ஆன்மீக அனுபூதியே பக்தியோகத்தின் குறிக்கோள்


ஆன்மீக அனுபூதியே பக்தியோகத்தின் குறிக்கோள்
இந்த வறட்டு விளக்கங்கள் எல்லாம் ஒரு பக்தனுக்கு மனத் திடத்தை உறுதிப்படுத்தத் தேவைப்படுகின்றனவே. தவிர அதற்கு மேல் அவற்றால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் அவன் செல்கின்ற பாதை அவனை தெளிவற்றதும் கொந்தளிப்பு மிக்கதுமான ஆராய்ச்சிடீ நிலைகளைக் கடக்கச் செய்து, வெகுவிரைவில் ஆன்மீக அனுபூதி பெறும் நிலைக்கு உயர்த்தத் தகுதி வாய்ந்ததாக உள்ளது. இறைவனின் திருவருளால் அவன் அந்த உன்னத நிலையை விரைவில் அடைகிறான். அங்கே செருக்குமிக்க, வலுவிழந்த ஆராய்ச்சிக்கு இடமில்லை. வெற்று அறிவின் துணையுடன் இருளில் உழன்று கொண்டிருக்கும் அலைச்சல்கள் இல்லை. அங்கே நேரடி அனுபூதியாகிய ஒளியை அவன் தரிசிக்கிறான். அதற்குப் பிறகு, அவன் ஆராய்வதும் நம்புவதும் நின்றுவிடுகிறது. அவன் ஏறக்குறைய அனுபவிக்கவே செய்கிறான். அவன் விவாதிப்பதில்லை. உணர்கிறான். இறைவனைக் காண்பதும், உணர்வதும், இறையின்பத்தை அனுபவிப்பதும் மற்ற அனைத்தையும்விட உயர்ந்தது அல்லவா! ஏன் இது முக்தியைவிட உயர்ந்தது என்று கொள்ளும் பக்தர்கள்கூட உள்ளனர். நாம் அடையக்கூடிய மிகப் பெரும் பயன் இதைவிட வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இதற்கு மாறாக, உலகில் சிலர் இருக்கிறார்கள் ஏன், நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குச் சுகபோகங்களைத் தருபவையே பயனுடையவை என்று உறுதியாக நம்புகிறார்கள். மதமோ, கடவுளோ, நிலைத்த தன்மையோ, ஆன்மாவோ, எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் அவை அவனுக்கப் பணமோ, வாழ்க்கை வசதிகளோ தரவில்லை அல்லவா? புலன்களுக்கு இன்பம் தராத, ஆசைகளைப் பூர்த்தி செய்யாத எதுவும் அவர்களைப் பொறுத்தவரை பயனற்றவை. வாழ்க்கைக்குப் பயன்படுவது எதுவென்பதை ஒவ்வொருவரும் தங்கள் சுய தேவையை வைத்தே அளவிடுகிறார்கள். வயிறு புடைக்கத் தின்பது, குடிப்பது, இனப்பெருக்கம் செய்வது, பிறகு செத்து மடிவது-இவற்றிற்கு மேல் உயர முடியாதவர்களுக்கு, பயன் என்பதே புலனின்பங்களில் மட்டும்தான். அதைவிட உயர்ந்த ஏதேனும் ஒன்றின் தேவையைக் கடுகளவாவது இவர்கள் உணர வேண்டுமானால் கூட காலங்காலமாகக் காத்திருக்க வேண்டும். எத்தனையோ பிறவிகள். எத்தனையோ மறுபிறவிகள் இவர்களுக்குத் தேவைப்படும்.

இதற்கு மாறாக, கணப்பொழுதில் மறைந்தொழியும் இந்த உலக வாழ்கையைவிட, அழிவற்ற ஆன்மாவில் நாட்டம் கொள்வது எவ்வளவோ உயர்ந்தது என்பதை அறிந்தவர்களுக்கு, புலனின்பங்கள் அர்த்தமற்றவையாக, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளாகத் தெரிபவர்களக்கு கடவுளும் அவரிடம் பக்தி செய்வதும்தான் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த பயனாக, ஒரே பயனாக உள்ளது. நல்ல வேளையாக இத்தகைய ஒருசிலர், உலகியல் தாண்டவமாடுகின்ற இந்த உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர்.

