இந்து சமயம் பகுதி-6


இந்து சமயம் பகுதி-6
ஆன்மாவிற்கு இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய கருத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆன்மா என்றென்றைக்கும் இறைவனிலிருந்து தனித்தே நிற்பதாக ஒரு பிரிவினர் கூறலாம். மற்றொரு பிரிவினரின் கருத்துப்படி இறைவன் என்ற எல்லையற்ற நெருப்புப் பிழம்பில் ஆன்மா ஒருபொறி என்பதாக இருக்கலாம். இன்னொரு பிரிவினர் ஆன்மாவை எல்லையற்ற அந்த ஒன்றுடன் இணைந்ததாகக் கொள்ளலாம். ஆனால் ஆன்மா என்பது வரையறையற்றது, படைக்கப்படாதது, அதனால் அது மரணமில்லாதது பல்வேறு உடம்புகளைத் தரித்து மனித உடம்பில் நிறைநிலையை அடையும்வரை பரிணமித்துக் கொண்ட இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை நாம் விடாதிருக்கும்வரை இந்த வேறுபட்ட விளக்கங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த ஆன்மக் கோட்பாட்டிலும் நாம் அனைவரும் ஒன்று படுகிறோம்.

அடுத்து வருவதுதான் மிகவும் வேறுபட்டது, மகோன்னதமானது, ஆன்மீக உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்திலும் மிகவும் அற்புதமான கருத்து. உங்களுள் மேலைநாட்டுச் சிந்தனைகளைப் படித்துள்ளவர்கள், மேலை மற்றும் கீழைச் சிந்தனைகளை ஒரே வேறுபடுத்திக் காட்டுகின்ற ஒரு முக்கிய வேறுபாட்டை கண்டிருப்பீர்கள். நாம் சாக்தர்களோ, சௌரர்களோ, வைணவர்களோ, அல்லது பௌத்தர்களோ சமணர்களோ, யாராக இருந்தாலும் ஆன்மா இயல்பாகவே தூய்மையானது, முழுமையானது சக்தியிலும் ஆனந்தத்திலும் எல்லையற்றது என்ற கருத்தை இந்தியாவில் உள்ள அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம். துவைதிகளின் கருத்துப்படி ஆன்மாவின் இந்த இயல்பான பேரின்பம் முற்பிறவிகளின் தீவினையால் சுருங்கிப் போகிறது; இறையருளால் மீண்டும் விரிவுற்று நிறைநிலையை அடைகிறது அத்வைதிகளின் கருத்துப்படி ஆன்மா சுருங்குகிறது என்பது கூட ஒருவகையில் தவறுதான்; மாயை என்னும் திரைதான் ஆன்மா தன் ஆற்றல்களை இழந்துவிட்டதாக நம்மை நினைக்கச் செய்கிறது. ஆனால் அங்கே எல்லா ஆற்றலும் முழுமையாக வெளிப்பட்டே நிற்கிறது.

வேறுபாடுகளை இப்படியிருக்க நாம் மையக்கருத்திற்கு வருகிறோம். மேலை மற்றும் கீழை நாட்டுச் சிந்தனைகள் ஒருங்கிணைய முடியாத ஒரு வேறு பாட்டைக் காண்கிறோம். சிறந்தவை மற்றும் நல்லவை அனைத்தையும் கீழை நாட்டுச் சிந்தனை அகத்தில் தேடுகிறது. நாம் வழிபடும்போது கண்களை மூடி நமக்குள்தான் கடவுளைக் காண முயல்கிறோம். மேலை நாட்டினர் தங்கள் கடவுளை வெளியில் தேடுகிறார்கள். மேலை நாட்டினரின் சமய நூல்கள் புறத்திலிருந்து அவர்கள் பெற்ற கருத்துக்களால் உருவாக்கப்பட்டவை நமது நூல்களோ உள்ளிருந்து எழுந்த கருத்துக்களால் உருவானவை; மூச்சுக் காற்றைப் போல் இறைவனின் மூச்சாக வெளிப்பட்டவை, மந்த்ர த்ரஷ்டா க்களாகிய ரிஷிகளின் இதயங்களிலிருந்து எழுந்தவையே நமது நூல்கள்.


என் நண்பர்களே, என் சகோதரர்களோ நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு மகத்தான கருத்து இருக்கிறது . எதிர்காலத்தில் இது நாம் மிகவும் வலியுறுத்த வேண்டிய கருத்தாகும். இந்தக் கருத்தில் நான் அவ்வளவு உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறேன். இதை நீங்கள் மனத்தில்கொள்ள வேண்டும் என்று உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தான் எதற்கும் உபயோகமற்றவன் என்று இரவு பகலாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து எந்த நன்மையும் பிறக்காது. நான் வேதனைக்கு குரியவன், கீழானவன் எதற்கும் பயனற்றவன் என்று இரவும்பகலாக நினைத்துக்கொண்டிருந்தால், அவன் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவனாகத் தான் ஆகிறான். ஆம் என்னால் எதுவும் முடியும் என்று நீங்கள் நினைத்தால் அத்தகைய ஒருவர் ஆவீர்கள். மாறாக நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கூறியவாறு அல்லும்பகலும் அதையே உருப்போட்டுக் கொண்டிருந்தால் அப்படியே எதற்கும் பயனற்றுப் போய்விடுவீர்கள். நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தொரு பேருண்மை இது. நாம் எல்லாம் வல்ல இறைவனின் பிள்ளைகள். எல்லையற்றதான தெய்வீக நெருப்புப் பிழம்பின் பொறிகள் நாம் நாம் எப்படி பூஜ்யங்கள் ஆக முடியும்?நாமே எல்லாம். எதைச் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம், நம்மால் எதையும் செய்ய முடியும். மனிதன் எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்.

