இந்திய ரிஷிகள்(பகுதி-3)


இந்திய ரிஷிகள்(பகுதி-3)
தற்காலத்தில் சிலர் நினைப்பதை போல் மதமும் மதப் பிரிவுகளும் பணம் சம்பாதிப்பதற்காக ஏதோ சில அயோக்கியர்களாலும் தீயவர்களாலும் உருவாக்கப்பட்டவை அல்ல. அவர்களின் கூற்று எவ்வளவுதான் சரியானது போல் தோன்றினாலும் அது உண்மையல்ல. அவை அதற்காக உருவாக்கப்பட்டவை அல்லவே அல்ல. மனித ஆன்மாவின் தேவை மற்றும் அவசியத்தின் காரணமாக உருவானவை அவை. பல்வேறு வகையான மனித மனங்களின் ஆவலையும் தாகத்தையும் திருப்திப்படுத்தவே அவையெல்லாம் உள்ளன. அவைகளுக்கு எதிராக நீங்கள் பிராச்சாரம் செய்ய வேண்டியதில்லை. தேவை நிறைவேறியவுடன், அந்தக் தேவையுடன் சேர்ந்து இவையும் மறைந்துவிடும். ஆனால் அதன் தேவைநிறைவேறாதிருக்குமானால், , நீங்கள் எவ்வளவு எதிர்ப் பிரச்சாரம் செய்தாலும் சரி, எவ்வளவு குறை கூறினாலும் சரி, அவை அனைத்தையும் மீறி மதங்களும் மதப் பிரிவுகளும் சரி, அவை அனைத்தையும் மீறி மதங்களும் மதப் பிரிவுகளும் இருந்தே தீரும். உருவ வழிபாட்டை எதிர்த்து நீங்கள் வாளை உருவாலாம். துப்பாக்கியைக் கொண்டு வரலாம், உலகையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கலாம். ஆனால் உருவ வழிபாட்டிற்கான தேவை இருக்கும் வரை அது இருக்கத்தான் செய்யும்! இந்த உருவங்களும் மதத்தின் மற்ற எல்லா படிகளும் இருக்கவே செய்யும். அவை ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதசத்திலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

துயரம் தோய்ந்த காலம் ஒன்று இதன் பிறகு இந்திய வரலாற்றில் வருகிறது. பல்வேறு மதப் பிரிவுகளின் மோதல்களின் தூரத்து ஒலி கீதையில் கேட்கிறது அவைகளைச் சமரசப்படுத்த பகவான் வருகிறார்; சமரசத்தின் சிறந்த போதகரான, சமரசத்தின் மிகச் சிறந்த பிரச்சாகரான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார், நூலில் மணிகள்போல் எல்லாம் என்னில் கோர்க்கப்பட்டுள்ளன என்கிறார் அவர்.

உட்பிரிவுகளுக்கு இடையேயான சண்டை சச்சரவுகள் ஏற்கனவே இருந்தாலும், அதற்குமுன் சமரசமும் அமைதியும் நிலவிய ஒரு காலம் இருந்திருக்க வேண்டும். பின்னர் மதத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஜாதியின் அடிப்படையிலும் பூசல்கள் வெடித்தன. நம் சமூகத்தின் வலிமை வாய்ந்த இரண்டு பிரிவினரான அரசர் மற்றும் புரோகிதர்களுக்கிடையே சண்டை தோன்றியது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இத்தகைய போராட்ட மும் குழப்பமும் இந்தியாவை மூழ்கடித்தன. அப்போதும் மகத்தான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்தான் நம் சாக்கிய முனிவரான கௌதம் புத்தர்.

புத்தரது போதனைகளையும் பிரச்சாரங்களையும் நீங்கள் அறிவீர்கள். நாம் அவரைக் கடவுளின் அவதாரமாக வழிபடுகிறோம். நல்லொழுக்கத்தைப் போதித்தவர்களுள் அவர் மிகச் சிறந்தவரும் மிகுந்த தைரியம் வாய்ந்தவரும் ஆவார். ஈடினையற்ற கர்மயோகி அவர். தமது போதனைகளைச் செயல் முறைப்படுத்திக் காட்டுவதற்காக தமக்குத் தாமே ஒரு சீடராக, அந்தக் கிருஷ்ணரே மறுபடியும் தோன்றியது போலிருந்தது புத்தரின் வாழ்க்கை. இந்த தர்மம் மிகச் சிறிய அளவு பின்பற்றப்பட்டாலும் அது பெரிய பயத்திலிருந்து காப்பாற்றும், பெண்கள், வைசியர்கள், ஏன் சூத்திரர்கள் கூட மிக உயர்ந்த லட்சியத்தை அடைய முடியும் என்று கீதையில் கேட்ட அதே குரல் மீண்டும் ஒலித்தது.

