ஆன்ம சுதந்திரம்!

ஆன்ம சுதந்திரம்!

நாம் இப்போது சாந்தோக்கிய உபநிடதத்தைப் பற்றிப் பார்ப்போம். நாம் இதுவரை பார்த்த கடோபநிடதம் சாந்தோக்கிய உபநிடதத்திற்கு மிகவும் பிற்காலத்தது. கடோபநிடதத்தின் மொழியில் புதுமையும், சிந்தனையில் ஒழுங்குமுறையும் காணப்படுகிறது. பழைய உபநிடதங்களின் மொழி, வேதங்களிலுள்ள பாடல் பகுதிகளைப் போல் மிகவும் பழமையானதாக இருக்கிறது. அவற்றின் முக்கியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்குள், சிலவேளைகளில், எவ்வளவோ தேவையற்ற பகுதிகளைக் கிளற வேண்டியிருக்கிறது. வேதங்களின் இரண்டு பகுதிகளுள் ஒன்று சடங்குகளைப்பற்றி விரிவாகச் சொல்கிறது என்பதை ஏற்கனவே கூறினேன். இதனுடைய மணம் சாந்தோக்கிய உபநிடதத்தில் அதிகமாக வீசுகிறது. இந்த உபநிடதத்தில் பாதிக்குமேல் சடங்குகள் சம்பந்தப்பட்ட தாகவே இருக்கிறது. எது எப்படியானாலும் சரி, பழைய உபநிடதங்களைப் படிப்பதில் ஒரு பெரிய லாபம் இருக்கிறது. அதன்மூலம், ஆன்மீகக் கருத்துக்களுடைய வளர்ச்சியின் வரலாற்றை நாம் காண முடிகிறது.

மிகவும் அண்மைக்கால உபநிடதங்களில் ஆன்மீகக்கருத்துக்களை ஒன்றுசேர்த்து, ஒரே இடத்தில் மொத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, உபநிடதங்களில் கடைசியானது என்று ஒரு வேளை நாம் சொல்லக்கூடிய பகவத்கீதையில் சடங்குகளைப் பற்றிய பேச்சே இல்லை. உபநிடதங்களிலிருந்து திரட்டிய ஆன்மீக உண்மைகளாகிய அழகிய மலர்களால் ஆன செண்டு தான் பகவத்கீதை. ஆனால் ஆன்மீகக் கருத்துக்களின் வளர்ச்சியையோ தோற்றுவாயையோ கீதையிலிருந்து ஒன்றுமே அறிய முடியாது. அவ்வாறு அறிய வேண்டுமானால், பலர் சொல்லியிருப்பதுபோல், வேதங்களைத்தான் ஆராய வேண்டும். வேதங்கள் எப்போதும் புனிதத்துடன் இணைத்தே மதிக்கப்பட்டு வந்தன. இதனால் அவை உலகின் வேறு எந்த நூல்களையும்விட கேடுறாதவையாக இன்றும் இருந்து வருகின்றன. வேதங்களில் மிக உயர்ந்த சிந்தனைகளும் மிகத் தாழ்ந்த சிந்தனைகளும், முக்கியமான சிந்தனைகளும் முக்கியமற்ற சிந்தனைகளும் உள்ளன. சாதாரணமாக விளக்கங்களும் மகோன்னதமான கருத்துக்களும் ஒன்றையடுத்து மற்றொன்றாக இருப்பதை நாம் வேதங்களில் காணலாம். அவற்றில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் இதுவரை தைரியம் ஏற்படவில்லை. விளக்கவுரை ஆசிரியர்கள் வந்தார்கள், அவர்கள் அந்தக் கருத்துக்களைச் சற்று எளிமைப்படுத்தி, அவற்றிலிருந்து புதிய கருத்துக்களை உருவாக்கிக் கொடுக்க முயன்றார்கள். மிகச் சாதாரணமான பகுதிகளிலிருந்தும்கூட ஆன்மீகக் கருத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். ஆனாலும் மூலப்பகுதிகள் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருந்தன. அற்புதமான ஆராய்ச்சிக் குறிப்பேடுகளாகப் பயன்படுகின்றன.

பிற்காலங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப எல்லா மதங்களின் நூல்களிலும் மாற்றங்கள் செய்யப்படுவது நமக்குத் தெரியும். இங்கே ஒரு வார்த்தையை மாற்றுவது, அங்கே ஒரு வார்த்தையைச் சேர்ப்பது போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேத இலக்கியத்தில் இத்தகைய மாறுதல்கள் அனேகமாகச் செய்யப்படவே இல்லை. அப்படியே செய்யப்பட்டிருந்தாலும், அது கவனத்தை ஈர்க்கும் அளவிற்குரியதாக இல்லை. ஆகவே சிந்தனைகளின் உண்மையான ஆரம்ப முக்கியத்துவம் என்ன, அவை படிப்படியாக எவ்வாறு வளர்ந்தன, லவுகீகக் கருத்துக்கள் எவ்வாறு படிப்படியாக நுட்பமான ஆன்மீகக் கருத்துக்களாகப் பரிணமித்து, இறுதியில் வேதாந்தத் தத்துவத்தில் மகோன்னத நிலையை அடைந்தன. என்பதைப் பற்றியெல்லாம் நாம் அறிய முடிகிறது. இவ்வாறு ஆரம்பம் முதலே அறிவதற்கான வாய்ப்பு ஒரு பெரும் நன்மையாகும். பழங்காலப் பழக்கவழக்கங்களைப் பற்றிய சில விவரங்களும் வேதங்களில் உள்ளன. உபநிடதங்களில் அவற்றைப் பற்றிய அதிகமான பேச்சு இல்லை. அவற்றில் கையாளப்பட்டிருக்கும் மொழி சுருக்கமாக, எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் உள்ளது.

இந்த நூல்களை எழுதியவர்கள், சில உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வசதிக்காகச் சில குறிப்புகளை மட்டுமே எழுதி வைத்தார்கள். இந்த உண்மைகள் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தவை என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள், ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அதைக் கேட்பவர்களுக்கு அந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்ற முடிவுடனேயே சொல்கிறார்கள். ஆகவே இதில் ஒரு பெரிய சிரமம் வருகிறது. இப்போது பழைய வழக்கங்களெல்லாம் அனேகமாக மறைந்து, மீதி இருப்பவையும் மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதால், இந்தக் கதைகளின் உண்மையான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. இந்தக் கதைகளுக்கெல்லாம் பல புதிய விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் புராணங்களில் இவை வெறும் உணர்ச்சிப் பரவசப் பாடல்களாக மாறிவிட்டன.

