இந்து சமயம் பகுதி-8


இந்து சமயம் பகுதி-8
அதே போல் ராஜயோகி வந்தால் நாம் அவர்களை வரவேற்க வேண்டும் , மனத்தைப் பற்றிய ஆராய்ச்சியை அவர்களுக்கு விளக்கிக் காட்டத் தயாராக இருக்க வேண்டும். உணர்ச்சிப் பெருக்கினர் வந்தால் நாம் அவர்களோடு அமர்ந்து சிரிக்கவும் கடவுளை நினைத்து அழவும் தயாராக இருக்க வேண்டும் ; அன்பெனும் மதுவை அருந்திப் பித்தர்களாக வேண்டும் . தீவிரமான செயல்வீரன் வந்தால் இயன்றவரையில் அவனுடன் உழைக்க வேண்டும்.

இந்த நான்கு வகைகளின் இணைப்பே உலகம் தழுவிய மதத்திற்கு மிகவும் நெருங்கியுள்ள குறிக்கோளாகும். இந்த ஞானம், யோகம், பக்தி , கர்மம் எல்லா அம்சங்களும் சமநிலையில் நிறைவாக உள்ள மனம் கொண்டவர்களாக எல்லோரும் இருப்பதற்குக் கடவுள் அருள் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அதுதான் லட்சியம் நிறைமனித லட்சியம் என்று நான் கருதுவது இதைத்தான். இந்த அம்சங்களுள் ஒன்றோ இரண்டோ உள்ளவர்கள் என்னைப் பொறுத்தவரை ஒருதலைப் பட்ச மானவர்களே. இத்தகைய ஒருதலைப் பட்ட மானவர்களால்தான் இந்த உலகம் ஏறக்குறைய நிறைந்துள்ளது. அவர்களுக்குத் தங்கள் பாதை மட்டுமே தெரியும் , மற்ற எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை அபாயமானவை பயங்கரமானவை. இந்த நான்கு வழிகளிலும் சமச்சீராக இயைந்திருப்பதுதான் மதத்தைப்பற்றி நான் கொள்கின்ற லட்சியம். இந்தியாவில் நாங்கள் யோகம் என்று சொல்கின்ற முறையால் இந்த மதத்தை உருவாக்க முடியும். யோகம் என்றால் இணைப்பு என்பது பொருள். செயல் வீரனுக்கு, மனிதனையும் மனித குலத்தையும் ஒன்றாக இணைப்பது . யோகிக்கு அவனுடைய தாழ்ந்த உயர்ந்த ஆன்ம நிலைகளை இணைப்பது . பக்தனுக்கு அவன் அவனது இஷ்ட தெய்வத்துடன் இணைவது . தத்துவ வாதிக்கோ இருக்கும் எல்லாவற்றின் இணைப்பு இது.

யோகம் என்பதன் பொருள் இதுவே . இது ஒரு சம்ஸ்கிருத வார்த்தை. யோகத்தின் இந்த நான்கு பிரிவுகளுக்கும் சம்ஸ்கிருதத்தில் வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. இத்தகைய இணைப்பை நாடுபவன் யோகி. செயல்வீரன் கர்ம யோகி என்றும் அன்பின் மூலம் இணைப்பை நாடுபவன் பக்தி யோகி என்றும் , தியானம் மன ஆராய்ச்சி இவைமூலம் இணைப்பை நாடுபவன் ராஜயோகி என்றும் தத்துவ ஆராய்ச்சியின் மூலம் இணைப்பை அடைய முயல்பவன் ஞானயோகி என்றும் அழைக்கப்படுகிளான்.

முதலில் ராஜயோகத்தை எடுத்துக் கொள்கிறேன். மனத்தைக் கட்டுப்படுத்துவதான இந்த ராஜயோகம் என்பது என்ன? உங்கள் நாட்டில் யோகம் என்ற சொல்லை அர்த்தமற்ற பல விஷயங்களுடன் சம்பந்தப் படுத்தியுள்ளீர்கள் . இந்தப் பிதற்றல்களுடன் யோகத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிவிட்டே நான் ஆரம்பிக்கிறேன். இந்த யோகங்களில் ஒன்றுகூட நாம் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடாது என்றோ , ஏமாற வேண்டும் என்றோ , நம் அறிவைப் புரோகிதர்கள் கையில் ஒப்படைத்து விட வேண்டும் என்றோ , அது போன்ற எதையுமோ சொல்லவில்லை . தேவ தூதர் யாருக்கு நாம் விசுவாசமாக இருந்தேயாக வேண்டும் என்றும் இவை சொல்வதில்லை . உங்கள் பகுத்தறிவைப் பற்றிக் கொள்ளுங்கள், உடும்புப்பிடியாக பிடித்துக் கொள்ளுங்கள் என்றே இந்த யோகங்கள் எல்லாம் சொல்கின்றன.

எல்லா உயிரினங்களிலும் அறிவுபெற மூன்றுவகைக் கருவிகள் உள்ளன. முதலாவது இயல்புணர்ச்சி; இது மிருகங்களிடம் மிகவும் வளர்ச்சி பெற்றிருக்கும் . அறிவிற்கான கருவிகளில் மிகத் தாழ்ந்தது இது. அறிவிற்கான இரண்டாவது கருவி எது? பகுத்தறிவு. இது மனிதனிடம் மிகவும் உச்ச நிலையில் இருப்பதைக் காணலாம்.

உணர்வால் வரையறுக்கப்பட்ட குறுகிய எல்லைக் குள் மட்டுமே நமது பகுத்தறிவு இயங்க முடியும் அதற்கு அப்பால் முடியாது . ஆகவே அப்பால் நம்மை அழைத்துச் செல்ல வேறொரு கருவி தேவை , அதுவே அக விழிப்புணர்வு.

