ஆன்ம அனுபூதி

ஆன்ம அனுபூதி

உபநிடதங்களுள் மிகவும் எளிமையானதும், மிகவும் கவிதைநயம் செறிந்ததாகவும் நான் கருதுகின்ற கடோபநிடதத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டுகிறேன். சர் எட்வின் ஆர்னால்ட் கடோபநிடதத்தை, மரணத்தின் ரகசியம் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதை உங்களுள் சிலர் படித்திருக்கலாம்.

உலகம் முதலில் எப்படித் தோன்றியது என்று ஆரம்பித்து, பிரபஞ்சத்தின் படைப்புவரை சென்ற ஆராய்ச்சி, புற நோக்கில் திருப்திகரமான பதில் கிடைக்காததால், எவ்வாறு அகமுகமாகத் திரும்பியது என்பதைப் பற்றி முந்தைய சொற்பொழிவில் பார்த்தோம். கடஉபநிடதம் மனஇயல் ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகி, மனிதனின் அக இயற்கையைப்பற்றி அறிய முயல்கிறது.

புறவுலகை யார் படைத்தது, அது எப்படி உருவாகியது, என்பதே முதலில் கேள்வியாக இருந்தது. பிறகு கேள்வி வேறாக மாறியது: மனிதனை வாழவும் இயங்கவும் வைப்பது எது? அவன் இறக்கும்போது அது என்ன ஆகிறது? என்பதே அந்தக் கேள்வி.

முதலில் தோன்றிய தத்துவ மேதைகள் பவுதீக மூலக்கூறுகளை ஆராய்ந்து அதன்மூலமாக அதன் இறுதி உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். கடைசியில், இந்தப் பிரபஞ்சத்தை ஆள்கின்ற பெரும் சக்திகொண்ட ஆட்சியாளர் ஒருவர் இருக்கிறார் என்ற எல்லைவரையே அவர்களால் செல்ல முடிந்தது. அந்த ஆட்சியாளர் மிகப்பேராற்றல் படைத்த ஒரு மனிதன் மட்டுமே என்ற ரீதியில்தான் அவர்களின் முடிவு இருந்தது. ஆனால் அது முழு உண்மையாக இருக்க முடியாது, மிஞ்சிப் போனால் அதில் ஓரளவு உண்மை இருக்கிறது எனலாம். இந்தப் பிரபஞ்சத்தை நாம் மனித நிலையிலேயே பார்க்கிறோம். எனவே நம் கடவுளும் நமக்கு மனித உருவாகத் தோன்றுகிறார்.

ஒரு பசு தத்துவம் பேசுவதாகவும் அதற்கு மத உணர்வு இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அதன் பிரபஞ்சம் பசுப் பிரபஞ்சமாகவும், பிரச்சினைக்கு உரிய தீர்வு பசு சம்பந்தமான தீர்வாகவுமே இருக்கும். நாம் காண்கின்ற கடவுளை அதனால் காண முடியாது. பூனைகள் தத்துவ ஞானிகளானாலும் இது போல்தான் ஆகும்; அதாவது, பூனைப் பிரபஞ்சம், பூனைத் தீர்வு, பூனைக் கடவுள்! ஆகவே பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய விளக்கம், முழு உண்மையாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. அது மட்டுமல்ல. நம் கருத்து பிரபஞ்சம் முழுவதையும் தழுவியதாகவும் இல்லை. பிரபஞ்சம் முழுவதையும் தழுவாத கருத்து சுயநலக் கருத்தே ஆகும். அத்தகைய சுயநலக் கருத்தை ஏற்றுக்கொள்வது மாபெரும் தவறு.

பிரபஞ்சத்தைப்பற்றி புறத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் கருத்தில் குறைபாடு உள்ளது. முதலாவது, நாம் பார்க்கும் பிரபஞ்சம் நமது பிரபஞ்சம்; உண்மையைப் பற்றிய நமது நோக்கு அது. ஆனால் உண்மையை புலன்களின் மூலம் நாம் அறிய முடியாது; புரிந்துகொள்ள முடியாது. ஐம்புலன்களைக் கொண்ட உயிர்களின் நோக்கில்தான் நாம் பிரபஞ்சத்தை அறிகிறோம். நமக்கு இன்னுமொரு புலன் கிடைக்குமானால், நம்மைப் பொறுத்தவரை பிரபஞ்சமே மாறிவிடும். நமக்குக் காந்தசக்திப் புலன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்புலன்களால் இப்போது உணர முடியாத கோடிக்கணக்கான சக்திகளை அப்போது நாம் ஒருவேளை உணரக்கூடும். நமது புலன்கள் எல்லைக்கு உட்பட்டவை; மிகவும் குறுகிய எல்லைக்கு உட்பட்டவை. இந்த எல்லைகளுக்குள்தான் நாம் பிரபஞ்சம் என்று சொல்வது இருக்கிறது. அந்தப் பிரபஞ்சப் பிரச்சினைக்கு, நம்முடைய சிற்றறிவுக்கு எட்டிய கடவுள்கருத்துதான் சமாதானமாக இருக்கிறது. ஆனால் முழுப் பிரச்சினைக்கும் அது தீர்வாகாது.

மனிதன் அந்த நிலையிலேயே நின்றுவிட முடியாது. அவன் ஒரு சிந்தனை ஜீவி. எல்லா பிரபஞ்சங்களையும் முற்றிலுமாக விளக்குவதான ஒரு தீர்வையே அவன் விரும்புகிறான். மனிதர்கள், கடவுள், மற்றுமுள்ள உயிர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஓர் உலகத்தைக் காணவும், எல்லா நிகழ்ச்சிகளையும் விளக்குகின்ற ஒரு தீர்வைப் பெறவும்தான் அவன் விரும்புகிறான்.

முதலில் வேண்டுவது, எல்லா பிரபஞ்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரபஞ்சத்தைக் கண்டடைவதே. அதைப் புலன்களால் உணர முடிந்தாலும் இல்லையென்றாலும், இருப்பின் இந்த எல்லா நிலைகளின் ஊடேயும் ஊடுருவிச் செல்வதான, தன்னளவில் தனிப்பொருளான ஒன்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும். கீழுலகம் மற்றும் மேலுலகங்கள் அனைத்திற்கும் பொதுவான ஒன்றை நாம் கண்டுபிடித்து விட்டால் நமது பிரச்சினை தீர்ந்துவிடும். எல்லா இருப்புக்கும் அடிப்படை ஒன்று உண்டு என்பதை வெறும் தர்க்கரீதியாக நாம் புரிந்துகொள்ள முடிந்தாலும்கூட இந்தப் பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு நெருங்கிவிடுவோம். ஆனால் இந்தத் தீர்வு, நாம் காண்கின்ற, அறிகின்ற இந்த உலகின் வழியாகவே மட்டும் கிடைக்க முடியாது. ஏனெனில் நாம் காணும் உலகம் எல்லைக்கு உட்பட்டதே அல்லவா!

இன்னும் ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமே, நாம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். மையத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக வேறுபாடுகளும் மாறுபாடுகளும் தோன்றுகின்றன என்பதையும், மையத்தை நெருங்கநெருங்க ஒருமையை நெருங்குவதையும் ஆரம்பச் சிந்தனையாளர்கள் கண்டுபிடித்தார்கள். ஒரு வட்டத்தின் மையத்தை நெருங்க நெருங்க, ஆரங்கள் ஒன்றுசேரும் இடமும் நெருங்குகிறது. மையத்திலிருந்து விலகவிலக, ஆரங்களின் இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. புறவுலகம் மையத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதால், எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றுசேர்வதற்கான ஒரு பொது இடம் அதில் இல்லை. மிஞ்சிப்போனால் புறவுலகம் என்பது நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி என்று மட்டும்தான் சொல்ல முடியும். இருப்பின் பல்வேறு நிலைகளான மன உலகம், அற உலகம், அறிவு உலகம் என்று வேறு பகுதிகளும் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றை மட்டும் ஆராய்ந்து, பிரச்சினைக்கு முழுத் தீர்வையும் காண முயல்வது என்பது முடியாத காரியம்.

எனவே வாழ்க்கையின் எல்லா நிலைகளும் எந்த மையத்திலிருந்து கிளம்புகின்றனவோ, அந்த மையத்தில் நின்று கொண்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண முயல வேண்டும். அதுதான் சரி. அந்த மையம் எங்கே இருக்கிறது? அது நம்முள்தான் இருக்கிறது. பழங்கால ரிஷிகள் ஆழமாக, இன்னும் ஆழமாக ஆராய்ந்து, கடைசியில், மனித ஆன்மாவின் மையம்தான் பிரபஞ்சத்தின் மையமும் ஆகும் என்று கண்டறிந்தனர். எல்லா நிலைகளும் மனித ஆன்மா என்ற அந்த ஒரு மையத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதுதான் பொது இடம், அங்கே நின்றுகொண்டுதான் பொதுவான தீர்வை நாம் காண முடியும்.

ஆகவே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்ற கேள்வி, தத்துவரீதியாகப் பொருளற்றது. அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் பயனற்றதாகவே இருக்கிறது.

