இந்தியாவின் எதிர்காலம்! (பகுதி-2)


இந்தியாவின் எதிர்காலம்! (பகுதி-2)
அந்த அழிவிலிருந்து மீண்டும் முன்னைவிடப் புதுமையோடும் வலிமையோடும் எழுந்து நின்றுள்ளன அந்தக் கோயில்கள் இதுதான் நம் தேசிய சிந்தனை தேசிய வாழ்க்கை நீரோட்டம் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள், அது உங்களைப் பெருமைக்கு அழைத்துச் செல்லும். அதை விடுங்கள், நீங்கள் அழிந்து விடுவீர்கள், சாவுதான் அதன் ஒரே விளைவு. வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு நீங்கள் விலகுகின்ற அந்தக் கணமே அழிவு உங்களைப் பற்றிக் கொள்ளும். மற்ற எதுவும் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை : அதாவது அரசியலோ சமூக முன்னேற்றங்களோ தேவையற்றவை என்பதல்ல நான் சொன்னதன் பொருள். நான் சொல்வதெல்லாம், மதம் முதன்மையானது, மற்றவையெல்லாம், அதற்கு அடுத்தபடி என்பதுதான். இந்திய மனம் மற்ற எதைவிடவும் மதத்தைச் சார்ந்தது. எனவே அதை வலுப்படுத்தியாக வேண்டும் அதை எப்படிச் செய்வது?

என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன் இந்தக் கருத்துக்கள் நெடுங்காலமாக நான் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படும் முன்னரே என் மனத்தில் இருந்தன. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவுக்கும் சென்ற தெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே சர்வசமயப் பேரவையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ எனக்கு அக்கறையி ல்லை அது ஒரு வாய்ப்பாக இருந்தது, அவ்வளவுதான். ஆனால் உண்மையில் எனது இந்தக் கருத்துக்களே என்னை உலகம் முழுவதும் வலம்வரச் செய்தன.

என் எண்ணம் இது : நமது நூல்களில் புதைந்து கிடக்கின்ற, மடங்களிலும் காடுகளிலும மறைந்தே விட்டதுபோல் ஏதோ சிலரின் சொத்தாக இருக்கின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும். அந்த ஏதோ சிலரின் கைகளிலிருந்து மட்டுமல்ல அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, அணுகமுடியாத கவசம் போலுள்ள அந்த மொழியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வளமை பெற்று வந்துள்ள சம்ஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கருத்துக்களைப் பிரபலமாக்க வேண்டும் இந்தக் கருத்துக்களை வெளியே கொண்டுவர நான் விரும்புகிறேன். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் ஆனாலும் சரி, தெரியாதவர்கள் ஆனாலும் சரி, இந்தக் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுச் சொத்தாக வேண்டும். பெருமை மிக்க நமது சம்ஸ்கிருத மொழி இருக்கிறதே, அதுதான் வழித்தடையாக இருக்கிறது. இயலுமானால் நம் நாட்டிலுள்ள அனைவரும் சம்ஸ்கிருத வல்லுனராக வேண்டும் அதுவரை இந்தக் தடையை நீக்க முடியாது.

சம்ஸ்கிருத மொழியை என் ஆயுள் முழுவதும் படித்து வருகிறேன். என்றாலும் ஒவ்வொரு புதிய நூலும் புரிந்துகொள்ள முடியாததாகவே எனக்கு உள்ளது. அவ்வளவு கடினமான மொழி அது. இப்படி இருக்கும்போது அந்த மொழியை முழுக்கப் படிப்பதற்கு நேரமில்லாத மக்களுக்கு இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் ? எனவே இந்தக் கருத்துக்களை மக்களின் மொழியில் போதிக்க வேண்டும். ஏனென்றால் சம்ஸ்கிருத வார்த்தைகளில் ஒலியே நம் இனத்திற்கு ஒரு மதிப்பையும் ஆற்றலையும் வலிமையையும் தருகிறது.

