உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்!

உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்!

நாம் இங்கே இருக்கிறோம், சிலவேளைகளில் நமது பார்வை வெகுதூரம் ஊடுருவிச் செல்கிறது. சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து மனிதன் இதைச் செய்து கொண்டிருக்கிறான். எப்போதும் அவன் முன்னோக்கியே பார்க்கிறான். உடல் அழிந்தபின், தான் எங்கே போவோம் என்பதை அறிய விரும்புகிறான். இந்தப் பிரச்சினைக்கு விளக்கம் கூறும் வகையில் பல கொள்கைகள் தோன்றியிருக்கின்றன. பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில ஒதுக்கப்பட்டன. சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனிதன் உலகில் இருக்கும்வரையில் அவனுக்குச் சிந்தனைச் சக்தி இருக்கும்வரையில் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கும். இந்தக் கொள்கைகள் ஒவ்வொன்றிலும் சிறிது உண்மை இருக்கிறது. கணிசமான அளவு உண்மை அல்லாத கொள்கைகளும் இருக்கின்றன. அவ்வப்போது இந்தியத் தத்துவ ஞானியரிடமிருந்து எழுந்த இந்தக் கருத்துக்கள் பலவற்றையும் இயைபுபடுத்தி உங்கள் முன் வைக்க முயல்கிறேன். மனஇயல்வாதிகள், தத்துவ மேதைகள், இவர்களின் சிந்தனையோடு, முடிந்தால், நவீன விஞ்ஞானிகளின் சிந்தனையையும் இணைத்து விளக்க முயல்கிறேன்.

வேதாந்தத் தத்துவத்தின் ஒரே குறிக்கோள் ஒருமையைத் தேடுவதுதான். குறிப்பான ஒன்றை இந்து மனம் நாடுவதில்லை; பொதுவான ஒன்றை, இல்லையில்லை, பிரபஞ்சம்தழுவிய ஒன்றை மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள். எந்த ஒன்றை அறிந்து கொள்வதால், மற்ற எல்லாவற்றையும் அறிய முடியும்? இதுதான் வேதாந்தத்தின் ஒரே குறிக்கோள். ஒரு களிமண் கட்டியின் இயல்பை அறிவதால், களிமண்ணால் ஆன பொருட்கள் அனைத்தின் இயல்பையும் அறிய முடிவதைப் போல், எனதை அறிவதன்மூலம், முழுப் பிரபஞ்சத்தையுமே அறிய முடியும்? வேதாந்திகள் தேடுவது அது ஒன்றையே.

பிரபஞ்சம் முழுவதுமே ஒரே பொருளால் ஆக்கப்பட்டது என்பது இந்துத் தத்துவ அறிஞர்களின் கருத்து. அதனை அவர்கள் ஆகாசம் என்கிறார்கள். நாம் நம்மைச் சுற்றிக் காண்கின்ற, உணர்கின்ற, தொடுகின்ற, சுவைக்கின்ற எல்லாமே இந்த ஆகாசத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள்தாம். அது எங்கும் நிறைந்தது; நுட்பமானது. திடம், திரவம், வாயு, உருவம், உடல், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று நாம் சொல்பவை எல்லாமே இந்த ஆகாசத்தால் ஆனவை.

இந்த ஆகாசத்தின்மீது செயல்பட்டு அதிலிருந்து பிரபஞ்சத்தைப் படைக்கும் சக்தி எது? ஆகாசத்தோடு கூடவே பிரபஞ்ச சக்தி ஒன்று இருக்கிறது. ஆற்றலாக, கவர்ச்சி சக்தியாக, ஏன், எண்ணமாகக்கூட வெளிப்படுகின்ற சக்திகள் எல்லாமே, இந்துக்கள் பிராணன் என்று சொல்கின்ற அந்த ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே. இந்தப் பிராணன் ஆகாசத்தின்மீது செயல்பட்டு பிரபஞ்சத்தைப் படைக்கிறது. ஒரு கல்பத்தின் ஆரம்பத்தில், இந்தப் பிராணன், எல்லையற்ற பெருங்கடலான ஆகாசத்தில் தூங்குவது போலுள்ளது. அது ஆரம்பத்தில் அசைவற்று இருந்தது. பிறகு பிராணனின் செயலால் ஆகாசத்தில் இயக்கம் ஏற்படுகிறது. பிராணன் இயங்க ஆரம்பித்ததும், ஆகாசப் பெருங்கடலிலிருந்து பல்வேறு வான மண்டல்ஙகள், சூரியர்கள், சந்திரர்கள், நட்சத்திரங்கள், பூமி, மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள் என்று பல்வேறு சக்திகளின் வெளிப்பாடுகளும் இயற்கை நிகழ்ச்சிகளும் தோன்றுகின்றன.

