விவேகானந்தரின் தாயகமே கேள் (பகுதி-1)


விவேகானந்தரின் தாயகமே கேள் (பகுதி-1)
நம்பிக்கையும் வலிமையும்

1.நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

3. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம் பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

4. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம். அது மனித இயல்பின் மீதே சுமத்தப்படும் பழிச்சொல்லாகும். ஓ சிங்கங்களே எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித்தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

5.போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகிவிடாது. எனவே இந்தக் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

6.பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்றிப் போதிப்பாயாக.

7.வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதி யையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவேன். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

8. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெருமுழக்கத்தை, நமது குழந்தை களைக் கேட்கச் செய். பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயாக மாற்றப்பட்டிருக்கிறது.

9.அறியாமை மிக்க , உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.

10. சகோதரா, நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கில்லை நீ அழுவ தேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா நீ ஏன் அழ வேண்டும் மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன் மாவில் நிலைத்திரு.

11.மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே . நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷயத்தைப் பொருட்படுத்தாதிருந்தால் , பாம்பின் விஷம்கூடச் சக்தியற்றதாகி விடும்.

12.ஒரு சமயம் நான் காசியில் இருந்த போது ஒரு பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒரு புறம் நீர் நிறைந்த ஒரு பெரிய குளமும், மறு புறம் உயர்ந்த சுவரும் எழுப்பப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பல குரங்குகள் இருந்தன.

காசியைச் சேர்ந்த குரங்குகள் மிகவும் பொல்லாதவை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவை. அவை தங்கள் பாதையில் என்னைச் செல்ல விடக்கூடாது என்று நினைத்தன போலும்! எனவே நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சப்தமிட்ட படி என் கால்களைப் பற்றின. அவை நெருங்க நெருங்க நான் ஓட ஆரம்பித்தேன். ஆனால் நான் ஓட ஓட அவையும் பின் தொடர்ந்து ஓடிவந்து என்னைக் கடித்தன. அந்தக் குரங்குகளிடமிருந்து தப்பவே வழியில்லை என்று எனக்குப்பட்டது. ஆனால் அப்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை வழியில் சந்தித்தேன். அவர் என்னைநோக்கி , குரங்குகளை எதிர்த்து நில் என்று கூறினார். நான் திரும்பிக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின்வாங்கி முடிவில் ஓடியேமறைந்தன. இதுவே வாழ்க்கை முழுவதற்கும் படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில் அஞ்சாமல் அதை எதிர்த்து நில்.

2.மனதின் ஆற்றல்கள்.

13.ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.

14. ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல் , ஒரே தட்டுதல் இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

15. பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.

16.சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கபடுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.

17. நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வென்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப்பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால் அந்த எண்ணங்கள் செயலுக்குவரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடிஅடிக்கும் வரையிலும் , அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம் . நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால் அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்ப தில்லை.

3.மனிதன் தனது விதியைத் தானே அமைக்கிறான.


18.நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ. அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை . எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

19.மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக்கொண்டு,அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள்.

விதி என்னால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத்தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டு வதற்கும் ஒருவருமில்லை.

20. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

21.ஏன் எதற்கு? என்று ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று, மாறாக செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவது ஒன்று தான் நமது கடன் . மகத்தான காரியங்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம் மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும் அவற்றை நாம் செய்து முடிப்போம் என்றும் உறுதியாக நம்பு.

22.துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதி யாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.

23. நமது வாழ்க்கை சிறந்ததாகவும் தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான் உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம் எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.

24.சண்டையிடுவதிலும் குறை சொல்லிக்கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.

தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துகொண்டு தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாகவந்து சேரும்.

25.தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக்கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலுங்கூட இடம் கிடைக்காது.

26.பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். வேறு எந்தச் சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நீனைவில் வைத்துக் கொண்டால் , தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.

27.மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும் ஒன்றாக இருக்கும்படிச் செய்தால் , அதைச் செய்ய உன்னால் இயலுமானால், பணம் தண்ணீரைப் போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.

28. இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை தான் மிகவும் கரடுமுரடாகவும் செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம் . பல பேர் தோல்வி அடைந்து விழுந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.

29. ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே. ஆனால் நான் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.

4. கல்வியும் சமுதாயமும்

30. பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம் பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால் களில் நிற்கும்படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்.

வாழ்க்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக் களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவை யாக்கிக் கொள்ள வேண்டும்.

நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக்கொண்டு அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

31.ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனது தான் இதற்குக் காரணம்.

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள் பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போது முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.

32. கல்வி கல்வி கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூடக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமதுநாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறு பாட்டிற்கும் என்ன காரணம்! கல்வி என் பதுதான் எனக்குகே கிடைத்த விடை.

33. நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது . அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள் மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

34. தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து இழந்து விட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும்... உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குக் கொடுங்கள் அந்த ஒரே ஒரு உதவி தான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான் நமது கடமை பின்பு அவை இயற்க்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறிவிடும் இப்போது மலை முகமதுவிடம் செல்லாவிட்டால், முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும். ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி தான் அவனை நாடிப்போக வேண்டும்.

35. எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

36.மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும் பிரம்மசரியமும் வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.

எல்லா விதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறு வனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

மதம் தான் எல்லாவற்றிற்கும் உயிர் நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டுப் போன்றவை. கறி, கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் அஜீர்ணம் ஏற்படு கிறது. அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிட்டாலும் அஜீர்ணம் ஏற்படும்.

37.பிரம்மசரியத்தை உறுதியாக அனுஷ்டிக்கிற ஒரே ஒரு காரணத்தாலேயே எல்லா விதமான கல்வியறிவையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றுத்தேர்ச்சி பெற்றுவிட முடியும். அத்தகையவன் ஒரே ஒரு முறை தான் கேட்டதையும் அறிவதையும் மறவாமல் நினைவில் வைத்துக் கொள்கிறான். இப்படிப்பட்ட பிரம்மசரியம் நம் நாட்டில் இல்லாமல் போனதனால் தான் எல்லாமே இன்று அழிந்து போகும் நிலையில் இருக்கின்றன.

38. கற்பு நிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும்பொழுது அந்த இனத்திற்கு முடிவுக் காலம் நெருங்குவது தெளிவாகிவிடுகிறது.

39.ஒரு கொள்கையை எடுத்துக் கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக்கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.

40.அன்பு நேர்மை , பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை அன்புதான் வாழ்க்கை ஆகும்.

எல்லா விதமான சுயநலமும் மரணம் தான். இந்த உண்மை இம்மை மறுமை யாகிய இரண்டு உலகங்களுக்கும் பொருந்தும் நன்மை செய்துகொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணூறு சதவீதம் இறந்துபோனவர்கள். அவர்கள் பிசாசுகள் தாம். எனது அருமைக் குழந்தைகளே அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.

41. மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும் புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பி யழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமே வேடிக்கையும் விளையாட்டும் அங்குக் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது.

மாறாக இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் துயரமும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும் மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.

5. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு

42.ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

43. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.

நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்ததால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமே தான் உதவி செய்துகொள்கிறோம்.

உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள் என்று நீ சொல்லாதே மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு கொடுப்பவன் தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.

44. தீமையைச் செய்வதனால் நாம் நமக்கு மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம்.

கர்மயோகத்தின் விதியின்படி ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரிய பலனை விளைப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது; நிறுத்தி வைக்கவும் முடியாது. அதேபோல நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்கு உரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிர பஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது,

45. நான் அல்லேன் , நீயே என்னும் இந்த மனப்பான்மைதான் எல்லா நன்மைகளுக்கும் எல்லாச் சிறந்த ஒழுக்கங்களுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.