எல்லோருடைய தளைகளையும் உடைத்தெறிந்து, எல்லோருடைய சங்கிலிகளையும் அறுத்தெறிந்து லட்சியத்தை அடைய அனைவருக்கும் உரிமை உண்டென முழங்கியவாறு புறப்படுகின்றன கீதையின் வாசகங்கள்; கடவுள் தூயவர் சமநோக்கு உடையவர் எனவே சமத்துவத்தில் நிலைபெற்றவர்கள் இந்தப் பிறவியில் சம்சாரவாழ்வை வென்றுவிடுகிறார்கள். அவர்கள் இறைவனிலேயே வாழ்வதாக கூறப்படுகிறது இறைவன் எங்கும் சமமாக நிறைந்திருப்பதைக் காண்பதால், அந்த ரிஷி தம்மைத் தாமே துன்புறுத்துவதில்லை. இவ்வாறு அவர் பரமபதத்தை அடைகிறார் என்று இடியோசைபோல் கேட்கிறது கிருஷ்ணரின் குரல்.

இந்தப் போதனைக்கு ஒரு நடமாடும் உதாரணம் போலவும், இந்தப் போதனையின் ஒரு பகுதியையாவது செயல்முறையில் காண்பிப்பது போலவும் இதனைக் கூறிய கிருஷ்ணரே இன்னொரு வடிவில் வந்தார் . அவரே கௌதம புத்தர் அவர் ஏழைகளுக்கும் துன்பப்படுவர்களுக்கும் போதனைகள் செய்தவர் ஏழைகளின் உள்ளங்களை எட்டுவதற்காக தேவமொழியான சம்ஸ்கிருதத்தை விட்டுவிட்டு மக்கள் பேசிவந்ந மொழியிலேயே பேசியவர் பிச்சைக்காரர்களுடனும் ஏழைகளுடனும் தாழ்ந்தவர்களுடனும் வாழ்வதற்காக அரச சிம்மாசனத்தையே துறந்தவர். தாழ்த்தப்பட்டோரையும் மார்போடு அணைத்துக்கொண்ட இரண்டாவது ராமர் அவர்.

அவரது மகத்தான செயல்களையும் மகோன்னத குணங்களையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவருடைய செயலில் ஒரு பெரிய குறைபாடு இருந்தது. அதன் காரணமாக இன்றும் நாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்காக புத்தரைச் சிறிதும் குறை கூற முடியாது. அவர் தூயவர்,உயர்ந்தவர் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆரியர்களுடன் ஒட்டிக் கொண்ட நாகரீகமற்ற, பண்பாடற்ற பல்வேறு இன மக்களால் அவரது உயர்ந்த லட்சியங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.பல்வேறான மூடநம்பிக்கைகளோடும் அவருக்கத்தக்க வழிபாடுகளோடும்இவர்கள் ஆரிய இனத்தில் நுழைய தொடங்கினார்கள். சில காலம்வரை ஏதோ பண்பட்டவர்கள் போல்தான் தோன்றினார்கள். ஆனால் ஒரு நூற்றாண்டு கழியும் முன்னரே தங்கள் முன்னோர்கள் வழிபட்ட பாம்புகளையும் பேய்களையும், மற்றவைகளையும் வழிபாட்டில் புகுத்தினார்கள். விளைவு? இந்தியா முழுவதும் இழிநிலையை அடைந்து மூட நம்பிக்கைகளின் மொத்த இருப்பிடமாக மாறியது.

