மதத்தின் தேவை! பகுதி -2


மதத்தின் தேவை! பகுதி -2
அதற்கு மாறாக, மதத்தின் ஆரம்பம் இயற்கை வழிபாடுதான் என்பதற்கு ஆதாரங்கள் பழைய ஆரிய இலக்கியங்களில் இருப்பதாகச் சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் முன்னோர் வழிபாடு இருப்பதற்கு ஆதாரங்கள் இருந்த போதிலும் மிகப் பழைய இலக்கியங்களில் இந்தக் கருத்தின் சுவடே இல்லை. ஆரிய இனத்தின் மிகப் பழைய நூலாகிய ரிக்வேத சம்ஹிதையில் முன்னோர் வழிபாடு பற்றிய செய்தியே காணப்படவில்லை. இயற்கை வழிபாடுதான் அதில் காணப்படுவதாகத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர்.

இயற்கையின் திரைக்குப் பின்னால் இருப்பது என்ன என்று அறிவதற்கு மனித மனம் போராடி வருகிறது. சூரிய உதயம், அழகிய மாலை வேளை, கடும் சூறாவளி போன்ற இயற்கையின் மாபெரும் சக்திகளும், இயற்கையின் எழில் வண்ணங்களும் மனித உள்ளத்தை வியப்பில் ஆழ்த்திச் சிந்தனையைத் தூண்டி வந்துள்ளன. இயற்கையின் திரைக்கு அப்பால். இருப்பவற்றைப்பற்றிச் சிறிதாவது தெரிந்து கொள்வதற்கு மனித மனம் விரும்புகிறது. இந்தப் போராட்டத்தில் மனித மனம், இயற்கையின் இந்தச் சக்திகளை உருவாக்கப்படுத்துகிறது. அவற்றிற்கு ஆன்மாவும் உடலும் அளிக்கிறது. சிலசமயம் அவற்றை அழகு மிக்க தாகவும் சிலசமயம் அனைத்தையும் கடந்ததாகவும் பாவனை செய்கிறது. இவற்றை உருவத்துடனோ உருவமில்லாமலோ எப்படி சித்தரித்தாலும் இந்த முயற்சிகளின் முடிவுகள் எல்லாம் விவரிக்க முடியாத கருத்துக்களாகவே அமைகின்றன. புராதன கிரேக்கர்களிடையே இதைக் காண்கிறோம். அவர்களுடைய புராணங்களில் எல்லாம், இயற்கையைத் தத்துவமாக வழிபடும் செய்திகளைக் காண்கிறோம். இவ்வாறே, புராதன ஜெர்மானியர், ஸ்காண்டினேவியர் மற்றும் பிற ஆரிய இனங்களின் புராணங்களிலும் காண்கிறோம். ஆகவே இங்கும் இயற்கையின் சக்திகளை உருவகப்படுத்துவதே மதத்தின் தோற்றத்திற்கு ஆரம்பமாக இருந்தது என்ற கருத்திற்குப் பல வலு<வான ஆதாரங்களைக் காண்கிறோம்.

இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு உடையனவாகத் தோன்றுகின்றன. ஆனால் மதத்தின் தோற்றத்திற்கு உண்மையான வித்து என்று நான் கருதும் ஒரு மூன்றாவது கருத்தின்மூலம் இந்த இரு கருத்துக்களையும் இணைக்க முடியும். புலன்களின் வரையறையைக் கடந்து செல்வதற்கான போராட்டமே மதத்திற்கு வித்து என்று நான் கூறுவேன்.

இறந்த முன்னோர்களை இறந்தவர்களின் ஆவியை மனிதன் தேடுகிறான். அதாவது, உடல் மறைந்த பின், அப்பால் என்ன இருக்கிறது என்பதை ஒரு கணமாவது காண அவன் விரும்புகிறான். இயற்கையின் மாபெரும் தோற்றங்களுக்குப் பின்னால் இயங்கும் சக்தியைப் புரிந்து கொள்ள விரும்புகிறான். இந்தக் கருத்துக்களின் எதைப் பின்பற்றினாலும் ஒன்று மட்டும் உறுதி. அதாவது அவன் புலன்களின் வரையறையைக் கடந்து செல்ல விரும்புகிறான்.