இந்தப் பிரச்சினையைக் கடோபநிடதம் உருவகம் மூலம் விளக்கியிருக்கிறது. பழங்காலத்தில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்தில் அவன் தனது உடைமைகளையெல்லாம் தானம் செய்ய வேண்டியிருந்தது. அவன் மனப்பூர்வமாக இந்த யாகத்தைச் செய்யவில்லை. புகழையும் பெருமையையும் அடைவதற்காக மட்டுமே செய்தான். அதனால் தனக்குப் பயனில்லாதவற்றை அவன் தானம் செய்தான்; அதாவது, குருடான, நொண்டியான, மலடான, வயதான பசுக்களையே தானமாகக் கொடுத்தான்.

அந்தப் பணக்காரனுக்கு நசிகேதன் என்றொரு மகன் இருந்தான். தன்னுடைய தந்தை நியாயமற்றதைச் செய்வதையும், தாம் எடுத்துக்கொண்ட விரதத்தை மீறுவதையும் அவன் கண்டான். ஆனால் தந்தையிடம் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. இந்தியாவில், குழந்தைகளுக்கு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆகவே நசிகேதன் மிகுந்த மரியாதையுடனும் பணிவுடனும் தந்தையை அணுகி, அப்பா, உங்கள் யாகத்தில் நீங்கள் எல்லாவற்றையுமே தானமாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. என்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான்.

இந்தக் கேள்வியால் மிகவும் வெறுப்படைந்த தந்தை, மகனே, நீ என்ன சொல்கிறாய்? தந்தை, மகனைத் தானமாகக் கொடுப்பதா? என்று கேட்டான். நசிகேதன் விடாமல் மேலும் இரண்டு முறை அதே கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டான். அதனால் கோபமடைந்த தந்தை, உன்னை நான் எமனுக்குக் கொடுக்கிறேன் என்று பதிலாளித்தான். நசிகேதன் மரண தேவனான எமனிடம் போனான் என்று கடோபநிடதத்தில் கதை தொடர்கிறது.

முதலில் மரணமடைந்த மனிதனே எமன் ஆனான். அவன் சொர்க்கத்திற்குச் சென்று, பித்ருக்களுக்கு அதிபதியானான். நல்லவர்கள் இறந்தபின் எமனிடம் சென்று அவனுடன் நீண்ட காலம் வாழ்கிறார்கள். எமன் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல் அவன் மிகவும் தூய்மை, புனிதம், ஒழுக்கம் எல்லாம் நிறைந்த நல்லவன்.

நசிகேதன் எமனுலகம் சென்றான். தேவர்களும் சில வேளைகளில் வெளியே போவதுண்டு. எனவே நசிகேதன் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எமன் திரும்பி வந்தான். நசிகேதன் காத்திருப்பதைக் கண்ட அவன், அறிவில் சிறந்த, மதிப்பிற்குரிய விருந்தாளியான நீ உணவொன்றும் இல்லாமல் மூன்று நாட்களாக இங்கே காத்துக் கொண்டிருக்கிறாயே! ஓ பிராமணனே! உனக்கு என் நமஸ்காரங்கள்; எனக்கு நன்மை உண்டாகட்டும். நீ வந்த சமயம் நான் இங்கே இல்லாததற்கு மிகவும் வருந்துகிறேன். அதற்குப் பரிகாரம் செய்துவிடுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு வரமாக மூன்று நாட்களுக்கு மூன்று வரங்கள் உனக்குத் தருகிறேன்; கேள் என்று அன்போடு நசிகேதனிடம் கூறினான். நசிகேதனும், என் தந்தைக்கு என் மீதுள்ள கோபம் மறைய வேண்டும், நீங்கள் என்னை இங்கிருந்து போக அனுமதித்தவுடன் அவர் என்னை அன்புடன் வரவேற்க வேண்டும்; இதுவே என் முதல் வரம் என்று கேட்டான். எமன் இந்த வரத்தை முழுவதும் அளித்தான்.

மனிதர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு யாகத்தைப்பற்றி அறிய வேண்டும் என்பதே நசிகேதனின் இரண்டாவது வரமாக இருந்தது. வேதங்களின் சம்ஹிதைப் பகுதியில் காணப்படும் மிகப் பழைய கருத்து சொர்க்கத்தைப் பற்றியதே என்பதைக் கண்டோம். அந்தச் சொர்க்கத்தில் உள்ளவர்கள் ஒளிபொருந்திய உடலுடன் பித்ருக்களோடு வாழ்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இன்னும் பல்வேறு கருத்துக்கள் வந்தன. அவையும் திருப்தி அளிப்பனவாக இல்லை. இன்னும் உயர்ந்த ஏதோ ஒன்று தேவையாக இருந்தது. சொர்க்க வாழ்க்கை இந்த உலக வாழ்க்கையிலிருந்து அதிகம் வேறுபட்டதாக இருக்காது. மிஞ்சிப்போனால், சொர்க்க வாழ்க்கை என்பது ஆரோக்கியமான செல்வந்தன் ஒருவனுடைய வாழ்க்கையைப் போல்தான் இருக்கும். அங்கே அளவற்ற புலனின்பங்களும் நோய் அறியாத திடமான உடலும் எல்லோருக்கும் கிடைக்கும். அவ்வளவுதான். அது நமது இந்த உலகம் போலவே தான் இருக்கும்; இன்னும் கொஞ்சம் நேர்த்தியானதாக இருக்கும். ஜடமான புறஉலகம் பிரச்சினையைத் தீர்க்காது என்பது நாம் அறிந்த விஷயம். ஆகவே எந்தச் சொர்க்கத்தாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. ஜடப்பொருள் என்பது இயற்கையின் மிகமிகச் சிறிய ஒரு பகுதியே என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே இந்த உலகத்தால் தீர்க்க முடியாத பிரச்சினையை, இந்த உலகத்தைப் போல் பன்மடங்கு உலகங்களாலும் தீர்க்க முடியாது. நமக்குத் தெரிந்த இயற்கையின் மிக அதிகமான பகுதி ஜடப்பொருள் அல்ல.

உதாரணமாக, புற உலகின் ஜடப்பொருட்களோடு ஒப்பிட்டால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நம்முடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் அல்லவா பெரும் பங்கு வகிக்கின்றன! இப்படித் தீவிரமாகச் செயல்படும் இந்த உள்ளுலகம் எவ்வளவு பிரம்மாண்டமானது! இதனுடன் ஒப்பிடும்போது புலனுலகம் மிகவும் சிறியது! தொடு உணர்ச்சி, சுவை, காட்சி என்று புலனின்பமே எல்லாம் என்று சாதிப்பதுதான் இந்தச் சொர்க்க கருத்தின் தவறு. ஆகவே சொர்க்கத்தைப் பற்றிய இந்தக் கருத்து எல்லோருக்கும் முழுத் திருப்தியை அளிக்கவில்லை. உண்மை இப்படி இருந்தாலும், மனிதர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு யாகத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதையே நசிகேதன் இரண்டாவது வரமாகக் கேட்டான். இப்படிப்பட்ட யாகங்கள் தேவர்களைத் திருப்திப்படுத்தி, இவற்றைச் செய்யும் மனிதர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற கருத்து வேதங்களில் இருந்தது.

எல்லா மதங்களையும் ஆராய்ந்து பார்த்தால், பழமையானது என்றால் அது புனிதமானது என்ற கருத்து அவை எல்லாவற்றுள்ளும் பரவி நிற்பதைக் காணலாம். உதாரணமாக, இந்தியாவில் எங்கள் முன்னோர்கள் எழுவதற்குப் பூர்ஜ மரத்தின் மெல்லிய பட்டைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் காகிதம் செய்யக் கற்றுகொண்டார்கள். ஆனால் இன்னும் பூர்ஜ பட்டைகள் புனிதமாகவே கருதப்பட்டு வருகின்றன. பழங்காலத்தில் சமைக்க உபயோகித்த பாத்திரங்கள் பல மாறுதல்களை அடைந்தபோது, பழைய பாத்திரங்கள் புனிதமானவை ஆகிவிட்டன. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த எண்ணம் இவ்வளவு இல்லை. உலர்ந்த மரக் குச்சிகளை ஒன்றோடொன்று உரசித் தேய்த்து நெருப்பை உண்டாக்கும் பழக்கம் பல்லாயிரம் வருடங்களுக்கும் முற்பட்டது. இருந்தாலும், யாகங்கள் செய்வதற்குத் தீ உண்டாக்க இன்றும் இந்த முறையைத் தவிர வேறு முறைகளைப் பயன்படுத்துவதே இல்லை.

ஆசிய ஆரியரின் மற்றொரு கிளையினரும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாகவே இன்றும் இருக்கிறார்கள். ஆசிய ஆரியர்கள் மின்னலில் இருந்து நெருப்பை உண்டாக்குவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்தப் பழக்கத்தைக் காட்டுவதற்காக, இவர்களுடைய தற்காலச் சந்ததியினர் இன்னும் இதே முறையில் நெருப்பு உண்டாக்குவதையே விரும்புகின்றனர். பல புதுப் பழக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டாலும், பழைய பழக்கங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள், அவை புனிதமாகி விடுகின்றன. ஹீப்ருக்களின் விஷயமும் இப்படியே. அவர்கள் பாடம்செய்யப் பெற்ற மிருகத் தோலில் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது காகிதத்தில் எழுதுகிறார்கள். ஆனாலும் மிருகத்தோலை மிகவும் புனிதமாக நினைக்கிறார்கள். எல்லா நாடுகளுமே இப்படித்தான்.