மகத்தான ராமானுஜரும் சைதன்யரும் கபீரும் இந்தியாவின் தாழ்ந்த வகுப்பினரை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் மாபெரும் வெற்றியைக் கண்டன. ஆனால் அது அவர்கள் காலத்தில் மட்டுமே. அந்த மாபெரும் ஆச்சாரியர்கள் போதித்த உபதேசங்களின் வேகம், அவர்கள் மறைந்த ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே மறைந்து விட்டன, அவை தோல்வியைத் தழுவின. ஏன்? அதன் காரணம் என்ன? அதை நாம் இங்கே விளக்கத்தான் வேண்டும். காரணம் இதுதான்: அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தினார்கள், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்கள்: ஆனால் பாமர மக்களிடையே சம்ஸ்கிருதக் கல்வியைப் பரப்புவதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை மகத்தான புத்தர் கூட சாதாரண மக்கள் சம்ஸ்கிருத மொழியைப் படிக்க வேண்டாம் என்று தடுத்தபோது ஒரு தவறான அடியையே எடுத்து வைத்தார். அவர் விரைவான உடனடியான விளைவுகளை விரும்பினார். அதனால் அன்றைய பேச்சுமொழியான பாலியில் மொழி பெயர்த்தே பிரச்சாரம் செய்தார். அது பெரிய விஷயம்: அவர் மக்களின் மொழியில் பேசினார், மக்கள் புரிந்து கொண்டார்கள். அது சிறப்பானது, அது கருத்துக்களை விரைவாகப் பரப்பியது. நெடுந்தொலைவில் உள்ளவர்களையும் அவரது கருத்துக்கள் சென்றடைந்தன. ஆனால் அதனுடன் சம்ஸ்கிருதமும் பரப்பப்பட்டிருக்க வேண்டும். அங்கே அறிவு வந்தது, ஆனால் பெருமைவரவில்லை, பண்பாடு வரவில்லை. பண்பாட்டுதான் அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியும், எவ்வளவு தான் ஆனாலும் அறிவினால் அது முடியாது.

உலகிற்கு நீங்கள் அறிவுரையைப் பொழியலாம் அதனால் பெரிய நன்மை எதுவும் விளைந்துவிடப் போவதில்லை ரத்தத்தில் பண்பாடு வர வேண்டும் தற்காலத்தில் கல்வியில் உன்னத வளர்ச்சி கண்ட பல நாடுகளை நாம் அறிவோம். அதனால் என்ன! அவர்கள் புலிகளைப்போல் உள்ளார்கள், காட்டுமிராண்டிகளைப் போல் இருக்கிறார்கள், ஏனெனில் அங்கே பண்பாடு இல்லை. நமது நாகரீகத்தைப் போலவே அறிவும் அங்கே தோலை மட்டும் தொட்டுள்ளது, சிறு சிராய்ப்பு போதும், பழைய காட்டுமிராண்டித்தனம் வந்துவிடும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இது தான் ஆபத்து. சாதாரண மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள், அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள், ஆனால் அதை விட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவை , பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதைக்கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது. அப்போது சம்ஸ்கிருத மொழியால் மேன்மை பெற்ற ஒரு தனி ஜாதி உருவாகவே செய்யும், அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்து மற்றவர்களை அடக்கியாளவே செய்தார்கள்.

உங்களுள் தாழ்ந்த ஜாதியினரிடம் சொல்கிறேன்: உங்களுக்கு ஒரே வழி உங்கள் நிலை உயர ஒரே உபாயம் சம்ஸ்கிருதம் படிப்பதே. உயர்ந்த ஜாதியினருடன் சண்டையிடுவதும் எழுதுவதும் நிந்திப்பதும் வீண். அது எந்த நன்மையையும் தராது. துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் நமது இனம் மேலும் பிளவுபடவே இந்தச் சண்டைகள் வழிவகுக்கும். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் நிலவுவதற்கான ஒரே வழி மேல் ஜாதியினரின் வலிமைக்குக் காரணமான கல்வியறிவையும் பண்பாட்டையும் எல்லோருக்கும் பொதுவாக்குவதே. அதைச் செய்துவிட்டால் நீங்கள் விரும்பியதைப் பெறுவீர்கள்.

