இந்திய ரிஷிகள்((பகுதி-2)


இந்திய ரிஷிகள்((பகுதி-2)
எந்த நாட்டில் வேண்டுமானாலும் தோன்றிய எந்த மகானையும் ஓர் இந்து வழிபட முடியும். கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் முகமதியர்களின் மசூதிக்கும் சென்று நாம் வழிபடுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது ? நான் முன்பே சொல்லியது போல் நம் முடையது உலகம் தழுவிய மதம். எல்லா கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. தற்போது உலகில் காணப்படுகின்ற மத லட்சியங்கள் அனைத்தையும் அதில் உடனேயே சேர்த்துக் கொள்ளலாம்.அது மட்டுமின்றி, எதிர்காலத் தில் வரப்போகின்ற லட்சியங்களையும் சேர்த்து அணைத்துக்கொள்வதற்கு நம்மால் அமைதியாகக் காத்திருக்கவும் முடியும். ஏனெனில் வேதாந்த மதத்தின் கரங்கள் எண்ணற்றவை.

இதுதான் ஏறக்குறைய ரிஷிகள் மற்றும் அவதாரம் பற்றிய நமது கருத்தாக உள்ளது. இவர்களுக்கு அடுத்த நிலையிலும் சிலரை நாம் காண்கிறோம். வேதங்களில் ரிஷி என்ற சொல் திரும்பத்திரும்ப பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தச் சொல் மிகவும் பரவலாக உள்ளது. இந்த ரிஷிகள் மிகுந்த அத்தாட்சியை உடையவர்கள். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரிஷி என்பதற்கு மந்த்ர த்ரஷ்டா அதாவது மந்திரத்தைக் கண்டவர் என்பது பொருள். மதம் உண்மை என்பதற்கு நிரூபணம் என்ன? மிகப் பழங்காலத்திலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. புலன்களால் அதை நிரூபிக்க முடியாது என்பதே பதில்.யாதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ - லட்சியத்தை அடையாமல் எங்கிருந்து சொற்களும் எண்ணமும் திரும்பி வருகிதோ, ந தத்ர சக்ஷீர்கச்சதி நவாக்கச்சதி நோ மன: அங்கே கண்கள் போக முடியாது, மனம் போக முடியாது, எந்தப் புலன்களும் போக முடியாது, இதுதான் காலங்காலமாகச் சொல்லப்ட்டு வந்த பதில்.

ஆன்மா உள்ளது, கடவுள் இருக்கிறார், அழிவற்ற வாழ்க்கை , மனிதனின் லட்சியம் இவை போன்ற எதற்கும் புற இயற்கை நமக்கு எந்தப் பதிலும் தர முடியாது.மனம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது; எந்த நேரமும் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது; அது எல்லைக்கு உட்பட்டது, துண்டுதுண்டாகப் பிளவுபட்ட ஒன்று. எல்லையற்ற, மாறாத , பிளவற்ற பிரிக்க முடியாத , என்றும் நிலைத்திருக்கும் ஒன்றைப் பற்றி இயற்கை எவ்வாறு சொல்ல முடியும்? ஒரு போதும் முடியாது. உயிரற்ற ஜடப் பொருளிலிருந்து பதிலைப் பெற மனிதகுலம் முயன்ற போதல்லாம், அதன் விளைவுகள் எப்பளவு நாசகரமானதாக இருந்தது என்பதை வரலாறு காட்டுகிறது. வேதங்கள் முழங்குகின்ற அந்த அறிவு பின் எப்படி வரும்? ரிஷியாக இருப்பதன் மூலமே அது வரும். அந்த அறிவு புலன்களில் இல்லை. ஆனால் புலன்களே மனிதனின் அனைத்துமா என்ன? மனிதனின் எல்லாமே புலன்கள்தான் என்று சொல்வதற்கு யாருக்குத் தைரியம் இருக்கிறது? நம் வாழ்க்கையில், இங்கு இருக்கின்ற நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அமைதிமயமான சில கண்கள் வருகின்றன. அது நமது அன்பிற்குரிய ஒருவரின் மரணத்தைக் கண்முன்னால் பார்க்கும்போதாக இருக்கலாம், இல்லை எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் வேளையாக இருக்கலாம், அல்லது இது போன்ற எத்தனையோ சந்தர்ப்பங்களுள் ஒன்றாக இருக்கலாம். அப்போது மனம் அமைதியுற்று, அந்த நேரத்திற்கு அது தன் சொந்த இயல்பை உணர்வது போலாகிவிடுகிறது; சொற்கள் எட்ட முடியாத, மனம் செல்ல முடியாத, அனைத்திற்கும் அப்பாலுள்ள எல்லையற்ற ஒன்றின் காட்சி கண நேரத்திற்கு நமக்குக் கிடைத்தது போலாகிவிடுகிறது. சாதாரண வாழ்வில் நிகழ்கின்ற இதனை உயர்த்த வேண்டும், பயிற்சிகள் செய்து முழுமையாக்க வேண்டும்.