வேதாந்திகளின் கொள்கைப்படி, சக்தி எந்தவிதமாக வெளிப்பட்டாலும் அது பிராணன்; பொருள் எந்த உருவில் வெளிப்பட்டாலும் அது ஆகாசம். இந்தக் கல்பம் முடியும்போது, திடமெல்லாம் திரவமாகும்; திரவமெல்லாம் வாயுவாகும்; வாயுவெல்லாம் இன்னும் நுட்பமான, ஒரே மாதிரியான வெப்ப அலைகளாக மாறும். இறுதியில் எல்லாமே ஆகாசத்தில் ஒடுங்கிவிடுகின்றன. கவர்ச்சி சக்தி, விலக்கு சக்தி, இயக்கம் போன்ற எல்லாசக்திகளும் ஆதி பிராணனில் ஒடுங்குகின்றன. பிறகு இந்தப் பிராணன் ஒரு குறிப்பிட்ட காலம் தூங்குவதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் விழித்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. அந்தக் கல்பம் முடிந்தவுடன் மீண்டும் ஒடுக்கம். இவ்வாறு, படைப்பு என்பது அலையைப் போல், மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. தற்கால விஞ்ஞான மொழியில் சொல்வதானால், அது ஒரு காலத்தில் இயக்கம் அற்றும், மற்றொரு காலத்தில் இயக்கம் பெற்றும் இருக்கிறது. இவ்வாறு மாறிமாறி எல்லையற்ற காலமாக நடந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியும் முழுமையானதல்ல. தற்கால பவுதீக விஞ்ஞானத்திற்குக்கூட இந்த அளவு தெரிந்திருக்கிறது. இதற்கு அப்பால் பவுதீக விஞ்ஞானம் செல்ல முடியாது. அதற்காக, இந்த ஆராய்ச்சி அங்கே நின்றுவிடுவதில்லை. எதை அறிவதன்மூலம் எல்லாவற்றையும் அறிய முடியுமோ, அதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பிரபஞ்சம் முழுவதையுமே ஜடப்பொருள், சக்தி என்ற இரு பகுதிகளாக நாம் பிரித்துவிட்டோம். பண்டைய இந்தியத் தத்துவ ஞானியரின் மொழியில் இவையே ஆகாசம் மற்றும் பிராணன். இந்த ஆகாசமும் பிராணனும் எதனுடைய வெளிப்பாடுகள் என்று கண்டுபிடிப்பதே அடுத்த படி. இந்த இரண்டையுமே இவற்றைவிட மேலான பிரபஞ்ச மனமாகிய மகத் என்பதில் அடக்கிவிடலாம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் எண்ண ஆற்றலான மகத்திலிருந்தே இந்த இரண்டும் தோன்றுகின்றன. எண்ணம் என்பது ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டையும்விட நுட்பமான வெளிப்பாடு. எண்ணமே தன்னை ஆகாசமாகவும் பிராணனாகவும் பிரித்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் பிரபஞ்சம்தழுவிய எண்ணம் இருந்தது. இது வெளிப்பட்டு, மாற்றம் அடைந்து, பரிணமித்து, ஆகாசமாகவும் பிராணனாகவும் ஆகியது. இவை இரண்டின் சேர்க்கையாலேயே பிரபஞ்சம் முழுவதும் தோன்றியிருக்கிறது.

அடுத்து நாம் மனஇயலுக்கு வருவோம். நான் உங்களைப் பார்க்கிறேன். அந்தப் புறஉணர்ச்சியைக் கண்கள் என்னிடம் கொண்டு வருகின்றன. அது உணர்ச்சி நரம்புகளின்மூலம் மூளையை அடைகிறது. கண்கள், பார்வைப் புலன்கள் அல்ல. அவை வெறும் வெறிப் பொறிகள் மட்டுமே. ஏனென்றால் மூளைக்கு உணர்ச்சிகளைக் கொண்டுபோகும் உண்மையான புலன்கள் அழிந்துவிட்டால், எனக்கு இருபது கண்கள் இருந்தாலும், என்னால் உங்களைப் பார்க்க முடியாது. என்னுடைய விழித்திரையில் உருவம் நன்றாக விழலாம், ஆனாலும் உங்களை நான் பார்க்க முடியாது. ஆகவே புலனும் அதன் பொறியும் வெவ்வேறாகும். பொறிகளாகிய கண்களுக்குப் பின்னால் பார்வைப் புலன் இருக்கவேண்டும். எல்லா உணர்ச்சிகளும் இதுபோல்தான். மூக்கு, வாசனையை அறியும் புலனல்ல, அது வெறும் பொறி; அதற்குப் பின்னால் வாசனைப் புலன் இருக்கிறது. ஒவ்வொரு புலன் உணர்ச்சியையும் நாம் அறிய, முதலில், பவுதீக உடலில் வெளிப்பொறிகள் இருக்கின்றன; அடுத்து, அதே உடலில் பொறிகளுக்குப் பின்னால் புலன்கள் இருக்கின்றன. இவையெல்லாம் போதாது.

நீங்கள் என் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எங்கிருந்தோ ஒரு மணியோசை கேட்கிறது. உங்களுக்கு அது ஒரு வேளை கேட்காமல் போகலாம். அந்தச் சத்தத்தின் ஒலி அலைகள் உங்கள் காதுகளை எட்டின, செவிப்பறைகளைத் தாக்கின, அந்தப் பதிவுகள் மூளைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. மூளையை அடைவதுதான் கடைசிநிலை என்றால், சத்தம் ஏன் உங்களுக்குக் கேட்கவில்லை? எனவே வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது மனம். மனம் அந்தப் புலனோடு ஒட்டவில்லை. மனம் புலனிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டிருக்கும்போது புலன் என்ன உணர்ச்சியைக் கொண்டு வந்தாலும் அது அவற்றை ஏற்காது. அது புலனோடு தொடர்பு கொள்ளும்போதுதான் அதனால் புலணுணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள முடியும். இப்போதும் விஷயம் முடியவில்லை.

பொறிகள் உணர்ச்சிகளை வெளியிலிருந்து கொண்டு வரும். புலன்கள் அவற்றை உள்ளே எடுத்துச் செல்லும். மனமும் புலனுடன் தொடர்பு கொண்டிருக்கும். ஆனாலும் நாம் எதையும் உணராமல் போகலாம். நாம் உணர்வதற்கு மற்றோர் அம்சம் அவசியம். அது அகத்தின் எதிர்ச்செயல். எதிர்ச்செயலைத் தொடர்ந்துதான் அறிவு தோன்றுகிறது. வெளியே இருப்பவை என் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன. புத்தி முந்தைய அனுபவங்களோடு அதை ஒப்பிட்டு, எதிர்ச் செயல் புரிகிறது. அந்த எதிர்ச் செயலுக்குப் பிறகுதான் உணர்ச்சி முழுமையடைகிறது. இங்கே சங்கல்பமும் உள்ளது. எதிர்ச்செயல் புரியும் மனநிலையே புத்தி, இப்போதும் விஷயம் முடியவில்லை.

