பிரபஞ்சம் - பேரண்டம்!

பிரபஞ்சம் - பேரண்டம்!

நாம் நம்மைச் சுற்றிக் காணும் மலர்களின் காட்சி எழில் நிறைந்தது. காலைக் கதிரவனின் உதயம் அழகு நிறைந்தது, இயற்கையின் வண்ணங்கள் எல்லாம் எழிலோவியங்களாக விளங்குகின்றன. பிரபஞ்சமே அழகு ததும்பித் திளைக்கிறது. மனிதன் உலகில் தோன்றிய காலந்தொட்டே இந்த அழகை அனுபவித்து வருகிறான். மலைகள், கடலைநோக்கி அடித்துப் புரண்டோடும் பெரிய ஆறுகள், திக்குத் தெரியாமல் பரந்து கிடக்கின்ற பாலைவனங்கள், விரிந்த பெருங்கடல், விண்மீன்கள் இறைந்து கிடக்கின்ற வானம் எல்லாமே எழில் மிக்கவை, நுட்பமானவை. ஆம், அவை எல்லாமே நுட்பானவையாக பயபக்தியை ஊட்டுபவையாக உள்ளன. இயற்கை என்று நாம் சொல்கின்ற இந்தப் பெரும் சக்தி, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே மனித மனத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது, மனித சிந்தனையையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பினால் எழுந்தது தான் இவையெல்லாம் என்ன? எங்கிருந்து வந்தன? என்ற கேள்வி.

மனிதன் படைத்தவற்றுள் மிகமிகப் பழமையான வேதங்களில்கூட இதே கேள்வி எழுவதைக் காண்கிறோம்: இது எங்கிருந்து வந்தது? இருப்பு, இல்லாமை எதுவுமே இன்றி இருள் இருளில் மறைந்திருந்தபோது, இந்தப் பிரபஞ்சத்தை யார் படைத்தது? எப்படிப் படைத்தார்கள்? இந்த ரகசியம் யாருக்குத் தெரியும்?

இந்தக் கேள்விகள் இன்றும் நம்மிடையே கேட்கப் பட்டு வருகின்றன. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பலகோடி முயற்சிகள் நடந்திருக்கின்றன. இன்னும் பலகோடி முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு பதிலும் பயனற்றது என்பது பொருளல்ல. இந்தக் கேள்விக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பதிலும் உண்மையின் ஒருபகுதி இருந்தது. காலம் செல்லச்செல்ல இந்த உண்மை உறுதிப்பட்டுக்கொண்டே வருகிறது. இந்தியாவின் புராதனமான தத்துவ ஞானிகள் இந்தக் கேள்விக்கு அளித்த பதிலைத் தற்கால அறிவுடன் இணைத்து உங்கள் முன் வைக்க நான் முயல்கிறேன்.

கேள்விகளுக்கெல்லாம் முந்தியதான இந்தக் கேள்வியின் சில அம்சங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பு, இல்லாமை இரண்டுமற்ற காலம் ஒன்று இருந்தது என்பது முதல் அம்சம். அப்போது இந்த உலகம் இருக்கவில்லை. கடல்கள், சமுத்திரங்கள், ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள், மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பறவைகள் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிய நமது அன்னை பூமி, கிரகங்கள், நட்சத்திர மண்டலங்கள், மற்றும் படைப்பின் எல்லையற்ற பல விசித்திரங்கள் எவையுமே அப்போது இருக்கவில்லை. இது நமக்கு நிச்சயமாகத் தெரியுமா? இந்த முடிவு எப்படி வந்தது என்பதை ஆராய முயல்வோம்.

ஒரு மனிதன் தன்னைச் சுற்றிக் காண்பது என்ன? ஒரு சிறிய செடியை எடுத்துக் கொள்வோம். மனிதன் ஒரு விதையைப் பூமியில் நட்டுத் தண்ணீர் விடுகிறான். சிறிது காலம் கழித்து, ஒரு சிறிய செடி பூமியிலிருந்து தலை நீட்டி, வளர்ந்து, பெரிய மரமாகிறது. பிறகு விதையை விட்டுவிட்டு அது அழிகிறது. விதையிலிருந்து முளைத்து, மரமாகி, மறுபடியும் விதையாகி, இப்படி ஒரு சுழற்சியை அது நிறைவு செய்கிறது.