ஆன்மா புலன்களால் கட்டுப்படுத்தப்ட்டதோ, வரையறை செய்யப்பட்டதோ அல்ல. புலன்களால் மட்டுமல்ல புத்தியால் கூடக் கட்டுப்படுத்தப் படாதது அது என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே மனிதர்கள் அறிந்திருந்தனர். இந்தப் புத்தி என்பது எல்லையற்ற சங்கலியின் ஒரு வளையத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸத் அல்லது இருப்பு என்பதும் புத்தியும் ஒன்றல்ல; ஸத்தின் ஓர் அம்சமே புத்தி. புத்திக்கு அப்பால் சென்று ஆராய்கிறான் தைரியசாலி. புத்தி புலன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆன்மீக உலகின் உண்மைகளை அறிய வேண்டுமானால் ஒருவர் புலன்களுக்கு அப்பால், புத்திக்கு அப்பால் செல்ல வேண்டும். இவ்வாறு புலன்களின் எல்லையைக் கடந்து செல்வதில் வெற்றி பெற்ற மனிதர்கள் இப்பொழுது கூட இருக்கிறார்கள். அவர்கள் ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆன்மீக உண்மைகளை நேருக்கநேர் காண்கிறார்கள்.

எனவே வேதங்கள் உண்மையானவை என்பதற்கு நிரூபணம். இதோ எனக்கு முன் இருக்கின்ற மேஜைக்கான நிரூபணம்தான் - அதாவது பிரத்தியட்ச அனுபவம் என்பதுதான். இந்த மேஜையை என் புலன்களால் பார்கிறேன், ஆன்மீக உண்மைகளை ஆன்மாவின் உயர் உணர்வு நிலைகளில் காண்கிறோம். இந்த ரிஷிநிலை காலம், இடம், பால், இனம் இவைகளைக் கடந்தது, இந்த ரிஷிநிலை என்பது ரிஷிகளின் வழியில் தோன்றிய ஆரியர், ஆரியர் அல்லாதவர், மிலேச்சர் அனைவருக்கும் பொதுச் சொத்து என்று தைரியமாக முழங்குகிறார் வாத்ஸ்யாயானர், இது தான் வேதங்களில் உள்ள ரிஷிநிலை. இந்திய மதத்தின் இந்த லட்சியத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும், பிற நாடுகளும் இதனை நினைக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறோன்.அப்போதுதான் உலகத்தில் சச்சரவுகளும் சண்டைகளும் குறையும்.

மதம் என்பது நூல்களில் இல்லை , கொள்கைகளில் இல்லை, கோட்பாடுகளில் இல்லை, பேச்சில் இல்லை, ஆராய்ச்சியில் கூட இல்லை. அது வாழ்வதும் வளர்வதும் ஆகும். என் நண்பர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் ரிஷிகள் ஆகாதவரை, ஆன்மீக உண்மைகளை நேருக்கு நேர் காணாதவரை ஆன்மீக வாழ்கை என்பது உங்களுக்கு ஆரம்பிக்கவில்லை . உயர் உணர்வு நிலை மலராதவரை, ஆன்மீகம் என்பதெல்லாம் வெறும் பேச்சுதான், ஆரம்பப் பயிற்சிதானே தவிர வேறல்ல.

யாரோ, யாரிடமோ, எங்கோ பேசியவற்றையெல்லாம் நீங்கள் எடுத்துப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். புத்தர் கூறிய அழகிய கருத்து ஒன்று இங்கு பொருத்தமாக இருக்கும் . அவர் ஒருமுறை சில பிராமணர்களுடன் கலந்துரையாட நேர்ந்தது. அவர்கள் பிரம்மத்தின் இயல்பைக் விளக்கினார்கள்.

புத்தர் பெருமான் அவர்களிடம் கேட்டார்: நீங்கள் பிரம்மத்தைப் பார்த்ததுண்டா? இல்லை என்றார் பிராமணர்.

உங்கள் தந்தை?

இல்லை, அவரும் பார்த்ததில்லை.

சரி, உங்கள் பாட்டனார்?

இல்லை, அவரும் பார்த்திருப்பார் என்று தோன்றவில்லை.

புத்தர் கேட்டார்: என் நண்பா, உங்கள் பாட்டனாரோ, உங்கள் தந்தையோ, நீங்களோ பார்க்காத ஒன்றைப்பற்றி வாதம் செய்து ஒருவரையொருவர் மட்டம்தட்ட ஏன் முயல்கிறீர்கள்?

உலகம் முழுவதும் இதைதான் செய்து கொண்டிருக்கிறது.

