விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-3)


விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் (பகுதி-3)
சர்ச்சுக்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது. வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் நீங்கள் உங்கள் மீது தீட்டிக் கொள்ளலாம்; ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால், நீங்கள் கடவுளை உணரவில்லை என்றால் எல்லாமே வீண். அக வண்ணம் மட்டும் ஒருவனுக்கு இருக்குமானால் அவனுக்குப் புற வண்ணங்கள் எதுவும் தேவையில்லை. உண்மையான ஆன்மீக அனுபூதி என்பது இதுதான் . மதச் சின்னங்கள் மற்றும் அது போன்ற எல்லாம் நமக்கு உதவுமானால் அந்த அளவிற்கு நல்லது, அதை வரவேற்கலாம். நாம் இதை மறக்க கூடாது. ஆனால் அவை வீழ்ச்சி அடையக்கூடியவை. உதவுவதற்குப் பதிலாக நம்மைச் சீரழிக்கவும் செய்யும்.பொதுவாக மனிதன் இந்தப் புறச் சடங்குகளையே மதமாகக் கொள்கிறான். கோயிலுக்குப் போவது ஆன்மீக வாழ்வாகி விடுகிறது, புரோகிதருக்கு ஏதோ கொடுத்துவிட்டால் அதுவும் ஆன்மீக வாழ்வு. இத்தகைய எண்ணங்கள் ஆபத்தானவை, அழிவை விளைப்பவை; அவை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். புறப் புலன்களால் பெறும் அறிவுகூட மதம் ஆகாது என்று நம் சாஸ்திரங்கள் திரும்பத்திரும்பக் கூறுகின்றன.

மாறாக ஒன்றை நாம் உணருமாறு எது செய்கிறதோ, அதுதான் மதம். ஒவ்வொருவருக்குமான மதம் அதுவே. யார் மனத்தைக் கடந்த உண்மையை உணர்கிறாரோ, தன் சொந்த இயல்பிலேயே யார் ஆன்மாவை உணர்கிறாரோ, யார் கடவுளை நேருக்கு நேர் காண்கிறாரோ, எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே காண்கிறாரோ அவரே ரிஷி. நீ ஒரு ரிஷியாகாதவரை, உனக்கு ஆன்மீக வாழ்க்கை இல்லை. நீங்கள் ரிஷியான பிறகே உங்களுக்கு ஆன்மீகம் என்பது ஆரம்பமாகிறது. இப்போது செய்வதெல்லாம் அதற்குத் தயார்படுத்துவதற்கான முயற்சிகளே. அதன் பிறகே உங்களிடம் ஆன்மீகம் என்பது தோன்றுகிறது. இப்பொழுது நீங்கள் செய்வதெல்லாம் அறிவுப் பயிற்சியும் உடம்பை வதைக்கின்ற முயற்சிகளுமே.

எனவே முக்தியை விரும்புகின்ற ஒவ்வொருவரும் ரிஷிநிலை வழியாகச் சென்றாக வேண்டும், மந்திரத்தை நேருக்கு நேர் தரிசிக்க வேண்டும், கடவுளைக் காண வேண்டும் என்பதைக் தெளிவாக, ஆணித்தரமாக நமது மதம் கூறியிருக்கிறது. இதுவே முக்தி. நமது சாஸ்திரங்கள் இட்டுள்ள கட்டளை இதுவே. இந்த நிலையை அடைந்துவிட்டால் சாஸ்திரங்களின் கருத்துக்களை நாமாகவே எளிதில் அறிந்துகொள்ள முடியும் ; அவற்றின் பொருளை நாமே புரிந்துகொள்ள முடியும்; நமக்கு எது தேவையோ அதை ஆராய்ந்து, நாமே உண்மையைப் புரிந்துகொள்ள இயலும். இதுதான் செய்யப்பட வேண்டியது.