இது தொடர்பாக சென்னை சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விஷயத்தை நான் பேச விரும்புகிறேன்.தென்னிந்தியாவில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும், அவர்கள் வட இந்தியாவில் வாழ்ந்த ஆரியர் என்ற இனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டடவர்கள் என்றும் தென்னிந்திய பிராமணர்கள் மட்டுமே வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் பிற தென்னிந்தியர்கள் எல்லாம் இந்தப் பிராமணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும் இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது திருவாளர் மொழியியல் அறிஞரே, உங்கள் கருத்தை மறுப்பதற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. ஆதாரத்திற்காக ஒரே ஒரு நிரூபணம் காட்ட முடியும் என்றால் அது வட நாட்டிற்கும் தென்னாட்டிற்கும் இடையே மொழியில் அமைந்துள்ள வேற்றுமை மட்டுமே, வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.

இங்கே நாங்கள் வட இந்தியர்களும் பலர் இருக்கிறோம். எங்களுள் யார் வட இந்தியர், யார் தென்னிந்தியர் என்று பிரிக்குமாறு இங்கே இருக்கும் என் ஐரோப்பிய நண்பர்களிடம் நான் சொல்கிறேன். அவர்களால் முடியாது. வேற்றுமை எங்கே? மொழியில்தான் ஏதோ சிறு வேறுபாடு இருக்கிறது ஆனால் இங்குள்ள பிராமணர்கள் சம்ஸ்கிருதம் பேசிய இனத்திலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு எப்படி சம்ஸ்கிருதம் தெரியாமல் போயிற்று ! அவர்கள் இங்கு வந்ததும் திராவிட மொழியைப் பேசத் துவங்கி சம்ஸ்கிருதத்தை மறந்து விட்டார்களாம். மற்ற ஜாதியினர் விஷயத்திலும் ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது? வட இந்தியாவிலிருந்து ஒருவர்பின் ஒருவராக வந்த மற்ற எல்லா ஜாதியினரும் திராவிட மொழியைப் பேசத் தொடங்கியதால் ஏன் சம்ஸ்கிருதத்தை மறந்திருக்கக் கூடாது? எனவே இந்த வாதத்தை இரண்டு பக்கமிருந்தும் பேசலாம். பொருளற்ற இத்தகைய பேச்சுக்களை நம்பாதீர்கள். திராவிடர்கள் இங்கே இருந்திருக்கலாம்: ஆனால் அவர்கள் காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். எஞ்சியிருந்த ஏதோ சிலர் காடுகளிலும் மற்ற இடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும், அவர்களின் மொழியை இங்குள்ளவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இங்குள்ள அனைவரும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களே. இந்தியா முழுவதிலும் இப்போது இருப்பவர்கள் ஆரியர்களே, வேறுயாருமில்லை.

மற்றொரு கருத்தும் இங்கே நிலவுகிறது - சூத்திரர்கள் எல்லாம் ஆதிவாதிகளாம் ! அவர்கள் யார்? அடிமைகள்! அமெரிக்கர் , ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர் ஆகிய அனைவரும், அப்பாவி ஆப்பிரிக்கர்களைப் பிடித்துக் கொண்டுவந்து கடினமாக வேலை வாங்கினார்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குப் பிறந்த கலப்பின் மக்களையும் நெடுங்காலம் வரை அதே நிலையில் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அந்த விசித்திரமான உதாரணத்தைப் படித்த இவர்களின் மூளையில், இங்கேயும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமே கறுப்புக் கண்களோடு கூடிய ஆதிவாசிகளால் நிறைந்திருந்தது என்று கனவு காண்கிறார் நம் தொல்பொருள் ஆய்வாளர். சிவந்த நிற முடைய ஆரியர்கள் பின்னால் வந்தனராம்! எங்கிருந்து? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

சிலருடைய கருத்துப்படி அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்தார்கள். மற்றும் சிலரே, அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தாகக் கூறுகிறார்கள். சிவப்புத் தலைமையிரை உடையவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று நினைக்கின்ற,தேச பக்தர்களான சில ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள். தங்கள் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் அவர்கள் கறுப்பு நிறத் தலைமயிரை உடையவர்கள் என்று நினைக்கிறார்கள். எழுதியவர் கறுப்பு முடியள்ள மனிதராக இருந்தால், ஆரியர்கள் எல்லாரும் கறுப்பு முடியுள்ளவர்கள்.