புலன்களின் நுகர்ச்சியால் மட்டும் மனிதனுக்கு மன நிறைவு ஏற்படுவதில்லை. அவன் அவற்றைக் கடந்து போக விரும்புகிறான். இதன் விளக்கம் ஏதோ மர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கனவுகள் மூலமாகவே மதத்தைப் பற்றிய எண்ணம் முதன்முதலாகக் கிடைக்கிறது என்ற கருத்து இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. மரணமிலாப் பெருநிலையைப் பற்றிய எண்ணம் கனவுகள் மூலம்தான் மனிதனுக்கு முதலில் ஏற்பட்டிருக்கும். என்னவோர் அற்புதமான நிலை அது, அல்லவா? குழந்தைகளும் மன வளர்ச்சி அடையாதவர்களும் கனவிற்கும் நனவிற்கும் இடையில் பெரிய வேறுபாடு காண்பதில்லை என்பது நமக்குத் தெரியும். உடம்பு வெளிப்படையாக இயங்காத தூக்க நிலையிலு<ம் மனம் சிக்கலான பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. எனவே உடம்பு மறைந்தபின்னும் மனம் தொடர்ந்து தன் வேலைகளைச் செய்துகொண்டேயிருக்கும் என்ற முடிவுக்கு மனிதன் வருவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? அது இயல்பான முடிவே அல்லவா! இந்தக் கனவு கருத்திலிருந்துதான் மனித மனம் மேலும்மே<லும் உயர்ந்த கருத்துக்களுக்குச் செல்கிறது என்பதுதான் என்னைப் பொறுத்தவரை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப்பற்றிய இயல்பான விளக்கம். காலம் செல்லச் செல்ல, பலர் தங்கள் கனவுகள், நினவுநிலையோடு ஒத்திருக்கவில்லை. கனவுநிலையில் மனிதனுக்குப் புதியதொரு வாழ்க்கை எதுவும் அமைவதில்லை. நனவுநிலையின் அனுபவங்களே கனவில் பிரதிபலிக்கின்றன என்று கண்டார்கள்.

ஆனால் இதற்குள் தேடல் தொடங்கிவிட்டது. இந்தத் தேடல் அகவுலகிலாக இருந்தது. மனத்தின் பல்வேறு நிலைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மனிதன் ஆழ்ந்தான். இந்த ஆராய்ச்சியின் பயனாக, கனவு மற்றும் நனவு நிலைகளைவிட உயர்ந்த நிலைகள் இருப்பதைக் கண்டுபிடித்தான், உலகின் முக்கிய மதங்களெல்லாம் இந்த நிலைகளை ஆனந்தப் பரவச நிலை அல்லது அக விழிப்புணர்வுநிலை என்று கூறுகின்றன.

சிறந்த மதங்களை நிறுவியவர்களும் சரி, அதன் தீர்க்கதரிசிகளும் மத ஆச்சாரியர்களும் சரி, நனவுநிலை, தூக்கநிலை இவை இரண்டுமற்ற மன நிலைகளை அடைந்ததாக எல்லா மதங்களிலும் சொல்லப்படுகிறது. அந்த நிலைகளில் ஆன்மீக உலகம் என்று கூறப்படுகின்ற உலகைப் பற்றிய புதயவற்றை அவர்கள் நேருக்குநேர் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. நம்மைச் சுற்றியுள்ள உண்மைகளை நனவுநிலையில் நாம் உணர்வதைவிட மிக மிக ஆழமாக, ஆன்மீக உண்மைகளை அவர்கள் அந்த நிலைகளில் உணர்ந்தார்கள்.

உதாரணமாக இந்து மதத்தை எடுத்துக் கொள்வோம். வேதங்களை ரிஷிகள் எழுதியதாகச் சொல்கிறார்கள். இந்த ரிஷிகள் சில உண்மைகளை உணர்ந்த முனிவர்கள் மந்திரங்களைக் காண்பவர் அதாவது வேத மந்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை உணர்ந்தவர்கள் என்பதுதான் ரிஷி என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள். இவர்கள் தாங்கள் சில உண்மைகளை உணர்ந்திருப்பதாக அறிவித்தார்கள். அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்ட தத்துவங்களை அறிந்து அந்த உண்மைகளை எழுதியும் வைத்தார்கள். யூதர்கள் கிறிஸ்தவர்கள் இவர்களுடைய மதங்களும் இவ்வாறே சொல்வதை நாம் காண்கிறோம்.

பவுத்தர்களை இதற்கு ஒரு விதிவிலக்கு எனலாம். உதாரணமாக புத்தமதத்தின் தென் பிரிவினர். இப்போது ஒரு கேள்வி எழலாம் கடவுள், ஆன்மா இவற்றை புத்த மதத்தினர் ஒப்புக் கொள்வதில்லை என்றால், அவர்களின் மதம் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்து எப்படித் தோன்றியிருக்க முடியும்?

ஆனால் புத்த மதத்தினரும் நிலையான அறநியதிக் கோட்பாடு ஒன்றை ஒப்புக்கொள்கின்றனர். இந்தக் கோட்பாடு நாம் கருதுகின்ற பகுத்தறிவால் உணரப்பட்டதல்ல. புத்தர் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தபோதுதான் இந்தக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். புத்தரின் வாழ்க்கையைப் படித்தவர்களுக்கு, சுருக்கமாக, ஆசிய ஜோதி என்னும் அந்த அழகிய கவிதையிலாவது படித்தவர்களுக்கு புலன்களுக்கு அப்பாற்பட்ட அந்த நிலையை அடையும்வரை புத்தர் போதிமரத்தின் அடியில் உட்கார்ந்திருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது நினைவிருக்கலாம். புத்தரின் உபதேசங்கள் அனைத்தும் புலன்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் பிறந்தவைதாம். அறிவால் ஆராய்ந்து தெளிந்தவை அல்ல.