இன்னொரு படி தேவைப்படுகிறது. என்னிடம் ஒரு காமிரா இருப்பதாக வைத்துக் கொள்வோம். திரையில் படத்தைக் காட்ட நான் விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒளிக்கதிர்களை அந்தக் கருவியின் மூலம் செலுத்திப் படம் திரையில் விழுமாறு செய்ய வேண்டும். அசையாத திரை இதற்குத் தேவைப்படுகிறது. அசைகின்ற ஒன்றின்மீது படம் தெரியுமாறு செய்ய முடியாது. ஏனென்றால், காமிராவின் மூலம் செல்லும் ஒளிக்கதிர்கள் அசைந்து கொண்டிருப்பவை. இவற்றை ஒன்றுசேர்த்து, குவித்து, ஓர் உருவத்தைக் காட்ட வேண்டுமானால் அசையாத திரை வேண்டும்.

நம் புலனுணர்ச்சிகளின் விஷயமும் இப்படித்தான். பொறிகள் புலன்களுக்கும், புலன்கள் மூளைக்கும், மூளை மனத்திற்கும், மனம் புத்திக்கும் இந்த உணர்ச்சிகளை அனுப்புகின்றன. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் பின்னால் அசையாத திரை போன்ற ஒன்று இருந்து கொண்டு, இந்த உணர்ச்சி அலைகளையெல்லாம் ஒருங்கிணைத்து, நாம் அந்த உணர்ச்சியைப் பெறுமாறு செய்ய வேண்டும். எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் நம் தன்மையை ஒருமைப்படுத்துவது எது? கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கும் நம் தன்மையை நிலைப்படச் செய்வது எது? நமது பல்வேறு உணர்ச்சிகளையும் ஒன்றாகச் சேர்த்து வைப்பது எது? நம் உணர்ச்சிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து, ஒரே உருவமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் எது? இந்தச் செயல்களுக்கெல்லாம் அடிப்படையாக ஏதோ ஒன்று இருந்தே தீர வேண்டும். உடலோடும் மனத்தோடும் ஒப்பிட்டால் அந்த ஏதோ ஒன்று அசைவற்றதாக இருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது. காமிரா மூலமாக வரும் ஒளிக் கதிர்களோடு ஒப்பிட்டால், உருவம் விழுகின்ற திரை அசைவற்றதாக இருக்கிறது. இல்லாவிட்டால் உருவம் திரையில் தெரியாது. அதாவது, உணர்ச்சிகளை உணர்பவர் தனிப்பொருளாக இருக்க வேண்டும். மனம், இந்த உருவங்களையெல்லாம் வரைகின்ற திரைதான், மனமும் புத்தியும் கொண்டு செல்கின்ற உணர்ச்சிகளெல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு, பகுக்கப்பட்டு, ஒருமைப்படுத்தப்பட்டு ஒரே உருவமாகத் தெரியும் இடம்தான் மனித ஆன்மா.

அகண்ட பிரபஞ்ச மனமே தன்னை ஆகாசமாகவும் பிராணனாகவும் பிரித்துக் கொள்கிறது என்பதைப் பார்த்தோம். மனத்தைக் கடந்தே நம்மில் ஆன்மா இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். பிரபஞ்சத்தில், பிரபஞ்ச மனத்திற்குப் பின்னால் ஓர் ஆன்மா இருக்கிறது என்பது தெரிகிறது. அதுவே கடவுள். அதுவே மனிதனில் ஜீவாத்மாவாக இருக்கிறது. பிரபஞ்சத்தில் பிரபஞ்ச மனம் ஆகாசமாகவும் பிராணனாகவும் பரிணமித்திருப்பதைப் போல், பரமாத்மா பிரபஞ்சமாகப் பரிணமிக்கிறது. தனி மனிதன் விஷயத்திலும் உண்மையில் இப்படித்தானா? மனம் உடலையும் ஜீவாத்மா மனத்தையும் படைக்கின்றனவா? அதாவது மனிதனின் உடல், மனம், ஆன்மா மூன்றும் தனித்தனி இருப்புகளா? அல்லது மூன்றும் ஒரே பொருளாகச் சேர்ந்திருக்கின்றனவா? அல்லது அவன மூன்றும் ஒரே பொருளின் வேறுபட்ட நிலைகளா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் படிப்படியாக முயல்வோம். நாம் ஏறியுள்ள முதல்படி இதுதான்: தூல உடல் இதோ இருக்கிறது. தூல உடலுக்குப் பின்னால் புலன்கள், மனம், புத்தி, கடைசியில் ஆன்மா எல்லாம் இருக்கின்றன. உடல், மனம் இவற்றிலிருந்து வேறுபட்டது ஆன்மா என்பதை முதல் படியில் நாம் கண்டோம். மத உலகில், இந்த இடத்தில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. அந்த வேறுபாடு இதுதான்: பொதுவாக, துவைதக் கருத்துக்கள் எல்லாமே, ஆன்மா குணங்களுடன் கூடியது, அதற்குப் பல்வேறு குணங்கள் உள்ளன, இன்ப துன்ப அனுபவங்களுக்கு எல்லாம் அது உட்படுகிறது என்று கூறுகின்றன. ஆன்மாவிற்குக் குணங்கள் உண்டு என்பதை அத்வைதிகள் மறுக்கிறார்கள். அது நிர்க்குணமானது என்பது அவர்களின் கூற்று.

முதலில் துவதிகளை எடுத்துக் கொள்வோம். ஆன்மா, அதன் கதி இவற்றைப் பற்றிய அவர்களுடைய கருத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்ல முயல்கிறேன். அடுத்ததாக அவர்களை எதிர்க்கின்ற நெறியைப் பார்ப்போம். கடைசியாக, அத்வைதம் நமக்கு அளிக்கும் சமரசத்தையும் காண்போம்.