மேலைநாடுகளின் அரசியல் வளர்ச்சியைப் பார்த்தால் சர்வாதிகாரத்தை அவர்களால் தாங்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு தனிமனிதன் தங்களை ஆட்சி செய்வதற்கு இடம் கொடுக்காமலிருக்கவே எப்போதும் அவர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். இவ்வாறு படிப்படியாக, அவர்களுடைய ஜனநாயக மற்றும் லவுகீக சுதந்திரக் கருத்துக்கள் முன்னேற்றம் பெற்று வந்திருக்கின்றன. இந்தியத் தத்துவத்தின் வளர்ச்சியிலும் அதைப் போலவே முன்னேற்றப் போக்குதான் தெரிகிறது. பல தெய்வக் கருத்து போய், ஒரேதெய்வக் கருத்து நிலைபெற்றது. உபநிடதங்களிலோ, அந்த ஒரே கடவுள் கருத்திற்கு எதிராகக்கூடப் புரட்சி நடந்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் தலைவிதியைப் பல ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கிறார்கள் என்ற கருத்து மட்டுமல்ல, ஒரே ஒருவர் ஆட்சி செய்கிறார் என்பதுகூட ஒப்புக்கொள்ளப் படவில்லை. இந்தக் கருத்துதான் முதலில் நம்மைக் கவர்கிறது. இது மேலும்மேலும் வளர்ந்து சிகரத்தையே எட்டி விட்டது. அனேகமாக எல்லா உபநிடதங்களிலும் இந்த உச்சக்கட்டம் கடைசியில் வருகிறது. அதாவது, பிரபஞ்சத்தை ஆளும் கடவுள் யாரும் இல்லை என்ற முடிவே அது. இங்கே சகுணக் கடவுள் மறைந்து நிர்க்குணப் பிரம்மத் தத்துவம் நிலைபெறுகிறது. கடவுள் பிரபஞ்சத்தை ஆள்கின்ற ஒருவர் அல்ல; எவ்வளவோ மேலான ஆற்றல் பெற்ற மானிடர் அல்ல; பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து ஒவ்வோர் உயிரினுள்ளும் உள்ள ஒரு தத்துவமே அவர் என்ற கருத்து நிலைபெற்றது. கடவுள்கருத்து, சகுணத்திலிருந்து நிர்க்குணத்திற்குச் செல்கின்ற அதே வேளையில் மனிதனை மட்டும் சகுணமாகக் கொள்வது தர்க்கரீதியாகத் தவறான ஒன்று. ஆகவே மனிதன் என்பவன் பெயரும் உருவமும் உடையவன் என்ற கருத்து அழிந்து, அவனும் ஒரு தத்துவமே என்ற கருத்து உருவாகி வளர்ந்தது. பெயரும் வடிவமும் தாங்கிய மனிதன் வெறும் தோற்றம் மட்டுமே, அந்தத் தோற்றத்திற்குப் பின்னாலிருக்கும் தத்துவமே உண்மை மனிதன். ஆகவே மனிதன், கடவுள் என்ற இரண்டு பக்கங்களிலுமே சகுணக்கருத்து மறைந்து, தத்துவக் கருத்தை அணுகுவதைக் காண்கிறோம். சகுணக் கடவுள் நிர்க்குணத் தத்துவம் ஆகிறது; பெயரும் வடிவமும் தாங்கியவன் மனிதன் என்ற கருத்து மறைந்து, அவன் ஒரு தத்துவம் என்ற கருத்து வளர்கிறது.

இதன்பிறகு நிர்க்குணப் பிரம்மக் கருத்தும், பெயர் மற்றும் வடிவமற்ற மனிதத் தத்துவக் கருத்தும் படிப்படியாக இணைந்து ஒரே தத்துவமாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம். இந்த இரண்டு கருத்துக்களும் எவ்வாறு படிப்படியாக இணைந்து, ஒரே கருத்தாகப் பரிணமிக்கின்றன என்பதை உபநிடதங்கள் விளக்குகின்றன. எல்லா உபநிடதங்களும் முடிவாகச் சொல்லும் கருத்து, நீயே அது என்பதுதான். நிலையான ஆனந்தப் பொருள் ஒன்றே தான். அதுவே பல்வேறாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிறகு தத்துவஞானிகள் தோன்றினர். உபநிடதங்களின் வேலை அந்த இடத்தில் நிறைவுற்றுவிட்டதாகத் தோன்றுகிறது. அடுத்தகட்ட வேலைகளைத் தத்துவ ஞானிகள் மேற்கொண்டார்கள். வடிவ அமைப்பை உபநிடதங்கள் கொடுத்துவிட்டன, இவர்கள் உள்விவரங்களை நிரப்ப வேண்டியிருந்தது. இங்குப் பல கேள்விகள் எழுவது இயல்பே. இருப்பது ஒரே நிர்க்குணத் தத்துவம், அதுவே பல்வேறாக வெளிப்படுகிறது என்றால், ஒன்று பலவாக ஆனது எப்படி? இது பக்குவமுறாத அந்தப் பழைய கேள்வியான தீமையின் மூல காரணம் என்ன என்பதன் வேறோர் உருவம்தான். உலகில் தீமை ஏன் இருக்கிறது, அதற்குக் காரணம் என்ன என்கின்ற அதே கேள்வி இப்பொழுது பண்பட்டதாகவும் தத்துவரீதியாகவும் கேட்கப்படுகிறது. நாம் ஏன் துன்பம் அடைகிறோம் என்று புலன்களின் அடிப்படையில் கேட்பது மறைந்து. இப்போது தத்துவ அடிப்படையில் அதே கேள்வியைக் கேட்க ஆரம்பித்திருக்கிறோம். ஒருமையான தத்துவம் எப்படிப் பன்மையாகியது? இந்தியா இந்தக் கேள்விக்கு மாயைத் தத்துவத்தின் மூலம் மிகச் சிறந்த பதிலைக் கொடுத்திருக்கிறது. அது உண்மையில் பன்மையாக ஆகவில்லை; தன் உண்மை இயல்பில் எதையும் அது இழக்கவும் இல்லை என்பதே அந்தப் பதில். பன்மை என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே. மனிதன் வெளித்தோற்றத்திற்குத்தான் பெயரும் உருவமும் உடையவனாகத் தோன்றுகிறான். உண்மையில் அவன் நிர்க்குணப் பிரம்மமே. அதே போல், கடவுளும் வெளித் தோற்றத்திற்குத்தான் சகுணமாக இருக்கிறார்; உண்மையில் அவர் நிர்க்குணப் பிரம்மமே.