இதையே நாம் வேதாந்த மொழியில் கூறுவோம்: இந்த ஆன்மா வெற்றுப் பேச்சினாலோ, மிகக் கூர்மையான அறிவினாலோ, ஏன், வேதங்களையே படிப்பதால் கூட அடையக் கூடியதல்ல. உலக நாடுகள் அனைத்திடமும் வேதங்கள் மொழியில் பேசுவோம் உங்கள் சண்டைகளும் சச்சரவுகளும் வீண். நீங்கள் பிராச்சாரம் செய்ய விழைகின்ற கடவுளை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? காணவில்லை என்றால் உங்கள் பிரச்சாரம் வீண். ஏனெனில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. நீங்கள் அவரைப் பார்த்திருப்பீர்களானால் சண்டையிட மாட்டீர்கள். உங்கள் முகமே ஒளி வீசும்.

பழங்கால, உபநிடத ரிஷி ஒருவர் பிரம்மத்தைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்காகத் தம் மகனை அனுப்பினார். அவன் திரும்பி வந்ததும் அவனிடம் அவர் என்ன கற்று வந்தாய்? என்று கேட்டார். தான் கற்று வந்திருந்த சாஸ்திரங்களை எல்லாம் ஒப்பித்தான் மகன். அதைக் கேட்ட அவர் , இதெல்லாம் ஒன்றுமே இல்லை : மறுபடியும் போ என்று சொன்னார். மகனும் திரும்பிச் சென்றான், சில காலம் கழித்துத் திரும்பி வந்த போது அதே கேள்வியை ரிஷி கேட்டார். அதே பதில் வந்தது. மறுபடியும் அவன் திரும்பி அனுப்பப்பட்டான். அடுத்த முறை அவன் திரும்பி வந்தபோது அவனது முகம் ஒளி வீசிற்று. அதைக் கண்டதும் ரிஷி எழுந்து நின்று, ஆகா, என் மகனே, உன் முகம் பிரம்மத்தை அறிந்தவனின் முகம்போல் ஒளி வீசுகிறது என்றார்.

நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள். ரிஷியைத் தடுக்க யாராலும் முடியாது. நமது மதத்தின் லட்சியமான ரிஷிநிலை இதுதான். மற்றபடி இந்தப் பேச்சுக்கள், வாதங்கள், தத்துவங்கள்,துவைதங்கள், அத்வைதங்கள், ஏன் வேதங்கள் கூட வெறும் படிக்கற்களே, இரண்டாம் நிலையில் உள்ளவைகளே; நேரடி அனுபவமே முதன்மையானது. வேதங்கள், இலக்கணம் ,வான நூல் போன்ற எல்லாமே இரண்டாம் நிலையில் உள்ளவைதான். மாறாத ஒன்றை நாம் உணரும்படி எது செய்கிறதோ, அதுவே மேலான அறிவு. அதனை உணர்ந்தவர்கள் ரிஷிகள். அவர்களையே நாம் வேதங்களில் காண்கிறோம்.

மேலும் ரிஷிநிலை என்பது ஒரு தனி நிலை. உண்மை இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு நாள் இல்லாவிடில் ஒருநாள் இந்த நிலையை அடைந்தேயாக வேண்டும். ஓர் இந்துவைப் பொறுத்தவரை, ரிஷி நிலையை அடைவது என்பது முக்தி பெறுவதே. இது நமக்கு தெரிய வேண்டிய ஒன்று. கோட்பாடுகளை நம்புவதோ, ஆயிரக்கணக்கான கோயில்களுக்குப் போவதோ, உலகத்தில் உள்ள எல்லா நதிகளிலும் குளிப்பதோ அல்ல ரிஷி ஆவதே, மந்த்ர த்ரஷ்டா ஆவதே முக்தி, முக்தி பெறுதல்.

பிற்காலத்திற்கு வரும்போது , உலகையே அசைத்த பல மகாரிஷிகளையும் மகத்தான அவதார புருஷர்களையும் காண்கிறோம். அவர்கள் பலர். பாகவத புராணத்தின்படி, அவர்களின் எண்ணிக்கை கணக்கற்றது. அவர்களுள் ராமரும் கிருஷ்ணரும் இந்தியாவில் அதிகமாக வழிபடப்படுகின்ற இருவர் ஆவர்.ராமர் வீரகாலத்தின் லட்சிய புருஷர், சத்தியம் மற்றும் ஒழுக்கத்தின் திரண்ட வடிவம், லட்சிய மகன் , லட்சியக் கணவன் லட்சியக் தந்தை இவைகளுக்கு மேலாக, லட்சிய மன்னன். இந்த ராமரை நம்முன் வைப்பவர் வால்மீகி மகாரிஷி மகத்தான கவிஞரான வால்மீகி, ராமரின் வாழ்க்கையை எழுதியிருப்பது போன்ற அவ்வளவு தூய்மையான, இனிய, அழகிய, அதேவேளையில் எளிமையான மொழியை வேறெங்கும் காண முடியாது.