ஆகவே இயல்புணர்ச்சி, பகுத்தறிவு அகவிழிப்புணர்வு - இவை மூன்றும் அறிவு பெறுவதற்கான மூன்று கருவிகள் . இயல்புணர்ச்சி மிருகங்களிடம் காணப்படுவது. பகுத்தறிவு மனிதனிடம் காணப்படுவது, அகவிழிப் புணர்வு தெய்வ மனிதர்களிடம் காணப்படுவது...

உண்மையான போதனையின் முதல் பரிசோதனை அது பகுத்தறிவுக்கு முரண்பாடாக இருக்க கூடாது என்பதுதான். யோகங்கள் எல்லாவற்றிற்கும் இதுவே அடிப்படையாக இருப்பதை நீங்கள் காணலாம். மன இயல் யோகமான இணைப்பிற்கு மனஇயல் வழியான ராஜயோகத்தை எடுத்துக் கொள்வோம் . இது விரிவான ஒரு விஷயம் . இந்த யோகத்தின் மையக் கருத்தை மட்டுமே நான் இப்போது சொல்ல முடியும். அறிவு பெறுவதற்கு நமக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தாழ்ந்த நிலை மனிதன் முதல் மிக உயர்ந்த யோகி வரையில் இந்த ஒரே வழியைத்தான் பயன்படுத்தியாகவேண்டும் . அந்த வழிதான் மன ஒருமைப்பாடு. சோதனைச் சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்ற வேதியியல் விஞ்ஞானி , தன் மன சக்தியையெல்லாம் ஒரு முகப்படுத்தி , ஓரிடத்தில் குவித்து , மூலகங்களின் மீது செலுத்துகிறான்; மூலகங்கங்களைப் பகுத்துக் காண்கிறான் . இவ்வாறு அறிவு பெறுகிறான். வானஇயல் அறிஞனும் தன் மன சக்திகளையெல்லாம் ஓரிடத்தில் ஒருமுகப்படுத்தி , அதைத் தொலைநோக்கியின் மூலம் வான மண்டலப் பொருட்களில் செலத்துகிறான் ; நட்சத்திரங்களும் மண்டலங்களும் தாமாக வந்து தங்கள் ரகசியத்தை அவனுக்கு வெளிப்படுத்துகின்றன.

கற்பிக்கின்ற பேராசிரியராக இருந்தாலும் சரி கற்றுக் கொள்கின்ற மாணவனாக இருந்தாலும் சரி அறிவை நாடுகின்ற ஒவ்வொருவரின் விஷயமும் இது தான். நீங்கள் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் பேச்சு உங்களைக் கவருமானால் உங்கள் மனம் அதில் ஒருமுகப்படும் . இந்த ஒருமைப்பாட்டின் காரணமாக, அப்போது மணி அடிப்பது கூட இந்த ஒருமைப்பாட்டின் காரணமாக உங்கள் காதில் விழாது. மனத்தை ஒருமுகப்படுத்துகின்ற அளவுக்கு உங்களால் எனது பேச்சைப் புரிந்துகொள்ள முடியும் . எனது அன்பையும் ஆற்றலைகளையும் ஒருமுகப்படுத்த முடிகின்ற அளவுக்கு நான் சொல்ல விரும்புவதை என்னால் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். இந்த ஒருமைப்பாட்டு ஆற்றல் அதிகமாகும் அளவுக்கு ஏற்ப நாம் பெறுகின்ற அறிவின் அளவும் அதிகமாகும். ஏனெனில் அறிவு பெறுவதற்கான ஒரே வழி இதுவே. செருப்புக்குப் பாலீஷ் போடுபவன் கூடத் தன் மனத்தை ஒருமுகப்படுத்தினால் நன்றாகப் பாலீஷ்போட முடியும். மனத்தை ஒருமுகப்படுத்துகின்ற சமையல்காரனால் மிக நன்றாகச் சமைக்க முடியும்.

பணம் சம்பாதிப்பதிலும் சரி கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்தக் காரியத்தை நன்றாகச் செய்ய முடியும். இந்த ஒரு முயற்சியால் மட்டுமே, இந்த ஒரு சாவியால் மட்டுமே இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும் அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும் . இந்த ஒருமைப்பாட்டுச் சக்தியே அறிவுப் பொக்கிஷத்திற்கான ஒரே திறவுகோல் ராஜயோகம் இதைப்பற்றிதான் முக்கியமாக விளக்குகிறது நம் உடம்பு இப்போது இருக்கும் நிலையில் நாம் மிகவும் சஞ்சலப் பட்டவர்களாக இருக்கிறோம் , நமது மனம் தனது ஆற்றல்களையெல்லாம் நூற்றுக்கணக்கான பொருட்களின் மீது செலுத்தி சிதறடித்து , வீணாக்குகிறது. எண்ணங்களை அமைதிப்படுத்தி ஏதாவது ஒரு பொருளின் மீது மனத்தை ஒருமுகபடுத்த முயலும் போது, நாம் விரும்பாத பல்லாயிரக்கணக்கான உந்து வேகங்கள் மூளையில் கிளர்ந்தெழுகின்றன; ஆயிரக்கணக்கான எண்ணங்கள் மனத்தில் எழுந்து அதை நிலைகுலைக்கின்றன. அவர்றைத் தடுத்து , மனத்தை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்பதை விளக்குவதே ராஜயோகம்.

இப்போது செயலின் மூலம் கடவுளை அடையும் நெறியான கர்மயோகத்தைப் பார்ப்போம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே இருப்பதற்காகவே பிறந்தது போல் பலர்சமுதாயத்தில் இருப்பதைக் காண்கிறோம். அவர்களால் சிந்தனைத் தளத்தில் மனத்தை ஒரு முகப்படுத்த முடியாது , தூலமான தெளிவாகத் தெரிகின்ற செயலில் மட்டுமே அவர்களுடைய எண்ணம் முழுவதும் குவிந்துள்ளது. இதுபோன்ற வாழ்க்கைக்கும் ஒரு சாதனை முறை வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறோம் . ஆனால் செயலின் ரகசியம் தெரியாததால் பெரும்பாலும் ஆற்றல்களில் பெரும்பகுதியை வீணடித்து விடுக்கிறார்கள்; கர்மயோகம் இந்த ரகசியத்தை விளக்குகிறது. எங்கே, எப்படிச் செயல் புரிவது நமக்கு முன் இருக்கும் செயலில் நமது ஆற்றல்கள் முழுவதையும் பயன்படுத்தி எப்படி மிகப் பெரும் லாபத்தை அடைவது என்பதையெல்லாம் போதிக்கிறது.