ஒரு பறவையைப் பார்த்தால், அது முட்டையிலிருந்து பிறந்து, வளர்ந்து, எதிர்காலப் பறவைகளை உண்டாக்கும் விதைகளான முட்டைகளை இட்டுவிட்டு இறக்கிறது. மிருகங்கள், மனிதர்கள், ஆகிய அனைவரின் விஷயமும் இப்படித்தான்.

இயற்கையிலுள்ள எல்லாமே சில விதைகள், சில மூலப்பொருட்கள், சில நுட்பமான உருவங்கள் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. சிறிதுசிறிதாகப் பருத்தன்மை அடைந்து, வளர்ந்து, சிலகாலம் அப்படியே தொடர்ந்து, பின்னர் மறுபடியும் பழைய நுட்பமான ஆரம்ப நிலையை அடைந்து, அடங்கிவிடுகின்றன. சூரிய கிரணங்கள் புகுந்து விளையாடும் மழைத்துளி, கடலிலிருந்து நீராவியாகி காற்றில் வெகுதூரம் மேலே போய், மறுபடியும் நீராக மாறி, பூமிக்கு மறைத்துளியாக வருகிறது. மறுபடியும் இதே சுழற்சி தொடர்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையில் உள்ள எல்லாமே இந்தச் சுழற்சிக்குக் கட்டுப்பட்டவையே. பெரிய மலைகளைப் பனிப்பாறைகளும் ஆறுகளும் அரித்து, மெதுவாக ஆனால் நிச்சயமாக அவற்றை மணல்துகள்களாக மாற்றுகின்றன. இந்தத் துகள்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு, கடல் படுகையில் அடுக்கடுக்காக ஒன்றன்மேல் ஒன்றாகப் படிகின்றன. காலப்போக்கில் இறுகிப் பாறைகளாகி, எதிர்காலத்தில் மலைகளாக எழுகின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. மணலிலிருந்து மலை தோன்றுகிறது; மலைமறுபடியும் மணலாகிறது.

இயற்கையின் இயக்கம் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதுவரை மனித அனுபவத்தில் இதற்கு மாறான கருத்து எழுந்ததில்லை என்பதும், ஒரு மணல்துகள்கள் உண்டாகும் அதே முறையில்தான் பிரம்மாண்டமான சூரியர்களும், நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டாகின்றன என்பதும், ஓர் அணு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அதே முறையில்தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும், பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே விதிதான் நிலவுகிறது என்பதும் உண்மையானால், ஒரு பிடி மண்ணை அறிந்துகொள்வதன் மூலம், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா மண்ணின் இயல்பையும் நாம் அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்கள் கூறுவது சரியானதே ஆகும். ஒரு சிறிய செடியின் வாழ்க்கையை நாம் அறிந்துகொண்டால், இந்தப் பிரபஞ்சத்தை, அது உள்ளபடியே நாம் அறிய முடியும். ஒரு சிறு மணல்துகளின் இயல்பை நாம் அறிந்துகொண்டால், இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் முழுவதையும் நாம் புரிந்து கொள்வோம்.

இதே தர்க்கத்தை இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருத்திப் பார்த்தால், எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் ஒரேமாதிரி இருப்பதை நாம் காணலாம்.மலை, மணலிலிருந்து தோன்றி மறுபடியும் மணலாக மாறுகிறது. ஆறு, நீராவியிலிருந்து தோன்றி மீண்டும் நீராவியாக மாறுகிறது. தாவரம் விதையிலிருந்து தோன்றி விதையிலேயே முடிகிறது. மனித உயிர், மனித உயிரணுக்களிலிருந்து தோன்றி மனித உயிரணுக்களாக முடிகிறது. ஆறுகளும் நட்சத்திரங்களும் கிரகங்களும் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், முகிற்படல நிøலியலிருந்து தோன்றியிருக்கிறது. மறுபடியும் அதே நிலையைத்தான் அது அடைய வேண்டும்.

