்சே இல்லை. எனவே ஆரம்பத்தில் நாம் என்ன உண்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். போதிய வலிமை பெற்றபின், நமது முயற்சி நன்றாக முன்னேறிய பின் இந்த விஷயத்தில் அவ்வளவு எச்சரிக்கை வேண்டியதில்லை. இளம் பயிராக இருக்கும்போது தீங்கு ஏற்படாதபடி வேலியிடுவது அவசியம். அது வளர்ந்து மரமானபின் வேலி தேவையில்லை. தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான ஆற்றலை அது பெற்றுவிடும்.

அதிக சுகபோகம், கடின தவம் ஆகிய இரண்டு எல்லைகளையும் யோகி விலக்க வேண்டும். அவன் பட்டினி கிடக்கக் கூடாது. உடலையும் துன்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்பவன் யோகியாக இருக்க முடியாது என்கிறது கீதை: பட்டினி கிடப்பவன், விழித்தே இருப்பவன், அதிகம் தூங்குபவன், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவன்-இவர்களுள் யாருமே யோகியாக முடியாது.

தொடரும்...

Comments