இப்போது நாம் புனிதமாக நினைக்கும் ஒவ்வொரு சடங்கும் வெறும் பழைய பழக்கம்தான். வேத யாகங்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. காலப்போக்கில் புதிய வாழ்க்கை முறைகளைக் கண்டுபிடித்ததால் கருத்துக்களில் மிகவும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் பழைய பழக்கங்கள் போகவில்லை. அவ்வப்போது மக்கள் அவற்றைச் செய்து வந்தனர், அவை புனிதம் வாய்ந்தவை ஆயின.

நாளடைவில், ஒரு குழுவினர் இந்த யாகங்களை நடத்துவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டனர். இவர்களே பு÷õரகிதர்கள். இவர்கள் யாகத்தைப்பற்றிச் சிந்தித்தனர். அவர்களுக்கு யாகமே எல்லாமாக இருந்தது. தேவர்கள் இந்த யாகங்களின் நறுமணங்களை நுகர்வதற்காக வந்தனர், யாகங்களின் சக்தியால் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்று கருதப்பட்டது. சில குறிப்பிட்ட ஆஹுதிகளை அளிப்பதாலும், சில தோத்திரங்களை ஓதுவதாலும், குறிப்பிட்ட வகையில் ஹோம குண்டங்களை அமைப்பதாலும் தேவர்கள் எல்லாவரங்களையும் அளிப்பார்கள். ஆகவே எந்த வகையான யாகத்தைச் செய்வதன் மூலம் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியும் என்று நசிகேதன் கேட்டான். இந்த இரண்டாவது வரத்தையும் எமன் உடனடியாக அளித்தான். அத்துடன், அந்த யாகம் அதற்குப் பின்னர் நசிகேதனின் பெயராலேயே வழங்கும் என்ற வாக்குறுதியையும் அளித்தான்.

இப்போதுதான் மூன்றாவது வரம் வருகிறது. இங்கிருந்துதான் சரியாக உபநிடதம் ஆரம்பிக்கிறது. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை; மனிதன் இறந்தபின் சிலர், அவன் இருக்கிறான் என்கிறார்கள், வேறு சிலர், அவன் இல்லை என்று கூறுகிறார்கள், இதை உங்களிடமிருந்து இதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கேட்டான் நசிகேதன். எமனைப் பயம் பிடித்துக்கொண்டது. மற்ற இரண்டு வரங்களையும் அவன் மிகவும் சந்தோஷமாகவே அளித்தான். ஆனால் இப்போதோ நசிகேதனிடம், நசிகேதா, பண்டைய தேவர்களாலேயே இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த நுண்ணிய ரகசியம், புரிந்துகொள்வதற்கு அவ்வளவு சுலபமானதல்ல. வேறு ஏதாவது கேள்; இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தாதே, விட்டுவிடு என்று வேண்டினான்.

நசிகேதன் இந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தான். காலதேவனே! இந்த விஷயத்தில் தேவர்களுக்கே சந்தேகம் இருக்கிறது; இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமல்ல என்று நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் இந்த விஷயத்தைத் தெளிவாக உபதேசிப்பதற்கு உங்களைவிட வேறு யாரும் எனக்குக் கிடைக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வரத்திற்கு ஈடான வேறு வரமும் இல்லை என்று அவன் எமனிடம் கூறினான்.

அதற்கு எமன், நசிகேதா, நூறு வருடங்கள் வாழக்கூடிய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பசுக்கள், யானைகள், குதிரைகள், தங்கம் இவை எல்லாவற்றையும் கேள். பூலோகத்தில் சக்கரவர்த்தியாக இருந்து, விரும்பும் காலம்வரை வாழ வேண்டும் என்று கேள். செல்வத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் இணையாக நீ நினைக்கும் எந்த வரத்தை வேண்டுமானாலும் கேள். இந்தப் பரந்த பூமியில் ஓர் அரசனாக இரு. உனது எல்லா ஆசைகளையும் நான் நிறைவேற்றிக் கொள்ளமுடியாத ஆசைகளை நிறைவேற்றும்படிக் கேள். சாதாரண மனிதனால் பெற முடியாத இந்த தேவகன்னிகள், இந்த ரதங்கள் , தேவ கானங்கள் எல்லாவற்றையும் நீ பெறுமாறு செய்கிறேன். நசிகேதா, இவற்றையெல்லாம் அடைந்து இன்புறுவாய்; மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது என்பதை மட்டும் கேட்காதே என்று வேண்டினான்.

நசிகேதன் அதற்கு விடையாக, ஓ மரண தேவனே, இந்த இன்பங்கள் எல்லாம் புலன்களின் சக்தியை அரித்து விடுகின்றன. நீண்ட ஆயுள் என்பதுகூட மிகக் குறுகிய காலந்தான். இந்தக் குதிரைகள், ரதங்கள், கானங்கள், நாட்டியங்கள் எல்லாம் உங்களிடமே இருக்கட்டும். செல்வத்தால் மட்டுமே மனிதன் திருப்தி அடைய மாட்டான். சாகும்போது செல்வம் கூடவா வருகிறது? எங்கள் ஆயுளின் அளவு நீங்கள் விதித்தபடிதான். எனவே நான் கேட்ட வரத்தையே நான் வேண்டுகிறேன். என்று தீர்மானமாகக் கூறினான்.

இந்தப் பதிலால் எமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். நசிகேதா, பூரணத்துவம் வேறு, இன்பங்களை அனுபவிப்பது வேறு. இவை இரண்டும் வெவ்வேறு லட்சியங்கள் உடையவை. ஆகவே மனிதர்களை வெவ்வேறு பாதைகளில் இவை செலுத்துகின்றன. பூரணத் துவத்தைத் தேர்ந்தெடுப்பவன் தூய்மை அடைகிறான். இன்பங்களை நாடுபவன் உண்மையான லட்சியத்தை இழக்கிறான். மனிதனின் முன் பூரணத்துவம், இன்பம் ஆகிய இரண்டு லட்சியங்களும் வருகின்றன. அறிவொளி இரண்டையும் ஆராய்ந்து, ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தி அறிகிறான். இன்பத்தைவிடப் பூரணத்துவமே உயர்ந்தது என்று அறிந்து, பூரணத்துவத்தையே அவன் தேர்ந்தெடுக்கிறான். முட்டாளோ உடல்சுகத்தை விரும்பி, இன்பத்தைத் தேர்ந்தெடுக்கிறான். வெளிப்பார்வைக்கு மட்டுமே விரும்பத் தக்கவையாகத் தோன்றும் பொருட்களைப்பற்றி யோசித்து, புத்திசாலித்தனமாக அவற்றை நீ ஒதுக்கிவிட்டாய் என்று நசிகேதனைப் பாராட்டினான். பிறகு நசிகேதனுக்கு உபதேசிக்க ஆரம்பித்தான்.

துறவு மற்றும் வைதீக தர்மம் பற்றிய மிகவும் வளர்ச்சியடைந்த கருத்து இங்கே நமக்குக் கிடைக்கிறது. இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகளை வெற்றி கொள்ளாமல் உள்ளத்தில் உண்மை பிரகாசிக்காது. புலனின்பங்கள் ஒவ்வொரு கணமும் ஆர்ப்பரித்து, நம்மை வண்ணங்கள், சுவை, தொடுஉணர்ச்சி போன்ற இந்தப் பயனற்ற புலனின்பங்கள் மற்றும் புறப் பொருட்களுக்கு அடிமையாக்கி, புறவுலகிற்கு இழுத்துச் செல்கின்றன. இவற்றிற்கு நாம் அடிமையாகாதது போல் எவ்வளவு பாசாங்கு செய்தாலும், இவற்றை நம்மால் விட முடிவதில்லை. இந்த நிலை நீடிக்கும்வரை நம் உள்ளங்களில் உண்மை எவ்வாறு பிரகாசிக்க முடியும்? எமன் கூறினான்: செல்வங்களின் மயக்கத்தில் முட்டாள்தனமாக மூழ்கியிருக்கும் அறிவிழந்தவனின் மனத்தில், எல்லாவற்றிற்கும் அப்பாலுள்ளதன் சிந்தனை எழாது. இந்த உலகம் இருக்கிறது; மறு உலகம் இல்லை என்று எண்ணியவாறு அவர்கள் மீண்டும்மீண்டும் என்கீழ் வருகின்றனர். இந்த உண்மை, புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. இடைவிடாமல் கேட்டாலும் பலரால் இதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதைப் புரிந்துகொள்வதற்கு, சொல்பவனும் சிறந்தவனாக இருக்கவேண்டும், கேட்பவனும் சிறந்தவனாக இருக்க வேண்டும். குருவும் சிறந்தவராக இருக்கவேண்டும். சீடனும் தகுதி படைத்தவனாக இருக்க வேண்டும். இது உணர வேண்டிய உண்மையே தவிர, வாதப் பிரதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு மதமும் நம்பிக்கையை வற்புறுத்துகிறது என்பது நாம் அறிந்ததே. கண்மூடித்தனமாக நம்பு என்றே நமக்குப் போதிக்கப்படுகிறது. இந்தக் கண்மூடித் தனமான நம்பிக்கை, சந்தேகமில்லாமல் ஆட்சேபத்திற்கு உரியதுதான். ஆனால் இதை ஆராய்ந்து பார்த்தால், இதற்குப் பின்னால் ஒரு மகத்தான உண்மை மறைந்திருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அந்த உண்மையைப் பற்றித்தான் இப்போது இந்த உபநிடதத்தில் நாம் படிக்கப் போகிறோம்.