இந்தப் பதிலில்கூடத் தொடர்ச்சியான பல நிலைகள் இருந்திருக்கின்றன. தத்துவ ஞானிகள் இதைப்பற்றிய கருத்தில் வேறுபட்டிருக்கிறார்கள். எல்லா இந்தியத் தத்துவ ஞானிகளும் மாயாவதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. நிச்சயமாகப் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. பண்படாத துவைதக் கருத்துக்களைப் பின்பற்றும் துவைதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்தக் கேள்வியை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள். இதைப் போன்ற கேள்வியைக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை, இதற்கு விளக்கம் கேட்கவும் உங்களுக்கு உரிமையில்லை. அது கடவுளின் சித்தம். நாம் அமைதியாக அதற்குப் பணிந்தேயாக வேண்டும். மனித ஆன்மாவிற்குச் சுதந்திரமே இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும், நம்மிடம் என்ன இருக்கும், நமக்கு என்னென்ன இன்பதுன்ப அனுபவங்கள் வரப்போகின்றன என்பவையெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. துன்பம் வந்தால், அதைப் பொறுமையோடு சகிப்பதுதான் நமது கடமை. அப்படிச் செய்யாவிட்டால் நமது தண்டனை மேலும் அதிகரிக்கும். ஆமாம், இதெல்லாம் எப்படித் தெரியும்? வேதங்கள் சொல்வதால்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுகின்ற சாஸ்திரங்களும், அவற்றிற்கு அவர்கள் தரும் விளக்கங்களும் உள்ளன. அவர்கள் தங்கள் கருத்துக்களைத் திணிக்க விரும்புகிறார்கள்.

வேறு சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மாயா வாதத்தை ஒப்புக் கொள்வதில்லை; ஆனால் துவைதத்திற்கும் அத்வைதத்திற்கும் இடையில் நிற்கிறார்கள். படைப்பு முழுவதுமே கடவுளுக்கு உடம்புபோல் அமைந்துள்ளது என்பது அவர்கள் கருத்து. கடவுள்தான் எல்லா ஆன்மாக்களுக்கும் அந்தராத்மா. இயற்கைக்கும் அவரே அந்தராத்மாவாக இருக்கிறார். தனி ஆன்மா தீமை செய்யும்போது சுருங்க ஆரம்பிக்கிறது. ஒருவன் பாவம் செய்தால், அவனுடைய ஆன்மா சுருங்க ஆரம்பிக்கிறது. அவனுடைய சக்தி சிறிதுசிறிதாகக் குறைந்துகொண்டே போகிறது. புண்ணியம் செய்யத் தொடங்கும்போது அது விரிவடைய ஆரம்பிக்கிறது.

இந்திய மதங்கள் எல்லாவற்றிலும், ஏன், உலக மதங்கள் எல்லாவற்றிலுமே தெரிந்தோ தெரியாமலோ, ஒரு பொதுவான கருத்து உள்ளது. என்னைப் பொறுத்த வரை, மனிதன் தெய்வீகத் தன்மை உடையவன் என்பதே அது. மனித ஆன்மா என்பது எதுவாக இருந்தாலும் சரி, அது எந்தவிதத்தில் கடவுளோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி, புராணங்கள், உருவங்கள், தத்துவங்கள் என்று எதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி, அது இயல்பிலேயே தூய்மையானது, பூரணமானது என்ற கருத்தைக் கொள்ளாத ஒரு நெறியோ, ஓர் உண்மையான மதமோ உலகில் இல்லை. நன்மையும் ஆற்றலுமே ஆன்மாவின் உண்மை இயல்பு; பலவீனமோ துன்பமோ அல்ல. இந்தத் துன்பம் என்பதெல்லாம் எப்படியோ தோன்றி விட்டது. அது எப்படி வந்தது என்பதை விளக்குவதற்காக அதைத் தீமையின் உரு, பேய், அஹ்ரிமான் என்றெல்லாம் உருவகப்படுத்த, பண்படாத நெறிகள் பலவும் முயல்கின்றன. இனி சில நெறிகள், கடவுளும் பிசாசும் ஒருவரே, எந்தக் காரணமும் இல்லாமல் அவர் சிலருக்கு இன்பமும் சிலருக்குத் துன்பமும் கொடுக்கிறார் என்கின்றன. அதிகச் சிந்தனைத் திறனுடைய நெறிகளோ, மாயாவாதம் போன்ற கொள்கைகளால் இதை விளக்க முயல்கின்றன. ஆனால் ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. நாம் ஆராய வேண்டியது அதைத்தான். பார்க்கப்போனால், இந்தத் தத்துவக்கருத்துக்கள், கோட்பாடுகள் எல்லாமே மனத்திற்கு ஒரு பயிற்சி, அறிவுக்கு ஒரு பயிற்சி, அவ்வளவுதான். உலகிலுள்ள எல்லா மதங்களுடைய மூடநம்பிக்கைகளின் ஊடேயும் எனக்குப் புலப்படுகின்ற ஓர் உன்னதமான கருத்து மனிதன் தெய்வீகமானவன், நமது இயல்பு தெய்வீகம் என்பதுதான்.

வேறு எந்தத் தன்மை வந்தாலும் அது வெறும் ஏற்றுச்செயலே என்கிறது வேதாந்தம். இருக்கின்ற ஒன்றின்மீது இல்லாத ஒன்று ஏற்றுப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் தெய்வீகத் தன்மை அழிவதில்லை. கொடுமையான பாவியிடமும் சரி, பெரிய மகானிடமும் சரி, இந்தத் தன்மை எப்போதும் இருக்கிறது. அதை விழிப்புணர்த்துவதுதான் நம் வேலை. அது தானாகவே வெளிப்பட்டு, தன்னைச் செயல்படுத்திக் கொள்ளும். நாம் அதை உணர்த்த வேண்டும். அது தானாகவே வெளிப்படும். சிக்கிமுக்கிக் கல்லிலும் விறகிலும் நெருப்பு இருப்பதும், அதை வெளிப்படுத்த உராய்வு அவசியம் என்பதும் பழங்கால மக்களுக்குத் தெரிந்திருந்தது. சுதந்திரமும் தூய்மையுமான நெருப்பு ஒவ்வோர் ஆன்மாவின் இயல்பு. இவை ஆன்மாவின் பண்பு அல்ல. ஏனெனில் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ளவும் சேர்த்துக்கொள்ளவும் முடியும். எனவே அவற்றை இழக்கவும் வாய்ப்பு உண்டு. ஆன்மாவோ சுதந்திரத்துடன் ஒன்றுபட்டது; இருப்புடன் ஒன்றுபட்டது, அறிவுடன் ஒன்றுபட்டது. ஆனந்தம் ஆன்மாவின் இயல்பு, உரிமை. நாம் காண்பவை எல்லாம் அதன் மங்கலான அல்லது பிரகாசமான வெளிப்பாடுகளே. மரணம்கூட அந்த உண்மைப் பொருளின் வெளிப்பாடே. பிறப்பு-இறப்பு, வாழ்வு-சாவு, வீழ்ச்சி-புத்துயிர்ப்பு எல்லாமே அந்த ஒருமையின் பல்வேறு வெளிப்பாடுகள்தான்.

