சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள்-1

* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான்.
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.
- விவேகானந்தர்

* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் விதத்தில் வாழுங்கள்.
* அறிவோடு ஒன்றிவிடும்போது தான் பிழைகளைப் போக்க முடியும். இந்த முடிவை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.
* தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.
* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு உண்டு. அதனால் வேண்டியதை ஏற்கவும், வேண்டாதவற்றை தள்ளவும் செய்யுங்கள்.
* கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.
* ஒன்றைப் பெற்றுக் கொள்பவனுக்குப் பெருமைஇல்லை. கொடுப்பவன் தான் பேறு பெற்றவனாகிறான்.
விவேகானந்தர்

* முதலில் ஒன்றைக் கேளுங்கள். பிறகு புரிந்து கொள்ளுங்கள். பின், எல்லா சஞ்சலங்களையும் விட்டு, புறஆதிக்கம் எதுவும் அணுகாதபடி மனதை மூடி வையுங்கள். அப்போது உள்ளத்திற்குள் உண்மை என்னும் பிரகாசம் ஒளிர்வதை உணர்வீர்கள்.
* பயமும், நிறைவேறாத ஆசைகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். தனக்கு மரணமில்லை என்பதை அறியும்போது தான் இந்த பய உணர்வு நம்மை விட்டு அகலும்.
* மனிதன் கைம்மாறு கிடைக்கும் இடத்தில் மட்டுமே அன்பு காட்டுகிறான். எல்லாரிடமும் அன்பு காட்டுவதே முறையானது.
* ஆன்மிக நெறியில் பக்குவப்பட்ட மனிதர்கள் கைம்மாறு கருதாமல் அன்பை வெளிப்படுத்துவர். அவர்கள் கடவுளின் அருளைப் பெறும் தகுதியைப் பெறுகிறார்கள்.
* பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களை நன்மையோ, தீமையோ எதுவும் நெருங்க முடியாது. சுயநலமே நன்மை, தீமை என்ற வேறுபாட்டை உருவாக்குகிறது.
- விவேகானந்தர்

* சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.
* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.
* சுயநலத்துடன் வாழாமல், "நான் அல்லேன் நீயே' என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.
* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.
- விவேகானந்தர்.

* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.
* நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
* புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
* ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.
* மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
* லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழ்வு நடத்துங்கள்.
- விவேகானந்தர்

* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
* உலகிற்கு நன்மை செய்தால், நமக்கு நாமே தான் நன்மை செய்து கொள்கிறோம்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.
* "நான் அல்ல.. நீயே' என்ற மனப்பான்மையே, எல்லா நன்மைக்கும் அடிப்படை. சுயநலத்தை உதறி விட்டு பொதுநலனுக்காக வாழ்வை அர்ப்பணியுங்கள்.
* தேவையற்ற விஷயங்களிலும், வீண்வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால் நம் ஆற்றல் சிதறி வீணாகிறது. எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்.
* ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.
- விவேகானந்தர்


* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம்.
* மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
* கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
* அதிர்ஷ்டதேவதை உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து போகாமல் இருப்பதில் கவனமாக இரு.
* வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.
- விவேகானந்தர்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,