சீதையைப்பற்றி என்ன சொல்வது ! உலகம் முழுவதும் உள்ள கடந்தகால இலக்கியங்கள் முழுவதையும் அலசிப் பாருங்கள், அது போலவே எதிர்கால இலக்கியங்களையும் முடிந்தால் ஆராயுங்கள்: இன்னொரு சீதையை நீங்கள் காண முடியாது. இது உறுதி. சீதை இணையற்றவள். இனி அதைப்போல் ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியாது என்னும்படி அவள் படைக்கப்ட்டுள்ளாள்,ஒரு வேளை ராமர்கள் பலர் இருக்கலாம். ஆனால் இரண்டாவதாக ஒரு சீதை இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான இந்தியப் பெண்மை வார்க்கப்பட்ட வேண்டிய அச்சு அவள். ஏனெனில் பூரணப் பெண்மை என்பதன் இந்திய லட்சியங்கள் அனைத்தும் அந்த ஒரு சீதையின் வாழ்க்கையிலிருந்தே தோன்றியிருக்கின்றன. கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் ஆண் பெண், குழந்தைகள் அனைவரின் வழிபாட்டைப் பெற்றவாறு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள். பெருமைக்குரிய இந்தக் சீதை தூய்மையினும் தூய்மையானவள். பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தவள். துன்பவாழ்வை ஒரு சிறு முணுமுணுப்பும் இல்லாமல் தாங்கி துயரப்பட்டவள். அவள் கற்பின் திருவுரு, தூய்மையின் உறைவிடம். அவள் மக்களின் லட்சியம், தேவர்களின் லட்சியம். அந்த மகத்தான சீதை நம் தேசிய தேவியாக எப்போதும் நிலைத்து வாழ்வாள். சீதையைப்பற்றி அறியாத யாரும் இருக்க மாட்டார்கள், எனவே இங்கு எந்த விளக்கமும் தேவையில்லை.

நமது புராணங்கள் எல்லாம் மறையலாம், வேதங்கள்கூட அழிந்து போகலாம், நமது சமஸ்கிருத மொழி ஒரேடியாக அழிந்து போகலாம். ஆனால் இந்த நாட்டில் ஐந்து இந்துக்கள் உயிர்வாழ்ந்தாலும்கூட, அவர்கள் கொச்சை மொழி பேசினாலும்கூட, அங்கு சீதையின் கதை இருக்கவே செய்யும். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவள் நம் இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுருவி இருக்கிறாள், இந்துக்களான ஆண்,பெண் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கலந்திருக்கிறாள். நாமெல்லாம் சீதையின் குழந்தைகள். பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை சீதை லட்சியத்திலிருந்து விலகச் செய்தால் அந்த நாம் அனுதினமும் கண்டு வருகிறோம். சீதையின் அடியொற்றியே நம் பெண்கள் வளர வேண்டும், முன்னேற வேண்டும், அது ஒன்றே வழி.

அடுத்து நாம் எடுத்துக்கொள்பவர் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுபவர். ஆண்களும், அது போலவே பெண்களும், குழந்தைகளும், அது போலவே வளர்ந்தவர்களும் விரும்பிப் போற்றுகின்ற லட்சிய புருஷர் அவர். பாகவத புராணத்தை எழுதியவர் அவரை அவதார புருஷர் என்று சொல்லியதுடன் திருப்தி அடையாமல் மற்ற அவதாரங்கள் எல்லாம் கடவுளின் அம்சங்கள் மட்டுமே, கிருஷ்ணரோ முழு முதற்கடவுளே என்று குறிப்பிட்ட ஸ்ரீகிருஷ்ணரைத் தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். அவரது பலமுகப் பரிமாணங்களைப் பார்க்கும் போது அத்தகைய பாராட்டுக்களால் அவரை வர்ணிப்பதில் விசித்திரம் எதுவுமில்லை என்றே தோன்றுகிறது.

அவர்மிகவும் ஆச்சரியமான சன்னியாசி, அதே வேளையில் மிக ஆச்சரியமான இல்லறவாசி. அவரிடம் ஆச்சரியமான ரஜஸ், அதாவது அதிகாரம் இருந்தது; அதே நேரத்தில் மிக ஆச்சரியமான துறவு உணர்வுகளுக்கு இடையில் அவர் வாழ்ந்தார். கீதையைப் படிக்காமல் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியாது. தமது போதனையின் திரண்ட வடிவம் அவர். தாங்கள் பிராச்சாரம் செய்ய வந்த உண்மையின் நடைமுறை விளக்கங்களாகவே ஒவ்வோர் அவதார புருஷர்களும் வாழ்ந்தார்கள். பகவத்கீதையைப் போதித்தவரான ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்வு அந்த தெய்வீக கவிதையான கீதையின் விளக்கமாகவே திகழ்ந்தது. பற்றின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார், தமது மணிமுடியைத் துறந்து விடுகிறார், பின்னர் அதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை இந்தியாவின் தலைவர் அவர் அவரது ஆணையில் மன்னர்கள் முடிதுறந்தார்கள், ஆனால் தாம் மன்னராக அவர் ஒரு போதும் கிருஷ்ணராகவே எப்போதும் இருந்தார் அவர்.