இத்தகைய தன்னம்பிக்கை நம் முன்னேர்களின் இதயங்களில் இருந்தது. அவர்களின் இந்தத் தன்னம் பிக்கைதான் அடிப்படை சக்தியாக இருந்து அவர்களை நாகரீகத்தின் அணிவகுப்பில் மேலும் மேலும் முன்னணியில் உந்திக் தள்ளியது. இப்போது இழிவு நேர்ந்திருக்கிறது என்றால் வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது என்றால், நம் மக்கள் தங்களிடம் இந்தத் தன்னம்பிக்கையை என்று இழந்தார்களோ அன்றுதான் இந்த வீழ்ச்சி ஆரம்பமாகியது. இந்த வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ஒருவன் தன்னிடம் நம்பிக்கை இழக்கிறான் என்றால் இறைவனிடமே நம்பிக்கை இழக்கிறான் என்பது பொருள். உங்களுக்கு உள்ளும் உங்கள் மூலமாகவும் செயல்படுகின்ற அந்த எல்லையற்ற சக்தியைநீங்கள் நம்புகிறீர்களா? எங்கும் நிறைந்துள்ள, அந்தர்யாமியான ஒவ்வோர் அணுவினுள்ளும் இருக்கின்ற சம்ஸ்கிருத வார்த்தை சுட்டுவதுபோல் ஓத-ப்ரோத மாக அதாவது ஊடும்பாவும் போல் உங்கள் உடம்பிலும் மனத்திலும் ஆன்மாவிலும் ஊடுருவி நிற்கின்றதான அந்தச் சக்தியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் நீங்கள் எப்படி நம்பிக்கை இழக்க முடியும்? நான் சிறிய தொரு நீர்க்குமிழியாக இருக்கலாம், நீங்கள் மலையளவு உயரமான அலையாக இருக்கலாம், அதைப் பொருட்படுத்த வேண்டாம் எனக்கும் உங்களுக்கும் பின்னணியாக அந்த எல்லையற்ற கடல்தான் இருக்கிறது ; வாழ்க்கை ஆற்றல், ஆன்மீகம் - இவற்றின் அந்த எல்லையற்ற பெருங்கடல் தான் உங்கதளைப்போல் எனக்கும் அடிப்படையாக இருக்கிறது. நான் ஏற்கனவே என்னை அதில் இணைத்துக் கொண்டுவிட்டேன் . நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்து வருகிறேன் என்பதால் அந்த எல்லையற்ற வாழ்வுடனும் எல்லையற்ற நன்மையுடனும் எல்லையற்ற சக்தியுடனும் யோகத்தில் உள்ளேன், அதாவது இணைந்துள்ளேன் நீங்கள் மலையளவிற்கு உயர்ந்திருக்கலாம், ஆனால் நானும் உங்களைப்போலவே அந்த எல்லையற்றதுடன் இணைந்திருக்கிறேன்.

எனவே சகோதரர்களே இந்த உயிரூட்டுகின்ற மகத்தான, மேன்மையான மகோன்னதமான உண்மைகளை உங்கள் குழந்தைகள் பிறந்தலிருந்தே அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள். அவர்களுக்கு நீங்கள் அத்வைதத்தைச் சொல்லித் தரத் தேவையில்லை துவைதத்தையோ நீங்கள் விரும்பும் வேறு எதாவது கோட்பாட்டையோ சொல்லித் தாருங்கள். ஆனால் இந்தியா முழுவதற்கும் ஆன்மா பற்றிய இந்தக் கோட்பாடுதான் பொதுவாக இருப்பதை நாம் காண்கிறோம். ஆன்மாவின் பூரணத்துவத்தைப் பற்றிய கோட்பாட்டை எல்லா பிரிவுகளும் நம்புகின்றன.