இவ்வாறு மிக உன்னதமானதொரு கருத்தை எல்லா மதங்களும் வெளியிடுகின்றன. மனித மனம் சிலவேளைகளில் புலன்களின் எல்லைகளை மட்டுமல்லாமல், பகுத்தறிவின் ஆதிக்கத்தையும் கடந்து செல்கிறது என்பதுதான் அந்தக் கருத்து, அந்த நேரங்களில், புலன்களின் மூலமாகவோ ஆராய்ச்சி மூலமாகவோ உணர முடியாத பல பேருண்மைகளை மனித மனம் நேருக்குநேர் காண்கிறது. இந்த உண்மைகளே உலகின் எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.

இந்த உண்மைகளை மறுத்துக் கூறவும், இவற்றைப் பகுத்தறிவின் மூலம் சோதிக்கவும் நமக்கு உரிமை உண்டு. மனித மனத்திற்குப் புலன்களையும் அறிவின் எல்லைகளையும் கடந்து செல்லும் விசித்திரமான இந்த ஆற்றல் உண்டு என்று உலகிலுள்ள எல்லா மதங்களும் உறுதியாகச் சொல்கின்றன இந்த ஆற்றலை அவர் ஓர் உண்மை வாக்குமூலமாகவே வெளியிடுகின்றன.

மதங்கள் கூறும் இந்தக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது இருக்க, எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு பண்பு இருப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக, இயற்பியல் கண்டுபிடித்துள்ள உண்மைகளெல்லாம் தூலமானவை. மதங்களின் இந்தக் கருத்துக்களோ எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. மிகவும் மேம்பாடடைந்துள்ள மதங்களில் இந்தக் கருத்துக்களைக் கலப்பற்ற ஒரு தனிநிலைத் தத்துவமாகவே சொல்லியிருக்கிறார்கள். சிலர் சூட்சுமத் தத்துவமாக இதைக் கூறுகிறார்கள். சிலர் எங்கும் நிறைந்த ஒரு சக்தியாக இதைக் கருதுகிறார்கள். கடவுள் என்னும் சூட்சும உருவமாகச் சிலர் கூறுகிறார்கள். சிலர் அறநெறிக் கோட்பாடாகக் கருதுகிறார்கள். எல்லா பொருட்களின் உள்ளும் ஊடுருவி நிற்கும் சாரமாக வேறு சிலர் கூறுகிறார்கள்.

தற்காலத்திலு<ம்கூட, புலன்களுக்கு அப்பாற்பட்ட மனநிலையோடு தொடர்பு கொள்ளாமலேயே செய்யப்படும் மதப் பிரச்சாரத்தின் பலவித முயற்சிகளும், பழங்காலத்தினரின் தத்துவங்களையே வேறு பெயர்களில் சொல்வதாக அமைகிறது. அதாவது ஒழுக்கக் கோட்பாடு லட்சிய ஒருமை என்று பலவாறாகக் கூற வேண்டியிருக்கிறது. இந்தத் தத்துவங்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை இவர்களின் இந்தச் செயல்கள் எல்லாம் காட்டுகின்றன.

நாம் யாரும் இதுவரை ஒரு லட்சிய புருஷனைப் பார்த்ததில்லை. ஆனாலும் அப்படிப்பட்ட ஒருவரை நம்பச் சொல்கிறார்கள், லட்சிய பூரண மனிதன் யாரையும் நாம் இதுவரை பார்த்ததில்லை. ஆனாலும் அத்தகைய ஒரு குறிக்கோள் இல்லாமல் நம்மால் முன்னேற முடியாது.

பல மதங்களின் கருத்துக்களிலிருந்து ஓர் உண்மை நமக்குப் புலப்படுகிறது. எல்லோருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டிய ஒரு தத்துவம் இருக்கிறது. அதை உருவமுள்ளதாகவோ உருவமற்றதாகவோ, ஓர் அறநியதியாகவோல, ஒரு தோற்றமாகவோ அல்லது எல்லாவற்றுள்ளும் ஊடுருவி நிற்கும் சாரமாகவோ மதங்கள் நம்முன் வைக்கின்றன. இந்தக் குறிக்கோளை அடையவே நாம் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறோம். யாராயிருந்தாலும் சரி, எங்கேயிருந்தாலும் சரி, எல்லையற்ற சக்தியே ஒவ்வொருவருக்கும் குறிக்கோளாக இருக்கிறது. எல்லையற்ற ஆனந்தமோ குறிக்கோளாக இருக்கிறது. எல்லையற்ற சக்திக்காகவோ எல்லையற்ற ஆனந்தத்திற்காகவோ நடக்கும் போராட்டமே, நம்மைச் சுற்றி நாம் காணும் பல செயல்களுக்கும் இயக்கங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

எல்லையற்ற சக்தியை அடையவே தாங்கள் போராடினாலும், புலன்களால் அதை அடைய முடியாது. என்பதைச் சிலர் விரைவில் அறிந்து கொள்கிறார்கள். எல்லையற்ற ஆனந்தத்தைப் புலன்கள் மூலமாக அடைய முடியாது. அதாவது, எல்லையற்றதை வெளிப்படுத்துவதற்கு, எல்லைக்குக் கட்டுப்பட்ட புலன்களாலும் உடலா<லும் முடியாது என்று அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். எல்லைக்குட்பட்ட ஒன்றின் மூலம் எல்லையற்றதை வெளிப்படுத்த முடியாது என்பதை உடனேயோ தாமதித்தோ அறிந்து, இத்தகைய முயற்சியைச் சீக்கிரமே மனிதன் கைவிட வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியை விட்டுவிடுவதே, துறப்பதே, நீதிநெறிக்கு அடிப்படையாக அமைகிறது. நீதிநெறியின் அடிப்படையே துறவுதான். துறவை அடிப்படையாகக் கொள்ளாத நீதிநெறியை இதுவரை யாரும் பிரச்சாரம் செய்ததில்லை. நான் அல்ல நீதான் என்றே நீதிநெறி எப்போதும் கூறுகிறது.