இந்த ரகசியத்தோடு கூடவே செயலுக்கு எதிராகக் கூறப்படுகின்ற ஓர் ஆட்சேபத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் - செயல் துன்பத்தைத் தருகிறது என்பதே அது. ஆனால் துன்பமும் வேதனையும் பற்றின் காரணமாக வருபவை. நான் வேலை செய்ய எண்ணுகிறேன், யாரோ ஒருவருக்கு நன்மை செய்ய விரும்புகிறேன், ஆனால் நூற்றுக்குத் தொண்ணூறு சம்பவங்களில் நாம் யாருக்கு உதவி செய்தோமோ , அவர் நன்றி மறந்து எனக்குப் பகைராவதுதான் நடக்கும் . விளைவு எனக்குத் துன்பம் . இதைப் போன்ற நிகழ்ச்சிகள் செயலிலிருந்து மனிதர்களை விலகச் செய்கின்றன. துன்பமும் வேதனையும் விளையுமோ என்ற பயம் மனிதகுலத்தின் உழைப்பு . சக்தி இவற்றில் கணிசமான பகுதியை வீணாக்கி விடுகின்றன.

பற்றில்லாமல், யாருக்கு எதற்காக உதவி செய்கிறோம் என்றெல்லாம் பார்க்காமல் செயலுக்காகவே செயல்புரிவது எப்படி என்பதைக் கர்மயோகம் போதிக்கிறது. செயல்புரிவது கர்மயோகியின் இயல்பாக உள்ளது, செயல்புரிவது நல்லது என்று அவன் உணர்கிறான் - இதனால் தான் அவன் செயல்புரிகிறான் . இதற்குமேல் எந்தப் பலனையும் அவன் எதிர்பார்ப்பதில்லை. அவன் எப்போதும் கொடுப்பவனாக இருக்கிறான் , எதையும் ஏற்பவனாக இருப்பதில்லை. அவன் கொடுப்பது அவனுக்குத் தெரியும் , ஆனால் அதற்குப் பிரதியாக அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆகவே துன்பத்தின் பிடியில் அவன் சிக்குவதில்லை. துன்பம் எப்போது வந்தாலும் சரி அதற்குக் காரணம் பற்றின் எதிர்விளைவு மட்டுமே .

அடுத்து உணர்ச்சிப் பெருக்குடைய மனிதனுக்கான பக்தியோகம் . அவன் கடவுளை நேசிக்க விரும்புகிறான் சடங்குகள், மலர்கள் , வாசனைப் பொருட்கள், அழகான ஆலயங்கள், உருவ வழிபாடு போன்றவற்றை நம்புகிறான் அவற்றில் ஈடுபாடு உடையவனாக இருக்கிறான் . அவர்கள் செய்வது தவறு என்று சொல்வதா? உங்களுக்கு நான் ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் . மிகச் சிறந்த புராணங்களையும் சடங்குகளையும் கொண்ட மதப் பிரிவுகள் தான் உலகின் மாபெரும் மகான்களைத் தோற்று வித்திருக்கின்றன - இதை நினைவில் கொள்வது நல்லது அதுவும் இந்த நாட்டில் அது முக்கியமாக வேண்டும் உருவமோ சடங்கோ இல்லாமல் கடவுளை வழிபட முயன்ற மதங்கள் எல்லாமே மதத்தில் நுண்மையாகவும் அழகாகவும் இருக்கும் விஷயங்களைக் கருணையில்லாமல் அழித்துவிட்டன. இந்த மதங்கள் உயிரற்றவை வெறித்தனமான கொள்கைகள். உலக வரலாறே இதற்குச் சாட்சியாக உள்ளது. ஆகவே சடங்குகளையும் புராணங்களையும் பற்றிக் கேவலமாகப் பேசவேண்டாம் விரும்புவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்கட்டும்.