மிருக பலிகளுக்கு எதிராக ஏற்பட்ட கோபத்தில் முற்கால பௌத்தர்கள் வேதங்களில் கூறப்பட்ட யாகங்களை வன்மையாகக் கண்டித்தனர். இந்த யாகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்பட்டு வந்தது. ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கும், வழிபாட்டிற்கு வேண்டியதெல்லாம் அவ்வளவுதான் இந்த யாகங்கள் நிறுத்தப்பட்டன. அவற்றின் இடத்தில் பிரம்மாண்டமான கோயில்களும், விஸ்தாரமான சடங்குகளும் நுழைந்தன; ஆடம்பரமான இன்றைய இந்தியாவில் நீங்கள் பார்க்கிறீர்கள். பிராமணர்கள் செய்து வந்த உருவ வழிபாட்டை ஒடுக்கியவர் புத்தர் என்று சிலர் தற்காலத்தில் எழுதுகிறார்கள். அவற்றைப் படிக்கும் போது எனக்குச் சிரிப்புத்தான்வருகிறது.ஞூவர்கள் இன்னும் சற்று படித்த பின் நூல்கள் எழுதியிருக்கலாம் . இந்தியாவில் பிராமணத்துவத்தையும் உருவ வழிபாட்டையும் உருவாக்கியதே புத்த மதம்தான் என்பதை பாவம் அவர்கள் சிறிதும் அறியவில்லை.

ரஷ்யர் ஒருவர் எழுதிய நூல் ஒன்றை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் படித்தேன். ஏசுவின் வாழ்க்கையைப் பற்றி வினோதமானதோர் உண்மையை தாம் கண்டு பிடித்திருப்பதாக அவர் அதில் உரிமை கொண்டாடியிருந்தார் ஏசு புரியிலுள்ள ஜகன்னாதர் கோயிலுக்கு, அங்குள்ள பிராமணர்களிடம் படிக்கச் சென்றதாகவும், ஆனால் அவர்களின் குறுகிய மனப்பான்மையையும் உருவ வழிபாட்டையும் கண்டு வெறுப்படைந்து பின்னர் திபெத்திற்குச் சென்று லாமாக்களிடம் படித்து நிறைவு பெற்று நாடு திரும்பியதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்கழுழுக்கப் பொய் என்பதை அவரது கூற்றே நிரூபித்துவிடும். இந்திய வரலாற்றை அறிந்த யாருக்கும் இது தெரியும் ஏனெனில் புரிஜகன்னாதர் ஆலயம் பழைய புத்தர் கோயிலாகும் இது போன்ற கோயில்களை நாம் இந்துக் கோயில்களாக மாற்றினோம். இதுபோன்று இன்னும் பல விஷயங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. . இது ஜகன்னாதர் கோயில் விஷயம். மேலும், அப்போது ஒரு பிராமணன் கூட அங்கே கிடையாது. எனினும் பிராமணர்களுடன் படிப்பதற்காக ஏசு சென்றாராம். அப்படிதான் கூறுகிறார் நமது ரஷ்ய வரலாற்று மேதை!

விலங்குகளிடம் கூட இரக்கம் காட்டவேண்டும் என்று உபதேசித்தும், நல்லொழுக்கத்தைப் போதிக்கும் மகத்தான மதமாக இருந்தும் நிலையான ஆன்மா ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி நுட்பமான ஆராய்ச்சிகள் செய்தும் புத்த மதம் சிதைந்து சின்னா பின்னமாகிவிட்டது. அதனுடைய அழிவும் மிகக் கொடூரமாக உள்ளது. பௌத்த மதத்தின் எழுச்சியால் நேர்ந்த விபரீதங்களை விவரிப்பதற்கு எனக்கு நேரமோ விருப்பமோ இல்லை. மிகக் கொடூரமான சடங்குகளும் எந்த மனிதனின் கைகளும் இதுவரை எழுதாத, எந்த மூளையும் இதுவரை சிந்திக்காக, மிகப் பயங்கரமான மிக ஆபாசமான நூல்களும் மதத்தின் பெயரால் இது வரை செய்யப்பட்டவற்றுள் சகிக்க முடியாத அளவுக்கு மோசமான சடங்குகளும் எல்லாமே வீழ்ச்சியுற்ற புத்த மதத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டவைதான்.