புலன்களின் மூலம் எல்லையற்ற சக்தியையும் ஆனந்தத்தையும் அடைவதற்கு மனிதன் முயலும்போது, தனித்துவத்தைப் பற்றிய கருத்துக்களைத் துறந்துவிட வேண்டும் என்று நீதிநெறி விதிகள் கூறுகின்றன. மற்றவர்களை முன்னால் வைத்து நீ பின்னால் இருக்க வேண்டும் நான்தான் முதலில் என்று புலன்கள் கூறுகின்றன. அறநெறியோ நான்தான் கடைசி என்று கூறுகிறது.

இவ்வாறு எல்லா நீதிநெறிக் கோட்பாடுகளும் துறவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அதாவது ஜடப்பொருள் நிலையில் நான் என்பதை அழித்துக் கொள்வதுதான் நன்நெறியே தவிர, வளர்த்துக் கொள்வதல்ல. எல்லையற்றது ஒருநாளும் ஜடப்பொருள் நிலையில் வெளிப்படாது. அது நடைபெற முடியாததும் நினைக்க முடியாததுமாகும். மனிதன் ஜடப்பொருள் நிலையைவிட்டு உயர்ந்த நிலைகளுக்குச் சென்றால்தான், எல்லையற்றதைப் பற்றிய அறிவு அவனுக்கு ஏற்படும். இந்த முறையைப் பின்பற்றியே எல்லா நீதிநெறிக் கோட்பாடுகளும் அமைந்துள்ளன. எல்லாவற்றின் மையக் கருத்தும் நிரந்தரமாகத் தன்னலத்தை விடுவதுதான். முழுமையான தன்னல மறுப்பே அறநெறியின் குறிக்கோளாகும்.

தனித்துவத்தைப்பற்றி நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னாலே மனிதர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். தங்கள் தனித்துவம் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளும் அந்த நிலையை இழப்பதற்கு மிகவும் பயப்படுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களே நீதிநெறியின் உயர்ந்த குறிக்கோள்களைச் சரி என்று ஒப்புக்கொள்கிறார்கள். அந்த நீதிநெறியின் நோக்கம், குறிக்கோள், கருத்து எல்லாமே தனித்துவத்தை அழிப்பதே தவிர, வளர்ப்பதல்ல என்பதை அவர்கள் கணநேரமும் நினைத்துப் பார்ப்பதில்லை.


பயன்கருதும் அளவுகோல்களைக் கொண்டு மனிதனின் நீதிநெறி உறவுகளை விளக்க முடியாது. முதலாவதாக, பயன்கருதும் நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டு, எந்த நீதிநெறி விதியையும் உருவாக்க முடியாது. இயற்கையைக் கடந்து ஒன்றின் அனுமதி இல்லாமல், அல்லது உணர்வுகடந்த நிலை என்று நான் கூறுகின்ற நிலையை அடையாமல் எந்த நீதிநெறியும் இருக்க முடியாது. எல்லையற்றதை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றி, ஒரு குறிக் கோள் இருக்க முடியாது. மனிதர்களைத் தங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டிற்குள் சிறைப்படுத்தி வைக்க விரும்பும் எந்த நெறியாலும் மனித குலத்தின் நீதிநெறிக் கோட்பாடுகளை விளக்க முடியாது. எல்லையற்ற பொருளுக்கான போராட்டம், புலன்களுக்கு அப்பால் உள்ள நிலையை அடைவது இவையெல்லாம் நடக்காதது, அசட்டுத் தனமானது என்று கூறி அவற்றை விட்டுவிடும்படி நம்மிடம் சொல்கிறார்கள் பயன்கருதுவோர், அதே மூச்சில், நீதிநெறி முறைகளைப் பின்பற்றி சமுதாயத்திற்கு நன்மை செய்யுமாறும் கேட்கிறார்கள்.

நாம் எதற்காக நன்மை செய்ய வேண்டும்? நன்மை செய்வது இரண்டாம் பட்சமே. நமக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். நீதிநெறி நமது குறிக்கோள் அல்ல. அது நம் குறிக்கோளுக்கு உதவும் சாதனம் மட்டுமே. ஒரு குறிக்கோள் இல்லையென்றால் நீதிநெறி முறைகளை நாம் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? மற்றவர்களுக்கு நான் எதற்காக நம்மை செய்ய வேண்டும்? ஏன் அவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது? இன்பம்தான் மனித குலத்தின் குறிக்கோள் என்றால், மற்றவர்களைத் துன்புறுத்தி நான் ஏன் இன்பம் பெறக் கூடாது? எது என்னைத் தடுக்க முடியும்?