என் வாழ்வில் நான் கண்ட மாமனிதர்கள், ஆன்மீகத்தில் அற்புதமாக முன்னேறியவர்கள் எல்லாருமே இந்தச்சடங்குகள் மூலமாக முன்னுக்கு வந்தவர்களே . அவர்களின் காலடியில் அமர்வதற்குக்கூட நமக்குத் தகுதியில்லை, நாம் அவர்களைக் குறை கூறுவதா! இந்தக் கருத்துக்கள் மனித மனங்கள் மீது எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றுள் எதை ஏற்பது, எதை விலக்குவது என்பதெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்? போதிய ஆதாரம் எதுவும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் விமர்சிப்பது நமது வாடிக்கையாகி விட்டது வேண்டிய புராணங்களை மக்கள் வைத்துக் கொள்ளட்டும், அவற்றிலிருந்து வேண்டிய அளவு ஊக்கம் பெறட்டும்; ஏனெனில் உணர்ச்சிவசப்படுகின்ற இயல்புடையவர்கள் உண்மையைப் பற்றிய சூட்சும விளக்கங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் . அவர் களைப் பொறுத்தவரை, கடவுள் நமக்கு எட்டக்கூடியவர் அவர் மட்டுமே உண்மையானவர். அவர்கள் அவரை உணர்கிறார்கள், காண்கிறார்கள், கேட்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள். தங்கள் கடவுளை அவர்கள் வழி பட்டுக்கொள்ளட்டும். ஓர் அழகிய சிலையைப் பார்த்தவுடனே அதை உடைத்து, அது எந்தப் பொருளால் செய்யப்பட்டுள்ளது என்று அறிய விரும்புகின்ற முட்டாள்தனமே உங்கள் பகுத்தறிவு என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சொர்க்கத்திற்குப் போவது குழந்தைகள், செல்வம் இவற்றைப் பெறுவது என்று எந்த லாப நோக்கமும் இல்லாமல் அன்பு செய்வது நல்லது என்ற ஒன்றிற்காக மட்டுமே கடவுளை நேசிப்பது எப்படி நன்மையை நாடுவது எப்படி என்பதை பக்தியோகம் போதிக்கிறது. அன்பே அன்பின் மாபெரும் பரிசு கடவுளே அன்பு என்று பக்தியோகம் போதிக்கிறது. படைப்பவர் , எங்கும் நிறைந்தவர் , எல்லாம் வல்லவர் எல்லாம் அறிந்தவர் அனைத்திற்கும் மேலான ஆண்டவன் , தந்தை , தாய் என்றெல்லாம் கடவுளைப் போற்றுமாறு பக்தியேகம் போதிக்கிறது, அன்பே கடவுள் என்பதுதான் கடவுளைப் பற்றிச் சொல்லக்கூடிய மிக மேலான சொல் மனித மனம் நினைக்க கூடிய மிக உயர்ந்த கருத்து . எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் இருக்கிறார். எங்கேயானாலும் சரி எந்த வடிவிலும் சரி அன்பு இருக்குமானால் , அங்கே கடவுள் இருக்கிறார். கணவன் மனைவியை முத்தமிடும் போது அந்த முத்தத்தில் அவர் இருக்கிறார்; தாய் குழந்தையை முத்தமிடும் போது அந்த முத்தத்தில் அவர் இருக்கிறார். நன்பர்கள் கைகோத்துச் செல்லும்போது அங்கே அன்பு வடிவமாக அவர் இருக்கிறார்.ஒரு மாமனிதர் மனித குலத்தைநேசித்து, அதற்கு உதவி செய்ய விரும்பும்போது , அன்பைஅள்ளி வழங்க அவர் அங்கே இருக்கிறார். எங்கெல்லாம் விசாலமான உள்ளம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் வெளிப்படுகிறார். பக்தியோகம் போதிப்பது இதைத்தான் .

கடைசியாக ஞானயோகத்திற்கு வருகிறோம் ஞானயோகி, நாம் பார்க்கின்ற இந்த உலகத்திற்கு அப்பால் போக விரும்புபவன் , சிந்தனையாளனாக , தத்துவவாதி அவன் இந்த உலகின் அற்ப விஷயங்களால் திருப்தி அடைவதில்லை.உண்பது அருந்துவது போன்ற தினசரி வழக்கங்களுக்கு அப்பால் போவது அவனது நோக்கம். ஆயிரக்கணக்கான நூல்களின் போதனைகளால் கூட அவன் திருப்தி அடைவதில்லை. ஏனெனில் மிஞ்சிப் போனால் அந்த நூல்கள் இந்தச் சிறிய உலகத்தை அவனது கண்முன் கொண்டு வரலாம், அவ்வளவுதான். வேறு எதுதான் அவனுக்குத் திருப்தி அளிக்கும்?பல்லாயிரக்கணக்கான வெவ்வேறு உலகங்களும் அவனுக்குத் திருப்தி அளிப்பதில்லை, அவனுக்கு இவையெல்லாம் இருப்புக் கடலில் ஒரு சிறு துளி மட்டுமே. இவற்றையெல்லாம் கடந்து உண்மையை உள்ளபடிக் காண்பதன்மூலம், அதை உணர்வதன் மூலம் அதுவாக இருப்பதன் மூலம் பரம்பொருளுடன் இரண்டாகக் கலந்துவிடுவதன் மூலம் இருப்பின் மையத்திற்கே செல்ல விரும்புகிறான் . அவன்தான் ஞானயோகி தாய் தந்தை பிரபஞ்சத்தைப் படைப்பவர் அதைப் பாதுகாத்து வழி காட்டுபவர் என்றெல்லாம் சொல்வது அவனைப் பொருத்தவரை கடவுளை விளக்குவதற்குப்போதியவை அல்ல . அவனது உயிரின் உயிர், அவனது ஆன்மாவின் ஆன்மா - அதுவே அவனுக்குக் கடவுள் அவனது சொந்த ஆன்மாவே கடவுள். கடவுளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அழியும் தன்மை கொண்ட பகுதிகளை எல்லாம் தத்துவத்தின் உறுதியான வாதங்களால் அவன் தூள்தூளாக்கி விடுகிறான், கடைசியில் மிஞ்சுவது கடவுள்தான்.

ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றன. ஒன்று மேல்கிளையிலும் மற்றொன்று கீழ்க் கிளையிலும் அமர்ந்துள்ளன. மேல்கிளைப் பறவை அமைதியாக சாந்தமாக, கம்பீரமாக தனது மகிமையில் தானே மூழ்கி இருக்கிறது. கீழ்க்கிளைப் பறவை கிளைக்குக்கிளை பறந்து இனிப்பும் கசப்புமான பழங்களை மாறிமாறி உண்டு இன்பத்தையும் துன்பத்தையும் மாறிமாறி அனுபவித்துக் கொண்டிருக்கிறது . சில காலத்திற்குபிறகு அது மிகவும் கசப்பான ஒரு பழத்தைத் தின்ன நேர்கிறது, அதனால் வெறுப்புற்று மேலே மற்ற பறவையைப் பார்க்கிறது. அந்தப் பறவையின் சிறகுகள் தங்கமயமாக ஜொலித்துக் கொண்டுருக்கின்றன. அது இனிப்புப் பழங்களையும் சாப்பிடுவதில்லை; அதற்கு இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. அது அமைதியாக தனக்குள் மூழ்கி இருக்கிறது தன்னைத் தவிர வேறு எதையும் அது காண்பதில்லை.