ஆகா, அவரது வாழ்க்கையின் அந்த அற்புதப் பகுதியான ராசலீலை! அதைப் புரிந்து கொள்வதுதான் எவ்வளவு கடினமானது! முழுக்கமுழுக்கத் தூய்மையும் ஒழுக்கமும் இல்லாத யாரும் அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவே கூடாது. அற்புதக் காதலின் ஆனந்தப் பூரிப்பே அந்த பிருந்தாவன லீலையில் உருவகமாக விளக்கப்பட்டுள்ளது. அன்பினால் பித்தேறி அன்பெனும் மதுவை அருந்தி, அன்புப் பித்தேறியவர்களைத் தவிர யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியாது. கோபியரின் அன்புதான் எத்துணை மகத்தானது! அது அன்பின் மொத்த வடிவம், வேறு எதையும் விரும்பாதது, சொர்க்கத்தைப்பற்றிக்கூட மறுவுலகிலும் எதையும் நாடாதது. அந்த அன்பின் தாபங்களை யார்தாம் புரிந்துகொள்ள முடியும்?

என்நண்பர்களே, இங்கே இந்தக் கோபியரின் அன்பில்தான் உருவக்கடவுள் - அருவக் கடவுள் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளது. மனிதனால் ஏற்க முடிந்த மிகவுயர்ந்த லட்சியம் உருவக் கடவுள் என்பது நமக்குத் தெரியும். பிரபஞ்சமெங்கும் நிறைந்தும், தனதுவெளிப்பாடாகவே இந்தப் பிரபஞ்சத்தைக் கொண்டும் விளங்குகின்ற அருவக் கடவுளில் நம்பிக்கை கொள்வது தத்துவ மயமானது என்பதை நாம் அறிவோம். நம்மால் பார்க்கக்கூடிய, நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வடிவத்தை, இதய தாபங்களையெல்லாம் பாதங்களில் கொட்டி ஆறுதல் பெற்றிட ஓர் உருவத்தையே நம் மனம் நாடுகிறது. எனவே மனிதனால் சிந்தனை செய்ய முடிந்த மிகவுயர்ந்த கருத்து உருவக் கடவுள். ஆனால அறிவோ இத்தகைய கருத்தை கண்டு திகிலடைந்து நிற்கிறது.

இந்தப் பிரச்சினை ஒன்றும் புதிதல்ல; பிரம்ம சூத்திரத்திலும், காட்டில் திரௌபதி தர்மபுத்திரருடன் விவாதித்தபோது எழுப்பப்பட்ட அதே பழைய கேள்விதான் - கருணையே வடிவமான எல்லாம் வல்ல சகுணக் கடவுள் ஒருவர் இருந்தால், இந்தப் பூமி ஏன் நரமாக உள்ளது ? அவர் ஏன் இப்படி ஒன்றைப் படைக்க வேண்டும்? அந்தக் கடவுள் ஒருதலைப்பட்சமானவரே. இந்தப் பிரச்சினைக்கு ஒரு பதில் இருப்பதாகத் தெரியவில்லை, இருக்கின்ற ஒரே பதிலைக் கோபியர் கொண்ட அன்பில் தான் காண முடியும் அவர்கள் கிருஷ்ணரைப் பற்றிய புகழ்மொழிகள் அனைத்தையும் வெறுத்தார்கள், அவர் படைப்பின்...தலைவனான இறைவனா என்பதை அறிய அவர்கள் விரும்பவில்லை அவர் எல்லாம் வல்லவரா, எல்லா ஆற்றல்களும் நிறைந்தவரா என்பன போன்ற எதையும் அறிந்துகொள்ள விரும்பவில்லை. கிருஷ்ணன் என்றால் எல்லையற்ற அன்பு இது ஒன்றை மட்டுமே அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர், அவ்வளவுதான் பிருந்தாவன கிருஷ்ணனை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தார்கள். இடையர்குலத் தலைவனாகவும் மன்னாதி மன்னனாகவும் விளங்கிய கண்ணன் அந்தக் கோபியரைப் பொறுத்தவரை மாடு மேய்ப்பவர் என்றென்றைக்கும் மாடு மேய்ப்பவர் மட்டுமே. எனக்குச் செல்வம் வேண்டாம் மக்கள் வேண்டாம்கல்வியும் வேண்டாம், சொர்க்கத்திற்குக்கூட நானக போக வேண்டாம். நான் மறுபடி மறுபடி பிறப்பேனாக; ஆனால் என் இறைவா, அந்தப் பிறவியில் எல்லாம் நான் உன்னை அன்புகொள்ள வேண்டும் - இந்த வாரத்தை எனக்கு அருள்வாயாக ! மத வரலாற்றில் ஒர மைல்கல்லை இங்கு நாம் காண முடிகிறது ; அன்பிற்காக அன்பு பணிக்காகப் பணி கடமைக்காகக் கடமை போன்ற லட்சியங்களை இங்கு நாம் காண்கிறோம், மனித சமுதாய வரலாற்றிலேயே முதன்முறையாக, அவதாரங்களுள் தலைசிறந்தவராகிய கிருஷ்ணரின் திருவாயினின்று இந்த லட்சியம் உதிர்ந்துள்ளது. பய முறுத்துவதும் ஆசை காட்டுவதுமாக இருந்த மதங்கள் எல்லாம் அடியோடு ஒழிந்து போய்விட்டன. நரகத்தைப் பற்றிய பயம், சொர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கும் ஆசை போன்றவற்றின் இடத்தில் அன்பிற்காக அன்பு கடமைக்காக கடமை பணிக்காகப் பணி போன்ற மகத்தான லட்சியங்கள் தோன்றின.