இருப்பது சொர்க்கமா நரகமா என்று யார் இங்கே கவலைப்படுகிறார்கள்? ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? மாறாத ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? இதோ, இங்குள்ள உலகில் துன்பம் நிறைந்திருக்கிறது. புத்தர் பெருமான் செய்ததைப்போல இந்தத் துன்பத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய். அல்லது அந்த முயற்சியிலேயே உயிரை விட்டுவிடு.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி ஆக்ஞேயவாதியாக இருந்தாலும் சரி, அல்லது வேதாந்தியாக இருந்தாலும் சரி; கிறிஸ்தவனாக இருந்தாலும் சரி , அல்லது இஸ்லாமியனாக இருந்தாலும் சரி , உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய். இதுதான் நீ இப்போது கற்றுக்கொள்ள வேண்டிய முதற் பாடமாகும்.

46. எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல் பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.

47.உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால் அவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்

தனது குழந்தைகளில் யாரேனும் ஒரு வருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். ஆனால் அது காரணமாக உன்னைப்பற்றி நீ மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ளாதே மற்றவர்களுக்குக் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் நீ பாக்கியசாலி ஆகிறாய். எனவே நீ செய்யும் இந்தச் சேவையைக் கடவுள் வழிபாடாகவே செய்.

48.கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்துகொண்டிருக்கிறேன் மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

49.உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவனால் ஒரே ஒரு நாளைக்காகிலும் ஒரே ஒருவனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்மையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்துகொண்டேன். மற்றவை எல்லாம் பொருளற்ற வெறும் பகற்கனவுகள் என்று தான் சொல்லவேண்டும்.

50. உலகிற்கு யார் ஒளிதரப் போகிறார்கள்? பண்டைக் காலத்தில் தியாகம் தான் வாழ்க்கைக்கு உரிய விதியாக இருந்தது. இனி வரப்போகும் பல கோடி நூற்றாண்டுகளுக்கும் இந்த விதி அப்படியே தான் இருக்கப் போகிறது. பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நூறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.

51.தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில் நமது சக்தியைச் சிதற விடாமல், அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்க பூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகதி உடைய வராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப் பூர்வமாக நம்புகிறேன். கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையப்போகிறது என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன்.

52. மோகமாகிய முதலையின் வாயில் மக்கள் எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் அந்தோ! இதயத்தைப் பிளக்கக் கூடிய அவர்களின் சோகக் குரலை கேளுங்கள் முன்னேறிச் செல்லுங்கள்! கட்டுண்டு கிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும் எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும் அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும் ஏ வீரர்களே முன்னேறிச் செல்லுங்கள்! அஞ்சாதே அஞ்சாதே என்று வேதாந்த முரசு முழங்கிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

53. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான் . சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.

54. கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும் போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.

55.பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால் அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

56.புனிதமான வாழ்க்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சி அடைந்தவர்கள்; கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள்; ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாகச் சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள் இத்தகைய ஆண்களும் பெண்களும் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோட்சம் பரோபகாரம், தாழ்ந்தவர்களின் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகிய இந்த உயர்ந்த கொள்கைகளைப் பிரசாரம் செய்தபடி இந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைவரை செல்வார்கள்

57.என் மகனே ! உனக்கு எனது சொற்களின் பேரில் ஏதாவது மரியாதை இருக்குமானால் ,
முதலாவதாக உன்னுடைய அறையின் எல்லாக் கதவுகளையும் ஜன்னல் களையும் திறந்துவிடு. இதுவே நான் உனக்குத் தரும் முதல் அறிவுரையாகும். கீழ்நோக்கிச் சென்றபடியும் துன்பத்தில் மூழ்கியபடியும் ஏராளமான ஏழை மக்கள் நீ வாழும் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை அணுகிச் சென்று உன்னுடைய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் செலுத்தி அவர்களுக்கு தொண்டுசெய். நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை வழங்க ஏற்பாடு செய். உன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி அந்த நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. என் மகனே நான் உனக்குச் சொல்கின்ற இந்த முறையில் உன்னுடைய சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால் நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,