அறிவின்மையாகவோ அறிவாகவோ எப்படி அறிவு தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், அது எல்லா அறிவின் சாரமான சித் என்பதன் வெளிப்பாடே. வேறுபாடு, அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை. நிலத்தில் ஊர்ந்து செல்லும் மிகத் தாழ்ந்த புழுவின் அறிவுக்கும், உலகின் மிக உயர்ந்த மேதையின் அறிவுக்கும், உள்ள வேறுபாடு அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை. வாழ்வின் இன்பங்களெல்லாம், அவை எவ்வளவு கீழ்த்தரமானவையாக இருந்தாலும்கூட, அவையெல்லாமே ஆன்மாவின் இயல்புகளில் ஒன்றான ஆனந்தத்தின் வெளிப்பாடுகளே என்று வேதாந்தி தைரியமாகச் சொல்கிறான்.

இந்தக் கருத்துதான் வேதாந்தத்தின் மிகவும் பிரபலமான கருத்து என்று தோன்றுகிறது. நான் முன்னரே சொன்னதுபோல், எல்லா மதங்களிலும் இந்தக் கருத்து இருப்பதாகத்தான் தெரிகிறது. இந்தக் கருத்து இல்லாத மதம் இருப்பதாக இதுவரையில் எனக்குத் தெரியவில்லை. உலகம் தழுவிய இந்தக் கருத்துதான் எல்லா மதங்களின் வாயிலாகவும் செயல்படுகிறது. பைபிளை எடுத்துக்கொள்வோம். முதல் மனிதனாகிய ஆதாம் முற்றும் தூய்மையானவனாக இருந்தான், பின்னர் தீய செயல்களால் தூய்மையை இழந்துவிட்டான் என்று அதில் உருவகமாகச் சொல்லப்பட்டிருப்பதைக்காண்கிறோம். ஆதி மனிதனின் இயல்பு தூய்மையாக இருந்ததாக நினைத்தார்கள் என்பதையே இந்த உருவகம் காட்டுகிறது. நாம் காணும் மாசுகளும், நாம் உணரும் பலவீனங்களும் அந்தத் தூய்மையான இயல்பின்மீது ஏற்றப்பட்டவை. மறுபடியும் மனிதன் தன் பழைய தூய்மையான நிலையை அடைவதற்கான வாய்ப்பு உண்டு, இல்லையில்லை, அடைய முடியும் என்று நம்புவதையே தொடர்கின்ற கிறிஸ்தவ மத வரலாறு காட்டுகிறது.

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டின் மொத்த வரலாறும் இதுதான். முஸ்லீம்களின் விஷயமும் இப்படித்தான். அவர்களும், ஆதாமையும் அவனுடைய தூய்மையையும் நம்பினார்கள். இழந்த அந்த நிலையை அடைவதற்கான வழியை முகமது அவர்களுக்குக் காட்டினார். பவுத்தர்கள் விஷயமும் இதுதான். இந்த உலகைக் கடந்துதான் நிர்வாணம் என்ற நிலையை அவர்கள் கூறுகிறார்கள். வேதாந்தத்தின் கூறும் பிரம்மம் என்பதே இந்த நிர்வாணம். இழந்த இந்த நிர்வாண நிலையைத் திரும்பவும் அடைய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே புத்தமதம் அமைந்துள்ளது. நமக்கு ஏற்கனவே உரிமை இல்லாத ஒன்றை நாம் பெற முடியாது என்ற கருத்தை எல்லா மத நெறிகளிலும் நாம் காண்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் யாருக்குமே நாம் கடன்பட்டவர்கள் அல்ல. ஒரு பெரிய வேதாந்தத் தத்துவஞானி தமது புத்தகம் ஒன்றின் தலைப்பில் கவிதைநயத்துடன், நமது பேரரசைப் பெறுதல் என்று சொல்லியிருப்பதுபோல், நாம் நம் பிறப்புரிமையைத்தான் கேட்கிறோம். அந்தப் பேரரசு நம்முடையது. அதை இழந்து விட்டோம்; திரும்பப் பெற்றாக வேண்டும். மாயாவாதியோ, பேரரசை இழந்ததாக நினைப்பதே பொய்த்தோற்றம், நாம் அதை இழக்கவே இல்லை என்கிறான். இரண்டு தரப்பு வாதங்களுக்கும் இதுதான் வேறுபாடு.

பேரரசு நம்முடையது, அதை இழந்துவிட்டோம் என்பதுவரை எல்லா மதங்களும் ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அதைத்திரும்பப் பெறுவது எப்படி என்பதற்குப் பல்வேறு வழிகளைக் கூறுகின்றன. சில சடங்குகளைச் செய்யுங்கள், சில தெய்வங்களுக்கு வேண்டுதல் செலுத்துங்கள், சில உணவுகளை உண்ணுங்கள், இன்னவிதமாக வாழ்க்கை நடத்துங்கள்; அப்போது அந்தப் பேரரசைத் திரும்பப் பெற முடியும் என்கிறது ஒரு மதம். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திக்கு முன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து, அழுது, கதறி, மன்னிப்புக் கேட்பதால் அந்தப் பேரரசைப் பெறலாம் என்று இன்னொரு மதம் உபதேசிக்கிறது. அத்தகைய ஒரு சக்தியிடம் மனமார அன்பு செலுத்துவதால் இதனைச் சாதிக்கலாம் என்று வேறொரு மதம் கூறுகிறது. இந்த எல்லா உபதேசங்களும் உபநிடதங்களில் இருக்கின்றன. போகப்போக நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள்.

ஆனால் நீங்கள் அழுது கதறவே தேவையில்லை என்பதுதான் உயர்ந்ததும் இறுதியானதுமான உபதேசம். இந்தச் சடங்குகளையெல்லாம் செய்ய வேண்டாம், பேரரசை எப்படித் திரும்பப் பெறுவது என்ற எண்ணமே உங்களுக்குத் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் அதை இழக்கவே இல்லை. இழக்காத ஒன்றை ஏன் தேடிப் போக வேண்டும்? நீங்கள் ஏற்கனவே தூயவர்களாக இருக்கிறீர்கள், சுதந்திரமானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்தால் அந்தக் கணமே சுதந்திரம் அடைகிறீர்கள். கட்டுண்டவர்கள் என்று எண்ணினால் கட்டுண்டவர்களாக இருக்கிறீர்கள். இவை மிகவும் தைரியமான வார்த்தைகள். முதலில் நான் சொன்னபடி, நான் துணிச்சலாகத்தான் பேசியாக வேண்டும். இது இப்போது உங்களுக்கு பயத்தைத் தரலாம். ஆனால் சிந்தித்து, இதை உங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் போது என் வார்ததையின் உண்மை உங்களுக்குப் புலப்படும். சுதந்திரம் என்பது உங்கள் இயல்பு இல்லை என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்களால் சுதந்திரம் பெற முடியாது. சுதந்திரமாக இருந்தீர்கள், எப்படியோ அதை இழந்துவிட்டீர்கள் என்று சொன்னால், முதலிலும் நீங்கள் சுதந்திரராக இல்லை என்றுதான் ஆகும். நீங்கள் உண்மையில் சுதந்திரராக இருந்திருந்தால், அந்தச் சுதந்திரத்தை இழக்கச் செய்ய எதனால் முடிந்திருக்கும்? கட்டுப்படாத இயல்புள்ள ஒன்றைக் கட்டுப்படுத்தவே முடியாது. அது உண்மையில் கட்டுப்பட்டிருந்தால், அதன் சுதந்திரம் ஒரு பொய்த்தோற்றம்.