இதிலிருந்தெல்லாம் நாம் அறிவது என்ன? நுண்நிலை காரணம், தூலநிலை காரியம் என்பதுதான். அழிவு என்றால் காரண நிலையை அடைவதே என்பதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, தத்துவ சாஸ்திரங்கள் அனைத்திற்கும் தந்தையான கபிலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதோ, இங்கே இருக்கும் மேஜையை உடைத்து, அழித்துவிட்டால், அது, நாம் மேஜை என்று சொல்லும் இந்த உருவத்தை அமைப்பதற்குக் காரணமாக இருந்த அதன் நுட்பமான துகள்களாகிய காரண நிலையை அடைந்துவிடுகிறது. மனிதன் இறக்கும்போது, அவனது உடலை உருவாக்கக் காரணமாக இருந்த மூலங்களின் நிலையை அடைகிறான். இந்தப் பூமி அழிந்தால், அதற்கு உருவம் அளித்த மூலகாரணத்தை அடைந்துவிடுகிறது. மூலகாரண நிலையை அடைவதையே நாம் அழிவு என்கிறோம்.

ஆகவே காரணமும் காரியமும் ஒன்றே, வேறு பட்டவை அல்ல என்பது தெரிகிறது. இரண்டும் உருவத்தில்தான் வேறுபடுகின்றன. இந்த டம்ளர் ஒரு காரியம்; இதற்கு ஒரு மூலகாரணம் இருக்கிறது. டம்ளர் என்ற உருவத்தில் அந்தக் காரணம் பொதிந்திருக்கிறது. டம்ளரின் மூலப்பொருள் ஒரு சிறிதளவும், அதற்கு உருவமளித்தவரின் கைகளிலிருந்த சக்தியுமே மூல காரணங்கள், அதாவது உபாதான மற்றும் நிமித்த காரணங்கள். இந்தக் காரணங்கள் இரண்டும் சேர்ந்து, டம்ளர் என்று நாம் சொல்கின்ற இந்த உருவத்தைப் படைத்திருக்கின்றன. டம்ளரைச் செய்தவரின் கையிலிருந்த சக்தியே, மூலப்பொருளின் துகள்கள், தூள் தூளாகப் பிரிந்து விழாமல் இணைக்கும் சக்தியாக டம்ளரில் இருக்கிறது. அதைத் தவிர, மூலப்பொருளும் இந்த டம்ளரில் இருக்கிறது. மூலக்காரணங்களின் புது புது உருவமே டம்ளர் என்னும் வெளிப்பாடு. இந்த டம்ளர் தூள்தூளாக உடைந்துவிட்டால், இணைப்புச் சக்தி அதனுடைய பிறப்பிடமான மூலப்பொருளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். கண்ணாடித் துகள்களோ, புதிய உருவம் எடுக்கும்வரை அப்படியே இருக்கும்.

ஆகவே காரணம் காரியத்திலிருந்து வேறுபடுவதில்லை என்பதைக் காண்கிறோம். காரணம் இன்னும் அதிகமான தூலத் தன்மை அடைவதே காரியமாகும். மேலும், தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் என்று நாம் அழைக்கின்ற உருவங்கள் எல்லாமே முடிவில்லாமல் எழுவதும் விழுவதுமாகச் சுழன்று கொண்டிருப்பதை அறிகிறோம். விதை மரத்தை உண்டாக்குகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இப்படியே மாறிமாறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவே இல்லை. நீர்த்துளிகள், அருவிகளாக மலைகளிலிருந்து இறங்கி ஓடி, கடலில் கலக்கின்றன. அங்கிருந்து நீராவியாக மேலே போய், மறுபடியும் மழையாக மலை உச்சியில் பொழிகின்றன. இதுவும் மாறிமாறி நடந்து வருகிறது. இப்படி எழுவதும் விழுவதுமாக இந்தச் சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன. நம்மால் காணமுடிந்த, உணரமுடிந்த, கேட்கமுடிந்த, கற்பனை செய்யமுடிந்த என்று நம் அறிவுக்கு உட்பட்ட எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன. இது, மனிதர்கள் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது போலிருக்கிறது. படைக்கப்பட்ட எல்லாமே இப்படித்தான் சுழன்று கொண்டிருக்கின்றன. அலை எழுகிறது, விழுகிறது. இவ்வாறே எல்லா செயல்களும் நடைபெறுகின்றன. ஒவ்வோர் உயர்வுக்கும் ஒவ்வொரு தாழ்வும், ஒவ்வோர் தாழ்வுக்கும் ஒவ்வொரு உயர்வும் உண்டு. பிரபஞ்சம் ஒரே திட்டத்தில் நடைபெறுவதால், இதே விதி பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொருந்த வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தை அதனுடைய காரணங்களாகப் பிரிக்க வேண்டும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, உடல், மனம் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே மறைந்து, அழிந்ததுபோலாக வேண்டுமானால் தங்கள் நுட்பமான மூல காரணநிலையை அடைய வேண்டும். ஆனால் அவை மூல காரணங்களில் நுட்ப உருவத்துடன் இருக்கவே செய்யும். இந்த நுட்ப உருவங்களிலிருந்து மறுபடியும் அவை, புதிய பூமிகள், சூரிய சந்திரர்கள், மற்றும் நட்சத்திரங்களாகத் தோன்றுகின்றன.

