விவேகானந்தரின் பரமக்குடி சொற்பொழிவு!


விவேகானந்தரின் பரமக்குடி சொற்பொழிவு!
1.பிப்ரவரி 1897 அன்று காலை அளிக்கப்பட்ட வரவேற்புரைக்கும் பதிலளித்து சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

நீங்கள் மிகுந்த அன்போடும் கனிவோடும் எனக்களித்த வரவேற்ப்பிற்கும் நன்றி சொல்வது என்பது இயலாத காரியம். நீங்கள் அனுமதித்தால் நான் ஒன்று கூற விழைகிறேன் - நீங்கள் என்னைப் பேரன்புடன் வரவேற்றாலும் சரி அல்லது இந்த நாட்டைவிட்டு உதைத்துத் துரத்தினாலும் சரி,என் நாட்டின் மீது எனக்குள்ள அன்பு ஒன்று போலவே இருக்கும் . கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், வேலைக்காகவே வேலை செய்ய வேண்டும், அன்பிற்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். மேலை நாடுகளில் என்னால் செய்யப்பட்டிருக்கும் வேலை மிகவும் சிறியது. நான் செய்ததைப்போல் மேலை நாட்டில் நூறு மடங்கு வேலை செய்ய இங்குள்ள ஒவ்வொருவராலும் முடியும். இந்தியாவின் காடுகளிலிருந்து தோன்றிய, இந்திய மண்ணுக்கும் மட்டுமே சொந்தமான ஆன்மீகம் ,தியாகம் ஆகியவற்றை உலகம் முழுவதற்கும் தயாரான, வெல்ல முடியாத ஆன்மீக ஆற்றலோடு கூடிய மனிதர்கள் தோன்றும் நாளை நான் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.

உலக வாழ்வில் ஒருவிதமான சோர்வினால் பீடிக்கப்படுவது போன்ற சில காலகட்டங்களை உலக நாடுகள் ஒவ்வொன்றும் சந்திப்பதை மனிதகுல வரலாற்றில் நாம் காண்கிறோம். அப்போது அவர்களுடைய திட்டங்கள் எல்லாம் கைநழுவிப் போகின்றன, அவர்களுடைய சமுதாய அமைப்புகளும் தூள்தூளாகிப் புழுதியில் வீழ்கின்றன, அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இருண்டு போகின்றன, எல்லாமே சூன்யமாகின்றன.

சமுதாய வாழ்வை உருவாக்க இந்த உலகத்தின் இரண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஓன்று , மதத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று சமுதாயத் தேவையை அடிப்படையாகக் கொண்டது ; ஒரு முயற்சி ஆன்மீகத்தின் மீது எழுப்பப்பட்டது; மற்றொன்று காணும் இந்த உலகத்தை ஆதாரமாகக் கொண்டது. ஒன்று, போகப் பொருட்களால் ஆன இந்தச் சின்னஞ்சிறிய உலகத்திற்கு அப்பால் துணிச்சலாகப் பார்ப்பதும் அங்கேயும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையைத் துவக்குவதும் ஆகும்;மற்றொன்று, உலகப் பொருளிலேயே திருப்தி அடைந்து விடுவதும் அங்கேயே நிலைத்து வாழ நினைப்பதும் ஆகும். ஆச்சரியப்படும் வகையில் சில வேளைகளில் ஆன்மீகமும், சில வேளைகளில் லௌகீகமும் உச்சத்திற்கு வருகின்றன. இரண்டும் அலையலையாக ஒன்றையொன்று தொடர்வது போல் உள்ளது ஒரே நாட்டில் இத்தகைய பல்வேறு அலைகள் நிலவும். ஒரு சமயம் லௌகீக அலை அடித்துப் பரவும்; அப்போது அதிக இன்பமும் அதிக உணவும் தருகின்ற செல்வம், அத்தகைய கல்வி போன்ற இந்த வாழ்க்கையைச் சேர்ந்த அனைத்தும் பெருமை பெறும். பின்னர் கீழான நிலைக்குச் சென்று இழிநிலையை அடைந்துவிடும். செல்வத்தின் வளர்ச்சியோடு மனித இனத்துடனேயே தோன்றிய எல்லா வகையான பொறாமைகளும் வெறுப்புகளும் உச்சநிலையை அடையும். அந்தக் காலகட்டத்தில் போட்டிகளும் இரக்கமற்ற கொடுமைகளும் நிலவியே தீரும். பிரபலமான ஆனால் அவ்வளவு சிறந்ததல்லாத ஓர் ஆங்கில பழமொழி கூறுவது போல் ஒவ்வொறு வரும் தனக்காகவே வாழ்கிறார்கள், பின்னால் வருபவனைச் சாத்தான் பிடித்துவிட்டுப் போகட்டும் என்பது அந்த நாளின் நோக்கமாக அமையும். வாழ்க்கை முறையின் திட்டமே தோற்றுவிட்டது என்றே மக்கள் நினைப்பார்கள் . அப்போது ஆன்மீகம் வந்து மூழ்குகின்ற அந்த உலகிற்கு உதவிக்கரம் நீட்டி அதனைக் காப்பாற்றவில்லை எனில் உலகமே அழிந்து போய்விடும்.