வீண் தர்க்கங்கள் கடவுளை அறிய நமக்கு உதவி புரிவதில்லை. ஆகவே வீண் தர்க்கங்களால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அவர் உணரக் கூடியவரே தவிர, தர்க்கங்களால் அறியக் கூடியவர் அல்ல. வாதம், தர்க்கம் எல்லாம் சில அனுபவங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த அனுபவங்கள் இல்லாமல் தர்க்கம் இருக்க இடமில்லை. நாம் ஏற்கனவே அனுபவித்த சில உண்மைகளை ஒப்பிடுவதே தர்க்கம். இப்படி அனுபவித்த இந்த உண்மைகள் ஏற்கனவே இல்லையென்றால் தர்க்கத்திற்கு இடமில்லை. புற விஷயங்களைப் பொறுத்தவரையில் இது உண்மையானால் அக விஷயங்களிலும் இது ஏன் உண்மையாகக் கூடாது? வேதியியல் நிபுணர், சில ரசாயணப் பொருட்களைக் கலந்து, சில முடிவுகளைக் காண்கிறார். இது ஓர் உண்மை. நாம் இதைப் பார்க்கிறோம், உணர்கிறோம். ரசாயண சம்பந்தமான நம்முடைய தர்க்கங்களுக்கு இதையே அடிப்படையாகவும் பயன்படுத்திக் கொள்கிறோம். பவுதீகமும் மற்ற விஞ்ஞானங்களிலும்கூட இதே முறைதான் பின்பற்றப்படுகிறது.

சில உண்மைகளை அனுபவிப்பதே, உணர்வதே எல்லா அறிவுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இந்த அடிப்படையின் மீதுதான் நாம் நமது தர்க்கங்களையும் வாதங்களையும் அமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலோர், குறிப்பாக தற்காலத்தில், ஆன்மீக விஷயங்களில் அத்தகையதோர் அனுபவ அடிப்படை சாத்தியமில்லை, வீண் தர்க்கங்களால்தான் ஆன்மீகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். விந்தையான விஷயம்!

ஆன்மீகம் என்பது அனுபவித்தறிய வேண்டிய உண்மையே தவிர, வெறும் வார்த்தை ஜாலமல்ல. நாம் நமது ஆன்மாவை ஆராய்ந்து உண்மை என்ன என்பதைக் காண வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொண்டதை அனுபவத்தில் உணரவும் வேண்டும். அதுவே ஆன்மீகம். எவ்வளவு பேசினாலும் அது ஆன்மீகம் ஆகாது. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பதைத் தர்க்கத்தால் நிரூபிக்க முடியாது. ஏனெனில் இரு பக்கத்திற்கும் சம அளவில் வாதங்கள் உள்ளன. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் நம்முடைய இதயங்களில்தான் இருக்கிறார். நீங்கள் எப்போதாவது அவரைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த உலகம் இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினையே இன்னும் தீர்ந்தபாடில்லை. லட்சியவாதிகளுக்கும் பிரத்தியட்சவாதிகளுக்கும் இடையே இந்த விஷயத்தைப் பற்றி நடக்கும் வாக்குவாதம் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. இருந்தாலும், உலகம் இருக்கிறது என்பதும், அது இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது. நாம் வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறோம்.

ஆகவே வாழ்க்கையைப் பொறுத்தவரை, எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்கவே நாம் முயல வேண்டும். விஞ்ஞானத்தில் உள்ளதுபோல், ஆன்மீகத்திலும் உள்ள உண்மைகளை நாம் உணர வேண்டும், அவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மதவுணர்வை நாம் உருவாக்க முடியும். ஒரு மதத்திலுள்ள எல்லா கொள்கைகளையும் நம்ப வேண்டும் என்று கண்மூடித்தனமாக வற்புறுத்துவது மனித குலத்தையே இழிவு படுத்துவதாகும். எல்லாவற்றையும் நம்பும்படி, நம்மை வற்புறுத்தும் ஒரு மனிதன் தன்னை இழிவுப்படுத்துவதுடன், அப்படி நாம் நம்பினால், நம்மையும் இழிவுபடுத்துகிறான்.

தங்கள் மனத்தை ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டதைப்பற்றிக் கூற மட்டுமே உலகிலுள்ள ஞானியருக்கு உரிமை உள்ளது. நாமும் அதுபோல் ஆராய்ச்சி செய்து அந்த உண்மையைக் கண்டால் அவர்கள் சொல்வதை நம்புவோம்; அதற்குமுன் அல்ல. மதம் என்பதன் உண்மை இதுதான். ஆனால் மதங்களைத் தாக்கிப் பேசுவோரில் 99.9 சதவீதம் பேர் சுயஆராயச்சி செய்யவோ, உண்மைகளை உணரவோ எந்த முயற்சியும் செய்யாதவர்கள். இதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் சொல்வதெல்லாம், சூரியனை நம்பும் நீங்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று ஒரு குருடன் சொல்வதைப்போல் இருக்கிறது. ஆகவே இவர்கள் சொல்வது மதத்தை எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.

அனுபூதி என்ற இந்தக் கருத்து, நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டியதுமான ஒன்றாகும். ஆன்மீகம் என்பது சாஸ்திரங்களிலும் கோயில்களிலும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளும் போதுதான் மதங்களிடையே நிலவுகின்ற சண்டைகளும் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் மறையும். அது ஓர் நிஜமான அனுபவம். கடவுளை, ஆன்மாவைக் கண்ட ஒருவனுக்கு மட்டுமே ஆன்மீகம் என்பது உள்ளது. சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்துத் தலைகீழாக ஒப்பிக்கக்கூடிய பண்டிதர்களுக்கும், சுகபோகங்களில் மூழ்கித் திளைக்கும் அறிவற்ற மூடனுக்கும் இடையே உண்மையில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் எல்லோரும் நாத்திகர்களே. இதை ஒப்புக்கொள்வோம்! வெறும் மதப் புலமை நம்மை ஆன்மீகவாதிகள் ஆக்காது. கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏசு கிறிஸ்துவின் மலை உபதேசத்தின் உண்மையான அனுபவத்தில் உணர்ந்த ஒருவன் உடனே பூரணனாகிறான்; தெய்வமாகிறான். உண்மை இப்படியிருக்க, உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள். மலை உபதேசத்தின் உண்மையை உணர்ந்து கொள்ள மனிதகுலம் எப்போதாவது முயலும் என்பதே இதன் பொருள். உண்மையில் பார்த்தால் கோடியில் ஒருவன் கூட உண்மையான கிறிஸ்தவன் கிடையாது.

இதைப் போலவே இந்தியாவில் முப்பது கோடி வேதாந்திகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் ஆன்ம அனுபூதி பெற்றால் கூட, இந்த உலகம் சீக்கிரமே பெரிய மாறுதலை அடையும். நாம் எல்லோரும் நாத்திகர்களே. ஆனாலும், நான் நாத்திகன் என்று ஒப்புக்கொள்பவனோடு நாம் சண்டைபோடுகிறோம். நாம் எல்லோரும் அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் ஆன்மீகம் என்பதெல்லாம் வெறும் சாஸ்திர அறிவு, வெறும் வாய் ஜம்பம், வெறும் வெறுமை மட்டுமே. ஒருவனுக்கு நன்றாகப் பேசத் தெரிந்தால் போதும், அவனை ஆன்மீகவாதி என்று கூறிவிடுகிறோம். இது ஆன்மீகமும் அல்ல, மதமும் அல்ல. வார்த்தைகளை அற்புதமாக ஒன்றுசேர்க்கும் திறமை, பேச்சாற்றல், புத்தகங்களுக்குப் பலவிதங்களில் விளக்கங்கள் எழுதும் ஆற்றல் இவை எல்லாம் பண்டிதர்களுக்கு மகிழ்ச்சி தரமட்டுமே பயன்படும்; ஆனால் இவை மதம் ஆகாது.

உண்மையான ஆன்ம அனுபூதி ஆரம்பிக்கும்போது தான் மதம் தொடங்குகிறது. அதுதான் மதத்தின் உதயம். அப்போதுதான் நாம் அறநெறியில் ஒழுக முடியும். நாம் இப்போது மிருகங்களைவிட ஒன்றும் அதிக ஒழுக்கமாக இல்லை! சமூகத்தின் சாட்டை ஒன்றுதான் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. திருடுவதற்குத் தண்டனை கிடையாது என்று சமூகம் இன்று சொல்லட்டும், அவ்வளவுதான், ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய சொத்துக்களின்மீது அப்படியே பாய்ந்து விடுவோம்! நம்மை ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருப்பவர்கள் போலீஸ்காரர்களே! சமூகத்தின் கருத்துக்களே நம்மை ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருக்கின்றன. உண்மையில், மிருகங்களைவிட நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் அல்ல. இது எவ்வளவு அப்படியே உண்மை என்பது நம் உள்மனத்திற்குத் தெரியும். ஆகவே நாம் ஆஷாடபூதிகளாக இருக்க வேண்டாம். நாம் மதவாதிகள் அல்ல, மற்றவர்களைக் கேவலமாக மதிக்க நமக்கு உரிமை கிடையாது என்ற உண்மையை ஒப்புக் கொள்வோம். நாம் அனைவரும் சகோதரர்கள். ஆன்ம அனுபூதி அடைந்த பின்தான் நாம் உண்மையான ஒழுக்கத்தோடு வாழ முடியும்.

