சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்-1

 சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்-1


கடவுளின் திருவுளத்தால் இந்துக்களாகிய நாம் இப்போது நெருக்கடியும் பொறுப்பும் மிக்க இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறோம். ஆன்மிக உதவிக்காக வைக்கப்பட்டு இருக்கிறோம். ஆன்மீக உதவகிக்காக மேலை நாடுகள் நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் உலக மக்களுக்கு ஒளி காட்டுகின்ற தார்மீகப் பொறுப்பு பாரதத் தாயின் பிள்ளைகளிடம் உள்ளது. அதற்குத் தகுதி படைத்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

---சுவாமி விவேகானந்தர்


நாம் ஒவ்வொன்றிலும் முக்கியம் மற்றும் முக்கியமற்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமானவை என்றும் இருப்பவை(வேதம்). முக்கியமற்றவை (ஸ்மிருதி)ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுபவை; அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீக்கப்பட்டு, முக்கிய மானவற்றால் நிரப்பப்படவில்லை என்றால், கட்டாயமாக அவை ஆபத்தானவையாகிவிடும்.

---சுவாமி விவேகானந்தர்


ரிஷித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கோ காலத்திற்கோ நெறிக்கோ ஜாதிக்கோ சொந்தமானதல்ல உண்மை உணரப்பட்ட வேண்டும் என்கிறார் வாத்ஸ்யாயனர். எனவே நீங்கள், நான் மற்றும் இங்குள்ள ஒவ்வொருவருமே ரிஷிகளாவதற்காக அழைக்கப்பட இருக்கிறோம் என்பதை அழைக்கப்பட இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு நம்பிக்கை வேண்டும்.நாம் அனைவரும் உலகத்தை அசைப்பவர்களாக மாறியாக வேண்டும், ஏனெனில் எல்லாம் நம்மிடமே உள்ளது.

ஆன்மீகம் என்பதை நாம் நேருக்கு நேராகக் கண்டாக வேண்டும், அனுபவிக்க வேண்டும், அதன் மூலம் அது பற்றிய நமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் ரிஷித்துவமாகிய அந்தப்பேரொளியில் திளைக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் மகத்தானவர்களாக இருப்போம். அப்பொழுது நம் உதடுகளிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இணையற்ற பாதுகாப்பை அள்ளி வழங்குவதாக இருக்கும். அப்பொழுது யாரையும் நிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், யாரையும் திட்ட வேண்டிய தேவையே இல்லாமல், இந்த உலகத்தில் யாருடனும் சண்டையிடும் அவசியமும் இல்லாமல் நம் முன்னர் தீமைகள் தாமாகவே மறைந்து போகும். சொந்த முக்திக்காகவும் பிறரது முக்திக்காகவும் இங்குள்ள ஒவ்வொருவரும் அத்தகைய ரிஷித்துவத்தை அடைய கடவுள் நமக்கு உதவுவராக.

---சுவாமி விவேகானந்தர்


காலம் செல்லச்செல்ல ஸ்மிருதிகளில் கூறப்பட்ட விதிகள் மறைந்து கொண்டே போகும். மகான்கள் வருவார்கள்.அவர்கள் சமுதாயத்தை மாற்றி,இன்னும் நல்ல பாதைகளிலும் காலத்திற்குத் தேவையான கடமைகளிலும் வழிகளிலும் சமுதாயத்தைச் செலுத்துவார்கள். இத்தகைய நிலை இல்லையெனில் சமுதாயம் வாழ்வது என்பது முடியாமல் போய்விடும் . இவ்வாறு நம்முடைய வழியை இந்த இரண்டு ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கான போதிய பரந்த மனமும் அதே வேளையில் ஆழ்ந்த நம்பிக்கையும் இங்குள்ள ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன், எதையும் விலக்காமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது என்பதையே நான் குறிப்பிடுகிறேன்.

கொள்கைவெறியரின் தீவிரமும் லௌகீகரின் பரந்த நோக்கும் வேண்டுமென்று விரும்புகிறேன். கடல்போல் ஆழ்ந்து, எல்லையற்ற வானம் போல் விரிந்துள்ள இதயமே நமக்கு வேண்டும். உலகிலுள்ள வேறெந்த நாட்டினரைவிடவும் முற்போக்குடன் இருப்போம்; அதேவேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்தருப்போம். எவ்வாறு இப்படி இருப்பது என்பது இந்துக்களுக்குத் தான் தெரியும்.

---சுவாமி விவேகானந்தர்



வேதங்கள் மனிதனின் இயல்பை அடிப்படையாகக் கொண்டது. மனிதனின் இயல்பை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் மனிதன் வாழும்வரை இந்த உண்மைகளும் மாறவே மாறாது. அவை எல்லா காலங்களுக்கும் உரியவை, எல்லா இடங்களுக்கும் பொதுவானவை, உலகம் தழுவியவை.

