எது சிறந்த கல்வி தெரியுமா? - சுவாமி விவேகானந்தர்


எது சிறந்த கல்வி தெரியுமா? - சுவாமி விவேகானந்தர்
1
மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை (நிறைநிலை, ணீஞுணூஞூஞுஞிtடிணிண) என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும். நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம். அந்த புவியீர்ப்புச் சக்தி எங்காவது ஒரு மூலையில் நியூட்டன் வருவார் என்று உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்ததா? அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார்.

2. காலமெல்லாம் உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கும் அறிவு முழுவதும், மனதிலிருந்துதான் வந்திருக்கிறது.
பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல் நிலையம் உன்னுடைய உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. வெளி உலகம் வெறும் ஒரு தூண்டுதலாக மட்டும் அமைகிறது; அது உன்னுடைய உள்ளத்தை நீ ஆராய்வதற்குத் தேவையான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

3. நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும், மனவலிமையை வளர்ப்பதாகவும், விரிந்த அறிவைத் தருவதாகவும், ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக்கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நமக்குத் தேவை.

4. மனஉறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும், கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, (ஆக்கபூர்வமாகப்) பயன் தரும் வகையில் அமைவதற்கு உரிய பயிற்சிதான் கல்வியாகும்.

5. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் ஒரு போராட்டம். இதை மக்கள் எதிர்கொள்வதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கும் உரிய தகுதியைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். உறுதியான நல்ல ஒழுக்கத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆர்வத்தைத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டும். சிங்கம் போன்ற மனஉறுதியை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுவதாகக் கல்வி இருக்க வேண்டும். கல்வி என்பது ஒருவனுக்குத் தன்னம்பிக்கையைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வி, ஒருவன் தன்னுடைய சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

6. கல்வி! கல்வி! கல்வி ஒன்றே இப்போது நமக்குத் தேவை!

ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக்கூட, கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நம் நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து, நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை.

7.வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல மனதை ஒருமுகப்படுத்துவதுதான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.

8. இந்தியாவிலுள்ள எல்லாத் தீமைகளுக்கும், நம் நாட்டு ஏழைகளின் தாழ்ந்த நிலைதான் அடிப்படைக் காரணம்.
தாழ்ந்த நிலையில் இருக்கும் நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்யவேண்டிய ஒரே சேவையாகும்... உயர்ந்த கருத்துகளை அவர்களுக்குக் கொடுங்கள். அந்த ஒரே ஒரு உதவிதான் அவர்களுக்கு இப்போது தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக மற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.

9. தலைமுறை தலைமுறையாக நிலவிய, வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய கல்வி முறை இப்போது கிட்டதட்ட அழிக்கப்பட்டுவிட்டது. இதுவா கல்வி முறை? வெளியே ஓடும் மனதைத் தடுத்து நிறுத்திய கல்வி முறை, தலைமுறை தலைமுறையாக முன்பு நம் நாட்டில் இருந்தது. அது இப்போது கிட்டதட்ட அழிக்கப்பட்டுவிட்டது.

10. குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவதுதான் சிறந்த கல்விமுறை.
ஆசிரியரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.

11. சமுதாயத்தில் ஆண் பெண் அனைவருக்கும், உண்மையான கல்வியை அளிப்பது நமது கடமையாகும். அந்தக் கல்வி மூலமாக அவர்கள் தங்களுக்கு, நல்லது எது, கெட்டது எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்; அதன் மூலம் கெட்டதை நீக்கி விடுவார்கள். அதன் பிறகு சமுதாயத்தில் வலிந்து ஒன்றை நிறுவவோ எதையும் அழிக்கவோ வேண்டியதில்லை. என்று

12. தாழ்ந்த மக்களுக்குப் பண்பாட்டையும் கல்வியையும் அளித்து, அவர்களை அறியாமை என்ற தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்.

13. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டு மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவாற்றல் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. நாம் மீண்டும் உயர்வடைய வேண்டுமானால், பொதுமக்கள் எல்லோருக்கும் கல்வியைப் பரப்பியாக வேண்டும். பொதுமக்களுக்குக் கல்வியைத் தந்து அவர்களை உயர்த்தி விடுங்கள். இது ஒன்றே ஒன்றுதான் நமது சிறப்பைப் பெறுவதற்கு உரிய ஒரே ஒரு வழியாகும்.

14. நாம் அமைக்கும் கல்வி 1. நாடு முழுவதற்கும் பொதுவாக விளங்கும் கல்வியாக இருக்க வேண்டும், 2.ஆன்மிகம் கொண்டதாகவும்,

3.உலக நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
மேலும் இந்தியாவின் தேசிய பண்பாட்டிற்கு ஏற்றதாகவும், வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூடிய பண்பாட்டுக் கல்வியாகவும் இருப்பது அவசியம்.

15. கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும். வாழ்க்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவையாக்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக்கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

16. உண்மையான கல்வியை என்னவோ இன்னும் நம்மால் வகுக்க முடியவில்லலை... நான் எதற்கும் இலக்கணம் வகுப்பது இல்லை; ஆனால் அதை ஒருவாறு கூறலாம் உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது.

17. கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி, முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்.

18. என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் கேரிக்கமாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக்கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.

19. மதம் என்பதுதான் கல்வியின் உட்சாரம் என்றே நான் கருதுகிறேன்.

20. ஆன்மிக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலகஅறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

21. தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது. நமது பணி முக்கியமாக கல்விப் பணியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம், கல்வியறிவு இரண்டையும் அது புகட்ட வேண்டும்.

22. கல்வி பரவாமல், அறிவு உதிக்காமல் நாட்டில் முன்னேற்றம் எப்படி ஏற்பட முடியும்?
... முதலில் சாதாரண மக்களிடமும் பெண்களிடமும் கல்வியைப் பரப்ப வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் இப்போதைய நிலைமையை முன்னேற்றவே முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொள்.
...புராணங்கள், இதிகாசங்கள், வீட்டு வேலைகள், கலைகள், குடும்ப வாழ்வின் கடமைகள், சிறந்த ஒழுக்கத்தை வளர்க்கும் அடிப்படைக் குணங்கள் முதலியவற்றை நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் தர்மம், நீதி, ஆன்மிகம் முதலியவற்றிலும் மாணவியருக்குப் பயிற்சி தர வேண்டும். ...கல்வியும், அறவாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட பெண்கள் உள்ள குடும்பங்களில்தான் மாமனிதர்கள் பிறப்பார்கள்.

23. நம் பெண்களுக்கு ஆன்மிகம், கலைகள், விஞ்ஞானம், குடும்பக் கடமைகள், சமையல், தையல், சுகாதாரம் இப்படிப்பட்ட எளியைமான பாடங்களைக் கற்பிப்பது நல்லது. ஆனால் வழிபாட்டுமுறை மட்டும் சொல்லித் தருவது போதாது. அவர்கள் பெறும் கல்வி எல்லா விஷயங்களிலும் கண்களைத் திறப்பதாக அமைய வேண்டும். இலட்சியப் பெண்மையின் பண்புகளை எப்போதும் அவர்கள்முன் வைத்து, மிகவுயர்ந்த தியாகத்தில் அவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகுமாறு செய்ய வேண்டும். சீதை, சாவித்திரி, தமயந்தி, லீலாவதி, கனா, மீரா முதலிய உன்னதமானவர்களின் வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லி, அவர்களும் தங்கள் வாழ்க்கையை அதேபோல் உருவாக்கிக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.

24. கல்வியாக இருக்கட்டும் அல்லது, வேறு எதுவாக இருக்கட்டும், ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் சில குறைபாடுகள் நேர்வது இயல்புதான். இப்போது ஆன்மிகத்தை மையமாகக்கொண்டே பெண் கல்வியைப் பரப்ப வேண்டும்.
மற்ற பயிற்சிகளெல்லாம் இரண்டாம் பட்சமாகவே இருக்க வேண்டும். ஆன்மிகக் கல்வி, நல்லொழுக்கம், பிரம்மசரியம் ஆகியவற்றைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும். இந்தியாவில் இப்போது நடைமுறையில் இருக்கும் பெண் கல்வி, ஆன்மிகத்தை இரண்டாம்பட்சமாகவே கொண்டிருக்கிறது.

25. உயர்குடியினர் முதல் சாதாரண மக்கள் வரை கல்வியும் பண்பாடும் படிப்படியாக பரவத் தொடங்கிய நாளிலிருந்தே மேலை நாடுகளின் நவீன நாகரீகத்திற்கும், இந்திய எகிப்து ரோம் நாடுகளின் முற்கால நாகரீகத்திற்கும் இடையே வேற்றுமை வளரத் தொடங்கியது. சாதாரண மக்களிடையே கல்வியும் அறிவும் பரவியதற்கு ஏற்ப, நாடும் முன்னேறுவதை நான் கண் முன் காண்கிறேன். ஆணவம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் எல்லா கல்வியும் புத்திநுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். நாம் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால், நாமும் அந்த வழியில் செல்ல வேண்டும்; அதாவது சாதாரண மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டும்.

26. கல்வி தேசியமயமாக்கப்பட வேண்டும்.
27. நம் நாட்டின் ஆன்மிகம், உலகியல் கல்வி எல்லாமே நம் சொந்தக் கைகளில் இருக்க வேண்டும்; முடிந்தவரை அது தேசிய வழியிலும் தேசிய அமைப்புகளின் மூலமும் தரப்பட வேண்டும். இது மிகப் பெரிய விஷயம், மிகப் பெரிய திட்டம்தான். இதை என்றைக்காவது செயல்படுத்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வேலையை நாம் கட்டாயம் தொடங்கியாக வேண்டும். 

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,