அதன்பிறகு உலகம் புதிய நம்பிக்கையைப் பெறும்; புதிய வாழ்க்கை முறைக்கான புதிய அடித்தளத்தைக் காணும். பிறகு மற்றோர் ஆன்மீக அலை வரும்; காலப் போக்கில் அதுவும் அழியத் தொடங்கும். பொதுவாகச் சொல்வதானால் சில விசேஷ ஆற்றல்களுக்குத் தனிப்பட்ட உரிமை கொண்டவர்களான ஒரு பிரிவினரை ஆன்மீகம் உருவாக்குகிறது. இதனுடைய உடனடி விளைவு என்னவென்றால் லௌகீகத்தை நோக்கி மீண்டும் செல் லுதல். இது அந்தப் பிரிவினர் இன்னும் பல்வேறு தனிப்பட்ட உரிமைகளைப் பெற வழிவகுக்கும். காலப் போக்கில் அந்த இனத்தின் எல்லா ஆன்மீக ஆற்றல்கள் மட்டுமல்லாமல், பௌதீக அதிகாரங்களும் சலுகைகளும் அந்தச் சிலரின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும் இந்தச் பாமர மக்களின் தோள்மீது ஏறிக்கொண்டு அவர்களை அடக்கியாள விரும்புவார்கள். இப்போது சமூகம் தனக்கு தானே உதவிக் கொண்டாக வேண்டும் இந்த நிலையில் லௌகீகம் வந்து உதவிக்கரம் நீட்டும்.

நமது தாய்நாடான இந்தியாவை பார்த்தால் இத்தகையதொரு நிலைமையைத்தான் காண்கிறீர்கள் ஐரோப்பாவிற்குச் சென்று வேதாந்தத்தைப் போதித்த ஒருவனை இப்போது வரவேற்கிறீர்கள். ஐரோப்பாவில் பௌதீக வாழ்க்கை அதற்கான வழியைத் திறந்து விட்டிருக்காவிட்டால் என்னை நீங்கள் வரவேற்பதென்பது முடியாத காரியம். பௌதீகம் ஒருவிதத்தில் இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அது வாழ்க்கையின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து விட்டிருக்கிறது; ஜாதிச் சலுகைகளை எல்லோருக்கும் திறந்து விட்டிருக்கிறது; ஜாதிச் சலுகைகளை அழித்திருக்கிறது ;பயன்படுத்துவதற்கு மறந்துபோய் ஒரு சிலரிடம் மறைக்கப்பட்டுக் கிடந்த விலைமதிப்பற்ற புதையல்களை, விவாதிப்பதற்காகத் திறந்து வைத்திருக்கிறது.