இந்த இரண்டுள் நீங்கள் எதை எடுப்பீர்கள்? ஆன்மா இயல்பாகவே தூய்மையாகவும் சுதந்திரமாகவும் உள்ளது என்று சொன்னால், பிரபஞ்சத்திலுள்ள எதனாலும் அதைக் கட்டுப்படுத்தவோ, எல்லைக்குள் அடக்கவோ முடியாது என்பதுதான் பொருள். ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று இயற்கையில் இருந்தால், அப்போது ஆன்மா சுதந்திரமானது அல்ல. அது சுதந்திரமானது என்று நாம் கூறியது வெறும் மன மயக்கம். ஆகவே சுதந்திரம் அடைவது சாத்தியம் என்றால், ஆன்மா இயல்பாகவே சுதந்திரமானது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. வேறுவிதமாக இருக்க முடியாது. சுதந்திரம் என்றால், வெளியிலுள்ள எதையும் சாராதது என்பதுதான் பொருள். அதாவது அதற்கு வெளியிலுள்ள எதுவுமே அதை மாற்றமடையச் செய்ய முடியாது.

ஆன்மா ஆதியந்தமற்றது. இந்தக் கருத்திலிருந்து தான் உயர்ந்த கருத்துக்கள் அனைத்தையும் நாம் பெற்றுள்ளோம். ஆன்மா இயல்பாகவே சுதந்திரமானது, அதாவது வெளியிலுள்ள எதுவும் அதைப் பாதிக்க முடியாது என்று வைத்துக்கொண்டால்தான் ஆன்மா மரணமற்றது என்பதை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் மரணம் என்பதற்குப் புறக் காரணங்கள் அவசியம். நான் விஷத்தைக் குடித்தால் இறந்து விடுவேன். ஆகவே விஷம் என்ற புறப் பொருள் என் உடலைப் பாதிக்கிறது என்பது தெளிவாகிறது. ஆன்மா சுதந்திரமானது என்பது உண்மையானால் அதை எதுவும் பாதிக்க முடியாது. அதற்கு மரணமே இல்லை என்றுதான் ஆகிறது. இந்தக் காரணகாரிய விதியை, இந்த மாயையை, கடந்து நின்றால் தான், ஆன்மா சுதந்திரமானது, மரணமற்றது, ஆனந்தமயமானது என்பதெல்லாம் உண்மையாக முடியும். இந்த இரண்டுள் நீங்கள் எதை எடுப்பீர்கள்? முதலாவது உள்ளது மனமயக்கம் என்று சொல்லுங்கள், இல்லை இரண்டாவது உள்ளது மனமயக்கம் என்று சொல்லுங்கள். நான் இரண்டாவதையே சொல்வேன். எனது உணர்ச்சிகளுக்கு, நோக்கங்களுக்கு அதுதான் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. நான் இயல்பாகவே சுதந்திரமானவன் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். இந்தத் தளைதான் உண்மை, எனது சுதந்திரம் மனமயக்கம் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எல்லா தத்துவங்களிலும் இந்த விவாதம் ஏதாவது ஒருவிதத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மிகவும் அண்மைக் காலத் தத்துவங்களில்கூட இதே விவாதம் எழுவதைக் காண்கிறோம். இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆன்மா என்பது இல்லை; உடல், மூளை என்று நாம் சொல்லும் பொருட்களை உருவாக்குகின்ற ஜடப்பொருளிலுள்ள மூலக்கூறுகளின் தொடர்ந்த சுழற்சியே ஆன்மா இருப்பதைப் போன்ற மனமயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் இடைவிடாத சுழற்சியும்தான் சுதந்திரம் என்ற எண்ணத்திற்குக் காரணமாக இருக்கிறது என்று ஒரு பிரிவு சொல்கிறது. இதே கருத்துள்ள பவுத்த மதப் பிரிவுகள் சில இருந்தன. கீழ்க்கண்ட உதாரணத்தால் இந்தக் கருத்தை அவை விளக்கின: ஒரு தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றினால் ஓர் ஒளிவட்டம் தோன்றுகிறது. தீப்பந்தம் கணத்துக்குக் கணம் இடம் மாறுவதால் ஏற்படும் தோற்றமே இது. மற்றபடி உண்மையாவ ஒளிவட்டம் ஒன்றும் இல்லை. நாம் எல்லோரும் நுண் மூலக்கூறுகளின் சேர்க்கை. அவற்றின் வேகமான சுழற்சியால் நிரந்தரமான ஆன்மா ஒன்று இருப்பது போன்ற மயக்கம் உண்டாகிறது.

மற்றொரு பிரிவு சொல்கிறது: எண்ணங்கள் தொடர்ந்து வேகமாக எழுவதால்தான் ஜடப்பொருள் இருப்பது போன்று தோன்றுகிறது. உண்மையில் ஜடப்பொருள் என்பதே இல்லை. ஆகவே ஒரு பிரிவு, ஆன்மா என்பது தோற்றம் என்றும், மற்றொரு பிரிவு, ஜடப்பொருளே தோற்றம் என்றும் சொல்வதைக் காண்கிறோம். நீங்கள் எந்தப் பக்கம்? நிச்சயமாக, ஆன்மா உண்மை, பொருட்கள் தோற்றம் என்று கூறுகின்ற பக்கம்தான்.

வாதங்கள் இரண்டு பிரிவுகளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஆனால் ஆன்மா உண்டு என்கின்ற பிரிவின்வாதம், சிறிது அதிக வலுவுள்ளதாக இருக்கிறது. ஜடப்பொருள் என்பது என்ன என்பதை உண்மையில் யாரும் பார்த்ததில்லை. நாம் நம்மைத்தான் உணர்ந்துகொள்ள முடியும். தனக்கு வெளியே ஜடப்பொருளை உணரவல்ல ஒருவரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை. தன்னை விட்டு வெளியே குதிக்க யாராலும் இதுவரை முடிந்ததில்லை. எனவே ஆன்மா உண்டு என்று கூறும் பிரிவின்வாதம், சிறிது அதிக வலுவுள்ளதாகவே இருக்கிறது. இரண்டாவதாக, ஆன்மவாதம் பிரபஞ்சத்திற்கு விளக்கம் அளிக்கிறது. ஆனால் ஜடப்பொருள் வாதமோ அப்படிச் செய்வதில்லை. ஆகவே ஜடப்பொருள் வாதம் தர்க்கரீதியானது அல்ல.