கீழ்க்கிளைப் பறவை இந்த நிலைக்கு ஏங்குகிறது. ஆனால் சீக்கிரமே இதை மறந்து மறுபடியும் பழங்களைச் சாப்பிட ஆரம்பிக்கிறது. சிறிதுகாலம் கழிகிறது. விஷமாகக் கசக்கின்ற ஒரு பழத்தை மறுபடியும் தின்கிறது வெறுப்படைந்து மேலே பார்க்கிறது, மேல்கிளைப் பறவையின் நிலையைக் அடைய முயல்கிறது. மறுபடியும் அதை மறக்கிறது, பழைய விஷயங்களில் ஈடுபடுகிறது மறுபடியும் மேலே பார்க்கிறது. இவ்வாறே நடந்து கொண்டிருக்கிறது. கடைசியில் மேல்கிளைப் பறவைக்கு மிக அருகில் சென்றுவிடுகிறது. அதன் சிறகொளி பிரதிபலித்து தன்மீது தழுவிச் செல்வதைக் காண்கிறது. அப்போது கீழ்க்கிளைப் பறவை ஒரு மாற்றத்தை உணர்கிறது. தான் கரைந்து மறைந்து விடுவதை போல் அதற்குத் தோன்றுகிறது. அது இன்னும் பக்கத்தில் போகிறது. அப்போது முழுவதும் கரைகிறது, இறுதியில் இந்த அற்புதமான மாற்றத்தைப் புரிந்து கொள்கிறது. மேல்கிளைப் பறவையின் அதே தோற்றம் கொண்ட நிழலே, அதன் பிரதிபலிப்பே கீழ்க்கிளைப் பறவை அடிப்படையில் எப்போதுமே அது மேல்கிளைப் பறவை யாகவேதான் இருந்து வந்திருக்கிறது. கீழ்க்கிளையின் அந்தச் சின்னப்பறவை இனிப்புகசப்புப் பழங்களைச் சாப்பிட்டதும் மாறிமாறி இன்ப துன்பங்களை அனுபவித்ததும் எல்லாம் வெறும் கற்பனை, வெறும் கனவு உண்மையான பறவை மேல் கிளையில் எப்போதுமே அமைதியாக சாந்தமாக கம்பீரமாக மகிமைமிக்கதாக கவலைகளுக்கு அப்பாற்பட்டதாக, துன்பங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது,

மேல் பறவைதான் பரமாத்மா , பிரபஞ்சத்தின் தலைவன் ; கீழ்ப்பறவை ஜீவாத்மா மனிதன் அவன்தான் இந்த உலகின் இனிப்புகசப்புப் பழங்களைத் தின்று கொண்டிருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது ஒரு பலத்த அடி விழுகிறது. சிறிது நேரத்திற்குப் பழங்களைத் தின்பதை விட்டுவிட்டு அறியாத கடவுளை நாடுகிறான். அப்போது வருகிறது ஒளிவெள்ளம். இந்த உலகம் வெறும் பகட்டுக் காட்சி என்பதை அவன் உணர்கிறான் ஆனால் மறுபடியும் புலன்கள் அவனைக் கீழே இழுக்கின்றன. மறுபடியும் அவன் உலகின் இனிப்புகசப்புப் பழங்களை முன்போலவே தின்னத் தொடங்குகிறான் மீண்டும் வருகிறது ஒரு பேரடி. அவனது இதயம் திறக்கிறது, தெய்வீக பேரொளி அங்கே நிறைகிறது இவ்வாறு அவன் மெள்ளமெள்ள இறைவனை நெருங்குகிறான். நெருங்க நெருங்க பழைய அவன் கரையத் தொடங்குகிறான் . போதிய அளவு அருகில் வரும்போது தானே அந்த இறைவன் என்பதை உணர்கிறான் பிரபஞ்சத்தின் உயிர் என்றும் அணுவிலும் சூரியர்களிலும் சந்திரர்களிலும் இருப்பவன் என்றும் உனக்கு நான் கூறிய அதே கடவுள் வாழ்க்கைக்கும் ஆதாரமாக உள்ளார். அவர் நமது அந்தராத்மா இன்னும் சொல்லப்போனால் நீயே அது என்று முழங்குகிறான்.

ஞானயோகம் போதிப்பது இதைத்தான் மனிதன் அடிப்படையில் தெய்வீகமானவன் என்று அது அவனுக்குக் கற்பிக்கிறது. நாம் ஒவ்வொருவருமே பூமியில் பிறந்துள்ள கடவுள்தான் என்று கூறி , வாழ்வின் உண்மை யான ஒருமையைக் காட்டுகிறது அது. நம் காலின் கீழ் ஊர்ந்து செல்லும் சாதாரணமான புழு முதல் பயபக்தி யோடும் ஆச்சரியத்தோடும் நாம் போற்றுகின்ற தெய்வங்கள் வரை எல்லோரும் ஒரு இறைவனின் வெளிப் பாடுகளே.

கடைசியாக இந்த எல்லா யோகங்களையும் நடைமுறையில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். வெறும் ஏட்டுப் படிப்பு எந்தப் பயனையும் தராது. முதலில் அவற்றைப் பற்றிக் கேட்க வேண்டும் பிறகு சிந்திக்க வேண்டும் அந்தச் சிந்தனைகளைப் பகுத்தறிவால் ஆராய வேண்டும் அவற்றை மனத்தில் பதிக்க வேண்டும் அவை நமது வாழ்க்கையுடன் ஒன்றிக் கலக்கும்வரை அவற்றைத் தியானிக்க வேண்டும் உணரவேண்டும் அதன்பிறகுசமயம் வெறும் கருத்துக் குவியலாகவோ கொள்கை களாகவோ, அறிவுபூர்வமான ஒப்புதலாகவோ மட்டும் இருக்காது. அது நமது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிடும் அறிவுபூர்வமான ஒப்புதலின் காரணமாக இன்று நாம் பல முட்டாள்தனமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம் நாளைக்கே அவற்றை மாற்றியும் விடுவோம். ஆனால் உண்மையான மத உணர்வு மாறுவதில்லை. சமயம் என்பது அனுபூதி ; பேச்சோ, கோட்பாடுகளோ , கொள்கைகளோ, அவை எவ்வளவு அழகாக இருந்தாலும் சமயம் ஆகாது. கேட்பதும் ஒப்புதலும் அல்ல, அதுவாகவே இருப்பதும் அதுவாகவே ஆவதும் தான் சமயம். நாம் நம்பும் பொருளாகவே நாம் மாறி விடுவதுதான் சமயம்.