இந்த நாட்டின் அருமையான ஆன்மீகப் புதையல்களுள் பாதி திருடப்பட்டுவிட்டது, நாம் அவற்றை இழந்துவிட்டோம்.மறு பாதியோ, தானும் தின்னாமல் பசுவையும் தின்ன விடாமல் வைக்கோற்போரைக் காவல் செய்யும் நாய்களைப் போன்ற சிலரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இனி மற்றொரு புறம், ஜரோப்பாவில் பல காலமாக இருந்து வருவதும் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டும் குறைபாடுகளுடன் கூடியதாகவே இருப்பதுமான அரசியல் அமைப்புகளை இந்தியாவில் கொண்டு வரத் துடித்துக் கொண்டிருக்கிறோம். அரசியலோடும் அரசாங்கத்தோடும் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளும் வழிமுறைகளும் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டன. எனவே செல்லும் திசையறியாமல் ஐரோப்பா குழம்பிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கொடுங்கோன்மை அங்கே பயங்கரமாக உள்ளது.வேலை செய்யாத, ஆனால் லட்சக்கணக்கான மக்களின் உழைப்பை உறிஞ்சுகின்ற சில மனிதர்களின் கையில் நாட்டின் செல்வமும் அதிகாரமும் கட்டுண்டு கிடக்கின்றன. இந்த அதிகாரத்தின் மூலம் பூமி முழுவதையும் அவர்கள் ரத்த வெள்ளத்தில் நனைக்க முடியும். மதமும் மற்ற எல்லாமுமே அவர்களின் காலடியில் கிடக்கின்றன. அவர்களே ஆள்கிறார்கள் , எல்லாவற்றிக்கும் மேலானவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் . மேலை நாடுகள் ஒரு சில ஈட்டிக் காரர்களால் தான் ஆளப்படுகின்றன. சட்டரீதியான அரசாங்கம், சுதந்திரம் ,உரிமை பாராளுமன்றம் என் றெல்லாம் நீங்கள் கேள்விப்படுகிறீர்களே, அவையெல்லாம் வெறும் வேடிக்கைச் சத்தங்கள் மட்டுமே.

ஈட்டிக்காரர்களின் கொடுமையால் மேலை நாடுகள் துடிக்கின்றன. கீழை நாடுகள் பூஜாரிகளின் கொடுமையால் துடிக்கின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று தடுத்துக் காக்க வேண்டும். இவற்றுள் ஒன்று மட்டுமே உலகிற்கு உதவிசெய்ய வேண்டுமென்று நினைக்காதீர்கள் .பாரபட்சமற்றவரான இறைவன் தன் படைப்பில் ஒவ்வொரு துகளையும் கூட சமமாகவே படைத்திருக்கிறான் மிக மோசமான, அரக்கத்தனமான ஒருவனிடம் மகனிடம்கூடஇல்லாத உயர்ந்த குணங்கள் இருக்கலாம். ஏழைத் தொழிலாளி ஒருவனை எடுத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு வாழ்வில் இன்பம் மிகக் குறைவே. உங்களைப் போன்ற அறிவு அவனிடம் இல்லை. வேதாந்தத் தத்துவங்களை அவனால் புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் உடம்பை அவனது உடம்போடு ஒப்பிட்டுப் பாருங்கள்.அவனது உடம்பு உங்கள் உடம்பைப்போல், அவ்வளவு சீக்கிரமாக நோய்க்கும் வலிக்கும் இடம் தருவதில்லை. அவனது உடம்பில் ஆழமான வெட்டுப்பட்டால்கூட அந்தக்காயம் உங்கள் உடம்புகளை விட விரைவில் ஆறிவிடுகிறது. அவன் அவற்றின் மூலமே மகிழ்ச்சி அடைகிறான். அவனது வாழ்க்கை சமச்சீராக சமன்படுத்தப் பட்டதாக உள்ளது லௌகீக அடிப்படையில் ஆகட்டும், அறிவு அல்லது ஆன்மீக அடிப்படையில் ஆகட்டும், இறைவன் பாரபட்சமின்றி, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றை ஒவ்வொருவருக்கும் அளித்து எல்லோரையும் சமமாகவே வைத்திருக்கிறார். எனவே நாம் தான் உலகத்தைக் காப்பவர்கள் என்று நினைக்கத் தேவையில்லை. நாம் உலகத்திற்குப் பல நல்லவற்றைப் போதிக்கலாம். அதேவேளையில் நாமும் உலகத்திடமிருந்து நல்லவை பலவற்றைக் கற்றுக் கொள்ளமுடியும். உலகத்திற்கு எது தேவையோ அதைத்தான் நாம் கற்பிக்க முடியும். ஆன்மீக அடிப்படை மட்டும் இல்லாமல் போனால், மேலை நாகரீகம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தூள்தூளாகச் சிதறிவிடும் மனித குலத்தை வாளால் ஆள நினைப்பது முழுக்க முழுக்கப் பயனற்ற வீண் முயற்சி. அத்தகைய வன்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் எல்லாம் நாசமடைந்து , மிக விரைவில் தன் நிலையிழந்து உருத்தெரியாமல் மறைந்து போயிருப்பதை நீங்கள் காணலாம். பௌதீக ஆற்றலின் நிலைக்களனான ஐரோப்பா தன் நிலையை மாற்றி, ஆன்மீகத்தைத் தன் அடிப்படையாகக் கொள்ளாமல் போகுமானால் இன்னும் ஐம்பது ஆண்டிற்கு அது நொறுங்கிச் சுக்கலாகச் சிதறிவிடும். அந்த ஐரோப்பாவை எது காக்க முடியும் தெரியுமா ? உபநிடதங்கள் கூறுகின்ற ஆன்மீகம் மட்டுமே.

பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ்திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை . இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும். ஆன்மா எல்லா சக்திகளும் நிறைந்தது என்ற கருத்து, இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் என்றில்லாமல் இந்தியா முழுவதுமே உள்ளது. நீங்கள் ஆற்றலையோ, தூய்மையையோ, முழுமையையோ வெளியேயிருந்து பெற முடியும் என்று இந்தியாவில் உள்ள பிறப்புரிமை, உங்கள் இயற்கை என்றே இந்தியத் தத்துவங்கள் கூறுகின்றன. இது உங்களுக்கு நன்றாகவே தெரியும். தூய்மையற்ற தன்மை என்பது நம் மீது தினிக்கப்பட்டது மட்டுமே, அதனால் உங்களுடைய உண்மை இயல்பு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான நீங்கள் ஏற்கனவே முழுமையாகவும் வலிமை வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களை ஆள்வதற்கு உங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம். உங்களை ஆள்கின்ற சக்தி ஏற்கனவே உங்களிடம் உள்ளது. அதை நீங்கள் அறியவில்லை, அவ்வளவுதான் அதை அறிவதிலும் அறியாமல் இருப்பதிலும்தான் வேற்றுமை உள்ளது. அந்த வேற்றுமை, அந்தச் சிரமம்தான் அவித்யை ஒரே வார்த்தையில் கூறப்படுகிறது.

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில், மகானுக்கும் பாவிக்கும் இடையில் வேற்றுமையை உண்டாக்குவது எது? அவித்யை, அதாவது அறியாமை. மிக வுயர்ந்த மனிதனுக்கு அவன் காலடியில் நெளிகின்றன சாதாரண புழுவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறியாமை. அதுதான் எல்லா வித்தியாசங்களையும் உண்டாக்குகிறது. நெளிகின்ற அந்தச் சிறு புழுவிற்குள் எல்லையற்ற ஆற்றலும் அறிவும் தூய்மையும் இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது இறைவனின் எல்லையற்ற தெய்வீகமும் உள்ளது. அது வெளிப்படவில்லை, அது வெளிப்பட வேண்டும்.

மகத்தான இந்த உண்மையைத்தான் இந்தியா உலகிற்குப் போதிக்க வேண்டும் . ஏனெனில் அது வேறெங்கும் இல்லை . அந்த உண்மையே ஆன்மீகம், ஆன்மாவையும் பற்றிய உண்மை. ஒரு மனிதனை நிமிர்ந்தெழுந்து செயல்புரிய வைப்பது எது? பலம். பலமே நன்மை, பலவீனம்தான் பாவம். வெடிக்குண்டைப்போல் வெளிக்கிளம்பி, குண்டிலிருந்து பாயும் இரும்புச் சிதறல்கள் போல் அறியாமைத் திரள்கள் மீது பாயும் ஒன்று உபநிடதங்களில் இருக்குமானால், அது அச்சமின்மை என்னும் ஒரு சொல்லாகும். அச்சமின்மை என்பதே இப்போது போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம். உலக வாழ்விலும் சரி மத வாழ்விலும் சரி அச்சம்தான் எல்லா அழிவுகளுக்கும் பாவங்களுக்கும் மறுக்க முடியாத காரணமாக இருக்கிறது. அச்சம்தான் துன்பத்தைக் கொண்டு வருகிறது. அச்சம் தான் சாவைக் கொண்டு வருகிறது. அச்சம்தான் தீமைகளைப் பெருக்குகிறது.