ஆனால் இந்தியா வாழ்ந்தாக வேண்டும் அதனால் இறைவனின் ஆற்றல் மறுபடியும் பூமிக்கு வந்தது. தர்மம் குன்றும் போதெல்லாம் நான் வருவேன் என்று அறிவித்த பகவான் மறுபடியும் வந்தார். இந்த முறை அவதாரம்தெற்கில் நிகழ்ந்தது. ஆம் மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயத்திற்குள் அந்த பிராமண இளைஞர் தமது நூல்கள் அனைத்தையும் எழுதி முடிந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதினாறு வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய நவீன உலகின் விந்தைகளாக உள்ளன, அந்த இளைஞரும் அதுபோலவே ஆச்சரியமானவர். இந்தியாவின் அப்பழுக்கற்ற தூய்மையை மீண்டும் கொண்டுவர அவர் விரும்பினார் அது அவ்வளவு சாதாரணமான வேலையா என்ன! சற்று எண்ணிப் பாருங்கள் அன்று இந்தியா இருந்த கோலத்தைப்பற்றி உங்களுக்குச் சிறிது கூறினேன் இப்போது நீங்கள் சீர்திருத்த முயல்கிறீர்களே, அந்தக் கொடுமைகள் எல்லாம் அந்தக் காலத்தின் இழிநிலையிலிருந்து தோன்றியவைதாம்.

தார்த்தர்களும் பலுசிஸ்தானியர்களும் மனித சமுதாயத்தின் மற்ற எல்லா காட்டுமிராண்டி இனங்களும் இந்தியாவிற்கு வந்து பௌத்தர்கள் ஆனார்கள், நம் மோடு கலந்தார்கள். அத்துடன் தங்கள் நாட்டுப் பழக்க வழக்கங்களையும் கொண்டுவந்து நமது தேசிய வாழ்வோடு கலந்தார்கள் விளைவு ? நமது நாடு மிக பயங்கரமான மிருகத்தனமான பழக்க வழக்கங்களால் நிறைந்தது. பௌத்தர்களிடமிருந்து அந்த இளைஞர் சங்கரர் பெற்ற பரம்பரைச் சொத்து இதுதான் . அவருடைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் முழுவேலையும் புத்த மதம் ஏற்படுத்திய சீரழிவை வேதாந்தத்தின் மூலம் நீக்குவதாகவே இருக்கிறது. அந்த வேலைநடந்து கொண்ட இருக்கிறது இன்னும் முடியவில்லை. சங்கரர் தலைசிறந்த தத்துவ ஞானி புத்த மதத்தின் உண்மையான சாரமும் வேதாந்தமும் அதிகமாக வேறுபடவில்லை; ஆனால் சீடர்கள் குருவைப் புரிந்து கொள்ளாமல் தங்களை தாங்களே இழிநிலைக்கு இட்டுச் சென்றார்கள், ஆன்மா மற்றும் கடவுளின் இருப்பை மறுத்து நாத்திகர்கள் ஆனார்கள் என்பதையெல்லாம் சங்கரர் காட்டினார். சங்கரர் இதனைத் தெளிவுபடுத்தியதும் பௌத்தர்கள் பழைய மதத்திற்கு திரும்பினார்கள். ஆனால் அவர்கள் அதுவரை பின்பற்றி வந்த பல்வேறு வழக்கங்கள் இருக்கின்றனவே அவற்றை என்ன செய்வது!

சங்கரருக்குப் பிறகு மிகச் சிறந்த ராமானுஜர் தோன்றினார். சங்கரரின் அறிவு பெரியது. ஆனால் அவரது இதயம் அவ்வளவு பரந்ததாக இல்லையோ என்று அஞ்சுகிறேன். ராமானுஜரின் இதயம் மிகவும் விசாலமானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் உருகினார் அவர்களிடம் இரக்கம் கொண்டார். காலப்போக்கில் சேர்ந்துவிட்ட சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் ஒன்று திரட்டினார், தம்மால் முடிந்த அளவிற்கு அவற்றைத் தூய்மைப்படுத்தினார். யாருக்கு அவற்றின் தேவை கட்டாயமாக இருந்ததோ, அவர்களுக்காகப் புதிய சடங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் அறிமுகம் செய்தார். அதேவேளையில் மிகவுயர்ந்த ஆன்மீக வழிபாட்டை பிராமணர் முதல் தாழ்ந்த ஜாதியினர்வரை அனைவருக்கும் உரிமை ஆக்கினார். இது ராமானுஜரின் பணி.