நீங்கள் ஒரு நாட்டைப் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்று சொல்லச் சொல்லியாராவது உங்களை வற்புறுத்தினாலும்கூட, உங்கள் உள்மனத்தில் அதைப் பார்த்த உணர்வு அப்படியே இருக்கும். இந்த உலகத்தை நீங்கள் எந்த உணர்வோடு பார்க்கிறீர்களோ, அதைவிட அழுத்தமான உணர்வோடு கடவுளை நீங்கள் உணர்ந்திருந்தால் உங்கள் நம்பிக்கையை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. அப்போதுதான் உங்கள் நம்பிக்கை உண்மையானதாக ஆகிறது. கடுகளவு நம்பிக்கை உள்ளவன்கூட என்று பைபிளில் சொல்லியிருப்பது இந்தப்பொருளில்தான். அப்போது நீங்கள் உண்மை உருவாகவே ஆகிவிடுவதால் நீங்கள் உண்மையை அறிவீர்கள்.

ஆன்மீகத்தை உணருங்கள், வெறும் பேச்சால் பயனில்லை என்பதுதான் வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்து. ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஒவ்வொரு மனித இதயத்தின் அடியாழங்களில் உறைகின்ற அந்தப் பழம்பொருளான இறைவன், அணுவிற்குள் தன்னை மறைத்துக்கொண்டிருக்கிறான். அகத்தினுள் ஆழ்ந்ததால் பெற்ற ஆற்றலின் மூலம் ரிஷிகள் அவனை உணர்ந்திருக்கிறார்கள். அவனை உணர்வதன் மூலம் அவர்கள் இன்ப-துன்பங்கள், பாவ-புண்ணியங்கள் என்று நாம் சொல்லும் செயல்கள், நன்மை-தீமைகள், இருப்பு-இல்லாமை எல்லாவற்றையும் கடந்துவிட்டார்கள். அவனை உணர்ந்தவன் உண்மையைக் கண்டவனே. அப்படியானால் சொர்க்கம் என்ன ஆயிற்று? துன்பங்களற்ற இன்பமே சொர்க்கக் கருத்தாகும். அதாவது, இந்த வாழ்க்கையின் துன்பங்கள் இல்லாமல் அதன் இன்பங்களை மட்டுமே விரும்புகிறோம் என்பதே பொருள். இது சந்தேகமில்லாமல் நல்ல கருத்துதான். இயற்கையாகவே நம் மனத்தில் இது எழுகிறது. ஆனால் இந்தக் கருத்து அடியோடு தவறானது. ஏனெனில்முழுமையான நன்மை அல்லது முழுமையான தீமை என்று எதுவுமே இல்லை.

ரோமாபுரிப் பணக்காரனைப் பற்றி நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் சொத்தில் பத்து லட்சம் பவுன்களே எஞ்சியிருந்தன என்பதை ஒருநாள் அவன் கண்டான்; நாளைக்கு என்ன செய்வது? என்று திகைத்துப்போய்த் தற்கொலை செய்து கொண்டான். பத்து லட்சம் பவுன்கள்கூட அவனுக்கு ஏழ்மைதான். எனவே எது இன்பம்? எது துன்பம்? இவற்றின் மதிப்பு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது, வண்டி ஓட்டுபவனாக, எப்போதும் வண்டியை ஓட்டிக்கொண்டு திரிவதுதான் என்னை இன்பத்தின் உச்சிக்குக்கொண்டு செல்லும் என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது அப்படி நினைக்கவில்லை. நாம் எந்த இன்பத்தை நிலையாகப் பற்றிக்கொள்ள முடியும்? இந்த ஓர் அம்சத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நம்மை விட்டு இறுதியாக அகன்று செல்லும் மூடநம்பிக்கைகளில் ஒன்றும் ஆகும்.

இன்பத்தைப்பற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கருத்து இருப்பதில்லை. எனக்கு ஒரு மனிதனைத் தெரியும். ஓர் உருண்டை அபினை விழுங்காத நாளெல்லாம் அவனுக்கு இன்ப நாளே அல்ல. எங்கும் அபின் நிறைந்த சொர்க்கத்தையே அவன் கனவு காண்பானோ என்னவோ! ஆனால் அந்தச் சொர்க்கம் எனக்கு மிகவும் துன்பம் அளிப்பதாக இருக்கும். ஆறுகள் ஓடும் அழகான தோட்டங்கள் நிறைந்த சொர்க்கத்தைப்பற்றி அரபுக்கவிதைகளில் அடிக்கடிச் சொல்லியிருப்பதைக் காணலாம். அளவுக்கு அதிகமான நீர் நிறைந்த ஒரு நாட்டில் நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பல கிராமங்கள் வெள்ளக்காடாகின்றன; ஆயிரக் கணக்கான உயிர்கள் பலியாகின்றன. எனவே என்னுடைய சொர்க்கம் ஆறுகள் ஓடும் தோட்டங்கள் நிறைந்ததாக இருக்காது. என்னுடைய சொர்க்கம் மிகக் குறைவான மழையுள்ள பூமியாக இருக்கும். இன்பங்களைப் பற்றிய நமது கருத்து எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறது. இளைஞன் சொர்க்கத்தைப்பற்றிக் கனவு காண்பானானால், அங்கே தனக்கு ஓர் அழகான மனைவி இருப்பதாகக் காண்பான். அவனுக்கே வயதான பின் மனைவி தேவையில்லை.

நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப நமது சொர்க்கங்களும் மாறுகின்றன. புலனின்பத்தையே வாழ்க்கையின் எல்லாமாகக் கொண்டவர்கள் விரும்புகின்ற சொர்க்கத்தைப் போன்ற சொர்க்கம் நமக்கு இருந்தால், நாம் முன்னேறவே முடியாது. ஆன்மாவிற்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய சாபம் அதுவாகத்தான் இருக்கும். நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா? சிறிதுகாலம் கதறுகிறோம்; சிறிதுகாலம் கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம். கடைசியில் கேட்பாரற்று ஒரு நாயைப்போல் சாகிறோம். இந்த அற்ப விஷயங்களுக்காக ஏங்கும்போது மனித குலத்திற்கே ஒரு பெரிய சாபக்கேட்டை உண்டாக்கி விடுகிறோம்! உலக இன்பங்களை நாம் துரத்திக் கொண்டு போகும்போது, நாம் இதைத்தான் செய்கிறோம். ஏனென்றால் உண்மையான இன்பம் எது என்று நமக்குத் தெரியாது.

இன்பத்தை விட்டுவிடச் சொல்லி தத்துவம் நம்மை வற்புறுத்துவதில்லை; மாறாக உண்மையான இன்பத்தை அறிந்து கொள் என்றே அது வற்புறுத்துகிறது.

நார்வே நாட்டினரின் சொர்க்கம் ஒரு மிகப் பெரிய போர்க்களமாக இருக்கும். அங்கே எல்லோரும் ஓடின் என்ற தெய்வத்தின் முன்னால் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வேட்டையாட ஒரு காட்டுப் பன்றி இருக்கும். போருக்குச் சென்று தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக் கொள்வார்கள். ஆனால் சண்டை முடிந்த சிறிது நேரத்திற்குள் இறந்தவர்களெல்லாம் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஒரு விசாலமான கூடத்திற்குள் செல்வார்கள். அங்கே பன்றியைச் சுட்டு வைத்திருப்பார்கள். எல்லோரும் சேர்ந்து அதை உண்டு களிப்பார்கள். அதன்பிறகு அந்தக் காட்டுப் பன்றிக்கு உயிர் வந்து, மறுபடியும் வேட்டையாடப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதே கதைதான். இது ஏறக்குறைய எங்கள் சொர்க்கத்தைப்போல்தான் உள்ளது; துளியும் மாறுதலில்லை. எங்கள் கருத்துக்கள் வேண்டுமானால் சற்று நாகரீகமாக இருக்கலாம். காட்டுப் பன்றி வேட்டையாடப்பட்டு, சாப்பிடப்பட்டு, ஒவ்வொரு நாளும் மறுபடியும் உயிர் பெற்று, இதே கதையைத் தொடர்வதாக அவர்கள் கற்பனை செய்வதுபோல், நாமும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கும், எப்போதும் புலனின்பம் கிடைத்துக் கொண்டே இருக்கும் சொர்க்கத்திற்குப் போவதற்கும் விரும்புகிறோம்.

எப்போதும் மாறாத இன்பம் ஒன்று உள்ளது என்றுதான் தத்துவ சாஸ்திரம் வற்புறுத்துகிறது. அந்த இன்பம், நாம் உலக வாழ்க்கையில் பெறும் சுகங்களையோ, அனுபவிக்கும் இன்பங்களையோ போன்றதல்ல. உலக வாழ்க்கையின் இன்பங்களெல்லாம், அந்த உண்மையான இன்பத்தின் மிகச் சிறு துளி என்று வேதாந்தம் கூறுகிறது. ஏனென்றால் உண்மையில் உள்ளது அந்த இன்பம் மட்டுமே. அந்த இன்பம் மூடப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, கேலிக்கு உட்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கணமும் நாம் உண்மையில் அந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த இடத்தில் ஓர் ஆசியோ ஆனந்தமோ இன்பமோ இருந்தாலும்சரி- அது திருடனுக்குத் திருடுவதில் கிட்டும் இன்பமாகக்கூட இருக்கலாம்-அது அந்தப் பேரின்பத்தின் வெளிப்பாடே. ஆனால் அது மாயையால் மறைந்து, பல்வேறு புறச் சூழ்நிலைகளால் பலவகையாகக் குழம்பியதுபோல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். அதைப் புரிந்துகொள்ள, அது அல்லாத மற்றவற்றை விலக்குவதால்தான் முடியும். அதன் பிறகுதான், இதுதான் என்று உணரும் முயற்சி ஆரம்பிக்கிறது. அறியாமையையும் பொய்யையும் விட்டொழித்த பின்தான், உண்மை நமக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.