இனி ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன. இத்தகைய கொள்கைகளுடன் அவர்களும் சேர்ந்தே அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வட துருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகின்றனர். ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பராக!

இந்தக் கொள்கைகளில் உண்மை இருக்கிறதென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டுமே! ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்பதை நிரூபிக்கும் படியான ஒரு வார்த்தைகூட நமது சாஸ்திரங்களில் இல்லை பழங்கால இந்தியா ஆப்கானிஸ்தானமும் சேர்ந்த பகுதியாகும், அவ்வளவுதான் இது போதும் அதுபோலவே சூத்திரங்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்கள் அவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள் என்ற கொள்கையும் தர்க்கரீதியானதோ அறிவு பூர்வமானதோ அல்ல. ஒருசில ஆரியர்கள் வந்து குடியேறி லட்சக்கணக்கான அடிமைகளை அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா என்ன! அப்படி அடக்கி ஆண்டிருந்தால், அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடத்தில் சட்னி செய்து சாப்பிட்டிருப்பார்கள்.

ஒரே ஒரு விளக்கம் மகாபாரதத்தில் காணப்படுகிறது; சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் பிராமணர்கள் என்ற ஒரு ஜாதியினரே இருந்தார்கள். அதன்பிறகு பல்வேறு தொழில்களைச் செய்ததன் காரணமாக அவர்கள் தங்களுக்குள் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தார்கள். இது தானக ஜாதிப் பிரச்சினைக்கு உண்மையான அறிவுபூர்மான ஒரே விளக்கம், இனி வரப்போகின்ற சத்திய யுகத்திலும் ஜாதிகள் எல்லாம் சிறிதுசிறிதாக மாறி முதலில் இருந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள ஜாதிப் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி இது தானே தவிர உயர்ந்த ஜாதியினரைக் கீழ் நிலைக்குக் கொண்டுவருவதோ பிராமணர்களை நசுக்குவதோ அல்ல.

பிராமணத்துவம்தான் இந்திய மக்களின் லட்சியம் என்பதை சங்கரர் தமது கீதை விளக்கவுரையின் முன்னுரையில் அற்புதமாக விளக்கியுள்ளார்; ஸ்ரீகிருஷ்ணர் உபதேசகராக வந்ததன் காரணத்தைக் கூறும்போது, இந்த பிராமணத்துவத்தை, பிராமண நிலையை நிலை நிறுத்தவே அவர் அவதரித்தார் என்று கூறுகிறார். அது தான் மகத்தான லட்சியம் மனிதனான பிரம்மத்தை அறிந்தவனான, லட்சியமனிதனான, நிறை மனிதனான இந்தப் பிராமணன் கட்டாயம் இருக்க வேண்டும் அவன்மறைந்து போகக் கூடாது. இன்று அந்த ஜாதி சீர்கெட்டுப் போயிருக்கலாம். இருப்பினும்பிற எல்லா ஜாதியினரும் தயாராக இருக்க வேண்டும். அது உண்மை. பிற எல்லா ஜாதியினரிடமிருந்தும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையுள்ள மதிப்பு அது. அவர்களுடைய குறைகளைப்பற்றிப் பேச தைரியமும் துணிச்சலும் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டும் அதே வேளையில் அவர்களுக்கு உரியதைக் கொடுங்கள் என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் எனவே நண்பர்களே, ஜாதிகளுள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை. அது என்ன நன்மை செய்யும்? நமக்குள் இன்னும் அதிகமான பிளவுகளை உண்டாக்கும் நம்மை மேலும் பலவீனப்படுத்தும், மேலும் இழிநிலையில் ஆழ்த்தும், அவ்வளவுதான்.