அச்சம் எதனால் உண்டாகிறது? நம் சொந்த இயல்பை அறியாததால்தான். நாம் ஒவ்வொருவரும் அரசர்களுக்கெல்லாம் பேரரசரின் வாரிசுகள். நாம் கடவுளின் அம்சமே, அல்ல அல்ல வேதாந்தத்தின் படி நாம் கடவுளே. சிறிய மனிதர்களாக நம்மை நினைத்து, அதனால் சொந்த இயல்பை மறந்திருந்தாலும் நாம் கடவுளே. அந்த இயல்பு நிலையிலிருந்து நாம் வழுவி விட்டோம். அதனால் நான் உன்னைவிடச் சிறிது மேலானவன் அல்லது நீ என்னை விட மேலானவன் என்றெல்லாம் வேற்றுமைகளைக் காண்கிறோம். இந்த ஒருமைக் கருத்துதான் இந்தியா உலகிற்குத் தர வேண்டிய மகத்தான பாடம் நன்றாக கவனியுங்கள் இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டால் பொருட்களின் தன்மையையே இது மாற்றிவிடும். ஏனெனில் அப்போது நீங்கள் உலகத்தை இதுவரை பார்த்துவந்த கண்ணோட்டத்தில் இருந்து வேறான கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள். பிறந்து பிறருடன் போராடி வலிமையானவன் வெல்லவும் வலிமையற்றவன் சாவதற்கும் அமைந்த போர்களம் அல்ல இந்த உலகம் என்பது தெரியும் அப்போது இந்த உலகம் ஒரு விளையாட்டுமைதானமாகிவிடும். சிறு குழந்தைபோல் இறைவன் அங்கே விளையாடுவார். நாம் அவருடன் ஆடிக்களித்துக் செயல்புரிவோம். எவ்வளவு பயங்கரமாகவும் கொடூரமாகவும் ஆபத்தானதாகவும் காணப்பட்டாலும், இவையாவும் வெறும் விளையாட்டே. அதன் உண்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

ஆன்மாவின் இயல்பை அறியும்போது சிறிதும் வலிமையற்றவர்களுக்கும் மிகவும் இழிவானவர்களுக்கும் , மிகவும் துன்பப்படும் பாவிகளுக்கும் கூட நம்பிக்கை வருகிறது. நம்பிக்கை இழக்காதீர்கள் என்றே நம் சாஸ்திரங்களும் முழங்குகின்றன. நீ என்ன செய்தாலும் நீதான் உன் இயல்பைக் மாற்ற உன்னால் முடியாது. இயற்கையே இயற்கையே அழிக்க முடியாது. உங்கள் இயல்பு தூய்மை. அது லட்சக்கணக்கானயுகங்களாக மறைக்கப்பட்டு இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது வென்று மேலே வந்தேதீரும்.