நமது மகத்தான தத்துவ ஞானியான கபிலர் சொல்வதைப் போல், தூய்மை என்பது ஆன்மாவின் இயல்பாக இல்லாத பட்சத்தில் அது பின்னர் ஒருபோதும் தூய்மை பெற முடியாது. ஏனென்றால் இயல்பாகவே எது நிறை நிலை பெற்றதில்லையோ அது நிறைநிலையை அடைந்தாலும் அந்த நிலை மறுபடியும் போய்விடும். தூய்மை யின்மை மனிதனின் இயல்பாக இருக்குமானால் அவன் ஒருவேளை ஏதோ ஐந்து நிமிட நேரத்திற்குத் தூயவனாக இருக்க நேர்ந்தாலும் மறுபடியும் தூய்மையற்றவனாகத் தான் என்றென்றைக்கும் இருக்க நேரும். அந்த ஐந்து நிமிடத் தூய்மை கலைந்து போகின்ற மறைந்து போகின்ற நேரம் வரவே செய்யும். அப்போது மறுபடியும் பழைய இயல்பான தூய்மையின்மை அவனை ஆட்கொண்டுவிடும். அதனால்தான் ,நன்மையே நமது இயல்பு பூரணத்துவமே நமது இயல்பு, பூரணமின்மையோ பரிசுத்தமின்மையோ நமது இயல்பு அல்ல என்று நம் தத்துவ ஞானியர் அனைவரும் கூறியிருக்கின்றன. அதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். தாம் செய்த எல்லா மகத்தான காரியங்களையும், சிந்தித்த மகத்தான சிந்தனைகளையும் நினைவு கூரும்படி தமது மரண வேளையில்கூறிய அந்த மாபெரும் ரிஷியின் அற்புத உதாரணத்தை நினைத்துப் பாருங்கள். தமது பலவீனங்களையும் குற்றங்களையும் நினைக்கும்படி அங்கே அவர் சொல்லாததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குறைகள் இருக்கலாம், பலவீனங்கள் இருக்கவே செய்யும், ஆனால் எப்போதும் உங்கள் உண்மை இயல்பை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் பலவீனங்களை விலக்க, குற்றங்குறைகளைப் போக்க அது ஒன்றே சிறந்த வழி இந்தச் சில கருத்துக்கள் இந்தியாவின் பல்வேறு பிரிவுடளுக்கும் பொதுவானவை என்றே தோன்றுகிறது. எதிர்காலத்தில் ஒருவேளை இத்தகைய பொதுமேடையில் சமய சனாதனிகளும் மிதவாதிகளும் பழைய பிரிவைச் சேர்ந்தவர்களும் புதிய பிரிவைச் சேர்ந்தவர்களும் கைகுலுக்க நேரலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு அதைத்தான் நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதைவருத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதுதான் சமயம் பற்றிய நமது கருத்து. இந்தியாவைப் பொறுத்தவரை சமயம் என்றால் அது அனுபூதியையே குறிக்கும், அதற்குக் குறைந்து எதுவும் சமயம் ஆகாது இந்தக் கொள்கையை நம்புங்கள், நீங்கள் பத்திரமாக இருப்பீர்கள் என்றெல்லாம் நமக்கு இனிமேல் யாரும் உபதேசிக்க முடியாது. ஏனென்றால் நாம் அதை நம்புவதில்லை உங்களை எப்படி நீங்கள் உருவாக்குகிறீர்களோ அப்படியே உருவாவீர்கள் இறையருளாலும் உங்கள் முயற்சியாலும் தான் நீங்கள் இப்போது இருக்கின்ற நிலைமையை அடைந்துள்ளீர்கள். வெறுமனே சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்புவது பெரிதாக உங்களுக்கு எந்த உதவியையும் செய்யாது. இந்தியாவின் ஆன்மீக வானிலிருந்து வருகின்ற ஒரு மகத்தான வார்த்தை அனுபூதி அதாவது நேரடி அனுபவம் கடவுளை நேராகக் காணவேண்டும் என்று திரும்பத்திரும்பக் கூறுபவை நமது சாஸ்திரங்கள் மட்டுமே. உண்மையிலேயே அவை தைரியம் மிக்க வார்த்தைகள், வீர மொழிகள் ஆனால் ஆணிவேர்வரை உண்மையானவை அதன் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு துடிப்பும் உண்மையானவை. சமயம் என்றால் அது அனுபவிப்பதற்கு உரியது, வெறுமனே கேட்பதற்கு மட்டுமல்ல. கிளிப்பிள்ளையைப்போல் சில கோட்பாடுகளை மனப்பாடம் செய்வது சமயம் ஆகாது. அறிவியல் உயர்வதும் சமயம் அல்ல அறிவு என்பது வெறும் பூஜ்யம். சமயம் என்பது நம் உள்ளே வர வேண்டிய ஒன்றாகும்.

எனவே இறைவன் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த நிரூபணம் நம் அறிவு அப்படிச் சொல் கிறது என்பது அல்ல, நம் முன்னோர்களும் இன்றுள்ளவர்களும் இறைவனைக் கண்டார்கள் என்பதே ஆகும். நாம் ஆன்மாவை நம்புகிறோம்; அது உள்ளது என்பதை நிரூபிக்க தகுந்த காரணங்கள் இருப்பதால் மட்டுமல்ல; அதற்கும் மேலாக இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் முற்காலத்தில் அதை அனுபவித்து அறிந்திருந்தார்கள், இன்னும் பலர் அனுபவிக்கிறார்கள் எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்மாவைக் கண்டு அனுபவிக்கப் போகிறார்கள் என்பதற்காகவே நாம் ஆன்மாவை நம்புகிறோம் எனவே கடவுளைக் கண்டுணரும்வரை தன் சொந்த ஆன்மாவை அறிந்துணரும்வரை மனிதனுக்கு முக்தியே கிடையாது அனைத்திற்கும் மேலாக இதை நாம் புரிந்து கொள்வோம். எவ்வளவு அதிகமாகப் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு இந்தியாவில் பிரிவினைவாதம் குறையும். ஏனென்றால் கடவுளை உணர்ந்தவனே கண்டவனே சமயவாதியாக இருக்க முடியும். அவனது முடிச்சுக்கள் வெட்டப்படுகின்றன; அவனுக்கு மட்டுமே சந்தேகங்கள் அகல்கின்றன; நெருங்கியவற்றைவிட நெருங்கியவராகவும் தொலை தூரத்தில் இருக்கின்ற அனைத்தையும்விட தூரத்தில் இருப்பவராகவும் உள்ள இறைவனைக் கண்டவன் மட்டுமே வினைப்பயன்களிருந்து விடுபட முடியும்.