எத்தகைய அன்பு அது! கோபியரின் அன்பைப் புரிந்துகொள்வது கடினம் என்று சற்றுநேரத்திற்கு முன்பு சொன்னேன். கண்ணனின் வரலாற்றிலேயே ஈடினையற்ற பகுதியான இந்த ராசலீலையின் உட் பொருளைப் புரிந்துகொள்ள முடியாத மூடர்கள் நம்மிடமும் இல்லாமலில்லை. ஏதோ அசுத்தத்தைத் தவிர்ப்பதுபோல் இதிலிருந்து விலகியோட முயற்சிக்கின்ற , நம் ரத்தத்தில் பிரந்தும் தூய்மையற்றவர்களான அத்தகைய முட்டாள்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதைக் மீண்டும் சொல்ல என்னை அனுமதியுங்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; முதலில் நீங்கள் தூய்மை பெறுங்கள், கோபியரின் பிரேமை வரலாற்றைச் சொல்லியவர் வேறு யாரும் அல்ல, சுகதேவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோபியரின் இந்த அற்புதப் பிரேமையை எழுத்தில் வடித்த சுகதேவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோபியரின் இந்த அற்புதப் பிரேமையை எழுத்தில் வடித்த சுகதேவர் பிறப்பிலிருந்தே தூய்மையானவர், என்றென்றுமே தூயவர், வியாசரின் மகன்.

மனத்தில் சுயநலம் இருக்கும்வரை கடவுளிடம் அன்பு தோன்றுவது சாத்தியமல்ல, சுயநல அன்பு வெறும் வியாபாரமே தவிர வேறல்ல - பகவானே! நான் உனக்குச் சிலவற்றைத் தருகிறேன் , அதற்குப் பதிலாக நீ சிலிவற்றைக் கொடு என்கிறார்கள் இவர்கள். உடனே பகவான்; நீ இன்னதைச் செய்யாமல் இருந்தால் உன்னை நான் உன் மரணத்திற்குப் பின்னர் கவனித்துக் கொள்கிறேன் என்பர். அல்லது ஒரு வேளை வரும் பிறவிகள்தோறும் உன்னை நெருப்பில் வறுத்து எடுப்பேன் என்பார் - இப்படிப் போகிறது இவர்களின் அன்பு . இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் மூளையில் இருக்கும்வரை கோபியரின் அன்புப் பித்தினை பிரேம தாபங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஓ ஒரு முத்தம் அந்த இதழ்களிலிருந்து ஓரே ஒரு முத்தம்! நீ ஒருவனை முத்தமிட்டு விட்டால் உன்மீது அவனது துன்பமெல்லாம் தொலைந்து போகிறது, உன்னைத் தவிர மற்றவற்றின் மீதுள்ள பற்றினை அவன் மறக்கிறான், உன்னை, உன்னை மட்டுமே நினைக்கிறான்.

பணம், பெயர் புகழ் இவற்றின் மீதும் பயனற்ற இந்த உலகின் மீதும் உள்ள ஆசைகளை விடுங்கள். அதன்பிறகு, அதன் பிறகு மட்டுமே கோபியரின் அன்பை உங்களால் புரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றையும் துறக்காமல் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அந்த அன்பு புனிதமதனது. மனம் அப்பழுக்கற்ற தூய்மை அடையாமல் அந்தப் புனிதமான அன்பைப் புரிந்துகொள்ள முடியாது. இதயத்தில் காமமும் பணத்தாசையும் புகழ்போதையும் ஒவ்வொரு நிமிடமும் பொங்கிக் குமறுகின்றவர்கள், கோபியரின் அன்பைக் புரிந்துகொள்ளவும் அதைக் குறைகூறவும் துணிகிறார்கள்! கிருஷ்ண அவதாரத்தின் சாரமே கோபியரின் அன்புதான். மகத்தான தத்துவமாகிய கீதையைக்கூட கோபியரின் இந்தப் பிரேமை வெறியோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் லட்சியத்தைநோக்கி ஒருவன் நிதானமாகச் செல்வது பற்றியே கீதையில் போதிக்கப்படுகிறது. ஆனால் இங்கோ இந்த ஆனந்த வெறியில் அன்புப் போதையில், சீடர்கள், ஆச்சாரியர்கள் போதனைகள், புத்தகங்கள் எல்லாமே, ஏன் அச்சம், கடவுள், சொர்க்கம் போன்ற கருத்துக்கள்கூட ஒன்றாகி விடுகின்றன. எல்லாமே வீசி எறியப்பட்டு விடுகின்றன, எஞ்சுவது அன்புப்பித்து ஒன்றே, எல்லாவற்றையும் மறக்கின்ற நிலை இது. இந்த அன்புப்பித்தில் ஆழ்கின்ற அன்பன் கிருஷ்ணனைத் தவிர இந்த உலகில் வேறு எதையும் காண்பதில்லை; அவரை, அவரை மட்டுமே காண்கிறான். ஒவ்வொரு முகமும் அவனுக்குக் கிருஷ்ணனின் முகமாகத் தெரிகிறது. அவனது சொந்த முகமே கிருஷ்ணனின் முகம்போல் தெரிகிறது. அவனது ஆன்மாகூட கிருஷ்ண வண்ணத்தில் தோய்ந்துவிடுகிறது, அதுதான் மகத்தான கிருஷ்ணர்!