இப்படி எழுவதையும் விழுவதையும் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மரத்திலிருந்து விதை வருகிறது. அது உடனே மரமாக மாறுவதில்லை. அது சிலநாள் இயக்கமில்லாமல் இருக்கிறது. இதையே வேறுவிதமாகச் சொன்னால், வெளிப்படையாகத் தெரியாத ஒரு நுட்பமான இயக்கத்தில் அது ஈடுபட்டிருக்கிறது. விதை மண்ணுக்கு அடியில் தான் சிலகாலம் இயங்க வேண்டும். அங்கே அது பல துண்டுகளாக உடைந்து, சிதறி, அனேகமாக உருத்தெரியாமல் அழிகிறது. அந்த அழிவிலிருந்துதான், புத்துயிர் பெற்ற தாவரம் உற்பத்தியாகிறது.

பிரபஞ்சமும் ஆரம்பத்தில் சிலகாலம் இதேபோல் தான் நுட்பமான உருவத்துடன் வெளியில் தெரியாமலும் வெளிப்படாமலும் இயங்க வேண்டும். அந்த நிலையையே குழப்ப நிலை என்று சொல்கிறோம். அந்த நிலையிலிருந்துதான் புதிய படைப்பு தோன்றுகிறது. பிரபஞ்சம் நுட்பமான உருவத்துடன் சிலகாலம் இருந்து, பின்னர் வெளித் தோன்றும் இந்தக் கால அளவு சமஸ்கிருதத்தில் ஒரு கல்பம் அதாவது சுழற்சி என்று சொல்லப்படுகிறது.

அடுத்து, குறிப்பாகத் தற்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு கேள்வி எழுகிறது. நுட்பமான உருவங்கள் சிறிதுசிறிதாக வளர்ச்சியடைந்து தூலத்தன்மை பெறுகின்றன என்பதைக் காண்கிறோம். காரணமும் காரியமும் ஒன்றுதான், காரியம் காரணத்தின் வேறு உருவம் என்பதைக் கண்டோம். ஆகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது. காரணமில்லாமல் எதுவும் தோன்ற முடியாது; காரணம் காரியத்தின் வேறு உருவம்.

அப்படியானால் எதிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது? அதற்கு முன்னால் இருந்த நுட்பமான பிரபஞ்சத்திலிருந்துதான். மனிதன் எதிலிருந்து தோன்றினான்? முன்னால் இருந்த நுட்பமான உருவத்திலிருந்துதான். மரம் எதிலிருந்து தோன்றியது? விதையிலிருந்துதான். மரம் முழுவதுமே விதைக்குள் இருந்தது. இப்போது அது வெளிவந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆகவே நுட்பமான உருவில் இருந்த பிரபஞ்சத்திலிருந்து தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தோன்றியிருக்கிறது. அது இப்போது வெளிப்பட்டிருக்கிறது; பின்னர் தன்னுடைய நுட்பமான உருவத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும், மறுபடியும் வெளிப்படும். நுட்பமான உருவங்கள் வெளிப்பட்டுச் சிறிதுசிறிதாகத் தூலத் தன்மையை அடைகிறது. தூல நிலையிலேயே வளர்ந்து அந்தத் தன்மையின் எல்லையை அடைந்தவுடன், பின்னோக்கிப் போக ஆரம்பித்து, மறுபடியும் சிறிதுசிறிதாக நுட்ப நிலையை அடைகின்றன. நுட்ப நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தூலத் தன்மை அடைவதைத்தான், அதாவது பகுதிகளின் அமைப்பில் மாறுபாடு ஏற்படுத்திக் கொள்வதைத்தான் பரிணாமம் என்று தற்காலத்தில் சொல்கிறார்கள்.