வெறும் பிதற்றல்களை சமய உண்மைகளாகவும் பண்டித விளக்கங்களை ஆன்மீகப் பேரனுபூதியாகவும் தவறாக நாம் நினைத்துக் கொள்கிறோம். விளைவு? பிரிவினைவாதம் தொடர்வது சண்டைகள் அனுபூதி என்பதுதான் ஒரே சமயம் என்பதை நாம் ஒருமுறை புரிந்துகொண்டால் போதும், நம் இதயத்திற்குள்ளேயே ஆழ்ந்து பார்க்க முற்படுவோம் சமய உண்மைகளை நாம் எவ்வளவு தூரம் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம் என்று அறிந்துகொள்வோம்.நாமே இருளில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . இந்த நிலைமையில் பிறரும் அதே இருளில் உழல வழிகாட்டுகிறோம் என்பது அப்போதுதான் நமக்குத் தெரியவரும். அதன்பிறகு பிரிவினைவாதம் சண்டை சச்சரவுகள் போன்றவற்றிலிருந்து விடுபடுவோம். யாராவது சமயச் சண்டைகளில் ஈடுபட விரும்பினால் அவனிடம் , நீ கடவுளைக் கண்டிருக்கிறாயா? ஆன்மாவைக் கண்டிருக்கிறாயா? இல்லையென்றால் இறைவனின் திருநாமத்தைப் பிரச்சாரம் செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கிறது? இருட்டிற்குள் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் நீ என்னையும்அதற்குள் இழுத்துச் செல்ல விரும்புகிறாய் குருடனைக் குருடன் வழிநடத்தி இருவரும் குழியில் விழ வேண்டுமா? என்று கேளுங்கள்.

எனவே பிறரது குற்றங்களைக் கண்டுபிடிக்கச் செல்வதற்கு முன்னால் சற்று நின்றுநிதானமாகச் சிந்தனை செய்யுங்கள். தங்கள் இதயங்களிலேயே உண்மையைக் காண்பதற்காக அவர்கள் போராடுகிறார்கள் என்கின்ற பட்சத்தில் அனுபூதிக்கான அவரவர் பாதையைப் பின் பற்றட்டும் பரந்த தெளிவான உண்மையைக் காணும் போது, இந்தியாவின் ரிஷிகள் ஒவ்வொருவரும் அனுபூதி பெற்ற ஒவ்வொருவரும் அனுபவித்த அந்த அற்புதப் பேரின்பத்தை இவர்களும் உணர்வார்கள். அந்த இதயத்திலிருந்து அன்பான வார்த்தைகள் மட்டுமே வெளிவரும். ஏனென்றால் அன்பின் சாரமான ஒன்றால் அது தொடப்பட்டிருக்கிறது! அதன்பிறகு அதன் பிறகு மட்டுமே எல்லா பிரிவுச்சண்டைகளும் தீரும் அப்போது தான் இந்து என்ற சொல்லையே இந்து என்ற சொல்லால் அழைக்கப்படுகின்ற ஒவ்வொருவரையுமே இதயத்தில் ஏற்றுக்கொண்டு ஆரத்தழுவி அன்பு பாராட்ட முடியும். நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

எப்போது இந்து என்ற சொல்லே உங்களுள் வலிமையின் மின்னதிர்வுகளைப் பரப்புமோ அப்போது, அப்போது மட்டுமே நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள்.எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமது மொழியில் பேசினாலும் வேறெந்த மொழியில் பேசினாலும், இந்து என்ற பெயரைத் தாங்கியவர்களாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு மிக நெருங்கியவர்களாக மிகுந்த அன்பிற்கு உரியவர்களாக என்றுதோன்றுகிறதோ, அன்று, அன்றுதான் நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள்.

இந்து என்ற பெயரைத் தாங்கிய யார் துன்பப் பட்டாலும் அந்தத் துன்பம் உங்கள் இதயத்தில் நுழைந்து உங்களை சொந்த மகனின் துன்பத்தைப் போல் உங்களைத் துடிக்கச் செய்யுமானால் அப்போது, அப்போது மட்டுமே நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள்.

எனது சொற்பொழிவின் ஆரம்பத்தில் நான் குறிபிட்டது போன்ற மகத்தான உதாரணமாகிய குரு கோவிந்த சிம்மனைப் போல் என்று அவர்களுக்காக எல்லாவற்றையும் சகிக்கத் தயாராவீர்களோ, அன்றுதான் நீங்கள் இந்துக்கள் ஆவீர்கள். அவர் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டார் இந்து சமயத்திற்காக ரத்தம் சிந்தினார் போர்க்களத்தில் தம் குழந்தைகளே மடிவதையும் கண்டார் அந்தோ! யாருக்காகத் தம் ரத்தத் தையும் தமது உற்றார் உறவினரின் ரத்ததையும் சிந்தினாரோ அவர்களாலேயே கைவிடப்பட்டார். அந்த அடியுண்ட சிங்கம் இறுதியில் போர்களத்திலிருந்து விலகி மரணத்தை அமைதியாக எதிர்கொள்வதற்காகத் தென்னாடு சென்றார். ஆ அந்த நிலையிலும் தம்மைக் கைவிட்ட நன்றியில்லாத மக்களுக்கு எதிராக ஒரு கடுஞ்சொல்கூட அவரது வாயிலிருந்து வெளிப்படவில்லை ஆகா என்னவோர் உதாரணம் அந்த மகா குருவின் வாழ்க்கை!