6.இந்து சமயமும் ஸ்ரீராமகிருஷ்ணரும்;

சாஸ்திரம் என்ற சொல் முதலும் முடிவும் இல்லாத வேதங்களைக் குறிக்கிறது, அறநெறிகளை வேதங்கள் மட்டுமே போதிக்க முடியும்.

புராணங்கள் போன்ற பிற நூல்கள் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. வேதங்களை முரணின்றிப் பின் தொடரும் வரைதான் இந்த நூல்களை ஆதார நூல்களாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உண்மை இருவகைப்படும் 1, மனிதனின் ஐம்புலன்களால் உணரத்தக்கதும், அந்த அடிப்படையில் அனுமானித்து அறியக் கூடியதும், 2, புலனறிவுக்கு அப்பாற்பட்ட நுண் யோக சக்தியால் அறிவது.

முதல் வகையால் பெறும் அறிவு விஞ்ஞானம்; இரண்டாவது வகையால் கிடைக்கும் அறிவு வேதம் புலனறிவு கடந்த முதல்முடிவற்ற வேதங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்ற தொகுதி என்றும் இருப்பது ஆகும் . இறைவன் கூட இந்த உண்மைகளின் உதவியாலேயே பிரபஞ்சத்தைப் படைக்கிறார்,காக்கிறார், ஒடுக்குகிறார்.

புலனறிவு கடந்த இத்தகைய சக்தி யாரிடம் வெளிப்பட்டுள்ளதோ அவர்களே ரிஷிகள். இந்தச் சக்தியின் மூலம் அவர்கள் கண்ட புலனுணர்வு கடந்த உண்மைகளே வேதங்கள். இத்தகைய ரிஷித்துவம், அதாவது புலனறிவு கடந்த வேத உண்மைகளை நேருக்குநேர் காணும் ஆற்றலே உண்மையான சமயம். இந்த நிலைவாய்க்கப் பெறாதவரையில் ஒருவனுக்கு சமயம் என்பது வெறும் பொருளற்ற சொல் மதவாழ்வில் அவன் ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வேதங்கள் எந்தக் காலத்திலும் எந்த நாட்டினருக்கும் எல்லோருக்கும் பொருந்துவதாகும் . அதாவது அவை குறிப்பிட்ட இடத்திற்கோ, குறிப்பிட்ட காலத்திற்கோ, தனிமனிதனுக்கோ மட்டும் உரியவை அல்ல.

பிரபஞ்சம்தழுவிய மதத்தை விவரிப்பது வேதங்கள் மட்டுமே.

புலனறிவுக்கு அப்பாற்பட்ட உண்மையைப்பற்றிய காட்சிகள் நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் பிற நாட்டு சாஸ்திரங்களிலும் ஓரளவு காணப்படுகின்றன. ஆனால் ஆரியர்களின் நான்கு வேதங்கள்தான் காலத்தால் முந்தியவை மிகவும் முழுமையானவை திரித்துக் கூறாமல் தருபவை. எனவே உலக மத நூல்கள் அனைத்திலும் உயர்ந்த இடம் பெறத் தகுதி வாய்ந்தவை; உலகினர்அனைவரும் வணங்கத்தக்கவை; உலகின் அனைத்து மத நூல்களுக்கும் அறிவுபூர்வமான விளக்கம் தர வல்லவை.

ஆரியர் கண்ட இந்த வேதங்களில் முற்றிலும் உலகியல் விஷயங்கள், வரலாறு அல்லது பரம்பரையின் வெறும் தொகுப்புகள், கடமைகளுக்கான பலன்களை மட்டுமே கூறுகின்ற பகுதிகள் - இவை அல்லாத பகுதிகளே உண்மை வேதங்கள் என்பதை மனத்தில்கொள்ள வேண்டும்.

வேதங்கள் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஞானகாண்டம், கர்மகாண்டம். கர்மகாண்டம் கூறுகின்ற கிரியைகளும் பலன்களும் மாயைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தின் வரையறைக்கு உட்பட்டவை. எனவே அவை காலம் இடம் மனிதன் போன்ற நியதிகளுக்கு ஏற்ப மாறின, மாறுகின்றன, மாறும் கர்மகாண்ட அடிப்படையில் வகுக்கப்பட்டிருப்பதால் சமூக நீதிகளும் பழக்கவழக்கங்களும் மாறிவருகின்றன, இனியும் மாறும். அதுபோலவே உண்மையான சாஸ்திரங்களுக்கும் சான்றோர்களின் செயல்களுக்கும் முரண்படாத சிறு சமூகப் பழக்கவழக்கங்களும் நியதிகளும் ஏற்கப்படத் தக்கவை. ஆனால் சாஸ்திரங்களுக்கு சான்றோர்களுக்கும் முரணான பழக்கவழக்கங்களைக் குருட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு பின்பற்றியது ஆரிய இனத்தின் வீழ்ச்சிக்குரிய முக்கியக் காரணங்களுள் ஒன்றாகும்.