இது உண்மை, நிச்சயமான உண்மை. நம் வாழ்க்கையிலேயே நாம் இதைக் காண்கிறோம். பகுத்தறிவுள்ள யாரும் பரிணாமத் தத்துவவாதிகளுடன் வாதிட முடியாது. ஆனால் நாம் இன்னும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போக வேண்டும். அது என்ன ? ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் உண்டு என்பதுதான் அது. விதைதான் மரத்திற்குத் தந்தை. அந்த விதைக்கு இன்னொரு மரம் தந்தையாக இருந்திருக்கிறது. விதை என்ற நுட்பமான உருவத்திலிருந்து தான் பெரிய மரம் வெளிவருகிறது, ஆனால் ஏற்கனவே வேறொரு பெரிய மரம் ஒடுங்கியதால் தோன்றியதுதான் இந்த விதை. இந்த விரிவான பிரபஞ்சம் முழுவதுமே நுட்பமான பிரபஞ்சத்திற்குள் ஒடுங்கியிருக்கிறது. பின்னால் மனிதனாகப் போகின்ற ஒரு சிறிய உயிரணு, உண்மையில், ஒடுங்கிய நிலையிலுள்ள மனிதனே. அது விரிவடைந்து முழு மனிதனாகிறது. இதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால், பரிணாமத் தத்துவவாதிகளுக்கும் நமக்கும் இடையே கருத்து வேற்றுமை இருக்காது. இந்த வாதத்தை அவர்கள் ஒப்புக் கொண்டால், மதத்தை அழிப்பவர்களாக இல்லாமல், மதத்தை ஆதரிப்பவர்களாக மாறிவிடுவார்கள்.

ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். எல்லாம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது; இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் இயக்கம்தான் நுட்பத்திற்குச் செல்வதும், அதிலிருந்து தூலமாக வெளிப்படுவதும், மறுபடியும் நுட்பத்திற்குச் செல்வதுமாக, அலைபோல் எழுவதும் விழுவதுமாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த ஒடுக்கமும் விரிவும் இயற்கை முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் சிறிய உயிர் முதல் முழுமையடைந்த மனித வெளிப்பாடுவரை எல்லா பரிணாம வளர்ச்சியுமே, வேறு ஏதோ ஒன்றின் ஒடுக்கமாகவே இருக்க வேண்டும். எதனுடைய ஒடுக்கம்? எது ஒடுங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. அது கடவுள்தான் என்ற நம் கருத்து தவறு என்று பரிணாமத் தத்துவவாதிகள் கூறுவார்கள். ஏன்? ஏனெனில் கடவுள் அறிவு வடிவானவர் என்று நாம் சொல்கிறோம். ஆனால் பரிணாம வளர்ச்சியில் அறிவு மிகவும் தாமதமாக அல்லவா தோன்றுகிறது என்று பரிணாமவாதிகள் சொல்கிறார்கள். மனிதனிடமும் உயர்நிலையிலுள்ள மிருகங்களிடமும் தான் அறிவு காணப்படுகிறது, எனவே உயிர் தோன்றிப் பலகோடி வருடங்கள் கழிந்த பின்னரே, இந்த அறிவு தோன்றியிருக்கிறது என்றும் பரிணாமவாதிகள் சொல்கிறார்கள்.

