மதத்தின் தேவை! பகுதி -1


மதத்தின் தேவை! பகுதி -1
2
மனித இனத்தின் விதியை உருவாக்குவதற்காக செயலாற்றி வந்துள்ள, இன்னும் செயலாற்றி வருகின்ற சக்திகள் பலவாகும். இவற்றுள் மதம் என்று நாம் சொல்கிறோமோ, அந்த சக்தியை விட வலிமை வாய்ந்தது வேறொன்றுமில்லை. எல்லா சமூக இயக்கங்களும், பின்னால் இங்கே நின்று அவை இயங்க காரணமான இருப்பது மதம் என்ற இந்த தனிப்பட்ட சக்தியே. மனிதர்களை எல்லாம் ஒன்றாக இணைந்து வாழச்செய் உணர்வை தோற்றுவிக்கின்ற சக்திகளுள் மகத்தான சக்தி மதம் என்பதிலிருந்தே தோன்றியுள்ளது. இனம், தட்பவெப்பநிலை, ஏன், பாரம்பரியம் இவற்றின் காரணமாக மனிதர்களுள் ஏற்படும் பிணைப்புகளை விட மதத்தால் ஏற்படும் பிணைப்புகள் பல நேரங்களில் வலிமை மிக்கவையாக இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். ஒரே குலத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே, ஏன், சகோதரர்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையை விட, ஒரே கடவுளை வழிபடுபவர்களுக்கு மற்றும் ஒரே மதத்தை சார்ந்தவர்களுக்கு இடையே காணப்படுகின்ற ஒற்றுமை உறுதி மிக்கதாகவும், நிலைத்து நிற்பதாகவும் இருக்கிறது என்பது எல்லோருக்கும் அறிந்த உண்மை.

மதம் எவ்வாறு தோன்றியது என்பதை அறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று நம்மிடம் வந்துசேர்ந்துள்ள பழமையான மதங்கள் எல்லாம் ஒரு விஷயத்தில் உரிமை கொண்டாடுவதை காண்கிறோம். அவை இயற்கைக்கு அப்பாற்பட்டவை. மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. மனித சக்திக்கு அப்பால், எங்கிருந்தோ தோன்றியவை என்பதே அந்த உரிமை. தற்கால அறிஞர்கள் இரண்டு கொள்கைகளை ஓரளவு ஒப்புக்கொள்கின்றனர். ஒன்று இறந்த முன்னோர்களை வழிபடுதல்; மற்றொன்று, எல்லையற்ற பரம்பொருள் கருத்தின் பரிணாம வளர்ச்சி. ஒரு சாரார் இறந்த முன்னோர் வழிபாடு தான் மதத்தின் தொடக்கம் என்று கருதுகிறார்கள். மற்றோர் சாரார், இயற்கை சக்திகளை உருவகப்படுத்தி வழிபட தொடங்கியதிலிருந்து தான், மதம் தோன்றியது என்கிறார்கள். உடல் அழிந்தாலும் அந்த உடலில் வாழ்ந்த உறவினர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பி அவர்களை மறக்காமல் இருக்க மனிதன் விரும்புகிறான. அவர்களுக்கு உணவளித்து ஏதோ ஒரு விதத்தில், வழிபடவோ, விழைகிறான். இதிலிருந்து தான் மதம் என்று அழைக்கின்ற ஒன்று மலரத்தொடங்கியது.

எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் மற்றும் அமெரிக்காவிலும் வேறு இடங்களிலும் உள்ள பல்வேறு இனத்தினரை பழமையான மதங்களை ஆராய்ந்தால் முன்னோர் வழிபாடே இந்த மதங்களின் தொடக்கமாக இருந்தது என்பதற்கு பல தெளிவான சான்றுகள் இருப்பது தெளிவாகிறது. பழங்கால எகிப்தியர்கள் ஆன்மாவைப்பற்றி கொண்டிருந்த முதல் கருத்து அதற்கு ஒரு நகல் உண்டு என்பதாகும். ஒவ்வொரு மனித உடலின் உள்ளேயும் அதைப்போன்ற நகல் ஒன்று இருக்கிறது; மனிதன் இறந்த பின் இந்த நகல் வெளியே சென்று தொடர்ந்து வாழ்கிறது; இறந்த உடல் கெடாமல் இருக்கும் வரை தான் இந்த நகலும் வாழ முடியும் என்று அவர்கள் நம்பினர். அதனால் தான், இறந்த உடலை சேதப்படாமல் பாது காக்க மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர். உடல்களை பாதுகாக்க மாபெரும் பிரமிடுகளை கட்டியதற்கு இதுவே காரணம். இறந்த உடலின் ஏதேனும் ஒரு பகுதி கேடு ஏற்பட்டால், நகலுக்கும் அதே கேடு ஏற்படும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. தெளிவாக, இது முன்னோர் வழிபாடுதான்.

பழங்கால பாபிலோனியர்களிடம் நகலைப்பற்றிய இதே கருத்தை சிறிது வேறுபாட்டுடன் காண்கிறோம்; நகல் அன்புணர்ச்சியையே இழந்து விடுகிறது. தனக்கு உணவு, நீர் முதலியவற்றையும் மற்றும்பல உதவிகளையும் அளிக்க சொல்லி வாழ்பவர்களை பயமுறுத்துகிறது; தன் மனைவி குழந்தைகளிடம் கூட அது அன்பை இழந்து விடுகிறது. பண்டைய இந்துக்களிடையே கூட முன்னோர் வழிபாட்டின் சில சுவடுகளை நாம் காண்கிறோம். சீனர்களிடையேயும், இந்த முன்னோர் வழிபாடு தான் அவர்களது மதத்திற்கு அடிப்படையாக இருந்தது என்று கூறலாம். இன்றும் அந்த பரந்த நாட்டில் எங்கும் இந்த கருத்து ஊடுருவி நிற்கிறது. உண்மையில், சீனாவில் சிறந்து விளங்கும் ஒரே மதம் முன்னோர் வழிபாடு என்று கூட சொல்லலாம். ஆகவே, ஒரு பக்கம் பார்த்தால், முன்னோர் வழிபாடு தான் மதத்தின் ஆரம்பம் என்ற கருத்து உடையவர்களுக்கு வலிமையான ஆதாரங்கள் இருப்பது போல் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,