உண்மையை உணர்ந்த பின்னர், நாம் அதுவரை விலக்கியிருந்த பொருட்கள், புதிய உருவம் பெற்றுவிடும்; தெய்வீகத்தன்மை பெற்றுவிடும். அவற்றை நாம் புதிய கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அவை புனிதத்தன்மை பெற்றுவிடும். அப்போதுதான் நாம் அவற்றின் உண்மையைப் புரிந்து கொள்வோம். ஆனால் அவற்றைப் புரிந்துகொள்வதற்கு, உண்மையின் சிறு அளவையாவது முதலில் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் அவற்றை விட்டுவிடுகிறோம். பிறகு அவை தெய்வீகத் தன்மை பெற்று நம்மிடமே திரும்பி வருகின்றன. நம்முடைய துன்பம், துக்கம், நமது அற்பச் சந்தோஷங்கள் எல்லாவற்றையும் விடவேண்டும்.

வேதங்கள் எல்லாம் எதைப்பற்றிப் பேசுகின்றனவோ, தவத்திற்கெல்லாம் குறிக்கோளாக இருப்பது எதுவோ, எதை அடைவதற்காக மனிதர்கள் துறவு பூண்கிறார்களோ, அதை நான் ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறேன், அதுதான் ஓம். வேதங்களில் ஓம் என்ற இந்த வார்த்தை மிகவும் உயர்த்திப் பேசப்படுகிறது. மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

உடல் இறந்தபின் மனிதன் என்ன ஆகிறான்? என்ற கேள்விக்கு எமன் இப்போது பதிலளிக்கிறான். ஞான பரமான அந்த ஆன்மா இறப்பதில்லை, பிறப்பதும் இல்லை. அது எதிலிருந்தும் தோன்றுவதில்லை; அதிலிருந்தும் எதுவும் தோன்றுவதில்லை. பிறப்பற்ற, நிரந்தரமான, எப்போதும் நிலைத்திருக்கின்ற அந்த ஆன்மா, உடல் அழிந்த பின்னும் அழிவதில்லை. ஆன்மா கொல்வதுமில்லை; கொல்லப்படுவதுமில்லை. ஆகவே கொல்பவன், தான் கொல்வதாகவும், கொல்லப்படுபவன், தான் கொல்லப்படுவதாகவும் நினைத்தால், அவர்கள் இருவரும் உண்மையை அறியாதவர்களே. என்னவொரு மகோன்னதமான நிலை!

முதல் வரியிலுள்ள ஞானபரமான என்ற வார்த்தைக்கு உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எல்லா ஞானமும் எல்லா தூய்மையும் ஆன்மாவில் ஏற்கனவே இருக்கின்றன. ஆனால் அவை சில வேளைகளில் மங்கலாக, சிலவேளைகளில் பிரகாசமாக வெளிப்படுகின்றன. அவ்வளவுதான் வேறுபாடு. இது வேதாந்தத்தின் அடிப்படை கருத்து என்பதைப் போகப்போக நாம் புரிந்துகொள்வோம். மனிதர்களுக்கு இடையேயும், படைப்பிலுள்ள எல்லாவற்றிற்கும் இடையேயும் உள்ள வேறுபாடு அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை.

எப்போதும் நிலைத்திருக்கின்ற, எப்போதும் ஆனந்த மயமான, எப்போதும் தூய்மையான, எப்போதும் முழுமையான பரம்பொருளே எல்லாவற்றிற்கும் பின்னணியாகவும், எல்லாவற்றின் உண்மை வடிவாகவும் இருக்கிறது. புண்ணியவான்கள், பாவிகள், இன்பம் அனுபவிப்பவர்கள், துன்பம் அனுபவிப்பவர்கள், அழகானவர்கள், அழகற்றவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என்று எல்லாவற்றிலும் இருக்கும் ஒரே பொருள் ஆன்மா தான். அது ஒளி மயமானது. வெளிப்பாட்டு ஆற்றலினால் தான் வேறுபாடு தோன்றுகிறது. சிலவற்றில் இந்த வெளிப்பாடு அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் காணப்படுகிறது. இது ஆன்மாவை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஆடை அணிவதில், ஒருவனைவிட மற்றொருவன் தன் உடலை அதிகமாக வெளிக்காட்டினால், அந்த வெளிப்பாடு அவர்கள் உடலில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. ஆடையில்தான் வித்தியாசம் இருக்கிறது.

வேதாந்தத் தத்துவம் முழுவதிலுமே, நன்மையைவேறாக, தீமையை வேறாகச் சொல்வதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவை இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒரே பொருள் நல்லதாகவோ தீயதாகவோ இருக்கிறது. வேறுபாடு, அளவில்தான் இருக்கிறது. இன்பமளிப்பதாக இன்று நான் கருதுவது சிறப்பான நாளைய சூழ்நிலையில் துன்பமளிப்பதாக மாறிவிடலாம். இதமளிக்கும் அதே நெருப்பு நம்மை அழிக்கவும் செய்யலாம். அது நெருப்பின் குற்றமல்ல. அதேபோல் ஆன்மா தூய்மையானது, முழுமையானது. தீமை செய்பவன் தனது இந்த இயல்பை உணராமல், தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். கொலையாளியிடம்கூடத் தூய ஆன்மா இருக்கிறது. அது இறப்பதில்லை. அதை மூடி மறைத்து, வெளிப்படாமல் செய்தது அவனுடைய தவறு. தான் கொலை செய்யப்பட்டதாக நினைக்கும் மனிதனிலும் ஆன்மா அழிவதில்லை. அது என்றென்றும் உள்ளது. அதைக் கொல்லவோ அழிக்கவோ ஒருபோதும் முடியாது. அணுவிலும் அணுவாக, பெரியதிலெல்லாம் பெரியதாக உள்ள இந்த இறைவன் எல்லா மனித இதயங்களின் ஆழத்திலும் இருக்கிறார். துன்பங்களைக் கடந்தவர்கள், மாசற்றவர்கள், சோகமற்றவர்கள் அவரது கருணையால் அவரைக் காண்கிறார்கள். உடல் இல்லாத ஆனால் உடலுள் உறைகின்ற, இடத்தைக் கடந்த ஆனால் இடத்தை நிறைந்திருக்கின்ற, எல்லையற்ற, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தபொருளே ஆன்மா என்பதை உணர்கின்ற ரிஷிகள் என்றும் துன்பம் அடைவதில்லை.

இந்த ஆன்மாவைப் பேச்சாற்றல் மூலமோ, பரந்த அறிவின் மூலமோ, வேதங்களைப் படிப்பதன் மூலமாகவோகூட உணர முடியாது. இவை மிகவும் தைரியமான வார்த்தைகள். ரிஷிகள் துணிவுமிக்க சிந்தனையாளர்கள் என்று நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா! அவர்கள் எதற்கும் தயங்கவில்லை.

கிறிஸ்தவர்கள் பைபிளுக்கு அளிக்கும் இடத்தை விட மேலானதோர் இடம் இந்தியாவில் வேதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அருளுணர்வு வெளிப்பாடு என்றால், இறைவன், ஒருவனின் உள்ளத்தில் மேலான உணர்வை, மேலான ஞானத்தை வெளிப்படுத்துகிறார், அதனால் அவர் அதனை எழுதினார் என்பதுதானே உங்கள் கருத்து! ஆனால் இந்தியாவிலோ, எல்லா பொருட்களும் இருப்பதற்குக் காரணமே அவை வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதால்தான். எல்லா படைப்புமே வேதங்களிலிருந்தும் வேதங்களின் மூலமாகவும் தான் வந்திருக்கின்றன. அறிவு என்று சொல்லப்படுபவை அனைத்தும் வேதங்களில் உள்ளன.

அவற்றிலுள்ள ஒவ்வொரு வார்ததையும் புனிதமானது. ஆன்மாவைப்போல் நிரந்தரமானது, ஆதி அந்தமற்றது. படைத்தவரின் மனமே வேதங்களில் உள்ளது என்று சொல்லலாம். இதுதான் வேதங்களைப் பற்றிய கருத்தாக இருக்கிறது. ஒரு செயலை ஏன் ஒழுக்கம் என்று சொல்கிறோம்? வேதம் சொல்வதால். மற்றொன்றை ஏன் தீயொழுக்கம் என்று சொல்கிறோம்? வேதங்கள் சொல்வதால்தான். இப்படியிருந்தும் வேதங்களை அதிகம் படிப்பதால் உண்மையை அடைந்துவிட முடியாது என்று தீர்மானமாகக் கூறிய ரிஷிகளின் துணிச்சலைப் பாருங்கள். இறைவன் யாரிடம் அருள் கொள்கிறாரோ அவருக்கே தம்மை வெளிப்படுத்துவார். இவ்வாறு சொல்வது, இறைவன் பாரபட்சம் காட்டுபவர் என்றல்லவா ஆகும் என்று சொல்லலாம். அதனை எமன் விளக்குகிறான்: தீய காரியங்களைச் செய்தவர்களால், மனம் அமைதி பெறாதவர்களால் ஒருபோதும் உண்மையின் ஒளியைக் காண முடியாது. யாருடைய இதயத்தில் உண்மை இருக்கிறதோ, செயலில் தூய்மை இருக்கிறதோ, புலன்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ அவர்களுக்குத்தான் ஆன்மா தன்னை வெளிப்படுத்தும்.

இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி அதை நன்றாகப் பிடித்திருக்கிறானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான். யாருடைய குதிரைகள் அடக்கப்படாமலும், கடிவாளம் உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகிறான். எல்லாவற்றிலும் உள்ள இந்த ஆன்மா, கண்களுக்கோ புலன்களுக்கோ புலனாவதில்லை. ஆனால் தூய்மையுற்ற, பக்குவம் பெற்ற மனம் உடையவர்கள் அவரை உணர்கிறார்கள். ஒலி, ஒளி, உருவம், சுவை, தொடுஉணர்ச்சி அனைத்தையும் கடந்து, இயற்கையையும் கடந்து, தனிப்பொருளாக, எல்லையற்றதாக, ஆதி அந்தம் இல்லாததாக, மாறுதலே அடையாததாக உள்ள பரம்பொருளை உணர்பவனே, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறுகிறான். இது மிகவும் கடினம்; கத்தி முனையில் நடப்பதைப் போன்றதே ஆகும். பாதை, நீண்டதும் அபாயங்கள் நிறைந்ததுமாகும். ஆனால் போராடுங்கள், மனம் தளராதீர்கள். எழுந்திருங்கள், விழித்திருங்கள், குறிக்கோளை அடையும்வரை முயற்சியை நிறுத்தாதீர்கள்.

எல்லா உபநிடதங்களின் ஊடேயும் இழைகின்ற மையக் கருத்து, அனுபூதி என்பதுதான். அவ்வப்போது கேள்விகள் பல எழுகின்றன. தற்காலத்தில் அதிகமாக எழுகின்றன. இதனால் என்ன பயன், என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கேள்விகள் எல்லாமே நமது பழைய தொடர்புகளால் தூண்டப்பட்டே எழுகின்றன என்பதைக் காண்கிறோம். கருத்துக்களின் தொடர்பு, மனத்தின்மீது அளவில்லாத ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே சகுணக் கடவுள்கருத்தையும், மனத்தின் தனித்தன்மையையும் பற்றியே கேள்விப்பட்டு வந்தவர்களுக்கு, இந்த வேதாந்தக் கருத்துக்கள் கடினமானவையாக, புரியாதவையாகத் தோன்றுகின்றன. ஆனால் அவர்கள் இந்தக் கருத்துக்களை உன்னிப்பாகக் கேட்டு, அவற்றைச் சிந்தித்து வந்தால், அவை அவர்களது வாழ்க்கையுடன் ஒன்றிவிடும்; அதன்பின் அவர்களைப் பயமுறச் செய்யாது.

சாதாரணமாக எழும் பெரிய கேள்வி தத்துவத்தின் பயன் என்ன என்பதுதான். அந்தக் கேள்விக்கு ஒரேயொரு பதில்தான் இருக்க முடியும். பயன்நோக்கு வாதத்தின்படி, இன்பம் தேடுவதே மனிதர்களுக்கு நல்லது என்றால், மத விஷயங்களில் இன்பம் காண்பவர்கள், ஏன் அவற்றை நாடிப் போகக் கூடாது? புலனின்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியைத் தருவதால் அவர்கள் அவற்றை நாடிப் போகிறார்கள். ஆனால் புலனின்பங்களில் நாட்டம் இல்லாமல், அவற்றைவிட உயர்ந்த இன்பங்களை நாடிச் செல்பவர்கள் இருக்கிறார்கள். உண்பதிலும் குடிப்பதிலும் தான் ஒரு நாய் இன்பம் அடைகிறது. எல்லாவற்றையும் துறந்து, ஒருவேளை ஏதோ மலை உச்சியில் அமர்ந்து, வானத்திலுள்ள நட்சத்திரங்களை ஆராயும் விஞ்ஞானியின் இன்பத்தை நாயால் புரிந்துகொள்ள முடியாது. அவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து அந்த நாய் சிரிக்கலாம். ஒருவேளை திருமணம் செய்துகொள்வதற்குக் கூட அந்த விஞ்ஞானியிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். அவன் மிக எளிய வாழ்க்கை வாழ்கிறான். நாய் அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கலாம். ஆனால் விஞ்ஞானி அதைப் பார்த்து, அன்புள்ள நாயே, நீ அனுபவிக்கும் புலனின்பத்தைப்பற்றி மட்டுமே உனக்குத் தெரியும். அதற்கு அப்பாலுள்ள இன்பத்தைப்பற்றி உனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இதுதான் மிகவும் இன்பம் தரும் வாழ்க்கை. உன் வழியில் இன்பம் தேட உனக்கு உரிமை இருந்தால், அதே உரிமை, என் வழியில் இன்பம் தேட எனக்கும் இருக்கிறது என்று கூறுகிறான்.

நம்முடைய சிந்தனையைப்போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாகக் கொள்கிறோம். இது நாம் செய்யும் தவறு. உங்களைப் பொறுத்தவரை புலனின்பமே மிகப் பெரிய இன்பமாக இருக்கலாம். ஆனால் என் இன்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் அதை வற்புறுத்தினால் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். பயன்நோக்குவாதிக்கும், ஆன்மீகவாதிக்கும் உள்ள வேற்றுமை இதுதான். நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன், பார். எனக்குப் பணம் கிடைக்கிறது. மதத்திற்காக நான் மண்டையை உடைத்துக்கொள்ளப் போவதில்லை. அது அறிவதற்கு எளிதான ஒன்றல்ல. மதம் இல்லாமலேயே நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று பயன்நோக்குவாதி சொல்கிறான். சரி, நல்லதுதான்; பயன் நோக்குவாதிகளைப் பொறுத்தவரை இது நல்லதுதான். ஆனால் இந்த உலகம் பயங்கரமானது. தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கஷ்டம் உண்டாகாமல் ஒருவன் இன்பம் அடைய முடியுமானால், கடவுள் அவனுக்குத் துணை நிற்கட்டும்! ஆனால் அவன் என்னிடம் வந்து, நான் செய்வதைப் போல்தான் நீயும் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீ முட்டாள் என்று சொன்னால் நான் அவனைப் பார்த்து, நீ சொல்வது தவறு. ஏனெனில் உனக்கு இன்பமளிக்கும் பொருட்கள் என்னைத் துளியும் கவர்வதில்லை. கையளவு பணத்திற்காக அலைவேனானால் என் வாழ்க்கை பயனற்றது. அதைவிட நான் இறப்பதேமேல் என்று சொல்வேன். ஆன்மீகவாதி அளிக்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். உண்மை என்னவென்றால், இந்தக் கீழான புலனின்பங்களை அனுபவித்து ஒழித்தவனுக்குத்தான் மத உணர்வு உண்டாகும். நாம் அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவித்தாக வேண்டும், முழுமையாக அனுபவித்துத் தீர்க்க வேண்டும். அதன் பின்னரே அடுத்த உலகக் கதவு திறக்கிறது.

புலனின்பங்கள் சிலவேளைகளில் உருமாறி வருகின்றன. இது அபாயமானது, ஆசையைத் தூண்டுவது. பழங்கால மதங்கள் எல்லாவற்றிலுமே ஒரு பொதுவான கருத்தைக் காணலாம். இந்த வாழ்க்கையின் துன்பங்கள் எல்லாமே மறைந்து, இன்பங்களே மிஞ்சும் ஒரு காலம் வரும், அப்போது இந்தப் பூமியே சொர்க்கமாக மாறி விடும் என்பதே அந்தக் கருத்து. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இந்த உலகம் எப்போதும் இப்படியேதான் இருக்கும். நான் சொல்வது பயங்கரமான விஷயம்தான். ஆனால் சொல்லாமல் வழியில்லை. உலகின் துன்பம், குணப்படுத்த முடியாத மூட்டுவாதம் போன்றது. உடம்பில் ஓர் இடத்தில் இதைக் குணப்படுத்தினால் வேறிடத்திற்குச் செல்லும். அங்கிருந்து துரத்துங்கள், வேறு ஓர் இடத்தில் அதை உணர்வீர்கள். என்ன செய்தாலும், அது இடத்திற்கு இடம் தாவிக்கொண்டே இருக்குமே தவிர உடம்பை விட்டுப் போகாது.