பக்தியோகம், நாம் ஏற்கனவே கூறியதுபோல், தொடக்க நிலையான கவுணி பக்தி என்றும், உயர்ந்த நிலையான பராபக்தி என்றும் இருவகைப்படும். நாம்முன்னேறிச் செல்ல, பக்தியின் ஆரம்ப காலங்களில் நமக்குப் புற உதவிகள் மிகவும் இன்றியமையாதவை இது ஏன் என்பதைப் போகப்போக நாம் பார்க்கலாம். எல்லா மதங்களிலும் காணப்படுகின்ற புராணக் கதைகளும், சின்னங்களைப் பயன்படுத்துவதும் இயல்பான வளர்ச்சியே ஆகும். இவை ஆன்ம தாகம் கொண்டவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பாதுகாப்பாக அமைந்து அவர்களை இறைநெறியில் செலுத்துகின்றன. பேரளவிற்குப் புராணக் கதைகளும் சடங்குகளும் செழித்து வளர்ந்துள்ள மதங்களில்தான் ஆன்மீகச் செம்மல்கள் தோன்றியுள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

கொள்கைவெறி பிடித்த வறண்ட மதங்கள், எதுவெல்லாம் இன்ப ஊற்றாகத் திகழும் கவிதைச் சிறப்புடையதோ, கவின் மிக்கதோ நுண்மை வாய்ந்ததோ அதையெல்லாம் அடியோடு துடைத்து விடுகின்றன. இறைநெறியில் தளர்நடையிட்டுச் செல்லும் குழந்தை மனத்திற்கு உறுதிமிக்கப் பிடிப்பாக, ஊன்றுகோலாக இருக்கின்ற அனைத்தையும் இந்த மதங்கள் அழித்துவிடுகின்றன. ஆன்மீக மாளிகையின் கூரையைத் தாங்கி நிற்கும் தூண்களையே உடைத்தெறிய முயல்கின்றன. அறியாமை மிக்கதும் மூட நம்பிக்கைகளைக் கொண்டதுமான இந்த நெறிகள், ஆன்மீகம் எனப்படும் செடிக்கு உயிரூட்டுவது எதுவோ, வளர்வதற்குத் தேவைப்படும் உரங்களாக இருப்பவை எவையோ அவற்றையெல்லாம் அடியோடு எறிந்துவிடுகின்றன. இந்த மதங்களில் கடைசியாக மிஞ்சுவதெல்லாம் வெற்றுச் சொல்ஜாலங்களாலும் ஆரவாரத்தாலும் கட்டப்பட்ட வெறும் கூடு மட்டுமே. சமுதாயக் குப்பைகளை அகற்றுதல் என்ற சிறு மணமோ, சீர்திருத்தம் என்று கூறுகிறார்களே, அதன் வேகம் சிறிதோ ஒருவேளை அதில் இருக்கலாம், அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட மதத்தைப் பின்பற்றுவோர் அறிந்தோ அறியாமலோ உலகியல் மூழ்கியவர்களாகவே உள்ளனர். இம்மையிலும் மறுமையிலும் இவர்களின் நோக்கம், எண்ணம் எல்லாம் வெறும் இன்ப நுகர்ச்சியே. இதுவே அவர்களின் வாழ்க்கையாக, வாழ்க்கையின் முதலும் முடிவுமாக இருக்கிறது. இதுவே இவர்களுக்கு இஷ்டா பூர்த்தம் இவர்கள் கருத்துப்படி தெருவைப் பெருக்குவது, தோட்டிவேலை செய்வது என்று மனிதனின் சொந்த சுகத்திற்காக வேலை செய்வதே வாழ்க்கையின் எல்லாம் என்றாகிறது. அறியாமையும் வெறித்தனமும் இணைந்த இந்த வினோதக் கலவையைப் பின்பற்றுபவர்கள் தங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்திக் கொண்டு இதுவே இவர்களுக்கு ஏற்றதும்கூட நாத்திகர்களுடனும் விஷயப்பற்று மிக்கவர்களுடனும் எவ்வளவு விரைவில் சேர்ந்து கொள்வார்களோ, அவ்வளவிற்கு உலகத்திற்கு நன்மை உண்டாகும்.

வண்டிவண்டியாக வீண்பேச்சுக்களைப் பேசுவதை விட, முறையற்ற பாவனைகளை வளர்த்துக் கொள்வதை விட எள்ளளவு அறநெறியையும் ஆன்மீக சாதனையையும் மேற்கொள்வது எவ்வளவோ மேலானது. அறியாமை, கொள்கைவெறி என்னும் குப்பையிலிருந்து ஆன்மீக மேதை ஒருவராவது, ஒரே ஒருவராவது தோன்றியிருக்கிறாரா? காட்டுங்கள் பார்க்கலாம்! காட்ட முடியவில்லை என்றால் வாயை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் இதயக் கதவுகளை நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். உண்மையின் ஒளிக் கிரணங்கள் உள்ளே நுழையட்டும். தாங்கள் அனுபவித்த மாமேதைகளான ரிஷிகளின் காலடிகளில் குழந்தைகள்போல் அமர்வோம். அவர்கள் கூறுவதைக் கருத்துடன் கேட்போம்!

தொடரும்...

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,