எனவே அத்வைதம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையைக்கொண்டு வருகிறது. நம்பிக்கையை இழக்காதீர்கள். அத்வைதம் அச்சத்தின் வழியைக் கையாண்டு போதிப்பதில்லை; நீங்கள் கொஞ்சம் ஏமாந்தால் உங்களைப் பிடித்துக் கொள்கின்ற பேய்களைப்பற்றி ஒன்றுமே இல்லை. உங்கள் விதி உங்கள் கைகளில் இருக்கிறது என்றுதான் அது கூறுகிறது. உங்களுடைய சொந்த வினை தான் உங்களுக்காக இந்த உடம்பை உற்பத்தி செய்திருக்கிறது. உங்களுக்காக இதை வேறு யாரும் செய்யவில்லை . எங்கும் நிறைந்த கடவுள் அறியாமை காரணமாக மறைந்துள்ளார். பொறுப்பு உங்களிடமே; உங்கள் விருப்பம் இல்லாமல் இந்த உலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இந்த பயங்கரமான இடத்தில் நீங்கள் விடப்பட்டு இருப்பதாக எண்ணாதீர்கள். நீங்களே உங்கள் உடம்பை உருவாக்கினீர்கள்; இப்போது உருவாக்கிக் கொண்டிருப்பதைப் போலவே சிறிதுசிறிதாக உருவாக்கினீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே உண்கிறீர்கள், உங்களுக்காக வேறு யாரும் சாப்பிட முடியாது. உண்டதை நீங்களே செரிக்கிறீர்கள், வேறு யாரும் அதைச் செய்ய முடியாது. ரத்தம், தசை, உடம்பு முதலியவற்றை அந்த உணவிலிருந்து நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள், வேறு யாரும் அதை உங்களுக்காகச் செய்ய முடியாது. நீங்கள் தான் இவற்றை எப் போதும் செய்து வருகிறீர்கள். சங்கிலியில் உள்ள ஒரு வளையத்தைப் புரிந்து கொண்டால், எல்லையற்ற சங்கிலியையே தெரிந்துகொள்ளலாம். ஒருகணம் உங்கள் உடம்பைக் நீங்கள் உற்பத்தி செய்வது உண்மையானால், கடந்து சென்ற மற்றும் வரப்போகின்ற ஒவ்வொரு கணத்திற்கும் அது உண்மையே. நன்மை தீமைகளுக்கான எல்லா பொறுப்பும் உங்களுடையதே. இது மகத்தான நம்பிக்கையைத் தருகிறது. நான் ஒன்றைச் செய்தே னானால் அதை இல்லாமல் ஆக்கவும் என்னால் முடியும்.

அதேவேளையில் நமது மதம் கடவுளின் கருணையையும் மனித குலத்திலிருந்து அப்பால் எடுத்துச் சென்று விடவில்லை , அது எப்போதும் அங்கேயே இருக்கிறது. ஆற்றல் மிக்கதான நன்மை- தீமை ஓட்டத்தின் பக்கத்தில் கடவுள் நிற்கிறார். அவர் பந்தமில்லாதவர், எப்போதும் கருணைமயமானவர், நாம் கரையை அடைய உதவுவதற்கு எப்போதும்தயாராக இருப்பவர். அவரது கருணை மகத்தானது. தூய இதயத்தில் அது எப்போதும் நிறைகிறது.

புதிய சமூக அமைப்பிற்கு உங்கள் ஆன்மீகம் ஒரு குறிப்பிட்ட வகையில் அடிப்படையாக அமைய வேண்டும். அத்வைதத்தின் சில முடிவுகளிலிருந்து மேலை நாடு இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு இன்னும் சிறிது நேரம் கிடைத்திருந்தால் அவற்றைப் பற்றியெல்லாம் கூறியிருப்பேன். பௌதீக விஞ்ஞான அறிவு வளர்நதுவிட்ட இந்தகாலத்தில் சகுணக்கடவுள் லட்சியம் எல்லாம் அதிகப்பயனைத் தராது. இருப்பினும் ஆரம்ப நிலையிலுள்ள மதத்தைச் சார்ந்த ஒருவன் கோயிலும் விக்ககிரகங்களும் தேவை என்று கருதுவானானால், அவன் விருப்பம்போல் எத்தனை னேண்டுமோ அத்தனையும் வைத்துக்கொள்ளலாம். அவன் அன்பு செய்ய ஒரு சகுணக் கடவுள் தேவையானால் அது வேண்டிய அளவு இங்கு உள்ளது சகுணக் கடவுளைப் பற்றிய இத்தகைய மிக உன்னதமான கருத்துக்களை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாது. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட ஒருவன் தன் அறிவைத் திருப்திப்படுத்த விரும்புவனானால் , அவனுக்கு நிர்க்குணக் கடவுளைப் பற்றி மிக ஆழ்ந்த கருத்துக்களுக்கும் இங்கே உள்ளன

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,