இந்த ஜீவாத்மா உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறுபட்டிருப்பதாலும், ஆகாசம், பிராணன் இவற்றால் ஆனதல்ல என்பதாலும் அது அழிவற்றதாகத்தான் இருக்க முடியும். ஏன்? அழிவு என்றால் என்ன? ஒரு பொருள் தன் மூலப்பொருட்களாகப் பிரிந்து போவது. பல மூலக்கூறுகள் சேர்ந்து உருவான பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இரண்டோ மூன்றோ பகுதிகளால் ஆன எதுவும், அதன் பகுதிகளாகப் பிரிந்தேயாக வேண்டும். சேர்க்கையால் ஆகாத ஒன்று மூலப் பொருட்களாகப் பிரிய முடியாது. ஆகவே அது அழிய முடியாது, அது அழிவற்றது. அது எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அது படைக்க படாதது. படைக்கப்பட்ட எதுவுமே கூட்டுப் பொருள்தான். சூன்யத்திலிருந்து எதுவும் படைக்கப்படுவதை யாரும் கண்டதில்லை. ஏற்கனவே இருக்கின்ற பொருட்கள் சேர்ந்து புதிய உருவங்களாவதுதான் படைப்பு-இதுதான் படைப்பைப் பற்றி நாமறிந்த உண்மை. உண்மை அப்படி இருப்பதாலும், மனிதனின் ஆன்மா தனிப் பொருளானதாலும் அது எப்போதும் இருந்திருக்க வேண்டும்; இனிமேலும் எப்போதுமே அது இருக்கும். உடல் அழிந்த பின்னும் ஆன்மா இருக்கிறது.

வேதாந்திகளின் கருத்துப்படி, இந்த உடல் கரைந்த பின்னர், மனிதனின் உயிர்ச்சக்திகள் மனத்திற்குத் திரும்பிப் போகின்றன. மனம் பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன் ஆன்மாவில் ஒடுங்குகிறது. நுண்ணுடல், மனவுடல், ஆன்மீகவுடல் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சூட்சும சரீரமாகிய சட்டையை அணிந்ததுபோல் ஆன்மா வெளியே வருகிறது.

இந்தச் சூட்சும சரீரத்தில்தான் மனிதனின் சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. சம்ஸ்காரம் என்பது என்ன? மனம் ஓர் ஏரியைப் போன்றது. ஒவ்வோர் எண்ணமும் அந்த ஏரியில் எழும் ஓர் அலை போன்றது. ஏரியில் அலைகள் எழுந்து அடங்கி மறைகின்றன. அதுபோல் மனமாகிய ஏரியில் எண்ண அலைகளும் இடைவிடாமல் எழுவதும் வீழ்வதுமாக உள்ளன. அவை வீழ்ந்தாலும் ஒரேயடியாக மறைவதில்லை; நுண்ணியவையாக மிக நுண்ணியவையாகவே மாறுகின்றன. ஆனாலும் வேண்டியபோது எழுவதற்குத் தயாராக அடங்கி இருக்கின்றன. நுட்ப உருவை அடைந்து விட்ட சில எண்ணங்களை, மறுபடியும் அலைபோல் எழுப்புவதைத்தான் நினைவு என்கிறோம். இவ்வாறு நாம் நினைத்த ஒவ்வோர் எண்ணமும், செய்த ஒவ்வொரு செயலும் மனத்தில் நுட்ப உருவில் இருக்கின்றன. மனிதன் இறக்கும்போது, இந்தப் பதிவுகளின் ஒட்டுமொத்தமும் மனத்தில் இருக்கும். அந்த மனம் சற்று நுட்பமான ஜடப்பொருளை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் செயல்படுகிறது. இந்தச் சம்ஸ்காரங்களையும் சூட்சும சரீரத்தையும் சட்டைகளாக அணிந்ததுபோல் ஆன்மா வெளியேறுகிறது. பல்வேறு சம்ஸ்காரங்களான பல்வேறு சக்திகளின் மொத்தப் பலனே, ஆன்மாவின் பாதையை நிர்ணயிக்கிறது. எங்கள் கருத்துப்படி, ஆன்மா செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன.

ஆன்மீக நெறியில் ஆழ்ந்து ஈடுபட்டவர்கள், மரணத்திற்குப் பின், சூரிய கிரணங்கள் வழியாகச் சந்திரலோகத்திற்குச் சென்று, அதன்மூலமாக மின்னல் உலகத்திற்குச் செல்கின்றனர். ஏற்கனவே இறையருளைப் பெற்ற ஒருவரை அங்கே சந்திக்கின்றனர். அவர் இந்தப் புதியவர்களை, எல்லாவற்றிலும் உயர்ந்த லோகமாகிய பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே இவர்களுக்கு எல்லாம் அறிகின்ற தன்மையும் எல்லா வல்லமையும் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட அவர்கள் கடவுளுக்குச் சமானமாக, எல்லாம் வல்லவர்களாக, எல்லாம் அறிகின்றவர்களாக ஆகின்றனர். துவைதிகளைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் அங்கேயே நிலைத்திருக்கின்றனர். அத்வைதிகளைப் பொறுத்தவரை, அந்தக் கல்பத்தின் முடிவில் அவர்கள் பரமாத்வோடு இரண்டறக் கலக்கின்றனர்.

அடுத்தபடியாக, சுயநல நோக்கத்துடன் நற்செயல்கள் செய்தவர்கள் மரணத்திற்குப்பின் தங்கள் புண்ணியத்தின் பலனாக, முதலில் சந்திரலோகத்தை அடைகிறார்கள். அங்கே பல சொர்க்கங்கள் இருக்கின்றன. அங்கே அவர்கள் நுட்பமான உடல்களை, தேவ உடல்களைப் பெறுகிறார்கள். தேவர்களாகி நீண்ட நெடுங்காலம் சொர்க்க போகங்களை அனுபவித்துக்கொண்டு, அங்கேயே வாழ்கிறார்கள். அந்தக் காலம் முடிந்ததும் பழைய வினைகளின் பாதிப்பால் பூமிக்குத் திரும்புகிறார்கள். வாயு மண்டலம், மேக மண்டலம் போன்ற பல மண்டலங்களைக் கடந்து, கடைசியாக மழைத் துளிகளின் வாயிலாக பூமியை அடைகிறார்கள். பூமியில், தங்களை ஏதாவது ஒரு தானியத்தோடு இணைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கான ஒரு புதிய உடலுக்கு வேண்டிய மூலப்பொருளைக் கொடுக்கும் தகுதியுள்ள ஒரு மனிதன், அந்தத் தானியத்தைச் சாப்பிடுகிறான்.