தனிச் சலுகைகள் மற்றும் தனி உரிமைகளின் காலம் மலையேறிவிட்டது அவை இந்திய மண்ணிலிருந்து ஒரேயடியாகப் போய்விட்டன இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியால் விளைந்த மகத்தான நன்மைகளுள் இதுவும் ஒன்று தனிச் சலுகைகளை ஒழித்ததான பெரும் பணிக்காக நாம் முகமதியர் ஆட்சிக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். முகமதிய ஆட்சிகூட அப்படியொன்றும் முற்றிலுமாகத் தீயதல்ல. செல்லப்போனால் எதுவுமே முற்றிலும் நல்லதும் அல்ல, முற்றிலும் கெட்டதும் அல்ல. முகமதியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டது, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் கதிமோட்சமாக அமைந்தது. அதனால் தான் நம் மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர் ஆனார்கள் எல்லாவற்றையுமே வாள் மட்டுமே சாதித்தது என்பதில்லை. வாளாலும் நெருப்பாலும் மட்டுமே இந்த அனைத்து வேலைகளும் நடைபெற்றாக நினைப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம். இனி நீங்கள் எச்சரிக்கையாக இல்லை என்றால் உங்கள் சென்னை மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் ஏன் பாதிபேர் கிறிஸ்தவர்களாகி விடுவார்கள், நான் மலபாரில் பார்த்ததைவிட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியமா? பாவம்! கீழ்ஜாதியினர் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில்கூட நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவனே தன் பெயரை தாட்பூட்டென்று ஓர் ஆங்கிலப் பெயராக மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் முகமதியப் பெயரை வைத்துக்கொண்டாலும் போதும், எல்லாம் சரியாகி விடும் அந்த மலபார்வாசிகளைப் பைத்தியங்கள் என்று நினைப்பதைத் தவிர அவர்கள் வீடுகளையெல்லாம் பைத்தியக்கார விடுதிகள் என் பதைத் தவிர வேறு என்னவென்று நினைப்பது? அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டு , நல்ல வழியில் நடக்கும் வரைஇந்தியாவில் உள்ள ஒவ்வோர் இனத்தினரும் அவர்களை வெறுப்பாக நடத்த வேண்டும் என்பதை தவிர வேறு எந்த முடிவுக்கு வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கு வருவது ? இத்தகைய கொடூரமான மிருகத்தனமான பழக்கங்களை அனுமதித்திருக்கிறார்கள். சாந்தக் குழந்தைகளே பட்டினியில் சாகுமாறு விட்டுவிடுகிறாள், ஆனால் அவர்கள் மதம் மாறி விட்டார்களானால் சாப்பாடு போடுகிறார்கள். என்ன வெட்கக்கேடு!ஜாதிகளிடையே இனியும் சண்டை இருக்கக் கூடாது.

உயர்ந்ததைத் தாழ்த்துவதல்ல தாழ்ந்ததை உயர்த்துவதே தீர்வு இதுதான் நமது நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மார்க்கம். சொந்த சாஸ்திர அறிவும் முன்னோர்களின் மகத்தான திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கான திறனும் சுத்த சூன்யமாக இருக்கின்ற சிலர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை ஆனால் மூளையுள்ளவர்களுக்கு , புத்திக்கூர்மை உடையவர்களுக்கு நம் முன்னோர்களின் செயல்திட்டத்தின் முழுப் பரிமாணமும் விளங்கும் , அவர்கள் தனியாக நின்று பல நூற்றுண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அந்த அற்புதமான தேசிய வாழ்வைப் பின்பற்றுவார்கள். பழைய மற்றும் புதிய நூல்களைப் படிப்படியாக ஆராய்ந்து அவர்களால் அதனைக் கண்டறிய முடியும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,