இரண்டாவதாக, பயன்கருதிச் செயல்புரிவதன் அடிப்படை மிகவும் குறுகியது. இப்பொழுது நடைமுறையிலுள்ள சமுதாயப் பழக்க வழக்கங்களெல்லாம், சமுதாயத்தின் தற்போதைய நிலையை ஆதாரமாகக் கொண்டவை. ஆனால் சமுதாயம் என்றென்றைக்கும் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிப்பதற்கு, பயன்கருதுவோருக்கு என்ன உரிமை இருக்கிறது? பல காலத்திற்கு முன் சமுதாயம் இருக்கவில்லை. இன்னும் சில காலத்திற்குப் பின் இல்லாமலும் போகலாம். அனேகமாக, நாம் இன்னும் உயர்ந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பரிணாமப் பாதையில், நாம் இப்போது இருப்பது ஒரு படியாக இருக்கலாம்,. எனவே சமுதாய அடிப்படையில் மட்டுமே இயற்றப்படும் விதிகள் நிலையானவையாக இருக்க முடியாது. மனித இயல்பின் முழுப் பரிமாணத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ள முடியாது. பயன்கருதும் கொள்கைகள், மிஞ்சிப் போனால் தற்போதைய சமுதாயச் சூழ்நிலையில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு அப்பால் அவற்றிற்கு மதிப்பில்லை.

ஆனால் மதம், ஆன்மீகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்த எந்த ஒழுக்கநெறியும் சரி, நீதிநெறிக் கோட்பாடுகளும் சரி எல்லையற்ற மனிதத் தத்துவம் முழுவதையுமே தனது எல்லையாகக் கொண்டுள்ளது. இது தனிமனிதனைக் கருத்தில் கொள்கிறது. ஆனால் அதன் தொடர்புகள் எல்லையற்றதுடன் உள்ளது. அது சமுதாயத்தையும் கருத்தில் கொள்கிறது. சமுதாயம் என்பது தனிமனிதர்கள் பலரின் சேர்க்கைதானே! தனிமனிதனுக்கும் அவனது நிலையான உறவுகளுக்கும் இந்த நீதிநெறி பொருந்துமானால் சமுதாயத்திற்கும் அது எந்த நிலையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பொருந்தும். ஆகவே மனித குலத்திற்கு என்றுமே ஆன்மீக மதம் அவசியமாக இருப்பதை நாம் காண்கிறோம். எவ்வளவுதான் இன்பம் தருவதாக இருந்தாலும், ஜடப்பொருட்களைப் பற்றியே மனிதன் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்க முடியாது.

ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடுவது, நடைமுறை உறவுகளைக் குலைக்கிறது என்று சொல்லப்படுகிறது. சீன ஞானி கன்பூஷியஸ் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, இந்த உலகைக் கவனிப்போம். இந்த உலவ விவகாரங்களை முடித்த பிறகு மறு உலகங்களைப்பற்றிக் கவனிப்போம் என்ற கருத்து இருந்தது. இந்த உலக விவரங்களைக் கவனிப்பது மிகவும் நல்லதே. ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபடுவது நம் நடைமுறை என்று சொல்லப்படுகின்ற உலக விவகாரங்களில் அதிகமாக ஈடுபடுவது இம்மை மறுமை இரண்டையுமே பாதிக்கும். அது நன்மை உலோகாயதர்களாக்கி விடும். ஏனெனில் மனிதன் இயற்கையைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டியவன் அல்ல, அதற்கும் மேலே போக வேண்டியவன்.

இயற்கையைக் கடந்து செல்லப் போராடிக் கொண்டிருக்கும் வரைதான் மனிதன் மனிதனாக இருக்க முடியும். இயற்கை என்பது அக இயற்கை, புற இயற்கை இரண்டையுமே குறிக்கிறது. நமது உடம்பிலும் அதற்கு வெளியேயும் உள்ள ஜடப்பொருளின் மூலக்கூறுகளை அடக்கி ஆள்கின்ற நியதிகள் மட்டுமல்ல, நம்முள் இருக்கும் நுண் இயற்கையும் இவற்றின் ஆளுகைக்கு உட்பட்டதே. இந்த நுண் இயற்கையே உண்மையில், புற இயற்கையை நடத்தும் சக்தியாகும். புற இயற்கையை செல்வது நல்லது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. அக இயற்கையை வெல்வது அதைவிடச் சிறந்தது. நட்சத்திரங்களையும் கிரகங்களையும் ஆள்கின்ற நியதிகளைப் பற்றித் தெரிந்துகொள்வது சிறப்பானது. நல்லது. ஆனால் மனித குலத்தின் ஆசைகள், உணர்ச்சிகள், மனம் இவற்றைப் பற்றிய நியதிகளைத் தெரிந்து கொள்வது கோடிமடங்கு நல்லதும் சிறந்ததுமாகும். இந்த அக மனிதனை வெல்வது , மனித மனத்தின் நுண்ணிய செயல்பாடுகளின் ரகசியங்களைத் தெரிந்து கொள்வது- இவை மதத்திற்கு மட்டுமே சொந்தமானவை.