கடைசியாக கொடியவர்கள். இவர்கள் இறந்த பின்னர் பேய்பிசாசுகளாக மாறிவிடுகிறார்கள். சந்திரலோகத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள ஏதோ ஓர் உலகில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுள் சிலர் மனித குலத்திற்குத் தொந்தரவு கொடுக்க முயல்கிறார்கள்; சிலர் நட்புறவோடு இருக்கிறார்கள். அங்கே சிலகாலம் வாழ்ந்த பிறகு, மறுபடியும் பூலோகத்திற்கு வந்து, மிருகங்களாகப் பிறக்கிறார்கள். சிலகாலம் மிருக உடம்பில் வாழ்ந்த பிறகு, அதிலிருந்து விடுபட்டு பின்னர் மனிதர்களாகப் பிறந்து, முக்தி அடைவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

கிட்டத்தட்ட நிறைநிலையை அடைந்து, பாவம் சிறிது மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், சூரிய கிரணங்களின் மூலமாகப் பிரம்மலோகத்தை அடைகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். நடுத்தரமான மனிதர்கள், அதாவது சொர்க்கத்தை அடையும் ஆசையோடு நற்செயல் செய்தவர்கள் சந்திர லோகத்திலுள்ள சொர்க்கங்களை அடைந்து தேவஉடலைப் பெறுகிறார்கள். ஆனால் இவர்கள் மறுபடியும் மனிதர்களாகப் பிறந்து, முக்தி அடைவதற்கு மற்றொரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். கொடியவர்கள் பேய்பிசாசுகளாகிறார்கள். அதன்பின் அவர்கள் மிருகங்களாகவும் பிறக்க வேண்டியிருக்கிறது. பிறகு, மனிதர்களாகப் பிறந்து, முக்தியடைவதற்கு மற்றொரு வாய்ப்பைப்பெறுகிறார்கள்.

இந்தப் பூமியைக் கர்ம பூமி என்று சொல்கிறார்கள். இங்கே மட்டும்தான் மனிதன் புண்ணிய பாவங்களைச் செய்ய முடியும். சொர்க்கத்திற்குப் போக விரும்பி நற்செயல் செய்யும் மனிதன் தேவனாகிறான். அங்கே அவனுக்குப் பாவ கர்மங்கள் எதுவும் சேர்வதில்லை. பூமியில் அவன் செய்த நற்செயல்களின்பலனான சொர்க்க போகங்களை மட்டுமே அங்கே அனுபவிக்கிறான். புண்ணிய பலன் தீர்ந்ததும், அவன் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் மொத்தப் பலன் அவனை மறுபடியும் பூமியில் பிறக்க வைக்கிறது. அதேபோல், பேய் பிசாசுகளாக மாறியவர்கள், புதிய பாவங்களைச் செய்வதில்லை. ஆனால் தாங்கள் முன்பு செய்த பாவங்களுக்கான பலனை அனுபவிக்கிறார்கள். பிறகு, பாவ புண்ணியங்கள் எதுவுமே செய்யாமல், ஒரு மிருக உடலில் சிலகாலம் இருக்கிறார்கள். அந்தக் காலம் முடிந்தவுடன் மறுபடியும் மனிதர்களாகப் பிறக்கிறார்கள். சொர்க்கத்திலும் நரகத்திலும் புதிய பாவ புண்ணியங்களைச் செய்ய முடியாது; அங்கே புண்ணிய பாவப் பலன்களை மட்டுமே அனுபவிக்கலாம்.

மிகச் சிறந்த புண்ணியமோ, மிகக் கொடுமையான பாவமோ கைமேல் பலன் அளிக்கிறது. உதாரணமாக, ஒருவன் தன் வாழ்க்கை முழுவதும் பாவங்களையே செய்து, ஒரே ஒரு புண்ணியம் செய்தாலும், அந்தப் புண்ணியத்திற்குக் கைமேல் பலன் கிடைத்துவிடும். அந்தப் புண்ணியபலன் தீர்ந்தபின் பாவங்களின் பலனை அவன் அனுபவித்தேயாக வேண்டும். சில பெரிய நற்காரியங்களைச் செய்த, ஆனால் அவ்வளவு முறையான வாழ்க்கையை வாழாத மனிதர்கள் தேவர்கள் ஆகிறார்கள். சிலகாலம் தேவ உடலில் வாழ்ந்து, போகங்களை அனுபவித்த பிறகு, அவர்கள் மறுபடியும் மனிதர்களாகப் பிறந்தேயாக வேண்டும். புண்ணிய பலன் தீர்ந்தவுடன் பாவத்தின் பலன் தலை காட்டத் தொடங்குகிறது. அதையும் அனுபவித்துத் தீர்க்க வேண்டும். கொடிய பாவம் செய்தவர்கள் பேய்பிசாசுகளாக இருந்தேயாக வேண்டும். அந்தப் பாவ பலன் தீர்ந்தவுடன், அவர்கள் செய்த சிறிதளவு புண்ணியம் அவர்களை மறுபடியும் மனிதர்களாகப் பிறக்க வைக்கிறது. பிரம்மலோகத்தை அடைந்துவிட்டால், அங்கிருந்து கீழே விழுவதோ பூமிக்குத் திரும்புவதோ இல்லை. அந்த உலகத்திற்குச் செல்லும் வழிக்குத் தேவயானம் என்று பெயர்; அதாவது, கடவுளை நோக்கிப் போகும் வழி. சொர்க்கத்திற்குப் போகும் வழிக்கு பித்ருயானம் அல்லது முன்னோர்களை நோக்கிப் போகும் வழி என்று பெயர்.