நமது கொள்கையின் முன் பரிணாமவாதிகளின் ஆட்சேபம் அடிபட்டுப் போகிறது. மரம் விதையிலிருந்து தோன்றி, மறுபடியும் விதைக்குள்ளேயே ஒடுங்குகிறது. ஆரம்பமும் முடிவும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. பூமி அதன் காரணத்திலிருந்து வெளிவந்து அதற்குள்ளேயே ஒடுங்குகிறது. ஆரம்பம் தெரிந்தால் முடிவும் தெரிந்துவிடும் என்பது நமக்குத்தெரியும். அதேபோல், முடிவு தெரிந்தால் ஆரம்பமும் தெரிந்துவிடும். அப்படியானால், ஒரு முனையில் முதல் உயிரணுவும், மற்றொரு முனையில் நிறைநிலை அடைந்த மனிதனும் உள்ள பரிணாம வளர்ச்சித் தொடரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தொடர் முழுவதும் ஒரே உயிர்தான். பரிணாம வளர்ச்சியின் முடிவில் நிறைமனிதன் இருப்பதால், தொடக்கத்திலும் நிறைமனிதன்தான் இருந்திருக்க வேண்டும். ஆகவே மிக உயர்ந்த அறிவின் ஒடுக்கமே முதல் உயிரணுவாக இருக்க வேண்டும். நமக்கு அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஒடுங்கிய அறிவு சிறிதுசிறிதாகத் தன்னை விரிவுபடுத்தி, கடைசியில் நிறைமனிதனாக வெளிப்படுத்துகிறது.

இதைக் கணித முறையில் நிரூபிக்க முடியும். சக்தியின் அளவு எப்போதும் மாறுவதில்லை என்ற நியதி உண்மையானால், முதலில் ஓர் எந்திரத்தில் எதையும் செலுத்தாமல் அதிலிருந்து எதையும் வெளிக்கொணர முடியாது. நீராவி எந்திரத்திற்குள் நீராகவும் நிலக்கரியாகவும் எவ்வளவு சக்தியைச் செலுத்துகிறோமோ, அதற்கு ஈடான வேலையைத்தான் அதிலிருந்து நாம் பெற முடியுமே தவிர, சிறிதுகூட அதிகமாகவோ குறைவாகவோ பெற முடியாது. காற்று, உணவு, மற்றும் பல பொருட்கள் மூலமாக என் உடலிற்குள் எவ்வளவு சக்தி சென்றிருக்கிறதோ, அதே அளவு வேலையைத்தான் நான் செய்ய முடியும். ஒரு வகைச் சக்தி, இன்னொரு வகைச் சக்தியாக மாறுதலடைந்து வெளிப்படுகிறது, அவ்வளவுதான். இந்தப் பிரபஞ்சத்திற்குள் ஏற்கனவே இருக்கும் சக்திக்கு மேல் சிறிதளவு சக்தியைக்கூடச் சேர்ப்பதோ, இருக்கும் பொருளுக்கு மேல் அணுவளவு பொருளைக்கூடச் சேர்ப்பதோ முடியாது. அல்லது, இருக்கும் பொருளிலிருந்து அணுவளவு பொருளை எடுப்பதோ முடியாத காரியம்.

அப்படியானால் இந்த அறிவு என்பது என்ன? ஏற்கனவே அது முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி இருந்திருக்காவிட்டால், திடீரென்று சூன்யத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும். இது அபத்தம். ஆகவே இயற்கையின் விதிகளைக் கடந்த, எல்லாவற்றையும் கடந்த, பிறப்புஇறப்பு அற்றவனான, பரிணாம வளர்ச்சிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லாதவனான, நிறைமனிதனான சுதந்திரனான, தெய்வமனிதனான, கிறிஸ்து மனிதன், என்று கிறிஸ்தவர்களாலும், புத்த மனிதன் என்று பவுத்தர்களாலும், முக்தன் என்று யோகிகளாலும் அழைக்கப்படுவனான மனிதன், பரிணாம வளர்ச்சியாகிய சங்கிலியின் ஒரு முனையில் இருப்பவனான மனிதன், அந்தப் பரிணாமச் சங்கிலியின் மறுமுனையிலுள்ள முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி இருந்திருக்கவே வேண்டும்.