மனித இயல்பு, அதாவது சாதாரண மனித இயல்பு பெரிய ஜட உண்மைகளையே அறிய விரும்புகிறது. சாதாரண மனிதனால் நுண்ணிய எதையும் புரிந்து கொள்ள முடியாது. பாமர மக்கள், ஆயிரம் ஆட்டுக் குட்டிகளைக் கொல்லு<ம் சிங்கத்தை வியந்து பாராட்டுகின்றனர். இது சிங்கத்திற்குக் கணநேர வெற்றி ஆனால் இறந்த ஆயிரம் ஆட்டுக் குட்டிகளைப்பற்றி அவர்கள் துளிகூடப் பச்சாதாபப்படுவதில்லை என்று சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள் உடல் வலிமையின் வெளிப்பாடுகளில்தான் அதிக இன்பம் காண்கிறார்கள். சாதாரண மக்களிடம் நாம் இந்தத் தன்மையையே காண்கிறோம். புற விஷயங்களில்தான் அவர்கள் இன்பம் காண்கிறார்கள். அவற்றை மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் புலன் இன்பத்தைப் பொருட்படுத்தாத சிலர் ஒவ்வொரு சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் புலன்களைக் கடந்தவற்றில் இன்பம் காண்கிறார்கள். ஜடத்தைவிட உயர்ந்ததன் கணநேரக் காட்சி இவர்களுக்கு அவ்வப்போது கிடைக்கிறது. அதை அடைய அவர்கள் போராடுகிறார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை பெருகும்போதுதான் ஒரு நாடு உயர்வடைகிறது. பயன்கருதுவோர் இதனை வீண் முயற்சி என்று சொன்னாலும் எல்லையற்றதை நோக்கிச் செல்லும் இந்த முயற்சிகள் நின்றுபோகும் போதுதான் ஒரு நாடு தாழ்வடைகிறது. சமுதாயங்களின் வரலாறுகளை ஊன்றிப் படித்தால் இந்த உண்மை புலனாகும். அதாவது, ஒவ்வோர் இனத்தின் வலிமைக்கும் ஆதார ஊற்று அதன் ஆன்மீகம் தான். ஆன்மீகம் தளர்ந்து, உலோகாயதம் வலுப்படும் போது அந்த இனத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது.

மதத்திலிருந்து உறுதியான தத்துவங்களையும் உண்மைகளையும் கற்றுக் கொள்கிறோம். மதத்தின் மூலம் பல வசதிகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது தவிர மதத்தை ஒரு விஞ்ஞானமாக, ஆராய்ச்சிக்கு உரியதாகக் கொண்டால், அது மனித மனத்திற்குக் கிடைக்கக் கூடிய உயர்ந்த, சிறந்த ஆரோக்கியமான பயிற்சியாகவும் அமையும். எல்லையற்றதை அடைவதற்கான இந்தத் தேடல், அதைப் பற்றுவதற்கான இந்தப் போராட்டம், புலன்களின் கட்டுப்பாடுகளைக் கடந்து செல்வதற்கான இந்த முயற்சி, அதாவது ஜடத்திலிருந்து ஆன்மீகமனிதனை உருவாக்குவது போன்ற இந்த முயற்சி, எல்லையற்றதை நம்மோடு ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக அல்லும் பகலும் நடக்கும் இந்த முயற்சி இந்த முயற்சிதான் இந்தப் போராட்டம்தான் மனிதன் செய்கின்ற போராட்டங்களிலெல்லாம் மிகவும் பெருமையானதும் சிறப்பு மிக்கதுமாகும்.

உண்பதிலேயே சிலர் பேரானந்தம் அடைகின்றனர். அவர்கள் அவ்வாறு ஆனந்தம் அடையக் கூடாது என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. குறிப்பிட்ட சில பொருட்களை உடைமையாகக் கொள்வதில் சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர். அதையும் தடுக்க நமக்கு உரிமையில்லை. அதேபோல் ஆன்மீகச் சிந்தனையில் மிகவுயர்ந்த ஆனந்தம் காணும் மனிதனைத் தடுக்க ம்றவர்களுக்கும் உரிமை இல்லை. பரிணாம வளர்ச்சியில் ஓர் உயிர் எவ்வளவு கீழ்மட்டத்தில் உள்ளதோ அவ்வளவு அதிகம் அது புலன்களில் இன்பம் காணும், நாயையோ ஓநாயையோ போன்று ஆர்வத்துடன் ஒருசில மனிதர்களால் மட்டுமே உண்ண முடியும். நாய் அல்லது ஓநாயின் இன்பமெல்லாம் புலன்களைப் பற்றிக்கொண்டுள்ளதுபோல் தோன்றுகிறது. எல்லா நாடுகளிலுமே, மனிதகுலத்தின் கீழ்ப்படிகளில் உள்ளவர்கள் புலன்களில்தான் இன்பம் காண்கின்றனர். படித்தவர்களும் பண்பட்டவர்களும் சிந்தனை, தத்துவம், கலை, அறிவியல் இவற்றில் இன்பம் காண்கின்றனர். அது எல்லையற்றதானதால் அதன் நிலையும் மிகவுயர்ந்தது; அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு அதில் கிடைக்கும் இன்பமும் மிகவுயர்ந்தது. ஆகவே மனிதன் இன்பத்தைத் தேட வேண்டும் என்ற பயன்கருதும் கொள்கைப்படி பார்த்தாலும் அவன் மதச் சிந்தனைகளை வளர்க்கவே வேண்டும். ஏனெனில் அதில்தான் மிகவுயர்ந்த இன்பம் உள்ளது. ஆகவே மத ஆராய்ச்சி மிகவும் அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பலன்களைக் கொண்டு இந்த உண்மையை அறியலாம்.