ஆகவே வேதாந்தத் தத்துவத்தின்படி, பிரபஞ்சத்தில் மிகவும் சிறந்த பிறவி மனிதப் பிறவிதான். கர்ம பூமியாகிய இந்த உலகம்தான் பிரபஞ்சத்திலேயே சிறந்த இடம். ஏனென்றால் இங்கேதான் மனிதன் நிறைநிலையை அடைவதற்கு மிகச் சிறந்த, மிக உயர்ந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தேவதைகள் ஆகட்டும், தேவர்கள் ஆகட்டும், நிறைநிலையை அடைய வேண்டுமானால், மனிதர்களாகப் பிறந்தே தீர வேண்டும். இந்த மனிதப் பிறவிதான், சிறந்த மையம், சிறந்த வாய்ப்பு

இப்போது நாம் தத்துவத்தின் வேறு கோணத்தைப் பார்க்கலாம். நான் இப்போது உங்களுக்குக் கூறிய ஆன்ம தத்துவத்தை முற்றிலுமாக மறுக்கின்ற பவுத்தர்கள் இருக்கிறார்கள். உடல், மனம் இவற்றிற்கு அடிப்படையாக, ஆதாரமாக ஏதோ ஒன்று இருப்பதாகக் கற்பித்துக் கொள்வதால் என்ன பயன்? நம் சிந்தனை ஓட்டத்தை நாம் ஏன் தடை செய்ய வேண்டும்? உடலாலும் மனத்தாலும் ஆன இந்த மனித உருவிற்கு அப்பால், ஆன்மா என்ற மூன்றாவதாகிய ஒன்றை எதற்காக ஒப்புக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன்? இந்த மனிதப் பிறவியை விளக்க மனிதனே போதாதா? ஏன் மூன்றாவதான ஒன்றைப் புதிதாகப் புகுத்த வேண்டும்? என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த வாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்தப் பகுத்தறிவு வாதம் உறுதியானது. புற ஆராய்ச்சியைப் பொறுத்தவரை தன்னைத்தான் விளக்கிக் கொள்ள மனிதனே போதும். நம்முள் பலர் இந்த விஷயத்தை இப்படித்தான் பார்க்கிறோம்.

அப்படியானால், மனமாகவோ உடலாகவோ இல்லாமல், அவை இரண்டிற்கும் அடிப்படை ஆதாரமான ஆன்மா என்ற ஒன்றை ஏன் கற்பித்துக்கொள்ள வேண்டும்? சரி, மனமும் உடலும் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்வோம். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஜடப்பொருள் பிரவாகத்தின் பெயரே உடல். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சிந்தனை அல்லது எண்ணப் பிரவாகமே மனம். இவை இரண்டும் சேர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பது எது? உண்மையில் இந்த இணைப்பு இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஒரு தீப்பந்தத்தை எடுத்து வேகமாகச் சுழற்றுவோம். ஒரு நெருப்பு வட்டம் தெரியும். உண்மையில் அத்தகைய ஒரு வட்டம் இல்லை. ஆனால் தொடர்ந்த சுழற்சி, வட்டம் ஒன்று இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையிலும் எந்த ஒருமையும் இல்லை. தொடர்ந்து பாய்ந்துக்கொண்டே இருக்கும் ஜடப்பொருள்பிரவாகமே இது. இந்த ஜடப்பொருள் தொகுதியை, நாம் வேண்டுமானால் ஓர் ஒருமை என்று சொல்லிக் கொள்ளலாம், அவ்வளவுதான். மனத்தின் விஷயமும் இப்படியேதான். ஒவ்வோர் எண்ணமும் மற்ற எண்ணங்களிலிருந்து தனித்தே நிற்கிறது. பிரவாகத்தின் தொடர்ச்சியும் வேகமுமே ஒருமை இருப்பதைப்போல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது. மூன்றாவது தேவையில்லை. பிரபஞ்சம் முழுவதிலுமே இருக்கின்ற உண்மையெல்லாம் உடலும் மனமும் மட்டுமே. இதற்குப் பின்னால் எதையும் கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை.

தற்கால மதப் பிரிவினர் சிலர், இந்தப் பவுத்தச் சிந்தனையை எடுத்துக்கொண்டு தங்கள் சொந்தமான, தாங்களே கண்டுபிடித்த புதிய சிந்தனை என்று உரிமை கொண்டாடுகிறார்கள். இந்த உலகம் ஒன்றைக்கொண்டே நாம் எல்லாவற்றையும் விளக்கிவிடலாம் என்ற இந்தக் கருத்தே பவுத்தத் தத்துவத்தின் பல பிரிவுகளுடைய மையக் கருத்தாக இருக்கிறது. ஆதாரப் பொருள் எதுவும் தேவையில்லை. இருப்பதெல்லாம் புலனுக்குத் தென்படும் இந்த உலகம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக ஏதோ இருக்கிறது என்று நினைப்பதால் என்ன பயன்? எல்லாமே குணங்களின் சேர்க்கைதான். இந்தக் குணங்களுக்கு ஆதாரமான ஒரு கற்பனைப் பொருள் ஏன் இருக்க வேண்டும்? ஒரு பொருள் இருக்கிறது என்ற எண்ணம் வருவதற்குக் காரணம், குணங்களின் வேகமான மாற்றமே தவிர குணங்களுக்குப் பின்னால் இருக்கும் மாற்றமற்ற ஏதோ ஒன்று அல்ல.

இந்த வாதங்களில் சில, மிகவும் அற்புதமாக இருப்பதைக் காண்கிறோம். இவை மனிதர்களின் பொதுவான அனுபவத்திற்கு ஒத்து வருகின்றன. உண்மையில் சொல்லப்போனால் புலனறிவுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, உயர்ந்த எதையும் கோடியில் ஒருவரால்கூட நினைக்க முடியாது. இயற்கை என்பது எப்போதும் மாறிக்கொண்டும், சுழன்றுகொண்டும், ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டும் இருக்கும் நிலையற்ற பொருளாகத்தான் பலருக்குத் தோன்றுகிறது. இதற்குப் பின்னால் இருக்கின்ற அமைதியான கடலின் கணநேரக் காட்சிகூட மிகச் சிலருக்கே கிடைக்கிறது. அது எப்போதும் அலைகளாகச் சுழன்று புரண்டடித்துக் கொண்டிருப்பதுதான் நமக்குத் தெரிகிறது. இந்தப் பிரபஞ்சம் சுழன்றும் புரண்டும் எழுகின்ற அலைகள் நிறைந்த கடலாகவே நமக்குத் தோன்றுகிறது.