ராமானுஜரின் பணி மெள்ளமெள்ளப் பரந்து வட இந்தியர்களின் நுழைந்து . நெடுங்காலத்திற்குப் பிறகு முகமதியர்களின் ஆட்சிக் காலகட்டத்தில் அங்குள்ள சில தலைவர்கள் அதனை ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார்கள், அவர்களுள் நமக்குச் சமீப காலத்தில் தோன்றிய தலைசிறந்த ஒருவர் சைதன்யர்.

ஆன்மீகத்தின் கதவுகள்அனைவருக்கும் திறந்து விடப்பட்டது. இது ராமானுஜரின் காலத்திலிருந்து நாம் காணும் ஒரு சிறப்பு அம்சமாகும். ராமானுஜருக்குப் பின் வந்த அதேபோல் சங்கரருக்கு முன் வாழ்ந்த எல்லா மகான்களும் அதையே முழங்கினார். சங்கரர் மட்டும் ஏன் இதற்கு விதிவிலக்காக இருந்தாகக் கூறப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் விதிவிலக்காக இருந்தார் என்பதைக் காட்டுகின்ற எந்தப் பகுதியும் அவரது எழுத்துக்களில் இல்லை புத்தரின் போதனைகளுக்கு நிகழ்ந்த கதிகான் சங்கரரின் வாழ்க்கையிலும் நடந்திருக்க வேண்டும். சங்கரரை ஒரு விதிவிலக்காகக் கருதுவதற்கு அவரது எழுத்துக்கள் காரணமாக இருக்கவில்லை அவரது சீடர்களால் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாததே காரணம் என்று தோன்றுகிறது.

வட இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷியாகிய சைதன்யர் கோபியர் கொண்ட அன்புப் பித்தின் உருவாதகத் திகழ்ந்தார் அவர் ஒரு குடும்பத்தில் பிறந்தார் தர்க்கப் பேராசிரியராக இருந்து பிறருடன் வாதம் செய்து வெற்றிகள்பல பெற்றார் ஏனெனில் இதுதான் வாழ்க்கையின் மிகச் சிறந்த லட்சியம் என்று சிறுவயதிலிருந்தே அவர் போதிக்கப்பட்டிருந்தார். ஒரு மகானின் கருணையால் இந்த மனிதரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. வாதப் பிரதிவாதங்களையும் முற்றிலுமாக மாறியது. வாதப் பிரதிவாதங்களையும் சண்டைகளையும் தர்க்கப் பேராசிரியர் பதவியையும் துறந்து, பக்தியைப் போதித்த மிகச் சிறந்த ஆச்சாரியர்களுள் ஒருவரானார் இந்த பக்திப் பித்தரான சைதன்யர். அவரது பக்தி வெள்ளம் வங்கம் முழுவதும் பாய்ந்து எல்லா மக்களுக்கும் ஆறுதலைத் தந்தது அவரது அன்பிற்கு எல்லையே இருக்கவில்லை . மகான் பாவி இந்து முஸ்லீம் தூய்மையானவர் தூய்மையற்றவர் விபச்சாரிகள் என்று எல்லோருமே அவரது அன்பிற்கும் கருணைக்கும் பாத்திரமாயினர். காலப்போக்கில் எல்லாமே இழிநிலையை நோக்கித்தானே செல்லும்! சைதன்யரின் நெறியும் அந்தக் கதிக்குப் பெரிதும் உள்ளாகியது. ஆனால் இன்றும் அந்த நெறி ஏழைகள் தாழ்த்தப்பட்டோர் கீழ் ஜாதியினர், பலவீனர் சமுதாயத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டடோர் என்று அனைவருக்கும் புகலிடமாக இருக்கிறது.

உள்ளதை உள்ளபடிச் சொல்ல வேண்டுமானால் ஒரு விஷயத்தை நான் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும்; ஞான நெறியினரிடம் மத விஷயங்களில் அற்புதமான தாராளத்தைக் காண்கிறோம் இந்தியாவலுள்ள மதப் பிரிவுகளுக்கு இடையில் உண்மையிலேயே வேறுபாடு உள்ளது என்று சங்கரரைப் பின்பற்றுகின்ற யாரும் சொல்வதில்லை ஆனால் அவர் ஜாதி விஷயங்களில் கணக்கற்ற விதிவிலக்குகளைக் கூறுகிறார். வைணவ ஆச்சாரியர்கள் ஒவ்வொருவரும் ஜாதி விஷயங்களில் தாராளத்தைக் காட்டுகிறார்கள் ஆனால் மத விஷயங்களில் எத்தனையோ விதிவிலக்குகளைக் கூறுகிறார்கள்.