என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் நாட்டிற்கும் நன்மை செய்ய விரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங் ஆக வேண்டும் உங்கள் மக்களிடம் நீங்கள் ஆயிரம் குறைகளைக் காணலாம். ஆனால் அவர்களுடையது இந்து ரத்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்தவதற்கான எல்லாவற்றையும் அவர்கள் செய்தாலும் நீங்கள் வழிபட வேண்டிய முதல் தெய்வங்கள் அவர்களே. அவர்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது சாபங்களைப் பொழிந்தாலும் நீங்கள் அவர்களுக்கு அன்பு வார்த்தைகளையே அளியுங்கள். அவர்கள் உங்களை வெளியே துரத்தினால் அந்தச் சீரிய சிங்கமான கோவிந்த சிம்மனைப்போல் அமைதியாக மரணத்தை எதிர் கொள்வதற்காகச் சென்றுவிடுங்கள். அத்தகையவன் தான் இந்து என்னும் பெயருக்குத் தகுதியானவன். அத்தகைய தொரு லட்சியம் எப்போதும் நம் கண்முன் இருக்க வேண்டும் சண்டைசச்சரவுகளை எல்லாம் புதைத்துவிடுவோம் இந்த ஆழ்ந்த அன்புணர்வை எங்கும் பரப்புவோம்!

இந்தியாவின் முன்னேற்றத்தைப்பற்றி யாரும் எது வேண்டமானாலும் பேசட்டும். ஆனால் வேலை செய்து கொண்டிருப்பவன் என்ற முறையில் அல்லது குறைந்த பட்சம் வேலை செய்ய முயல்பவன் என்ற வகையில் நான் சொல்ல விரும்புவது இதுதான்: நீங்கள் ஆன்மீகத்தைக் கைக்கொள்ளாத வரை இந்தியாவிற்கு முன்னேற்றம் கிடையாது.

அது மட்டும்மல்ல, உலகின் நன்மையே அதைத்தான் சார்ந்துள்ளது. ஏனென்றால் மேலைநாட்டு நாகரீகம் அஸ்திவாரம் வரை ஆட்டம் கண்டு விட்டது என்பதைநான் வெளிப்படையாக உங்களிடம் சொல்லியே ஆக வேண்டும். உலகாயதம் என்ற வெறும் மணல் அஸ்தி வாரத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டிடங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒருநாள் சரிந்தே தீரும், என்றாவது தரைமட்டமாகியே தீரும். உலக வரலாறு இதற்குச் சாட்சியாக உள்ளது உலகாயதப் பெருமையைத் தன் அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நாடுகள் எழுந்தன, மனிதன் வெறும் ஜடப்பொருளே என்று முழுங்கின. ஆம் மரணம் அடைவது மேலைநாட்டு மொழியில் உயிரை விட்டுவிடுதல் என்று கூறப்படுகிறது நமது மொழியில் உடம்பை விட்டுவிடுதல் என்றே நாம் கூறுகிறோம் . மேலை நாட்டைப் பொறுத்தவரை மனிதன் என்பவன் உடம்பு அவனுக்கு ஆன்மா உள்ளது. நமக்கோ மனிதன் என்பவன் ஆன்மா, அவனுக்கு உடம்பு உள்ளது. இங்குதான் பெரிய வித்தியாசம் எனவே உலக போகம் முதலானமணல் அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட அத்தகைய நாகரீகங்கள் எல்லாமே குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்து ஒன்றன்பின் ஒன்றாக உலகிலிருந்து மறைந்துவிட்டன.

ஆனால் இந்திய நாகரீகமும் அதன் காலடியில் அமர்ந்து கற்கவும் கவனிக்கவும் உடன்பட்ட நாடுகளான ஜப்பான் சீனா முதலியவற்றின் நாகரீகங்களும் இன்றும் வாழந்துவருகின்றன: மேலும் வளர்வதற்கான அறிகுறிகளும் அவைகளிடம் தென்படுகின்றன. ஆயிரம் முறை அழிக்கப்பட்டாலும் மறுபடியும் மேலும் பெருமையோடு வெளிவரத் தயாராக இருக்கின்ற ஃபினிக்ஸ் பறவையைப்போல் உள்ளது அவைகளின் வாழ்க்கை. ஆனால் உலகாயத நாகரீகம் ஒரு முறை வீழ்ந்துபட்டால் மீண்டும் அதனால் எழ முடியாது ஒரு முறை அந்தக் கட்டிடம் தரைமட்டமாக்கப் பட்டு விட்டால் என்றென்றைக்குமாக நொறுங்கி சுக்கல்சுக்கலாகி விடுகிறது. எனவே பொறுமையுடன் காத்திருங்கள் எதிர் காலம் நம்முடையதாகத்தான் ஆகப் போகிறது.

அவசரப்படாதீர்கள். மற்றவர்களைக் காப்பியடிக்காதீர்கள். நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் இது.காப்பியடிப்பதும் ஒரு போதும் நாகரீகம் ஆகாது. நான் அரசனுடையஉடை தரிக்கலாம், ஆனால் அது என்னை அரசனாக்கிவிடுமா? சிங்கத் தோல் போர்த்தாலும் கழுதை எந்தக் காலத்திலும் சிங்கம் ஆக முடியாது. காப்பியடித்தல் கோழைத்தனமான இந்தப் போலித்தனம் ஒரு போதும் முன்னேற்றத்தைத் தராது இது மனிதனின் கேவலமான வீழ்ச்சியின் தெளிவான அடையாளம். ஆம் ஒருவன் தன்னையே வெறுக்கத் தொடங்கி விட்டானானால் அவனுக்கு இறுதிமணி அடித்துவிட்டது என்று அர்த்தம். ஒருவன் தன் முன்னோர்களைக் குறித்து வெட்கப்பட ஆரம்பித்து விட்டானானால் அவனுக்கு முடிவுக் காலம் வந்துவிட்டது.