ஞானகாண்டம் அல்லது வேதாந்தம் ஒன்றே எல்லா காலத்திற்குமாக உள்ளது, யோகம், ஞானம், பக்தி தன்னலமற்ற தொண்டு ஆகியவற்றின் மூலம் மாயையைக் கடந்து முக்தி வழியில் மக்களை அழைத்துச் செல்ல வல்லது அதுவே. இதன் மதிப்பும் அத்தாட்சியும் காலம் இடம் மக்கள் ஆகிய வரையறைகளுக்கும் உட்படாதது எனவே மனித குலத்திற்குத் தேவையான பிரபஞ்சம் தழுவிய நிலையான மதத்தைத் தரவல்லது இது ஒன்றே.

கர்மகாண்ட வழிகளைப் பின்பற்றி மனு முதலான ரிஷிகள் வகுத்த சம்ஹிதைகள் முக்கியமாக காலம், இடம் மற்றும் மனிதர்களுக்கு ஏற்பச் சமூகநல விதிகளை வகுத்துக் காட்டின. புராணங்களும் பிறவும் அவதார புருஷர்களின் வரலாறு முதலானவற்றைப்பற்றி விவரிக்ககும் போது வேதாந்தத்தில் புதைந்து கிடந்த உண்மைகளை விளக்கின. அவற்றுள் ஒவ்வொன்றும் இறைவனின் எல்லையற்ற குணங்களில் ஒன்றையோ சிலவற்றையோ விலியுறுத்தின; மக்களுக்குப் போதித்தன.

கால வெள்ளத்தில் ஆரியரின் பரம்பரையினர் உண்மை லட்சியத்திலிருந்தும் அறநெறிகளிலிருந்தும் வீழ்ந்தார்கள் துறவு மனத்தை இழந்தார்கள் கண்மூடித்தனமான பழக்கங்களில் தோய்ந்து அறிவிழந்தார்கள் வீழ்ச்சியுற்றாற்கள்; ஆன்மீக லட்சியத்தின் ஓவ்வோர் அம்சத்தை வலியுறுத்தும் போதும் ஒன்றுக்கொன்று முரணானவை தோன்றும்இந்தப் புராணங்கள் போதிக்கின்ற வேதாந்த உண்மைகளை உய்த்துணரும் ஆற்றலற்றுப் போவனார்கள்.

இதனால் என்ன விளைந்தது? மதத்தின் நாடாகிய இந்தியா குழப்பக்குட்டை ஆயிற்று. நிலையான வேதமதமாகிய சனாதன தர்மம் சிதறியது. ஆன்மீக லட்சியத்தின் பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த சனாதன சமயம் பிளவுபட்டுப் பல்வேறு பிரிவுகளாகக் காட்சியளித்தது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்று பகை , பொறாமை, சகிப்பின்மை குறுகியபிரிவினைவாதம் ஆகிய நெருப்பிற்கு இரையாக அழிவதற்கு ஒன்றையொன்று முந்தின; உந்தின. பாரதத் திருநாட்டை அவை நரகமாக்கிவிட்டதுபோல் தோன்றியது.

இந்த நிலையில் இந்தியா இருந்தபோதுதான் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார். ஆரியர்களின் உண்மை சமயம் எது என்பதை வாழ்ந்து காட்டினார். காலங்காலமாக இருந்துவருகின்ற இந்துசமயம் பல் வேறு கிளைகளுடனும் விழுதுகளுடனும் படர்ந்து நாடு முழுவதும் விரிந்திருந்தாலும் அதன் உண்மை யான ஒருமை எங்கே உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார். எண்ணற்ற மதப் பிரிவுகளாலும், வெளிப்பார்வைக்கு முரண்பட்டவைபோல் தோன்றிய பல்வேறுபழக்கவழக்கங்களாலும் பிரிந்து நின்று, பூசலிட்டு நம் நாட்டு மக்களுக்குத் தவறான பாதையைக் காட்டி குழப்பத்திற்கு உள்ளாக்கி, பிற நாட்டினரின் ஏச்சுக்கும் நகைப்புக்கும் சமயம் இடமளித்து வந்த போது இதுவரை காலத்தின் கருவறைக்குள் மறைந்துவிட்டிருந்த உண்மை சமயம் எங்குள்ளது என்பதை எடுத்துக்காட்ட அவர் சனாதன தர்மத்தின் உருவாக அவதரித்தார்.

படைத்தல் காத்தல், ஒடுக்குதல் என்னும் முத்தொழில் புரிகின்ற இறைவனுக்குக் கருவியாக விளக்கு கின்ற வேத உண்மைகள் என்றென்றும் உள்ளவை என்பதையும், முற்றும் துறந்த ரிஷிகளின் உள்ளத்தில் அவை தாமே தோன்றும் என்பதையும் உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டி, சமயத்தைப் புனரமைப்பதற்கும் மத உண்மைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கும் அதைப் பரப்பவும் வேத வடிவினரான பகவான் தமது புதிய அவதாரத்தில் லௌகீகக் கல்வியைப் புறக் கணித்தார்.

வேதங்கள் அல்லது உண்மையான சமயத்தைப் பாதுகாக்கவும், அந்த உண்மையைப் பின்பற்றுகின்ற சான்றோர்களைக் காப்பாற்றவும் பகவான் மனித உருவில் மீண்டும்மீண்டும் தோன்றுவார். இந்தக் கோட்பாடு நமது புராணங்கள் மற்றும் அதுபோன்ற நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீழ்கின்ற அருவிநீரில் வேகம் தோன்றும் விழுந்தபின் எழும் அலையில் உயரம் தோன்றும். அவ்வாறே ஆரிய இனம் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்பு எழும் போதும் இறையருளால் குறைகள் நீங்கி ஆற்றல் மிக்கதாகிறது; மாண்புடன் விளங்குகிறது. இது வரலாறு காட்டுகின்ற ஒன்று.