இவ்வாறு நாம் இரண்டு கருத்துக்களைப் பார்க்கிறோம். உடல், மனம் இரண்டிற்கும் அப்பால், அசைவோ மாற்றமோ அற்ற ஏதோ ஒன்று இருக்கிறது என்பது ஒன்று; அசைவோ மாற்றமோ அற்ற எதுவுமே பிரபஞ்சத்தில் இருக்க முடியாது என்பது மற்றொன்று. எல்லாமே மாற்றம்தான்; மாற்றத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இந்த வேறுபாட்டிற்குத் தீர்வு, சிந்தனையின் அடுத்த படியான அத்வைத வேதாந்தத்தில்தான் கிடைக்கிறது.

எல்லாவற்றிற்கும் பின்னால், அடிப்படையாக, மாற்றமே அற்ற ஏதா ஒன்று இருப்பதாக துவைதிகள் சொல்வது சரிதான். மாற்றமற்ற ஒன்றை அடிப்படையாகக் கொள்ளாமல், மாற்றத்தைப் பற்றி நம்மால் நினைக்க முடியாது. குறைவான மாற்றமுடைய ஒன்றை வைத்துத் தான், அதைவிட அதிகமான மாற்றமுடைய ஒன்றை நாம் நினைக்க முடியும். இதைவிடக் குறைவான மாற்றமுடைய ஒன்றோடு ஒப்பிட்டால், இது அதிகமான மாற்றம் உள்ளதாகத்தான் இருக்கும். இப்படியே நினைத்துப் பார்த்தால், கடைசியில், மாற்றமே அற்ற ஒரு பொருள் இருந்தேயாக வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். இப்போது நாம் காணும் வெளிப்பாடு எல்லாமே, முதலில் ஒடுக்க நிலையில் இருந்திருக்க வேண்டும். எதிர்ச் சக்திகளின் சமநிலையினால் ஏற்பட்ட அமைதியே அங்கு நிலவியிருந்திருக்க வேண்டும். அங்கே எந்தச் சக்தியும் இயங்கியிருக்க முடியாது. ஏனென்றால் சமநிலை தவறும் போதுதான் சக்திகளின் இயக்கம் ஆரம்பிக்கிறது. அந்தச் சமநிலையை மீண்டும் பெறுவதற்காகவே பிரபஞ்சம் விரைந்து கொண்டிருக்கிறது. சர்வ நிச்சயமான உண்மை என்று ஏதாவது உண்டென்றால் அவற்றுள் இதுவும் ஒன்று.

மாற்றமற்ற ஒன்று இருப்பதாக துவைதிகள் சொல்வது மிகவும் சரியே. ஆனால் இந்த ஏதோ ஒன்று, உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் மாறுபட்ட, அவற்றிலிருந்து தனிப்பட்டு நிற்கும் ஏதோ ஒன்று என்று அவர்கள் சொல்வதுதான் தவறு. பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது என்று பவுத்தர்கள் சொல்வது சரியே. நாம் பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்டு நின்று கொண்டு பார்க்கும்வரை, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற இரண்டு இருக்கும்வரை, பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் மாற்றம், மாற்றமின்மை இரண்டுமே பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆன்மா, மனம், உடல் இவை மூன்றும் தனித்தனியானவை அல்ல. ஏனெனில் இந்த மூன்றாலும் செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுதான். ஒன்றேதான் உடலாகவும் மனமாகவும் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டதாகவும் தோன்றுகிறது. ஆனால் அது ஒரே சமயத்தில் இவை எல்லாமாகவும் தோன்றுவதில்லை. உடலை மட்டுமே காண்பவனுக்கு மனம் தெரிவதில்லை. மனத்தை மட்டுமே காண்பவனுக்கு ஆன்மா தெரிவதில்லை. ஆன்மாவைக் காண்பவனுக்கோ உடலும் மனமும் ஒழிந்தேவிட்டன. இயக்கத்தைக் காண்பவனுக்குப் பேரமைதி தெரிவதில்லை. பேரமைதியைக் காண்பவனுக்கு இயக்கம் என்பதே இருப்பதாகத் தெரிவதில்லை, கயிற்றைப் பாம்பாகக் காண்பவனுக்குக் கயிறு தெரிவதில்லை. இந்த மனமயக்கம் மறைந்தவுடன் அவன் கயிற்றைக் காண்கிறான். பாம்பு மறைந்துவிடுகிறது.

ஆகவே இருப்பது, எல்லாம் தழுவிய ஒன்றுதான். அதுவே பலவாகத் தோன்றுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பது இந்த ஆன்மா ஒன்றுதான். ஆன்மாதான் அத்வைத மொழியில் பிரம்மம் எனப்படுகிறது. பிரம்மமே நாமரூபங்களின் காரணமாகப் பலவாகத் தோன்றுகிறது. கடலின் அலைகளைப் பாருங்கள். ஓர் அலைகூடக் கடலிலிருந்து வேறுபட்டதல்ல. அந்த அலைகளை வேறுபடுத்திக் காட்டுவது எது? நாமரூபங்களே. அலையின் உருவமும், நாம் அதற்கு வைத்திருக்கும் அலை என்ற பெயருமே, வேறுபாடு இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுவே அலையைக் கடலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. நாமரூபத்தை எடுத்துவிட்டால் அது அதே கடல்தான். கடலையும் அலையையும் உண்மையில் வேறுபடுத்திக் காண யாரால் முடியும்?