இதோ நான் இருக்கிறேன் இந்து இனத்தின் மிகச் சாதாரணமானவன் நான் . என்றாலும் என் இனத்தைப் பற்றியும் என்முன்னோர்களைப் பற்றியும் பெருமைப்படுகிறேன். என்னை ஓர் இந்து என்று அழைத்துக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் , உங்கள் தகுதியில்லாத வேலைக்காரர்களுள் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன், உங்கள் நாட்டினன் என்பதில் பெருமைப்படுகிறேன். நீங்கள் மகான்களின் வழி வந்தவர்கள், இந்த உலகம் இதுவரை கண்டவர்களுள் மாபெரும் ரிஷிகளின் வழித்தோன்றல்கள் எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களைக் குறித்து அவமானப்படாதீர்கள் அதற்குப் பதிலாகப் பெருமைப் படுங்கள். ஒருபோதும் போலித்தனமாக நடிக்காதீர்கள், காப்பியடிக்காதீர்கள்! நீங்கள் பிறருடைய கையசைவிற்குக் கட்டுப்பட்ட இருக்கும்வரை உங்கள் சுதந்திரத்தை இழக்கிறீர்கள். ஆன்மீக விஷயத்தில் கூட மற்றவர்களின் கட்டளைக்குப் பணிந்து நீங்கள் செய்யும் வரை சிறிதுசிறிதாக உங்கள் சிந்தனைத்திறனை இழந்துவிடுகிறீர்கள். உங்கள் உள்ளிருப்பதை உங்கள் சொந்த உழைப்பின் மூலம் வெளியே கொண்டு வாருங்கள். உங்களை எப்படி உருவாக்க முடியுமோ, அப்படி உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிறரைக் காப்பியடிக்காதீர்கள். என்றாலும் மற்றவர்களிடமிந்து நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். பிறரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். விதையை நிலத்தில் போடுகிறீர்கள்; அது வளர ஏராளமான மண்ணையும் காற்றையும் தண்ணீரையும் அளிக்கிறீர்கள். விதை கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் வளர்கிறது அந்த விதை மண்ணாக மாறியதா, காற்றாக மாறியதா, இல்லை, நீராகத்தான் மாறியதா? அது தனக்கு அளிக்கப்பட்ட எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, தன் இயல்பிற்கு ஏற்றவாறு செடியாகியது, பெரிய மரமாக வளர்ந்தது. உங்கள் நிலையும் அப்படி இருக்கட்டும்.

நாம் பிறரிடமிருந்து கற்க வேண்டியவை உண்மையிலேயே ஏராளம் உள்ளன. பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவன் செத்தவனே நம் மனு(2,238) கூறுகிறார்; ஆததீத பிராம் வித்யாம் ப்ரயத்னாதவராதபி அந்த்யாதபி பரம் தர்மம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி உத்தமப் பெண் கீழ்ஜாதியில் பிரந்திருந்தாலும் அவளை மனைவியாக ஏற்றுக்கொள் ஞானி தாழ்ந்த குலத்தில்பிறந்தவராக இருந்தாலும் அவருக்குச் சேவை செய்து உயர் ஞானத்தைப் பெறு. சண்டாளன் ஆனாலும் அவருக்குப் பணிவிடைகள் செய்து முக்திக்கு வழிதேடு நல்லவற்றை மற்றவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவைகளை உங்கள் இயல்பிற்கு ஏற்பக் கிரகித்துக்கொள்ளுங்கள், மற்றவர்களாக மாறாதீர்கள். இந்திய வாழ்க்கையிலிருந்து வெளியே இழுக்கப்பட்ட வர்களாகிவிடாதீர்கள். இந்தியர்கள் மற்ற இனத்த வரைப்போல் உடையுடுத்தி உண்டு வாழ்ந்தால் இந்தியாவிற்கும் நன்மை விளையும் என்று ஒரு கணம் கூட நினைக்காதீர்கள்.

சில ஆண்டு பழக்கத்தையே விடுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும் ; இந்தச் சிறப்பான தேசிய வாழ்க்கை எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் ரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது கடவுளுக்கே தெரியும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட வழியில் ஓடிக் கொண்டிருக்கிறதோ கடவுளே அறிவார். கடலை நெருங்கிவிட்ட அந்த மாநதி திரும்பி இமயத்தின் பனி மூடிய சிகரத்தை அடையும் என்றா நீங்கள் சொல்கிறீர்கள்? அது முடியாதது! அதற்கு முயன்றால் அழிவே பலனாக இருக்கும் ஆகையால் நாட்டின் தேசிய நீரோட்டத்திற்கு வழிவிடுங்கள் அந்த மாநதியின் போக்கிற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுங்கள் பாதையைச் செப்பனிடுங்கள் குண்டு குழிகளைச் சரிசெய்யுங்கள். அது தன் சொந்தப் போக்கிலேயே பொங்கிப் பாயும், முன்னேற்றப் பாதையில் மேன்மையுடன் நாடு செல்லும்.இந்தியாவின் ஆன்மீகப் பணிகளுக்காக எனது சில யோசனைகள் இவை. இன்னும் எத்தனையோ முக்கிய மான பிரச்சினைகள் உள்ளன. நேரம் இல்லாத காரணத்தால் அவற்றை இன்றிரவு உங்களிடம் சொல்ல இயலவில்லை, உதாரணமாக ஜாதிப் பிரச்சினை. இந்தப் பிரச்சினை அதன் நன்மை , தீமை எல்லாவற்றையும் என்வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வருகிறேன். ஏறக்குறைய இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இதைக் குறித்து ஆராய்ந்திருக்கிறேன். இந்த நாட்டில் உள்ள ஏறக்குறைய எல்லா ஜாதியினருடனும் கலந்து பழகியிருக்கிறேன். ஆனால் அதன் முக்கியத்துவத்தை அறிய எண்ணும்போது என் மனம் திகைப்பில் ஆழ்ந்துவிடுகிறது அதிகமாக ஆராயும் அளவு பிரமிப்பு அதிகரிக்கிறது.என்றாலும் கடைசியாக என் முன் மங்கலான சிறிய ஒளி தென்படுகிறது. அதன் முக்கியத்துவம் இப்போது தெரியத்தொடங்கியுள்ளது.