மிகப் பழங்காலத்தில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தார்கள்; ஒருவரை ஒருவர் சாப்பிட்டார்கள். இன்று அவர்கள் ஒருவரை ஒருவர் சாப்பிடுவதில்லை, ஆனால் ஏமாற்றிக்கொள்கிறார்கள். நாடுகளும் நகரங்களுமே இதனால் அழிந்து போகின்றன. இது ஒருமுன்னேற்றமாகத் தெரியவில்லை. இந்த உலகில் முன்னேற்றம் என்று நீங்கள் சொல்வதெல்லாம், ஆசைகளைப்பெருக்கிக் கொள்வதே தவிர வேறெதுவுமாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெளிவாகத் தெரிவதெல்லாம் ஆசைகளே துன்பம் அனைத்தையும் கொண்டு வருகின்றன என்பதுதான். இந்த நிலை, எப்பொழுதும் எதையாவது யாசித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் நிலைதான். பார்ப்பதையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்ள அவன் விரும்புகிறான். அந்த விருப்பம் இல்லாமல் அவனால் எதையும் பார்க்க முடியாது. இன்னும் அதிகம் வேண்டும் என்று ஏங்குகிறான். நம் ஆசைகளைத் திருப்திப்படுத்தும் சக்தி கூட்டல் விகிதத்தில் அதிகரித்தால், ஆசைகளின் சக்தி பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது. உலகிலுள்ள இன்ப துன்பங்களின் மொத்த அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்யாமல் எப்போதும் அப்படியேதான் இருக்கிறது. கடலில் ஓர் இடத்தில் அலை எழுந்தால் அது மற்றோரிடத்தில் பள்ளத்தை உண்டாக்குகிறது. ஒருவனுக்கு இன்பம் வந்தால், மற்றொருவனுக்கோ, ஒருவேளை மற்றொரு பிராணிக்கோ துன்பம் வருகிறது. மனிதர்களின் தொகை பெருகிறது, ஆனால் சில மிருகங்களின் தொகை குறைகிறது. நாம் அந்த மிருகங்களைக்கொன்று, அவை வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறோம். நாம் வாழ்வதற்கான வழிகளை அவற்றிடமிருந்தே பெறுகிறோம். உலகில் இன்பம் அதிகரிக்கிறதென்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? வலிமைமிக்க இனங்கள் எளிய இனங்களை அழித்தே வாழ்கின்றன. ஆனால் இந்த வலிமைமிக்க இனம் சந்தோஷமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல ஆரம்பித்து விடுவார்கள். நடைமுறையில் இந்த உலகம் எப்படிச் சொர்க்கமாக முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. நடவடிக்கைகள் அதற்கு எதிராகவே இருக்கின்றன. கொள்கையளவில்கூட இது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

நிறைநிலை என்பது எப்போதும் எல்லையற்றதாகவே இருக்கிறது. நாம் ஏற்கனவே இந்த எல்லையற்றதாகத்தான் இருக்கிறோம். அதை வெளிப்படுத்தவே முயன்று கொண்டிருக்கிறோம். நீங்களும், நானும், ஏன், எல்லா உயிர்களுமே அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கின்றன. இந்த அளவில் இது சரிதான். ஆனால் இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு, சில ஜெர்மானியத் தத்துவவாதிகள், ஒரு விசித்திரமான கொள்கையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வெளிப்பாடு மேன்மேலும் உயர்ந்துகொண்டே போய் இறுதியில் நாம் முழுமை பெற்றுவிடுவோம், பூரணத்துவம் அடைந்து விடுவோம் என்பதுதான் அது. முழுமையான வெளிப்பாடு என்பது என்ன? முழுமையடைவது என்றால் எல்லையற்றதாக ஆவது, வெளிப்பாடு என்றால் எல்லைக்கு உட்படுவது. ஆகவே நாமெல்லோரும் எல்லைக்கு உட்பட்ட எல்லையற்றதாகி விடுவோம் என்றாகிறது. இது முன்னுக்கப்பின் முரணானது. இத்தகைய கருத்து குழந்தைகளுக்குச் சந்தோஷம் அளிக்கலாம். அதே வேளையில் அவர்களின் மனங்களில் அது பொய் என்ற விஷயத்தையும் செலுத்துகிறது. மத உணர்வுக்கு இது மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. ஆனால் இந்த உலகம் இப்போது இருக்கும் நிலை, அதன் உண்மை நிலையிலிருந்து தாழ்வடைந்த நிலைதான் என்பதும், கடவுள் நிலையிலிருந்தும் வீழ்ச்சியடைந்தவனே மனிதன் என்பதும், ஆதாம் தன்னுடைய நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து விட்டான் என்பதும் நமக்குத் தெரியும். மனிதன் தன் உன்னத நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தவனே என்று போதிக்காத ஒரு மதம்கூட இன்று உலகில் கிடையாது. நாம் மிருகநிலைக்கு வீழ்ச்சியடைந்து, மறுபடியும் உயர்ந்து, இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற முயன்று கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லையற்றதை முழுமையாக வெளிப்படுத்த இங்கே நம்மால் முடியாது. நாம் கடுமையாகப் போராடலாம். ஆனால் புலன்களுக்குக் கட்டுப்பட்டிருக்கின்ற நிலையில், இங்கே நிறைநிலை அடையமுடியாது என்பதை நாம் உணரும் காலம் வந்தே தீரும். அப்போது நமது பழைய, உண்மையான, எல்லையற்ற நிலைக்குத் திரும்பிப் போகின்ற பயணத்தை ஆரம்பிப்போம்.

இதுதான் துறவு. நாம் உள்ளே வந்த பாதையிலேயே திரும்பி மேலே போக ஆரம்பிப்பதுதான் துன்பத்திலிருந்து விடுபடும் வழியாகும். அப்போதுதான், ஒழுக்கம் மற்றும் அறநெறிக் கோட்பாடுகள் உருவாகத் தொடங்கும். எல்லா நீதிநெறிக் கோட்பாடுகளுக்கும் நிரந்தர அடிப்படை எது? நானல்ல, நீயே என்பதுதான். இந்த நான் என்பது, எல்லாவற்றையும் கடந்த எல்லையற்ற பரம்பொருள், தன்னைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சியே ஆகும். அதன் பலன்தான் இந்தச் சிறிய நான். இது திரும்பிப் போய், தன் உண்மை நிலையாகிய எல்லையற்ற தன்மையை அடைய வேண்டும். சகோதரா! நான் முக்கியமல்ல, நீதான் முக்கியம் என்று நாம் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவ்வாறு திரும்பிச் செல்வதற்கு முயல்கிறோம். நான்தான், நீயல்ல என்று நாம் சொல்லும் ஒவ்வொரு முறையும், இந்தப் புலனுலகின் மூலம் எல்லையற்ற பரம்பொருளை வெளிப்படுத்த முயல்வதான தவறான பாதையில் அடியெடுத்து வைக்கிறோம். இதுதான் உலகில் போராட்டங்களையும் தீமைகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால் சில காலத்திற்குப் பின் நிலையான துறவு வந்தே தீரும். சிறிய-நான் இறந்து, அழிந்து விடுகிறது. இந்த அற்பமான வாழ்விற்காக ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்? இங்கும் சரி, மறு உலகங்களிலும் சரி, இந்த வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற வீணான ஆசைகள் மரணத்திலேயே கொண்டுபோய்விடும்.

மிருகங்களின் பரிணாம வளர்ச்சிதான் நாம் என்றால், மிருகங்கள் என்பவை வீழ்ச்சிபெற்ற மனிதர்களாக இருக்கலாம். அப்படி இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மிகவும் எளிய முறையில் அமைந்த உடல்களிலிருந்து, மிகவும் சிக்கலான முறையில் அமைந்த உடல்கள்வரை, கீழிருந்து மேலே போகும் அமைப்புத்தான் பரிணாமக் கொள்கையின் நிரூபணம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த அமைப்பு கீழிருந்து மேலேதான் போகிறது, மேலிருந்து கீழே வருவதில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? இரண்டு பக்கங்களுக்கும் ஆதாரமாக வாதங்கள் இருக்கின்றன. இந்தக் கொள்கையில் ஏதாவது உண்மை இருக்குமானால்-இருக்கும் என்றே நான் நம்புகிறேன்- இந்த அமைப்பு மாறி மாறி மேலேயும் கீழேயும் போய் வருகிறது என்பதே உண்மை. ஒடுக்கம் இல்லாமல் விரிவு எப்படி இருக்க முடியும்? உயர்ந்த நிலைக்கான நமது போராட்டம், நாம் உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தவர்கள் என்பதையே காட்டுகிறது. உண்மை அப்படித்தான் இருக்க வேண்டும். விவரங்கள் வேண்டுமானால் வேறுபடலாம்.

ஏசுவும் புத்தரும் சொல்வதும் வேதாந்தம் சொல்வதும் நாம் எல்லோரும் ஒருநாள் நிச்சயமாக நிறைநிலையை அடைவோம், ஆனால் முழுமையடையாத இந்த நிலையை விட்டால்தான் அது முடியும், என்பதுதான். நான் அந்தக் கருத்தைத்தான் எப்போதும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த உலகம் ஒன்றுமே இல்லை. மிஞ்சிப் போனால், இது ஓர் அருவருப்பான கேலிச் சித்திரம், உண்மையின் நிழல், அவ்வளவுதான். நாம் உண்மையை நோக்கித்தான் போக வேண்டும். துறவு அங்கு நம்மை அழைத்துச் செல்லும். நமது உண்மையான வாழ்க்கையின் அடிப்படையே துறவுதான். நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரங்களில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் அனுபவிக்கிறோம். நம்முடைய சிறிய-நான் அழிய வேண்டும். அப்போதுதான், நாம் உண்மைப் பொருள், அந்த உண்மையே கடவுள், அதுதான் நமது உண்மையான இயல்பு, அது எப்போதும் நமக்கு உள்ளேயும் நம்மோடு கூடவேயும் இருக்கிறது என்பதை உணர முடியும். நாம் அவரிலேயே வாழ்வோம், அவரிலேயே நிற்போம். அந்த நிலை ஒன்றுதான் இன்பமான நிலை. ஆன்ம நிலையில் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. நாம் எல்லோரும் அந்த அனுபூதி நிலையை அடைவதற்கு முயல்வோமாக!

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,