அதேவேளையில் பழங்கால ரிஷிகள் செய்துள்ள பணிகளுக்காக அவர்களுக்கு உரிய மறியாதையை நாம் அளிக்க வேண்டும். அவர்கள், அந்தப் புராதன ரிஷிகள் மகத்தானவர்கள். நாம் அவர்களை விட மகத்தானவர்களாக வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில் மாபெரும் காரியங்களைச் செய்தார்கள். நாம் அவர்களைவிட மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும். பழங்கால இந்தியாவில் நூற்றுக்கணக்கான ரிஷிகள் வேண்டும்; நிச்சயமாக வரத்தான் போகிறார்கள். இதை நீங்கள் எவ்வளவு விரைவாக நம்புகிறீர்களோ, அந்த அளவிற்கு இந்தியாவிற்கும் நல்லது, உலகத்திற்கும் நல்லது.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை வீரர்கள் என்று நம்பினால் வீரர்கள் ஆவீர்கள், ரிஷிகள் என்று நம்பினால் நாளைக்கே ரிஷிகளாவீர்கள். உங்களை எதனாலும் தடுக்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று முரணானவை போன்றும் சண்டையிடுபவை போன்றும் தோன்றுகின்ற நமது மதப் பிரிவுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு கோட்பாடு இருக்குமானால், அது, எல்லா பெருமையும் ஆற்றலும் தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கிறது என்பதுதான். ராமானுஜர் மட்டுமே இந்த ஆன்மா அவ்வப்போது சுருங்கவும் விரியவும் செய்கிறது என்கிறார். சங்கரரின் கருத்துப்படி, இந்த ஆன்மா மாயைக்கு உட்படுகிறது.

இந்த வேறுபாடுகளைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். ஆன்மாவில் ஆற்றல் இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் ஏற்றக்கொள்கிறார்கள்; அது வெளிப்படாதிருக்கலாம், வெளிப்பட்டிருக்கலாம், ஆனால் அது அங்கே இருக்கிறது இதை எந்த அளவு விரைவாக நம்புகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது. எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள்.நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். இப்போது நம்மில் பெரும்பாலானோரும் எண்ணிக் கொண்டிருப்பது போல், நீங்கள் அரைப் பைத்தியங்கள் என்று நம்பாதீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும், யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.
******************
3.எனது போர் முறை

9 பிப்ரவரி 1897 அன்று மாலை விக்டோரியா ஹாலில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன. மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும் நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர வேறு எப்படி என் நன்றியுணர்வைத் தெரிவிப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. அந்தப் பாராட்டுரைகளுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் என்னை ஆக்குவாராக!

என்னிடமுள்ள எல்லா குறைபாடுகளுடன் , என்னிடம் சிறிது தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து மேலை நாட்டிற்குத் தருவதற்கான செய்தி ஒன்று என்னிடம் இருந்தது. தைரியமாக அதை அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அளித்தேன். இன்றைய தலைப்பை எடுத்துக் கொள்ளுமுன் சில வார்த்தைகளைத் தைரியமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னை நிலைகுலையச் செய்யவும், என் வளர்ச்சியைத் தடுக்கவும், முடியுமானால் என்னையே நசுக்கி எறிந்துவிடவும் சில சூழ்நிலைகள் என்னைச் சுற்றி உருவாகியது உண்டு. அத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வி அடைவதைப்போல் இவையும் தோல்வியையே தழுவின. அதற்க்காகக் கடவுளுக்கு நன்றி. ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது. அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் . ஆனால் இப்போது, என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன் இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை. அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை; அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி. ஒரு தடியோடும் கமண்டலத்தோடும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்குள் நுழைந்த அதே சன்னியாசியாகவே நான் இப்போதும் இருக்கிறேன். விரிந்து பரந்த உலகம் என் முன் இருக்கவே செய்கிறது. முன்னுரையை மேலும் நீட்டாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

முதன்முதலில் தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் . அவர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. அதற்காக ஒவ்வோர் இந்துவும் அவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நன்றியுடையவனே. அவரைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அறிந்ததிலிருந்தே அவர் நமது தாய்நாட்டிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர், நம் நாட்டை உயர்த்துவதற்காகத் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருபவர் என்பதை என்னுள் ஆழமாக உணர்ந்து கொண்டேன்.அதற்காக உண்மையான ஒவ்வோர் இந்தியனும் நிரந்தரமாக அவருக்கு நன்றிக்கடன்பட்டவன். அவர்மீதும் அவரைச் சேர்ந்தவர்கள் மீதும் எல்லா ஆசிகளும் என்றென்றைக்கும் பொழியட்டும்!

ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசபிக் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.

தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தக் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும்வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.

இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்த துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்திக் கொள்வதில் முனைந்து ஈடுபட்டால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? அவர்கள் ஏன் இந்த இயக்கங்களின் மிகப் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கப்படக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

வசதியற்ற,யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசபிக் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றேன் நான் . இதைக் கேட்டதும் அவர் , பொறுக்க வேண்டும், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இது எனக்குப் பாதை வகுத்துத் தரும் வழியல்லவே!

சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.

சர்வசமயப் பேரவை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது, அதுவும் விரைவில் செலவாகிவிட்டது. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன. உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வ தென்றே எனக்குத் தெரியவில்லை. தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும். சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன. சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன். என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது. அவர்களுள் ஒருவர் எழுதினார்-அந்தப் பிசாசு ஒழியப் போகிறது. நமக்கு இறைவன் அருள்புரிந்துவிட்டார், இதுதான் எனக்குப் பாதை அமைத்துத் தருவதா?

இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று . கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை. மௌனமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை. தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது, தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப் புழுவிற்கு என்ன வேலை? என்று கேட்பதைப்போல் இருந்தது அது. சர்வசமயப் பேரவையில் நான் பெயரும் புகழும் பெற்றதைத் தொடர்ந்த பல்வேறு பணிகளும் வந்தன. ஆனால் ஒவ்வொரு படியிலும் தியாசபிக் சொசைட்டியினர் என்னைச் சிறுமைப்படுத்தவே முயன்றனர். என் சொற்பொழிவுகளுக்கு வர வேண்டாம் என்று தியாசஃபிக் சொசைட்டியினர் தடுக்கப்பட்டனர். நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம், குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன- அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் . இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும். இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்கின்ற ஒருவனை இந்து என்று அழைக்கவும் என்னால் இயலாது. திரு. ஜட்ஜிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் உயர்ந்தவர், திறந்த மனம் படைத்தவர் நாணயமானவர் எளிமையானவர் தியாசஃபிக் சொசைட்டியின் இதுவரையிலான பிரதிநிகளுள் மிகவும் சிறந்தவர். இவரும் திருமதி. பெசன்டும் தங்கள் மகாத்மாக்களே சரியானவர்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள், இதை குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை . வினோதம் என்னவென்றால் இரண்டு பேரும் உரிமை கொண்டாடுவது ஒரே மகாத்மாவையே, உண்மை, கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவரே நீதிபதி, இரண்டு பக்கமும் சமமாக இருக்கும்போது நீதி வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை இப்படியெல்லாம்தான் அவர்கள் அமெரிக்கா முழுவதும் என் வளர்ச்சிக்கான வழி வகுத்தார்கள்!

அங்கே என்னை எதிர்ப்பவர்களான கிறிஸ்தவப் பாதிரிகளுடன் வேறு சேர்ந்து கொண்டனர். எனக்கு எதிராக இந்தப் பாதிரிகளின் கற்பனையில் தோன்றாத ஒரு பொய்கூடக் கிடையாது. நண்பர்களோ பணமோ யாரும் இல்லாத ஒருவனாக ஓர் அன்னிய நாட்டில் நான் உள்ளேன். என் நடத்தையைப்பற்றிக் கேவலமாக நகரம் தோறும் பரப்பினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்னைத் துரத்தியடிக்க முயன்றார்கள், எனக்கு நண்பர்களான ஒவ்வொருவரையும் பகை வனாக்க முயன்றார்கள். என்னைப் பட்டினிபோட்டுச் சாகடிக்க முயன்றார்கள், இதில் என் சொந்த நாட்டினர் ஒருவரும் எனக்கு எதிராக செயல்பட்டார் என்பதை வருதத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர் ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார். ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா? இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர். அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது. என்னை என்று சர்வசமயப் பேரவை ஆரவாரம் செய்து வரவேற்றதோ, என்று நான் சிகாகோவில் பிரபலம் ஆனேனோ அன்றிலிருந்து அவரது போக்கு மாறிவிட்டது என்னைத் துன்புறுத்துவதற்குத் தன்னால் இழன்ற அனைத்தையும் திரைமறைவில்.செய்தார் இந்த வழியாகத்தான் ஏசு இந்தியாவிற்கு வரப் போகிறாரா? கிறிஸ்தவின் காலடியில் இருப்பதைந்து ஆண்டுகள் உட்கார்ந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் இதுதானா? கிறிஸ்தவ மதமும் கிறிஸ்தவ சக்தியும்தான் இந்தியா மக்களைக் கைதூக்கிவிடப் போகிறது என்று நமது மகத்தான சீர்திருத்தவாதிகள் முழங்குகிறார்கள், அதைச் செய்கின்ற வழி இதுதானா? அவர் தான் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால் அது நம்பிக்கைக்குரிய ஒன்றாகத் தோன்றவில்லை.
இன்னும் ஒரு வார்த்தை , சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி, சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன். அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம என்று ஓதிக்கொண்டு யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ, தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ, அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் . நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் , என் ஜாதி கடந்த காலத்தில் செய்திருக்கும் பல சேவைகளுடன், பாதி இந்தியாவைப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தும் இருக்கிறது என்பதைச் சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுகின்ற இவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்? வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர், மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர், மகத்தான சமய போõதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே. இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே. உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ; பிரசமணர் க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று ஜாதியினருமே சன்னியாசத்திற்குச் சம உரிமை படைத்தவர்கள் என்பதை படித்திருக்க வேண்டும் ; மூன்று ஜாதியினரும் வேதம் படிக்கச் சம உரிமை பெற்றவர்கள்.

சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை யெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைச் சூத்திரன் என்று அழைப்பதால் நான் எந்த வகையிலும் வேதனைப்படவில்லை. எனது முன்னோர்கள் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமாகவே இருக்கும். நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்களுக்கெல்லாம் பிராமணராக இருந்து கொண்டு ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்; ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்க்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான் ? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர், அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.

எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்õத்து அல்ல, மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள். இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால் தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது. அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?நண்பன் பிரபலமாகி விட்டான், தான் பணம் சம்பாதிப்பதற்குக் குறுக்கே நிற்கிறான், அவ்வளவுதான் காரணம். அதேநேரத்தில், வைதீக இந்து சமயம் என்ன செய்கிறது என்பதற்கு, சொந்த நாட்டில் என் குருதேவரின் வாழ்க்கை ஓர் உதாரணம். நமது சீர்திருத்தவாதிகளுள் யாராவது தாழ்ந்த குலத்தினனுக்கும் சேவை செய்யத் தயாராக இருந்து, அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டட்டும்; அப்போது நான் அவர்களின் காலடியில் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன், அதற்கு முன்னால் அல்ல. ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்றுப் பேச்சுக்களை விடச் சிறந்தது.

இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன். அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள், அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன். சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது- வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான முன்னேற்றம் காணப்படுகிறது. இங்கே வளர்ச்சி உள்ளது, எதிர்செயல் இல்லை. வங்காளத்தில் பல விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒரு மறுமலர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. ஆனால்சென்னையில் மறுமலர்ச்சி இல்லை; வளர்ச்சி, இயற்கையான வளர்ச்சி காணப்படுகிறது. எனவே இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே இருப்பதாகச் சீர்திருத்தவாதிகள் சுட்டிக் காட்டுகின்ற வேறுபாடுகளை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் இவர்கள் புரிந்து கொள்ள முடியாத வேறுபாடும் ஒன்று உள்ளது.

இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இது ஒரு விபரீத முயற்சி. பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்திக்க ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில், ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமலும் வாழத் துணிந்த ஒருவனை இந்தியாவில் பயமுறுத்துவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. நான் அவர்களுக்கு முதலில் சொல்வது இதுதான் - எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன். அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை.

அற்புதமான இந்தக் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதைச் சொல்லும் தைரியம்தான் யாருக்கு இருக்கிறது? ஆயிரக்கணக்கான சூழ்நிலைகள் அதைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு தனிப்பட்ட சில உணர்வுகளைக் கொடுத்து, அதைச் சிலகாலத்தில் நிதானமாகவும் மற்ற காலங்களில் வேகமாகவும் ஓடச்செய்கின்றன. அதன் இயக்கத்தைப்பற்றிக் கட்டளையிட யாருக்குத் தைரியம் உள்ளது? கீதை சொல்வது போல் , நம்முடையதெல்லாம் பலன்களை எதிர்பார்க்காமல் வேலை செய்வது ஒன்றுதான்.

தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது,நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய்கின்றன. இங்கு பூமி, சிலவேளைகளில் விதவைகளின் கண்ணீரால் நனைகிறது என்றால் அங்கே மேலை நாட்டின் காற்று திருமணமாகாத பெண்களின் ஏக்கப் பெருமூச்சால் நிறைந்துள்ளது. இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான்.ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,