வீண் விபரங்களை அறிந்து கொள்வதில் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கையின் அடிப்படையை, அதன் சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிருஷ்ணரின் வாழ்க்கையில் வரலாற்றிற்கு முரணானவை பல இருக்கலாம், இடைச்செருகல்கள் இருக்கலாம். இவை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பரம்பரைப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்ற இந்தப் புதிய மகத்தான கருத்துக்களுக்கு ஓர் அடிப்படை, ஓர் அடித்தளம் இருந்தேயாக வேண்டும், வேறு எந்த ரிஷி அல்லது மகானின் வாழ்க்கையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தமக்கு முன்பிருந்த கருத்துக்களின் ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருக்கிறார். அல்லது தமது காலத்திலே தமது நாட்டிலேயே பரவலாகக் காணப்படுகின்ற கருத்துக்களை மட்டுமே போதிக்கிறார். இந்த மகான் இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றி சந்தேகம் கூடத் தோன்றலாம்! ஆனால் நான் சவால் விடுகிறேன் இந்த லட்சியங்கள்- பணக்காகவே பணி, அன்பிற்காகவே அன்பு கடமைக்காகவே கடமை, இவை கிருஷ்ணரின் சொந்தக் கருத்துக்கள் அல்ல, இந்தக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்திய வேறொருவர் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம். முடியாது. இந்தக் கருத்துக்கள் வேறு யாரிடமிருந்தும் கடனாக வாங்கப் பட்டிருக்க முடியாது. கிருஷ்ணர் பிறந்த போது அவை காற்றிலே மிதந்து கொண்டிருக்கவில்லை. கிருஷ்ணபகவான் தான் முதன்முதலில் அதை வெளிப்படுத்தியவர், அவரது சீடரான வியாசர் அதை மனித குலம் முழுவதற்கும் பிராச்சாரம்செய்தார். இது மிகவுயர்ந்த கருத்து.

கிருஷ்ணரின் பரிமாணங்களுள் நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த பரிமாணம் கோபீஜன வல்லபர், பிருந்தாவன கோபியரின் காதலன். அந்த அன்புப்பித்து உங்கள் மூளையில் புகுமானால் , ஆசீர்வதிக்கப்பட்ட அந்தக் கோபியரை நீங்கள் புரிந்துகொள்ள முடியுமானால், அப்போதுதான் அன்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உலகமே மறந்துபோய், வேறெந்த நோக்கமும், உண்மையைத் தேடும் ஆசைகூட இல்லாமல் உங்கள் இதயம் தூய்மை அடைய வேண்டும் .அப்போது மட்டுமே அந்தப் பிரேமை வெறி உங்களுக்கு வரும் கோபியர் கொண்டிருந்த எல்லையற்ற அந்த அன்பின் சக்தியும் பலமும் உங்களுக்கு வரும் அன்பிற்காகவே அன்பு செய்ய உங்களால் முடியும். அதுதான் லட்சியம். அதைப் பெற்றால் நீங்கள் எல்லாவற்றையும் பெற்றுவிட்டீர்கள்.