இனி உன்பது, அருந்துவது குறித்த பெரிய பிரச்சினை உள்ளது. உண்மையிலே அது ஒரு பெரிய பிரச்சினைதான் ஆனால் நாம் பொதுவாக நினைப்பது போல் பயனற்ற பிரச்சினை அல்ல. நான் கண்டுள்ளமுடிவு இது உண்பது பருகுவது குறித்து இப்போது நாம் காட்டுகின்ற கண்டிப்பு மிகவும் வினோதமானது இந்தக் கண்டிப்பு சாஸ்திரங்களுக்கு எதிரானது அதாவது உண்கின்ற உணவு மற்றும் நீரின் உண்மையான தூய்மையை அசட்டை செய்ததால்தான் நாம் அவல நிலையை அடைந்துள்ளோம் அதன் உண்மையான சாரத்தை இழந்துவிட்டோம். மேலும் சில பிரச்சினைகள் அவைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது இந்த லட்சியங்களை எப்படி செயல் முறைப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் உங்களிடம் பேச வேண்டுமென்ற ஆவல் எனக்கு உண்டு.ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கூட்டம் ஆரம்பிக்கும் போதே மிகவும் காலதாமதமாகி விட்டது. இனியும் உங்களைக் காக்கவைக்க நாள் விரும்பவில்லை எனவே ஜாதி மற்றும் பிற விஷயங்களில் என் கருத்தை மற்றொரு சமயம் கூறுகிறேன்.

இன்னொரு வார்த்தை மட்டும் கூறி எனது இந்தஆன்மீகக் கருத்துக்களை நிறைவு செய்கிறேன். நெடுங்காலமாக இந்தியாவில் சமயம் தேக்க நிலையில் உள்ளது. அதைச் செயல்நிலைக்குக் கொண்டு வருவதே நாம் செய்ய வேண்டியது. ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் அதனைக்கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த காலம்போல் சமயம் என்பது மன்னர்களின் மாளிகையிலும் அதுபோலவே நாட்டின் ஏழை விவசாயியின் குடிசையிலும் நுழைய வேண்டும். அனைவருடையவும் பொதுச் சொத்தான, இனத்தின் பிறப்புரிமையான சமயம் என்பது ஒவ்வொருவரின் வாசற் படிக்கும் இலவசமாகக்கொண்டு செல்லப்பட்ட வேண்டும். இந்தியாவில் சமயம் என்பது கடவுள் அளித்த காற்றைப்போல் சுதந்திரமானதாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் ஆக்கப்பட வேண்டும் இந்தியாவில் நாம் தொடங்க வேண்டியது இத்தகைய வேலையையே சிறிய சிறிய சமயப்பிரிவுகளை ஏற்படுத்தியும் அவற்றுக் கிடையே உள்ள வேற்றுமைகளைப்பற்றிச் சண்டை யிட்டும் செய்ய வேண்டியது அல்ல இது. எல்லோரும் ஏற்றுக்கொள்வதைப் பிரச்சாரம் செய்வோம், வேற்றுமைகள் தங்களைத் தாங்களே சீர்செய்துகொள்ளும் படி விட்டுவிடுவோம். நான் இந்திய மக்களிடம் திரும்பத் திரும்பத் சொல்லி வந்துள்ளது போல் பல நூறு ஆண்டுகளாக இருள்மூடிக் கிடக்கிறது ஓர் அறை அந்த அறையின் அருகே சென்று ஓ இது இருட்டாக இருக்கிறது, இருட்டாக இருக்கிறது என்று அழுதால் இருள் விலகுமா என்ன! ஒளியை உள்ளே கொண்டு வாருங்கள், அந்தக் கணமே இருள் மறைந்துவிடும். மனிதனைச் சீர் திருத்துவதன் ரகசியம் இதுதான்.

மக்களுக்கு உயர்ந்தவற்றைப்பற்றிச் சொல்லுங்கள். முதலில் மனிதனை நம்புங்கள் மனிதன் இழிந்தவன் தாழ்ந்தவன் என்ற நம்பிக்கையோடு ஏன் தொடங்க வேண்டும்? மிக மோசமான மனிதனிலும் என் நம்பிக்கை ஒரு போதும் தளர்ந்ததில்லை எங்கெல்லாம் மனிதனிடம் நான் நம்பிக்கை வைத்தேனோ , அங்கெல்லாம் ஆரம்ப நிலைமை நன்றாக இல்லை என்றாலும் காலப்போக்கில் அது வெற்றிபெறவே செய்தது.

