பிராணாயாம விளக்கம்!

முன்னொரு காலத்தில் ஓர் அரசனிடம் மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ஏதோ குற்றம் செய்துவிட்டான். அதற்குத் தண்டனையாக அவனை ஒரு உயரமான கோபுரத்தின் உச்சி அறையில் சிறை வைக்கக் கட்டளையிட்டான் அரசன். அவன் அங்கேயே கிடந்து சாகுமாறு விடப்பட்டான். மந்திரியின் மனைவி ஓர் இரவில் கோபுரத்தின் அடியில் வந்து அவனைக் கூவி அழைத்து, தான் எந்த விதத்திலாவது அவனுக்கு உதவ முடியுமா என்று கேட்டாள். அதற்கு மந்திரி, அடுத்த நாள் இரவு வரும்போது, தடித்த நீண்ட கயிறு ஒன்று, சரடு ஒன்று, பட்டு நூள் ஒன்று, வண்டு ஒன்று, சிறிது தேன் இவற்றைக் கொண்டு வருமாறு கூறினான். அடுத்த நாள் இரவு அப்படியே அவள் அந்தப் பொருட்களைக் கொண்டு வந்தாள். வண்டின் தலையில் சிறிது தேனைப் பூசி, அதன் உடலில் பட்டு நூலை இறுகக் கட்டி, கோபுரத்தின் உச்சி நோக்கி வண்டின் தலை இருக்குமாறு சுவரில் வண்டை வைக்கும்படி மந்திரி சொன்னான். மனைவியும் அவ்வாறே செய்தாள். தலையில் தடவியுள்ள தேனின் மணம் வண்டைத் தூண்ட, அது தேனைச் சுவைக்கும் ஆசையில் மேல் நோக்கி நகர, அப்படியே சிறிது நேரத்தில் கோபுர உச்சியைச் சென்றடைந்தது. அப்போது அங்கு நின்றிருந்த மந்திரி அந்த வண்டைப் பிடித்து, பட்டு நூலையும் பற்றிக் கொண்டான். பின்னர் பட்டு நூலின் கீழ் நுனியில் சரடு நூலைக் கட்டும்படி கீழே நின்றிருந்த தன் மனைவியிடம் கூறினான். இப்போது பட்டு நூலை மெதுவாக மேலே இழுத்து, அதனுடன் கட்டப்பட்டிருந்த சரடைப் பிடித்துக் கொண்டான். இதன் பின்னர், மெல்லிய கயிற்றை அந்த சரடுடன் பிணைக்குமாறு மனைவியிடம் கூறினான். மெல்லிய கயிறு கைக்கு எட்டிய பின்னர், அதன் மறு நுனியில் தடித்த கயிற்றை கட்டச் சொன்னான். தடித்த கயிற்றை மேலே இழுத்த பின்னர் அதன் வழியாகக் கீழே இறங்கி தப்பிவிட்டான். இந்த உதாரணத்தில் உள்ள பட்டுநூல் நமது உடலின் மூச்சு எனும் சுவாச இயக்கம், சரடு நூல் உடலின் நாடிகள், மெல்லிய கயிறு எண்ணங்கள், தடித்த கயிறு பிராணன்.

இந்த உதாரணத்தின் மூலம் தியான யோகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் பிராணாயாமத்திற்கான விளக்கத்தை அளிக்கிறார் சுவாமி விவேகானந்தர்: பிராணாயாமம் என்றால் மூச்சை ஒழுங்குபடுத்தல் என்று பொருள். தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், பிராணாயாமத்திற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம்? பெரிய எந்திரத்தில் மூலச் சக்கரம் முதலில் இயங்கும். அதன் இயக்கத்தின் காரணமாக, மிக நுட்பமான அதன் பகுதிகள் எல்லாம் இயங்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறே நமது உடலாகிய எந்திரத்தின் மூலச்சக்கரமாக இருப்பது மூச்சு. மூச்சு ஒழுங்குபடுத்தப்படும்போது, அதன் விளைவாக, உடலின் நாடிகளும், எண்ணங்களும் முடிவாக பிராணனும் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. உடலையும், மனத்தையும் நாம் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்; இரண்டையும் நமது ஏவலர்களாகச் செயல்பட வைக்கலாம். அதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே, ப்ராணாயாமத்திலிருந்தே தொடங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,