இந்த உயர்நிலையிலிருந்து சற்று கீழ்நிலைக்கு , அதாவது கீதையை உபதேசித்த கிருஷ்ணரிடம் வருவோம். குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவதைப் போன்றதொரு முயற்சி இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கிருஷணர் கோபியரின் காதலனாக இருப்பது நம்முள் பலருக்கு ஏதோ அமானுஷ்யமாகத் தோன்றுகிறது, இத்தகைய விஷயங்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்புவதில்லை. டாக்டர் இன்னார் அதை விரும்பவில்லை என்றால் கோபியர் போயே தீர வேண்டும் ! ஐரோப்பியனின் அனுமதி இல்லாமல் எப்படி கிருஷ்ணர் வாழ முடியும்? வாழ முடியாது. மகாபாரதத்தில் கோபியரைப்பற்றி ஏதோ முக்கியமல்லாத ஓரிரு இடங்களில் தவிர எங்குமே குறிப்பிடப்படவில்லை. திரௌபதியின் பிரார்த்தனையிலும் சிசுபாலனின் பேச்சிலும் பிருந்தா வனம்பற்றிக் கூறப்படுகிறது, அவ்வளவுதான். இவையெல்லாம் இடைச்செருகல்களாகத்தான் இருக்க வேண்டும்! ஐரோப்பியர்களுக்கு எது தேவையில்லையோ அதை உடனே தூக்கி எறியத்தானே வேண்டும்! கோபியரைப்பற்றி, ஏன் கிருஷ்ணர்கூட இடைச்செருகல்தான் என்னவென்று சொல்வது கொடுக்கல் வாங்கலில் ஆழ்ந்து மூழ்கிய இவர்களைப் பொறுத்தவரை மதம் கூட வியாபாரமாகிவிட்டது இங்கே எப்படியாவது ஏதாவது செய்து சொர்க்கத்தற்குப் போக முயற்சிக்கிறார்கள், இங்கு ஒன்றைக் கொடுத்து அங்கே கூட்டு வட்டியுடன் இன்பம் அனுபவிக்கத் துடிக்கும்வியாபாரிகள் அவர்கள். இத்தகைய ஒரு சிந்தனை முறையில் நிச்சயமாக கோயியருக்கு நிச்சியமாக கோபியருக்கு இடமில்லை தான்.

லட்சியக் காதலனான கிருஷ்ணனிலிருந்து, சற்று கீழ்நிலையான கீதை போதகரான கிருஷ்ணனிடம் வருவோம். கீதையைவிட ஒரு சிறந்த உரை வேதங்களுக்கு இதுவரை எழுதப்படவுமில்லை, இனி எழுதவும் முடியாது, வேதங்கள் ஆகட்டும் , உபநிடதங்கள் ஆகட்டும், அவற்றின் உட்பொருளைப் புரிந்து கொள்வது கடினம் ஏனெனில் ஒவ்வொரு உரையாசிரியர்களும் தத்தம் போக்கில் பொருள் கூற முற்படுகின்றனர் எனவே பகவானே வந்தார் வேதங்கள் வெளிப்படக் காரணமாக இருந்த அவரே, அவற்றின் சரியான பொருளை நமக்குத் தெரிவிப்பதற்காக கீதோபதேசகராக வந்தார். கீதையைவிடச் சிறந்த ஒன்று இன்றைய இந்தியாவிற்கு தேவைப்படவில்லை.எதுவும் உலகிற்குத் தேவைப்படவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த உரையாசிரியர்களால் பல இடங்களில் அதன் சரியான பொருளை உணர்ந்துகொள்ள முடியவில்லை; பல இடங்களில் அதன் போக்கைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

அப்படியானால் கீதையில் நீங்கள் காண்பது என்ன? இன்றைய உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ஓர் அத்வைத உரையாசிரியர் உபநிடதம் ஒன்றை எடுக்கிறார், அதில் துவைதப் பகுதிகள் எத்தனையோ வருகிறது; அதை அவர் உடனே திரித்து, சிதைத்து ஏதோவொரு பொருளைக் கூறி எல்லாவற்றையும் தமது கோட்பாட்டிற்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்கிறார். துவைத உரையாசிரியரும் அப்படித் தான் அவர் அதிலுள்ள அத்வைதப் பகுதிகளைச் சிதைத்து மாற்றி துவைதத்தின் கீழ் கொண்டு வந்து விடுகிறார். ஆனால் கீதையில் இத்தகைய முயற்சிகள் எதுவுமே இல்லை. எல்லாமே சரியானவைதான் என்கிறார் பகவான். ஏனெனில் ஆன்மா தூலத்திலிருந்து நுண்நிலைக்கு, பின்னர் நுண்நிலையிலிருந்து அதிநுண் நிலைக்கு மெல்லமெல்ல, தன் லட்சியமான பிரம்மத்தை அடைகிறது. இதுவே கீதையில் கூறபட்டுள்ளது.

கீதையில் கர்மகாண்டப் பகுதிகூடஎடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவை நேராக அன்றி மறைமுகமாக மட்டுமே முக்தியைத் தர முடியும் என்றாலும் அவையுள் பயனுள்ளவை. விக்கிரகங்களும் மறைமுகமாகப் பயனளிப்பவையே. அதுபோலவே சடங்குகள், உருவங்கள் எல்லாமே பயனளிப்பவைதாம். வேண்டியதெல்லாம் உள்ளத் தூய்மை மட்டுமே. உள்ளம் தூய்மையாகவும் உண்மையாகவும் இருந்தால்தான் வழிபாடு பயனுள்ளதாகி லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த எல்லா வகையான வழிபாட்டு முறைகளும் தேவைதான். இல்லையென்றால் அவை ஏன் இருக்க வேண்டும்?

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,