ஒருவன் நன்கு படித்தவனாகத் தோன்றினாலும் படிக்காதவனாக இருந்தாலும் அவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் தேவதூதனாகத் தோன்றினாலும், சாத்தானாகவே தோன்றினாலும், அவனிடம் நம்பிக்கை வையுங்கள். முதலில் மனிதனிடம் நம்பிக்கை வையுங்கள்.அவனிடம் குற்றங்குறைகள் இருந்தால் அவன் தவறுகள் செய்தால் வளர்ச்சியுறாத மோசமான கொள்கைகளை அவன் பின்பற்றினால்,அதற்குக் காரணம் அவனது இயல்பே தாழ்ந்தது என்பதல்ல உயர்ந்த லட்சியங்களை அவன் அறியாததே உண்மையான காரணம் என்பதை நம்புங்கள். ஒருவன் தவறை நோக்கிப் போகிறான் என்றால் அதன் காரணம் சரியானது அவனுக்குக் கிடைக்க வில்லை என்பதே. எனவே தவறிலிருந்து ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால் அவனுக்கு உண்மையைக் காட்டுங்கள். இதைச் செய்யுங்கள். அவன் சீர்தூக்கிப் பார்க்கட்டும் அவனுக்கு உண்மையைக் கொடுங்கள் அதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது. அவன் தன் மனத்துள் ஏற்கனவே அங்கே இருப்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கட்டும். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள் - நீங்கள் உண்மையாகவே உண்மையைக் கொடுத்திருந்தால் பொய் மறைந்தே தீர வேண்டும். வெளிச்சம் இருளைத் துரத்தியே தீரும். உண்மை நன்மையை வெளியே கொண்டுவந்தே தீரும்.

ஆன்மீக வழியில் நாட்டைச் சீர்திருத்த வேண்டுமானால் இதுதான் வழி; சண்டையிடுவது, அல்ல; மக்கள் செய்வதெல்லாம் தவறு என்று அவர்களிடம் சொல்வதும் அல்ல. நல்லதை அவர்கள் முன் வையுங்கள் எவ்வளவு ஆர்வத்துடன் அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள் மனிதனில் என்றென்றும் உறை கின்ற, ஒரு போதும் அழியாத தெய்வீகம் விழித்தெழுந்து நல்லதையும் மகத்தானதையும் ஏற்றுக்கொள்ளத் தனது கைகளை நீட்டுவதைக் காண்பீர்கள்.

படைப்பவராகவும் காப்பவராகவும் நம் இனத்தின் காப்பாளராகவும் நம் முன்னோர்களின் கடவுளாகவும் விஷ்ணு சிவன் , சக்தி , கணபதி முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுபவராகவும் சகுணமாகவோ நிர்க்குணமாகவோ வழிபடப்படுபவரும், உருவம் உடையவராகவோ வழிபடப்படுபவரும், உருவம் உடையவராகவோ உருவம் அற்றவராகவோ வழிபடப்படுபவரும் நம்முடைய முன்னோர்கள் யாரை அறிந்து ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி உள்ளது ஒருவரே; மகான்கள் அவரைப் பல்வேறான பெயர்களில் அழைக்கிறார்கள் என்று யாரைக் குறிப்பிட்டார்களோ அந்த இறைவன் மகத்தான அன்போடு நம்முள் புகுவாராக . தமது ஆசிகளை நம்மீது பொழிவாராக. நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும்படிச் செய்வாராக. உண்மையான அன்போடு நம் சொந்தப் புகழில் சிறிதுகூட ஆர்வம் இல்லாமல் நம் சொந்த மரியாதையைப் பெரிதாகக் கருதாமல் சொந்த நன்மையை நினைக்காமல் இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சியான இந்த மகத்தான பணியைச் செய்வதில் நம்மை ஈடுபடுத்துவாராக!

4. இந்து சமயத் தத்துவம்

இன்று மேலெழுந்து நிற்கும் முதல்வகை சமயமாக கொள்கைகளில் எல்லாம் தெய்வீகப் பேருணர்வு அருள் வெளிப்பாட்டு நூல்கள் போன்ற கருத்துக்கள் நிறைந்துள்ளன. சான்றோர் ஒப்புக்கொண்டவற்றை மட்டுமே சமயம் என்ற பெயருக்கே தகுதியற்ற தாழ்ந்த கருத்துக்களை அல்ல.

இத்தகை முதல்வகை சமயக் கொள்கை இறைவன் என்ற எண்ணத்தில் தொடங்குகிறது - இதோ நம் கண் முன்னர் பிரபஞ்சம் உள்ளது; இதைப் படைத்த ஒருவர் இருக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் அவரது படைப்பே.

சிறிது காலத்திற்குப் பின்னர் இந்த எண்ணத்துடன் ஆன்மா என்ற கருத்தும் தோன்றியது-இந்த உடம்பு இருக்கிறது; இந்த உடம்பினுள், உடம்பல்லாத ஏதோ ஒன்று இருக்கிறது. இந்தக் கருத்து, நாம் அறிந்தவற்றுள் மிகமிகப் பழமையான சமயக் கருத்து. இப்தக் கருத்தைக் கொண்ட சிலரை இன்றும் நாம் இந்தியாவில் காணலாம். ஆனால் இது நெடுநாட்களுக்கு முன்னரே மறையத் தொடங்கிவிட்டது.

இந்திய சமயங்களின் தொடக்கமே விசித்திரமாக இருக்கிறது. இத்தகைய விசித்திர நிலை ஒன்று இருந்தது என்பதைக் கடினமான ஆராய்ச்சியினாலும், கவனமாகக் கணக்கிடுவதாலும், ஊகத்தாலும் மட்டும்தான் நாம் நினைத்துப் பார்க்கவே முடியும். நாம் அறிவும் ஆரம்பநிலை, இந்த நிலைக்கு அடுத்த படியே தவிர முதற்படி அல்ல. ஆரம்பநிலையில் படைப்பைப்பற்றி இருந்த கருத்தே மிக வினோதமானது. வெறும் சூன்யத்திலிருந்து இறைவனின் சங்கல்பத்தால் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டது; முன்பு இது இல்லவே இல்லை ; சூன்யத்திலிருந்துதான் இவையெல்லாம் பிறந்தன என்பதே அந்தக் கருத்து.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,