மனித மனத்தை முன்னேற வைப்பதற்கான தூண்டுசக்திகளுள் மிகவும் சிறந்தது மதம். ஆன்மீகம் நமக்குத் தரும் சக்தியைப் போன்று வேறு எந்த லட்சியமும் தருவதில்லை. மனித வரலாற்றைப் பார்ப்போமானால், இப்படித்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்பதும், ஆன்மீக சக்திகள் அழிந்துவிடவில்லை என்பதும் நமக்குத் தெரிய வரும். பயன்கருதும் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதர்கள் நல்லவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் இருக்க முடியும் என்பதை நான் மறுக்கவில்லை. பயன்கருதும் நோக்கத்தை மட்டுமே கடைப்பிடித்து, ஒழுக்கசீலர்களாகவும் நல்லவர்களாகவும் பலர் இந்த உலகில் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் உலகையே அசைப்பவர்கள், உலகம் முழுவதிலுமே ஒரு கவர்ச்சி சக்தியைப் பரவச் செய்வதுபோல் வாழ்ந்தவர்கள், யாருடைய சக்தி ஆயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் வேலை செய்கிறதோ அவர்கள், யாருடைய வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் ஆன்மீகத் தீயைக் கொழுந்துவிட்டெரியச் செய்கிறதோ அவர்கள்-இவர்கள் அனைவருடைய பின்னணியிலும் ஆன்மீகம் ஒளிர்வதை நாம் எப்போதும் காண்கிறோம். அவர்கள் இந்தத் தூண்டுசக்தியை மதத்திலிருந்து பெறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவும் பிறப்புரிமையாகவும் உள்ள எல்லையற்ற ஆற்றலை அடைய உதவுகின்ற மிக உன்னதமான தூண்டுசக்தி மதம். குணத்தை உருவாக்குவதிலு<ம், நல்ல சிறந்த அனைத்தையும் தருவதிலும், மற்றவர்களுக்கும் தனக்கும் அமைதியை அளிப்பதிலும் மிக உன்னதமான தூண்டுசக்தி மதமே. மதத்தை இந்த நோக்கிலிருந்துதான் ஆராய வேண்டும்.

முன்னைவிடப் பரந்த அடிப்படையில் மதத்தை நாம் ஆராய வேண்டும். மதத்தைப் பற்றிய குறுகிய, எல்லைக்கு உட்பட்ட, விவாதத்திற்குரிய கருத்துக்களை விட்டுவிட வேண்டும். மதப் பிரிவுகள் மற்றும் இனம், நாடு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட மதக் கருத்துக்களை நாம் கைவிட வேண்டும். ஒவ்வோர் இனமும் ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனிக் கடவுளை அமைத்துக் கொண்டு, மற்றவர்களின் கடவுள் தவறு என்று நினைப்பது கடந்த காலத்திற்கே உரிய மூட நம்பிக்கை. இதைப்போன்ற எல்லா கருத்துக்களையும் நாம் ஒதுக்கிவிட வேண்டும்.

மனித மனம் விரிடையுந்தோறும் அதன் ஆன்மீகமும் படிப்படியாக விரிவடைகிறது. உலகின் எல்லா மூலைமுடுக்குகளையும் சென்றடையாத ஒரு சிறு எண்ணத்தைக் கூட மனிதனால் நினைக்கவே முடியாத காலம் வந்து விட்டது. எந்திரங்கள்மூலம் உலகம் முழுவதோடும் நாம் தொடர்பு கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஆகவே உலகின் எதிர்கால மதங்கள் உலகம் முழுவதையுமே தழுவக் கூடியனவாகவும் பரந்த எண்ணங்கள் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையனவாக மதங்கள் இருக்க வேண்டும். கடவுளைப் பற்றிய தங்கள் லட்சியங்கள் வேறுபட்டிருப்பதற்காக ஒன்றையொன்று வெறுப்புடன் பார்க்கக் கூடாது. கடவுள் நம்பிக்கையற்ற அதாவது நாம் கடவுள் என்றால் எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்படிப் புரிந்துகொள்ளாத், எத்தனையோ ஆன்மீகச் செம்மல்களையும் சான்றோர்களையும் நான் என் வாழ் நாளில் கண்டுள்ளேன். ஒருவேளை அவர்கள் நம்மைவிடச் சிறந்த முறையில் கடவுளைப் புரிந்து கொண்டிருக்கலாம்