எல்லா தத்துவங்களையும் அலசி ஆராய்ந்தால், அவை இந்த இரண்டு பிரிவுகளுள் ஏதாவது ஒன்றில் அடங்குவதைக் காண்போம். இயல்பான தூய்மை மற்றும் சுதந்திரம் பற்றிய கேள்விகள் இங்கேயும்எழுகின்றன. இங்கே, அது மேலும் சிக்கல் நிறைந்ததாக, மேலும் தத்துவரீதியாக உள்ளது. ஆன்மாவே தோற்றம் என்று ஒரு பிரிவும், ஜடப்பொருளே தோற்றம் என்று மற்றொரு பிரிவும் வாதிக்கின்றன. நாம் இரண்டாவது பிரிவையே ஆதரிக்கிறோம். நமது தளைகள் தாம் தோற்றம் என்று நாம் நம்புகிறோம்.

நாம் கட்டுப்படவே இல்லை. ஏற்கனவே நாம் சுதந்திரர்களாகத்தான் இருக்கிறோம் என்பதே இந்தப் பிரச்சினைக்கு வேதாந்தம் காணும் தீர்வு. அதுமட்டுமல்ல, நாம் கட்டுப்பட்டிருக்கிறோம் என்று சொல்வதும், ஏன், நினைப்பதும்கூட ஆபத்துதான். அதுபெரும் தவறு; அத்துடன் தன்னைத் தானே மனோவசியத்திற்கு உட்படுத்திக் கொள்வதும் ஆகும். நான் கட்டுண்டவன், நான் பலவீனன், நான் உதவியற்றவன் என்றெல்லாம் சொல்லும் அந்தக் கணமே நாம் நம் நிலையிலிருந்து தாழ்வடைகிறோம்; நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகரிக்கிறோம். அவ்வாறு சொல்லாதீர்கள், அவ்வாறு நினைக்காதீர்கள்.

காட்டிலேயே வாழ்ந்து சிவோஹம்-நானே ஆனந்த மயமான ஆன்மா என்று இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்த ஒருவரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருநாள் ஒரு புலி அவர்மேல் பாய்ந்து, அவரை இழுத்துக் கொண்டு போயிற்று. ஆற்றிற்கு அக்கரையில் இருந்தவர்கள் அதைப் பார்த்தார்கள். புலியின் வாயில் சிக்கி, மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோதும், குரல் இருந்ததுவரை சிவோஹம் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தது அவர்கள் காதில் விழுந்தது. அத்தகையோர் பலர் இருந்திருக்கின்றனர். துண்டுதுண்டாகப் பகைவர்கள் வெட்டியபோதும் அவர்களை வாழ்த்திய மகான்கள் இருந்திருக்கிறார்கள். நானே அவன்; நானே அவன். அப்படியே நீங்களும். நான் தூயவன், பூரணமானவன். எனது எல்லா பகைவர்களும் அப்படியே. நீயும் அவனே, நானம் அவனே. அது தான் வலிமை என்பது.

துவைத நெறிகளிலும் சிறந்த, அற்புதமான கருத்துக்கள் இருக்கின்றன. இயற்கைக்கு அப்பால், நாம் அன்பு செலுத்தி, வழிபடும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்து எவ்வளவு சிறந்தது! சிலநேரங்களில் இந்தக் கருத்து இதமளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த இதமான நிலை, ஒரு போதைநிலை போன்றதே தவிர, இயற்கையானதல்ல என்று வேதாந்தம் கூறுகிறது. காலப்போக்கில் இது பலவீனத்தையே ஏற்படுத்தும். உலகத்திற்கோ முன்பு எப்போதையும் விட அதிகமாக இப்போது தேவைப்படுவது வலிமைதான். உலகில் காணப்படும் துன்பங்கள் அனைத்திற்கும் மூலகாரணம் பலவீனம்தான் என்று வேதாந்தம் சொல்கிறது . நாம் துன்புறுவதற்கு பலவீனம் தான் ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால் தான் துன்பமடைகிறோம். பலவீனர்களாக இருப்பதால் தான் பொய் சொல்கிறோம், கொள்ளை அடிக்கிறோம், கொலை செய்கிறோம், மற்ற குற்றங்களையும் செய்கிறோம். நாம் பலவீனர்களாக இருப்பதால்தான் துன்பப்படுகிறோம். நாம் பலவீனர்களாக இருப்பதால்தான் மரணம் அடைகிறோம். நம்மைப் பலவீனப்படுத்துவதற்கு எதுவும் இல்லாதபோது நமக்கு மரணமோ துன்பமோ இல்லை. மனமயக்கமே நமது துன்பங்களுக்குக் காரணம். அந்த மனமயக்கத்தை விடுங்கள். துன்பங்களெல்லாம் பறந்து விடும். இது மிகவும் தெளிவானது, எளிதானது. தத்துவவாதங்கள், அறிவு ஜாலங்கள் இவை எல்லாவற்றின் மூலமாக நாம் அடையும் முடிவான மதக்கருத்து, உலகிலேயே மிகவும் எளிய கருத்து இதுதான்.

உண்மையை வெளிப்படுத்துவதற்கான மிகவும் எளிய வழி அத்வைத வேதாந்தம். இந்தியாவிலும் வேறு எங்கேயும் துவைதத் தத்துவ உபதேசம் பெருந்தவறாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் மக்கள் அறுதித் தத்துவங்களை அறிய விரும்புவதில்லை; வழிகளை மட்டுமே மனத்தில் கொள்கிறார்கள். அந்த வழிகள் மிகவும் சிக்கலானவை என்பதில் சந்தேகமில்லை. வேதாந்தத்தின் சிக்கலான, தத்துவரீதியான, தர்க்கபூர்வமான விளக்கங்கள் பலருக்குப் பெரும் பயத்தையே அளித்தன. இந்தத் தத்துவ விளக்கங்கள் உலகம் தழுவியவையாக இருக்க முடியாது, தினசரி வாழ்க்கையில் இவற்றைப் பின்பற்ற முடியாது என்று மக்கள் நினைத்தார்கள். இந்தத் தத்துவம் மந்த நிலையை வளர்க்கும் என்றே அவர்கள் கருதினார்கள்.