ஆனால் ஸ்மிருதிகள் பொதுவாக வட்டாரச் சூழ்நிலைகளையும், அங்கு நிலவுகின்ற பல்வேறான சூழ்நிலைகளின் காரணமாக எழுகின்ற கடமைகளைப் பற்றியுமே கூறுகின்றன. இவை கால ஓட்டத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் ஏதோ ஒரு சிறிய சமுதாய வழக்கம் மாறுவதால் உங்கள் மதமே அழிந்துவிடப் போவதில்லை, அப்படி ஒரு போதும் நடக்காது. இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.அந்தப் பழக்க வழக்கங்கள் ஏற்கனவே மாறிக் கொண்டிருப்பவை என்பதை மறக்காதீர்கள்.

மாட்டிறைச்சி தின்னாத பிராமணன், பிராமணனே அல்ல என்று கருதப்பட்ட காலம் ஒன்று முன்பு இதே இந்தியாவில் இருந்தது. சன்னியாசியோ அரசனோ அல்லது யாராவது மகானோ வீட்டுக்கு வந்தால் ஆடும் காளையும் கொல்லப்பட்ட விவரங்களையும், ஆனால் பயிர்த்தொழில் செய்யும் இன மாகிய நாம், மிகச்சிறந்த காளைகளைக் கொல்வது இறுதியில் நம் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதையும் நாம் வேதங்களில் படிக்கிறோம்.

எனவே பசு வதைக்கும் எதிராகக் குரல்கள் எழுந்தன ; அந்த வழக்கம் நிறுத்தப்பட்டது.

கொடிய வழக்கங்கள் என்று இப்போது நாம் கருதுகின்ற பல பழக்கங்கள் முன்பு சமுதாயத்தில் நிலவியதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் வேறு விதிகளை உருவாக்க நேர்ந்தது. இந்த விதிகளும் காலப்போக்கில் மறையும். உடனே புதிய விதிகள் தோன்றவும் செய்யும்.எனவே வேதங்கள் எல்லா காலங்களிலும் ஒன்றே. அவை நிலையானவை ஸ்மிருதிகள் காலத்திற்குக் காலம் மாறுபவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்

---சுவாமி விவேகானந்தர்



நமது சாஸ்திரங்கள் இரண்டு வகையான உண்மைகளைக் கூறுகின்றன. ஒன்று, மனிதனின் அழியாத இயல்பை அடிப் படையாகக் கொண்டது; இறைவன் ஆன்மா, இயற்கை - இவற்றுக்கிடையிலான மாறாத உறவைப்பற்றி ஆராய்கிறது. மற்றொன்று, வட்டாரச் சூழ்நிலைகள், காலச் சூழ்நிலைகள், குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சமுதாய அமைப்புகள் முதலியவற்றைப் பற்றிய தாக உள்ளது. முதல்வகை உண்மைகள் பெரும்பாலும் நமது சாஸ்திரங்களான வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
வேதங்களில் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது வகை, ஸ்மிருதிகளிலும் புராணங்களிலும் கூறப்படுகின்றன.எல்லா காலங்களுக்கும் வேதங்களே இறுதியான லட்சியம், முடிவான அதிகாரம் உள்ளவை என்பவை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எதிலாவது புராணங்கள் வேதங்களிலிருந்து மாறுபடுமானால் புராணத்தின் அந்தப் பகுதியை இரக்கமின்றி ஒதுக்கிவிட வேண்டும்.

---சுவாமி விவேகானந்தர்



ஒவ்வொரு சின்னஞ்சிறு கிராம தேவதைகளையும், மூடநம்பிக்கையில் தோய்ந்த சாதாரணமான பழக்க வழக்கங்களையும்தான் நாம் மதம் என்று அழைத்து பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. வட்டாரப் பழக்கங்கள் கணக்கற்றவை, ஒன்றுக்கொன்று முரணானவை. இவற்றுள் நாம் எதை ஏற்றுக் கொள்வது, எதை தள்ளுவது?

. இந்தியா முழுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள் பல்வேறானவை. ஆனால் அவை வட்டார வழக்கங்களே. இந்த வட்டார வழக்கங்கள்தாம் நமது மதத்தின் சாரம் என்றே பாமர மக்கள் எண்ணிவருகிறார்கள். இது பெருந்தவறாகும்.

---சுவாமி விவேகானந்தர்



நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக வெளியே செல்லவில்லை, நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் கவனிக்கவில்லை. இந்தியா மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணம். அதற்கான தண்டனையை நாம் பெற்றுவிட்டோம், இனியும் அவ்வாறு இருக்க வேண்டாம்.

நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்க்கு பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்க்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது. இதை நீங்கள் கடந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்கமாட்டீர்கள். வாழ்வின் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற முதல் அடையாளம் - விரிவடைதல். நீங்கள் வாழ வேண்டுமானால் கட்டாயம் விரிவடைய வேண்டும். நீங்கள் விரிவடையாமல் நிற்கின்ற அந்தக் கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது; ஆபத்து அருகில் வந்துவிட்டது.

---சுவாமி விவேகானந்தர்



       

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,