கடவுளைப் பற்றிய சகுணக் கருத்துக்களான உருவமுடையவர், எல்லையற்றவர், அறநெறி, லட்சிய மனிதர் போன்ற எல்லாமே மதம் என்ற தலைப்பில் அடங்க வேண்டும். இவ்வாறு, மதங்களெல்லாம் விரிந்த கருத்துக்கள் உடையனவாகும்போது, நல்லது செய்யும் அவற்றின் ஆற்றலும் பல நூறு மடங்கு பெருகிவிடும். மாபெரும் சக்தி வாய்ந்தவையான மதங்கள், குறுகிய நோக்கத்தின் காரணமாகவும் குறுகிய கட்டுப்பாடுகளின் காரணமாகவும், உலகிற்கு நன்மையைவிடத் தீமையே அதிகம் செய்துள்ளன. தற்காலத்தில்கூட, ஏறக்குறைய ஒரேவிதமான கருத்துக்களைக் கொண்ட பிரிவுளும் சமுதாயங்களும் அந்தக் கருத்துக்களை ஒரேவிதமாக வெளியிடாததால், தம்முள் சண்டையிட்டுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். எனவே மதங்கள் இன்னும் விரிய வேண்டும். மதக் கருத்துக்கள் உலகம் தழுவுவனவாக, விரிந்து பரந்தனவாக, எல்லையற்றனவாக மாற வேண்டும். அப்போது தான் மதம் தன் முழு ஆதிக்கத்தையும் செலுத்த முடியும். ஏனெனில் மதத்தின் ஆற்றல் உலகத்தில் இப்போதுதான் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

மதங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஆன்மீகச் சிந்தனைகள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று சிலவேளைகளில் சொல்லக் கேட்கிறோம்,. ஆனால் அவை இப்பொழுதுதான் வளர ஆரம்பித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. விரிவபடுத்தப்பட்ட, தூய்மைப்படுத்தப்பட்ட மத சக்தி என்பது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவப் போகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம் அல்லது புரோகிதர்களின் கைகளில் இருந்ததுவரை, மதம் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் புத்தகங்களிலும் கொள்கைகளிலும் விழாக்களிலும் உருவங்களிலும் சடங்குகளிலும் மட்டும் தான் அடங்கி இருந்தது. ஆனால் உண்மையான, ஆன்மீகமயமான, உலகம்தழுவிய கருத்துக்களை எய்தும் போது மட்டுமே மதம் உண்மையாக உயிர்த்துடிப்பு கொண்டதாக முடியும். அப்பொழுதுதான் மதம் நம் இயல்போடு ஒன்றும்; ஒவ்வொரு கணமும் நம்முடன் வாழும்; நம் சமுதாயத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஊடுருவி நிற்கும்; இதற்கெல்லாம் மேலாக, இதுவரை இருந்ததைவிட, நல்லது செய்வதற்கு எல்லையற்ற ஆற்றல் உடையதாக மாறும்.

வாழ்ந்தால் எல்லாம் வாழும். வீழ்ந்தால் எல்லாம் வீழும் என்கிற நிலைமை இருப்பதால் பல்வேறு மதங்களுக்கிடையே இப்போது தேவைப்படுவது நட்புறவுதான். இந்த நட்புறவு பரஸ்பர மதிப்பையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த நட்புறவு, இப்போது பல மதங்களில் துரதிரிஷ்டவசமாகக் காணப்படுவதான, தாமே உயர்ந்தவை, மற்றவை தாழ்ந்தவை, தம் ஆதரவு அவற்றிற்குத் தேவைப்படுகிறது, என்பன போன்ற குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் உள்ள போலி நட்புறவாக இருக்கக்கூடாது. ஒருபுறம், மனத்தினுடைய செயல்பாடுகளின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த, துரதிர்ஷ்டவசமாக, மதம் என்ற பெயருக்கு இப்போதும் தாங்களே முழு உரிமை உள்ளவை என்று கூறுகின்ற மதக் கருத்துக்கள்; மறுபுறம் பூமியில் நின்றுகொண்டு, அதேவேளையில் வானத்தின் ரகசியங்களைத் தங்கள் அறிவால் ஆராய்கின்ற அதாவது பவுதீக விஞ்ஞானக் கருத்துக்கள். இவை இரண்டிற்கும் இடையேதான் இந்த நட்புறவு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.

இந்த ஒற்றுமை உருவாவதற்காக, இருசாராரும் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்தத் தியாகங்கள் சில வேளைகளில் மிகப் பெரியதாகவும், சிலவேளைகளில் மிகவும் துன்பம் தருவனவாகவும் இருக்கக்கூடும். ஆனால் இந்தத் தியாகங்களின் மூலம் தங்கள் நிலை உயர்ந்திருப்பதையும், தாங்கள் உண்மையை நோக்கி நன்கு முன்னேறியிருப்பதையும் இவர்கள் அறிந்துகொள்ள முடியும். முடிவில், காலம் இடம் இந்த இரண்டு பரிமாணங்களின் ஆளுகைக்கு உட்பட்டு நிற்கும் அறிவானது, காலம் இடம், மனம், புலன்கள் இவற்றையெல்லாம் கடந்து நிற்கக்கூடிய முழுமையான, எல்லையற்ற, இரண்டற்ற ஒன்றாகிய தத்துவத்தை அடைந்து இரண்டறக் கலந்துவிடும்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,