ஆனால் அத்வைதக் கருத்துக்கள் தீயொழுக்கத்தையும் பலவீனத்தையும் தோற்றுவிக்கும் என்பதை நான் சிறிதும் நம்பவில்லை. மாறாக, ஒழுக்கமின்மைக்கும் பலவீனத்திற்கும் இந்தக் கருத்துக்கள் மட்டுமே பரிகாரமாக இருக்க முடியும் என்றே நான் நம்புகிறேன். அதற்கான காரணமும் இருக்கிறது. உண்மை இதுவானால், வாழ்க்கை என்னும் நல்ல நீரோடை அருகில் ஓடிக் கொண்டிருக்கும்போது, மக்கள் சாக்கடைத் தண்ணீரைக் குடிப்பதை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? எல்லோரும் தூயவர்களே என்பது உண்மையானால், அதை ஏன் இப்போதே உலகத்திற்குப் போதிக்கக் கூடாது? இடி போன்ற குரலுடன், அதை மகான்கள், பாவிகள், ஆண், பெண், குழந்தை என்று எல்லோருக்கும், தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவருக்கும் ஏன் உபதேசிக்கக் கூடாது?

இது மிகப் பெரிய, அசாதாரணமான முயற்சி போல் இப்போது தோன்றுகிறது. பலருக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணம் மூட நம்பிக்கையே தவிர வேறு எதுவுமில்லை. செரிக்க முடியாத, கண்ட உணவுகளைச் சாப்பிடுகிறோம், அல்லது முழுப்பட்டினி கிடக்கிறோம். இதனால் நல்ல உணவை உண்ணும் தகுதியை இழந்துவிடுகிறோம். குழந்தைப் பருவத்திலிருந்தே பலவீனமான வார்த்தைகளே நம் காதில் விழுந்து வருகின்றன. பேய்பிசாசுகளை நம்பவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இருட்டு என்று வரும்போது அச்சத்துடன் அங்கு மிங்கும் பார்க்காதவர்கள் மிகச் சிலரே. வெறும் மூடநம்பிக்கை. எல்லாவிதமான மத மூடநம்பிக்கைகளும் இதுபோன்றவைதான். சாத்தான் என்ற ஒன்று கிடையாது என்று நான் சொன்னால், மதமே அழிந்துவிட்டதாகப் பதறுகின்ற சிலர் இந்த நாட்டில் இருக்கவே செய்வார்கள். சாத்தான் இல்லாமல் மதம் எப்படி இருக்க முடியும்? யாராலும் ஆளப்படாமல் நாம் எப்படி வாழ முடியும்? நம்மை யாராவது ஆள்வதே நமக்குப் பழக்கமாகி விட்டது. எனவே அப்படியே நடத்தப்பட விரும்புகிறோம். தினமும் யாரிடமாவது குட்டு வாங்காமல் இருந்தால், நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. அதே மூடநம்பிக்கை!

வேதாந்தக் கருத்து இப்போது பயங்கரமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு காலம் வரும். அப்போது நாம் ஒவ்வொருவரும் பின்னால் திரும்பிப் பார்த்து, அதுவரை நம்முடைய தூய நிலையான ஆன்மாவை மறைத்துக் கொண்டிருந்த மூடநம்பிக்கைகளை நினைத்துச் சிரிப்போம்; நான் சுதந்திரமானவனாக இருக்கிறேன், இருந்தேன், இருப்பேன் என்று மகிழ்ச்சியுடனும் உண்மையாகவும் புதிய பலத்துடனும் சொல்வோம். வேதாந்தத்திலிருந்து இந்த அத்வைதக் கருத்து புறப்பட்டு வெளிவரும்; நிலைத்து நிற்கத் தகுதியுள்ளது இந்த ஒரு கருத்து மட்டுமே. சாஸ்திரங்கள் நாளையே அழிந்துவிடலாம். இந்தக் கருத்து, முதலில் ஹீப்ருக்களின் மூளையில் தோன்றியதா, துருவப்பிரதேசங்களில் வசித்த மக்களின் மனத்தில் எழுந்ததா என்பதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஏனெனில் இதுதான் உண்மை. உண்மை அழிவற்றது. அது மட்டுமல்லாமல் உண்மை எந்தத் தனி மனிதனுக்கோ, நாட்டிற்கோ மட்டுமே சொந்தமல்ல என்பதை அதுவே போதிக்கிறது. மனிதர்கள், மிருகங்கள், தேவர்கள் எல்லோருக்கும் இந்த ஒரே உண்மை பொதுவானது. எல்லோரும் இதைப் பெறட்டும். வாழ்க்கையை ஏன் துன்பமயமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? மக்கள் ஏன் எல்லா வகையான மூடநம்பிக்கைகளுக்கும் ஆட்பட வேண்டும்? இருபது பேர் தங்கள் மூட நம்பிக்கைகளை விட்டுவிடச் சம்மதித்தால் அதற்கு ஈடாக நான் பத்தாயிரம் தடவைகூட என் உயிரைவிடத் தயாராக இருக்கிறேன். இந்த நாட்டில் மட்டுமல்ல, வேதாந்தம் பிறந்த இந்திய மண்ணில்கூட, இந்த உண்மையை எடுத்துக்கூறினால் மக்கள் பயப்படுகிறார்கள். இந்தக்கருத்து, உலகத்தைத் துறந்து, காடுகளில் வசிக்கும் சன்னியாசிகளுக்கு உரியது. அவர்களுக்கு இது சரியாக இருக்கலாம். பலவீனமான இல்லறத்தார்களாகிய எங்களுக்குக் கடவுளிடம் பயம் இருக்க வேண்டும். சடங்குகள் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்கிறார்கள்.

துவைதக் கருத்துக்கள் வெகுகாலமாக உலகை ஆட்சி புரிந்துள்ளன. அதன் பலன் இதுதான். ஏன் ஒரு புதிய பரிசோதனையைச் செய்யக் கூடாது? அத்வைதக் கருத்தை உலகம் ஒப்புக்கொள்வதற்குப் பல யுகங்கள் ஆகலாம். ஆனால் அதை ஏன் இப்போதிலிருந்தே தொடங்கக் கூடாது? நம் வாழ்க்கையில் இருபது பேருக்காவது இந்தக் கருத்தை எடுத்துச் சொல்ல முடிந்தால், அதுவே ஒரு பெரும் சாதனையாகும்.