ஒருவரிடமும் கூர்த்த அறிவு மற்றவரிடம் பரந்த இதயம் இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்டஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும் , சைதன்யரின் எல்லையற்றுப் பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே ஆற்றல், ஒரேகடவுளைக் காண்கின்ற ஒவ்வோர் உயிரிலும் இறைவனைக் காணக்கூடிய ஏழைகள் பலவீனர்கள் கீழ்ஜாதியினர் தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும்இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம் கொண்ட அதேவேளையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியிலும் ஒன்றோடொன்றும் போராடிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகள் அனைத்தையும் சமரசப்படுத்தி அறிவுக்கும் உணர்ச்சிக்கு சம இடம் கொடுக்கின்ற உலகம்தழுவிய மதம் ஒன்றை உருவாக்குவதற்குரிய சிந்தனை வளம் மிக்க ஒருவர் பிறப்பதற்குரிய காலம் வந்தது.

அத்தகைய மனிதர் பிறந்தார். அவரது திருவடிகளின் கீழ் பல ஆண்டுகள் அமர்வதற்கான பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒருவர் பிறப்பதற்கான தேவை ஏற்பட்டது, காலமும் கனிந்தது அவர் பிறந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த நகரம் மேலை நாட்டுச் சிந்தனைகளால் நிறைந்திருந்ததோ எந்த நகரம் நாட்டுக் கருத்துக்களின் பின்னால் பைத்தியமாக ஓடிக் கொண்டிருந்ததோ, எந்த நகரம் இந்தியாவிலுள்ள மற்றெல்லா நகரங்களையும் விட ஐரோப்பியமாகி விட்டிருந்ததோ அந்த நகருக்கு அருகிலேயே ஓரிடத்தில் அவரது வாழ்க்கைப் பணியெல்லாம் நடைபெற்றது. அவருக்கு நூலறிவு எதுவும் இல்லை. இந்த மாபெரும் அறிஞருக்குத் தமது சொந்தப் பெயரைக்கூட எழுதத் தெரியாது. ஆனால் கல்வி மிக்க நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அவரிடம் அறிவுக் களஞ்சியத்தையே கண்டனர் இந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விசித்தரமான மனிதர் அது ஒரு பெரிய கதை அதைப் பற்றிச் சொல்வதற்கு இன்றிரவு நேரமில்லை அவர் இந்திய ரிஷி அவர், அவரது உபதேசங்களே இந்தக் காலத்திற்கு மிகவும் பயன்தருபவை என்பதை மட்டும் இப்போது கூறிக் கொள்ள விரும்புகிறேன். அவருக்குப் பின்னணியில் செயல்பட்டது. தெய்வீக ஆற்றல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . யாருக்கும் தெரியாத யாரும் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்தில் ஏழை அர்ச்சகராகப் பிறந்த அவர் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கான மக்களால் வழிபடப்படுகிறார், நாளை பல்லாயிரக்கணக்கான நபர்களால் வழிபடப்படுவார். இறைவனின் திட்டங்களை யார் அறிவார் என் சகோதரர்களே! விதியின் கைகள் உங்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னால் நீங்கள் உண்மையில் குருடர்கள், பிறவிக் குருடர்கள் நேரம் கிடைத்து வாய்ப்பும் கிடைக்குமானால் அவரைப்பற்றி மேலும் பேசுவேன் . ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்களிடம் நான் உண்மையான ஏதாவது ஒரு வார்த்தை பேசி இருந்தேனானால் அது அவருடையது, அவருடையது மட்டுமே ;உண்மையில்லாத தவறான மனித இனத்திற்கு நன்மையைத் தராத எதையாவது நான் பேசியிருந்தால், அவையெல்லாம் என்னுடையவை. அதற்குப் பொறுப்பாளி நானே.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,