இதே வாதத்தைப் பிரபஞ்சம் முழுவதற்கும் பொருத்திப் பார்த்தால், படைப்பிற்கு மூலகாரணமே அந்த அறிவுதான் என்பதைக் காண்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தைப்பற்றி மனிதன் கொண்டிருக்கும் மிக உயர்ந்த கருத்து என்ன? எல்லாமே அறிவுதான் என்பதும், பிரபஞ்சத்தின் பகுதிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன என்பதும்தான். பழங்காலத்தில் இந்த அறிவின் வெளிப்பாட்டை ஒழுங்குமுறைக்கொள்கையின் மூலம் விளக்குவதற்கு முயன்றிருக்கிறார்கள். ஆகவே அறிவுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அந்த அறிவு ஒடுங்கியிருக்கிறது. முடிவில் அது முற்றிலும் விரிந்து நிற்கிறது. ஆகவே பிரபஞ்சத்தில் வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற அறிவு முழுவதுமே, பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமான முதல்கருவில் அடங்கியிருந்த அறிவின் விரிவே ஆகும்.

பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும் இந்த அறிவைத் தான் கடவுள் என்கிறோம். வேறு எந்தப் பெயரால் வேண்டுமானாலும் அழையுங்கள். ஆரம்பத்தில் இருந்தது இந்த எல்லையற்ற அறிவுதான் என்பது நிச்சயம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இந்த அறிவு, முதல்கருவில் ஒடுங்கி நின்று, பின்னர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விரிவடைந்து கடைசியில், கிறிஸ்துமனிதன், புத்தமனிதன் என்று நிறைமனிதனாகப் பரிணமிக்கிறது. பிறகு இந்த அறிவு, மூலகாரணத்திற்கு உள்ளேயே மறுபடியும் ஒடுங்கி விடுகிறது. அதானால்தான் எல்லா சாஸ்திரங்களும், நாம் வாழ்வது, இயங்குவது, இருப்பது எல்லாம் அவருள்தான் என்று சொல்கின்றன. நாம் கடவுளிடமிருந்து வந்தோம், கடவுளிடமே திரும்பிச் செல்கிறோம் என்று எல்லா சாஸ்திரங்களும் சொல்கின்றன.

தத்துவச் சொல்லங்காரங்களைக் கண்டு பயப்படாதீர்கள். வார்த்தைகளைக் கண்டு பயப்பட்டால், தத்துவ வாதிகள் ஆவதற்கு நாம் தகுதியற்றவர்கள். பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இந்த அறிவையே தத்துவவாதிகள் கடவுள் என்று சொல்கிறார்கள். கடவுள் என்று அந்தப் பழைய வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்று பலர் என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வார்த்தைதான் நம் நோக்கத்திற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதைவிடச்சிறந்த வார்த்தை நமக்குக் கிடைக்காது. மனித குலத்தின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆனந்தம் எல்லாமே அந்த வார்த்தையில் அடங்கியிருக்கின்றன. இப்போது அந்த வார்த்தையை மாற்றுவது முடியாத காரியம். இது போன்ற வார்த்தைகளை உண்டாக்கியவர்கள் பெரிய மகான்கள். அவர்கள் இத்தகைய வார்த்தைகளின் சக்தியையும் பொருளையும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் சமுதாயத்தில் இந்த வார்த்தைகள் பழக்கத்திற்கு வந்தபோது மூடர்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதன் விளைவாக அவை தங்கள் உண்மைப் பொருளையும் மகிமையையும் இழந்துவிட்டன. கடவுள் என்ற வார்த்தை, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. பிரபஞ்சப் பேரறிவு, புனிதம், உன்னதம் போன்ற வார்த்தைகளால் குறிக்கப்படுகின்ற அனைத்துமே இந்த வார்த்தையில் அடங்கியிருக்கின்றன. யாரோ ஒரு முட்டாள் இந்த வார்த்தை சரியில்லை என்று சொன்னதற்காக அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டுமா என்ன? ஒருவன் வந்து, நான் சொல்லும் வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம். மற்றொருவன் வந்து, நான் சொல்வதைத்தான் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லலாம். முட்டாள்தனமான வார்த்தைகளுக்கு முடிவே இருக்காது. பழைய வார்த்தையையே நாம் பயன்படுத்துவோம். ஆனால் அதை அதனுடைய உண்மையான பொருளில் பயன்படுத்த வேண்டும். அதைச் சார்ந்துள்ள மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பழம்பெரும் வார்த்தையின் உண்மைப் பொருளை உணர வேண்டும். தொடர்பு விதியைப்பற்றி அறிந்திருந்தால், மிகவும் வலிமை வாய்ந்த, உன்னதமான பல கருத்துக்களோடு இந்த வார்த்தை இணைந்திருப்பதை நாம் உணரலாம்.