இந்தக் கருத்திற்கு எதிராக ஒரு வலுவான கருத்து இருக்கிறது. அது இதுதான்: நான் தூயவன், ஆனந்த மயமானவன் என்றெல்லாம் சொல்வது சுலபம்தான். ஆனால் நடைமுறையில் இவ்வாறு இருப்பது மிகவும் கடினம். இது உண்மை, இந்த லட்சியம் மிகவும் கடினமானதுதான். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆகாயம் என்பது தலைக்குமேல் வெகு தூரத்திலேயே உள்ளது. ஆனால் அதற்காக நாம் ஆகாயத்தையே பார்க்கக் கூடாது என்பது எப்படிச் சரியாகும்? மூட நம்பிக்கைகளின் மூலம் எல்லாவற்றையும் சீராக்கிவிட முடியுமா? அமுதம் கிடைக்கவில்லை என்பதற்காக விஷத்தைக் குடிக்கலாமா? உண்மையை உடனே உணர முடியவில்லை என்பதற்காக இருட்டில் உழன்றுகொண்டு, பலவீனத்திற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் அடிமையாவதால் ஏதாவது நன்மை விளையுமா?

துவைதத்தின் பல விஷயங்களில் எனக்கு ஆட்சேபம் இல்லை. அவற்றில் பலவற்றை எனக்குப் பிடிக்கும். ஆனால் பலவீனத்தை வளர்க்கும் எந்த முறையையும் நான் ஆட்சேபிக்கிறேன். உடல், மனம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வோர் ஆண், பெண், மற்றும் குழந்தையிடமும் நான் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்: உன்னிடம் வலிமை இருக்கிறதா? வலிமையை நீ உணர்கிறாயா? ஏனெனில் உண்மை ஒன்றுதான் வலிமையைத் தர முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உண்மை ஒன்றுதான் வாழ்க்கையைத் தர முடியும். உண்மையை நோக்கிச் சொல்வதுதான் நமக்கு வலிமை தர முடியும். வலிமை படைத்தவர்களாக ஆகும்வரை உண்மையை அறிய முடியாது. ஆகவே நமது மனத்தைப் பலவீனமாக்கி, மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புதச் செயல்களை நம்புபவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர, உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன.

வலிமையே தேவையான ஒன்று. உலகின் நோய்க்கு வலிமையே சரியான மருந்து. பணக்காரன் ஏழையைக் கொடுமைப்படுத்தும்போது ஏழைக்கு வேண்டிய மருந்து வலிமை. படித்தவன் பாமரனை நசுக்கும்போது பாமரனுக்கு வேண்டிய மருந்து வலிமை. பாவிகள், வேறு பாவிகளால் நசுக்கப்படும்போது, நசுக்கப்படுபவர்களின் மருந்து வலிமை. அந்த வலிமையை அத்வைதத்தைப்போல் வேறெந்த நெறியும் அளிப்பதில்லை. இந்தக் கருத்தைப் போல் வேறு எதுவும் மனிதனை நல்லொழுக்கம் உடையவனாக ஆக்குவதில்லை.

இங்கே எல்லா பொறுப்பையும் நாமே சுமக்க நேர்வதால் நாம் சிறந்த முறையில், நம்முடைய எல்லா சக்தியையும் திரட்டி இயங்குகிறோம். நம்மை இவ்வளவு சிறப்பாகச் செயல்பட வைக்க வேறெந்தக் கருத்தாலும் முடியாது. உங்கள் எல்லோருக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். ஒரு சிறு குழந்தையை உங்கள் கையில் கொடுத்தால், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? அந்தக் கணநேரத்திற்கு உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அந்த நேரத்திற்கு, சுயநலமற்றவர்களாக ஆகியே தீர வேண்டும். பொறுப்பு திணிக்கப்பட்டால் உங்கள் தீய எண்ணங்கள் எல்லாம் மறைந்துவிடும், உங்களுடைய குணம் முழுவதுமே மாறி விடும். பொறுப்பு முழுவதும் நம் தலையில் விழும்போது நமது சிறந்த தன்மைகளெல்லாம் வெளிப்படத் தொடங்கிவிடும். இருட்டில் தடுமாறிக்கொண்டு நாம் தேடிச் செல்வதற்கு ஒருவர் இல்லாதபோது, நாம் குற்றம் சாட்டுவதற்கு ஒரு சாத்தான் இல்லாதபோது, நம்முடைய சுமைகளைச் சுமப்பதற்கு ஒரு சகுணக் கடவுள் இல்லாதபோது எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பாளியாக இருக்கும் அந்த நிலையில்தான், நாம் மிக உயர்ந்த, மிகச் சிறந்த நிலைக்கு உயரத் தொடங்குவோம். என்னுடைய விதிக்கு நானே காரணமாகிறேன். எனக்கு நன்மையை நானேதான் தேடிக் கொள்ள வேண்டும். எனக்குத் தீமை விளைவித்துக் கொள்பவனும் நானேதான். நான் தூய்மையும் ஆனந்தமும் நிறைந்தவன். இதற்கு மாறான முடிவை வலியுறுத்தும் எண்ணங்கள் நாம் ஒதுக்கிவிட வேண்டும்.

எனக்கு மரணமோ பயமோ இல்லை; ஜாதிமத பேதமில்லை; தந்தை, தாய், சகோதர சகோதரிகள், நண்பன், பகைவன் என்று யாரும் எனக்கு இல்லை. நானே சச்சிதானந்த சொரூபம். நானே ஆனந்தமயமான ஆன்மா, நானே ஆனந்த மயமானவன். புண்ணியமோ பாவமோ இன்பமோ துன்பமோ என்னைக் கட்டப்படுத்துவதில்லை. தீர்த்த யாத்திரைகளுக்கோ சாஸ்திரங்களுக்கோ சடங்குகளுக்கோ நான் கட்டுப்பட்டவனல்ல. எனக்குப் பசியோ தாகமோ இல்லை. உடல் எனக்குச் சொந்தம் இல்லை. உடலைப் பாதிக்கும் கேடுகளுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ நான் கட்டுப்பட்டவனல்ல. நானே சச்சிதானந்த சொரூபம். நானே ஆனந்த மயமானவன்; நானே ஆனந்தமயமானவன்.

இந்த ஒரு பிரார்த்தனையை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும் என்று வேதாந்தம் சொல்கிறது. நாம் தெய்வீகமானவர்கள் என்று நமக்கும் மற்றவர்களுக்கும் உபதேசிப்பதன் மூலம்தான் நாம் குறிக்கோளை அடைய முடியும். இதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு வலிமை வந்துவிடும். முதலில் தடுமாறுபவர்கள் சிறிதுசிறிதாக அதிக உறுதி பெறுவார்கள். உண்மை, நம் இதயத்தில் இடம்பிடித்து, ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்து, நம் உடல் முழுவதும் பரவும் வரையிலும் வலிமை அதிகரித்துக்கொண்டே போகும். ஒளியின் பிரகாசம் அதிகமாக அதிகமாக, மன மயக்கங்கள் மறைந்துவிடும். சுமை சுமையாக இருக்கும். நம் அறியாமை மறைந்துவிடும். அதன்பிறகு எல்லாமே மறைந்து, ஆன்மாவாகிய உண்மை மட்டுமே ஒளிரும் காலமும் வரும்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,