வீழ்ச்சிக்குப் பிறகு எழுகின்ற ஒவ்வொரு முறையும் நமது சமுதாயம் மேன்மையுற்று விளங்குகிறது. அவ்வாறே கடவுளும் தமது அவதாரங்களுள் ஒன்றைவிட அடுத்ததில்தம்மை மேலும் மேலும் வெளிப்படுத்துகிறார்.

மீண்டும்மீண்டும் நமது நாடு வீழ்ந்ததுண்டு மீண்டும் மீண்டும் இறைவன் அவதரித்து நாட்டைப் புனரமைத்ததும் உண்டு.

ஆனால் இப்போது போல் இந்தப் புனித நாட்டை எந்தக் காலத்திலும் காரிருள் சூழ்ந்ததில்லை. இன்றைய வீழ்ச்சியைப் பார்க்கும் போது முன்னர் ஏற்பட்ட வீழ்ச்சிகள் எல்லாம் மிகச் சாதாரணமானவையே. நல்ல வேளையாக இந்த இருள் அனேகமாக நீங்கிவிட்டது.

ஆகவே இந்த வீழ்ச்சியின் பின்னர் தோன்றும் எழுச்சியைக் கடந்தகால எழுச்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை சூரியன் முன் தோன்றும் நட்சத்திரங்கள் போலவே காட்சியளிக்கும். இந்த எழுச்சியின் விளைவாக நிகழும் பேராற்றல்மிக்க செயல்களை கடந்தகால எழுச்சிகளுக்குப் பிறகு விளைந்த செயல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த காலத்தின் எழுச்சிகள் சிறுபிள்ளை விளையாட்டாகவே தோன்றும்.

அழிவற்ற சனாதன தர்மத்தின் லட்சியங்கள் எல்லாம் இன்றைய வீழ்ச்சியால் சிதறிக் கிடந்தன. காரணம் அவற்றை உணரும் ஆற்றலும் தகுதியும் உள்ளவர்கள் இல்லாததுதான் . அந்த சனாதன லட்சியங்களுள் சிலவற்றை இழந்துவிட்டோம். மற்றும் சில சிறு பிரிவினரிடையே ஒரளவு பாதுகாக்கப்
பட்டு வருகின்றன.

இப்போது தோன்றிவரும் புதிய ஆன்மீக எழுச்சியின் வேகம் ஆற்றல் மிக்கது. எனவே சிதறுண்டு கிடக்கும் லட்சியத்தை ஒருங்கிணைத்து, மீண்டும் புத்துயிரூட்டி மனிதர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்; இழந்தவற்றை மீண்டும் பெறுவார்கள் இத்தகைய மகோன்னதமான எதிர்காலத்தை அளிப்பதற்காகவே கருணைக் கடலாகிய எப்பெருமான் இக்காலத்தில் அவதரித்துள்ளார். இது சிதறிய லட்சியங்களை ஒருங்கிணைக்கும் அவதாரம், தெய்வீகம் முழு நிறைவு பெற்ற அவதாரம் ஆன்மீகத் துறையின் ஒவ்வோர் அம்சத்திற்கும் உயிரூட்டுகின்ற அவதாரம் முந்தைய அவதாரங்கள் எல்லாவற்றையும் விடப் பூரணப் பொலிவுடன் விளங்கும் அவதாரம்.

எனவே மகோன்னதமான இந்தப் புதிய யுகத்தின் உதய காலத்திலேயே மதப் பிரிவுகளிடையே ஒற்றுமை பிரகடனம் செய்யப்படுகிறது. மேன்மையான இந்தக் கருத்து சனாதன மதத்திலும் அதன் புனித நூல்களிலும் ஏற்கனவே உள்ளது , ஆனால் மறைந்துள்ளது. இப்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு மனித குலத்தினருக்கு சங்கநாதமென முழங்கப்படுகிறது.

இந்தப் புதிய நன்கொடை பொதுவாக உலகம் முழுவதும் சிறப்பாக இந்தியாவிற்கும் நலன்தர வல்லது இதனை உணர்த்தியவர் பகவான் ஸ்ரீராமகிருஷணர். கடந்த காலங்களில் சமயத்தில் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்த மகான்களின் ஒரு நிறைவாகத் தோன்றிய அவதார புருஷர் இவர். ஓ மனிதா இதை நம்பு உள்ளத்தில் இதை ஊன்றச் செய்.

மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒருமுறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே மனிதா, இறந்துபோன பழங்கதையை வணங்காதே . வா இன்று வாழ்கின்ற நிகழ்காலத்தை வணங்கு. சென்றதை நினைத்துப் புலம்பாதே, இன்றுள்ளதைக் கண்டு அதில் முயற்சியுடன் ஈடுபடு. அழிந்துபோன கரடுமுரடான பாதையில் சென்று உன் சக்தியை வீணாக்காதே உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட, நன்கு வகுக்கப்பட்ட ராஜ பாதையில் செல். வா, உன்னை அழைக்கிறோம். அறிவுள்ளவன் அறிந்துகொள்ளட்டும்.

எடுத்த எடுப்பிலேயே உலகின் நான்கு திசைகளிலும் எதிரொலி முழங்கச் செய்த அந்த மாபெரும் சக்தியை நினை அந்தப் பரிபூரண சக்தியின் வெளிப்பாட்டை உன் உள்ளத்தில் அமர்த்து. அடிமைகளுக்கே உரிய குணங்களான பொறாமை, வெறுப்பு, பலவீனம் , சந்தேகம் இவற்றை ஒழி; தூக்கி எறி. புதிய வரப்பிரசாதமாகிய இந்த யுகத்தை மாற்றியமைக்கும் சக்கரத்தைச் சுழற்றுவோம் வா. வந்து இதில் பங்குகொள்.

எம்பெருமானின் குழந்தைகள் நாம் தொண்டர்கள் நாம் அவரது அவதாரப் பணிக்கு .உதவுபவர்கள் நாம் என்ற நம்பிக்கை உன் உள்ளத்தில் ஆழப் பதியட்டும் அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேலை செய்ய புறப்படு.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,