பலகோடி மக்கள் இத்தகைய வார்த்தைகளைப் பயபக்தியோடு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மிகவும் உன்னதமான, சிறந்த, அறிவுபூர்வமான, அன்புக்கு இலக்கான, ஏன், மனித இயற்கையிலேயே மிகவும் மேலான கருத்துக்களுடன் இவை இணைந்திருக்கின்றன. இந்த வார்த்தைகள் அந்தக்கருத்துக்களை நினைவூட்டுவனவாக இருப்பதால், அவற்றைக் கைவிட முடியாது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று மட்டுமே கூறி இந்தக் கருத்துக்களையெல்லாம் விளக்குவதற்கு நான் முயன்றிருந்தால், உங்களுக்கு என் பேச்சின் பொருள் விளங்கியே இருக்காது. ஆனாலும் இந்த எல்லா போராட்டங்களுக்கும் பிறகு அந்தப் புராதனப் பரம்பொருளை மறுபடியும் நாம் வந்து அடைந்துவிட்டோம்.

ஜடப்பொருள், எண்ணம், சக்தி, அறிவு மற்றும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பல்வேறு சக்திகளும் பிரபஞ்சப் பேரறிவின் வெளிப்பாடுகளே. இனிமேல் நாம் அந்தப் பேரறிவுப் பொருளை ஆண்டவன். என்று குறிப்பிடுவோம். நாம் பார்க்கின்ற கேட்கின்ற உணர்கின்ற எல்லாம், ஏன், பிரபஞ்சம் முழுவதும் அவருடைய படைப்பே; இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரது வெளிப்பாடே, மேலும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவரே. சூரியனாக நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பதும், அன்னைபூமியாக இருப்பதும் அவரே; சமுத்திரம் அவரே; மென்மையான மழைத்தூறல் அவரே; நாம் சுவாசிக்கும் மென்காற்று அவரே; நம் உடலில் சக்தியாக இயங்குவது அவரே; பேச்சு, பேசும் மனிதன் எல்லாம் அவரே; இங்கே சொற்பொழிவைக் கேட்கக் கூடியிருக்கும் கூட்டம் அவரே. நான் நிற்கும் மேடை அவரே; உங்கள் முகங்களைப் பார்ப்பதற்கு எனக்கு உதவுகின்ற ஒளி அவரே; எல்லாம் அவரே. இந்தப்பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே; மிகச் சிறிய முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி நின்று, பிறகு விரிந்து, கடைசியில் கடவுளாக வெளிப்படுவதும் அவரே; மிகச் சிறிய, தாழ்ந்த நிலையிலிருக்கும் அணுவாக ஒடுங்கி, பிறகு விரிந்து, தன்னையே போய் அடைவதும் அவரே; பிரபஞ்சத்தின் ரகசியம் இதுவே.

ஓ, பிரபுவே, ஆணும் நீயே; பெண்ணும் நீயே; இளமை மதர்ப்புடன் நடக்கும் வலிமை வாய்ந்த வாலிபனும் நீயே; ஊன்றுகோலுடன் தள்ளாடும் முதிர்ந்த கிழவனும் நீயே; எல்லாவற்றிலும் இருப்பதும் நீயே; எல்லாமாக இருப்பதும் நீயே. மனித அறிவைத் திருப்தி செய்கின்ற பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்து இது ஒன்று தான். ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நாம் அவரிலிருந்தே தோன்றினோம். அவரிலேயே வாழ்கிறோம், அவரிடமே திரும்புவோம்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,