பிரபஞ்சமே அந்த ஒன்றேயான ஒருமைப் பொருள். பலவகை வேறுபாடுகளை உருவாக்கியது நாமரூபமே. லட்சக் கணக்கான நீர்த்துளிகள் தோறும் பிரதிபலிக்கின்ற சூரியனின் பிம்பம் ஒவ்வொன்றும் முழுச் சூரியனைப் போலவே தோன்றுகிறது. அதுபோலவே பல்வேறு நாமரூபங்களில் பிரதிபலிக்கும்போது பல்வேறாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது ஒன்றேதான். அங்கு நான் இல்லை, நீ இல்லை. எல்லாம் ஒன்றே. எல்லாம் நான் அல்லது எல்லாம் நீ என்பதாகத்தான் இருக்க முடியும். இரண்டு என்ற இந்தக் கருத்தே முற்றிலும் தவறானது. நாம் பொதுவாக எப்படி பிரபஞ்சத்தைக் காண்கிறோமோ, அது இந்தத் தவறான கருத்தின் பலனே. மனிதன் விவேகம் பெற்று, இருப்பது இரண்டல்ல, ஒன்றே என்பதை உணரும்போது, தானே இந்தப் பிரபஞ்சம் என்பதை உணர்கிறான். தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சமாக இருப்பது நானே. எல்லா மாற்றங்களையும் எல்லா குணங்களையும் கடந்தவனாக, என்றென்றும் பரிபூரணனாக, என்றென்றும் ஆனந்தமாக இருப்பது நானே.

ஆகவே இருப்பது ஒரே ஆன்மாதான். அது என்றும் தூய்மையானது; என்றும் பூரணமானது; மாறாதது; மாற முடியாதது. அது ஒருபோதும் மாற்றம் அடைந்ததில்லை. பிரபஞ்சத்தில் காணப்படும் பல்வேறு மாற்றங்களும் அந்த ஒரே பிரம்பத்திலேயே தோன்றுகின்றன. அந்தப் பிரம்மத்தின் மீதான நாமரூபங்கள் இந்தக் கணவுகளையெல்லாம் வரைந்திருக்கின்றன. அலைகளைக் கடலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது உருவமே. அலை அடங்கினால் அலை உருவம் நிலைத்திருக்குமா? இருக்காது, நிச்சயமாக மறைந்துவிடும். அலை முற்றிலும் கடலைச் சார்ந்ததாக இருக்கிறது. கடல் ஒருபோதும் அலையைச் சார்ந்திருக்கவில்லை. அலை இருக்கும்வரை அலை உருவமும் இருக்கும். அலை அடங்கியவுடன் அலை உருவமும் மறைந்துவிடும்.

இந்த நாமரூபம் மாயையால் ஏற்படும் தோற்றமே. ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தனியாகக் காட்டுவது இந்த மாயையே, ஆனாலும் மாயை என்பது இருப்பதாகச் சொல்ல முடியாது. உருவம் என்பது இருப்பதாகச் சொல்ல முடியாது ஏனென்றால் அது மற்றொரு பொருளின் இருப்பைச் சார்ந்ததாக உள்ளது. அது இல்லை யென்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் நாம் காணும் வேறுபாடுகளெல்லாம் அதுவே காரணம். ஆகவே மாயை அல்லது அஞ்ஞானம் அல்லது நாமரூபம் அல்லது ஐரோப்பியர்கள் சொல்வதுபோல், காலம், இடம், காரண காரியம் என்பது இந்தப் பிரம்மத்திலிருந்து தோன்றி, பிரபஞ்சத்தைப் பல்வேறு நாமரூபங்களாகக் காட்டுகிறது.

உண்மையில் பிரபஞ்சம் ஒரே பொருளே. இரண்டு அறுதி உண்மைகள் இருப்பதாக நினைப்பவன் தவறு செய்கிறான். இருப்பது ஒன்றே என்று உணரும்போதுதான் அவன் சரியாக எண்ணுகிறான். இந்த உண்மை உடல் நிலையில், மனநிலையில் ஆன்மநிலையில் ஒவ்வொரு நாளும் நிரூபணமாகிறது. நான், நீங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாமே ஜடப்பொருள் என்ற எல்லையற்ற கடலில் உள்ள பல்வேறு துணுக்குகளின் பல்வேறு பெயர்களே என்பதையும், இந்த ஜடப்பொருள் இடைவிடாமல் தன் அமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பதையும் இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். சூரியனில் பல மாதங்களுக்கு முன்பிருந்த சக்தித்துணுக்கு இன்று மனிதனில் இருக்கலாம். நாளைக்கு அதுவே ஒரு மிருகத்திலும், அடுத்த நாள் ஒரு வாரத்திலும் இருக்கலாம். அது தொடர்ந்து வந்துபோய்க் கொண்டே இருக்கிறது. எல்லாமே, பிளவுபடாத எல்லையற்ற ஒரே ஜடப்பொருள்தான். பெயரும் உருவமுமே வேறுபாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்தப் பொருளின் ஒரு துணுக்கைச் சூரியன் என்றும், மற்றொன்றைச் சந்திரன் என்றும், இன்னொன்றை நட்சத்திரம் என்றும், இன்னுமொன்றை மனிதன் என்றும், வேறொன்றை மிருகம் என்றும், இன்னும் வேறொன்றைத் தாவரம் என்றும் கூறுகிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் கற்பனையானவை, அவற்றில் உண்மை இல்லை. ஏனெனில் எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கின்ற ஒரே ஜடப்பொருளே.

இதே பிரபஞ்சம், வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால் எண்ணக் கடலாக இருக்கிறது. ஒவ்வொரு மனமும் இந்தக் கடலிலுள்ள ஒவ்வொரு துளியே ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனம், நான் ஒரு மனம் என்று உலகிலுள்ள ஒவ்வொருவருமே ஒவ்வொரு மனம்தான். இதே பிரபஞ்சத்தை ஞானம் என்னும் கோணத்திலிருந்து பார்க்கும்போது, கண்கள் பொய்த்தோற்றத்தைப் பார்ப்பதை விடும்போதும், மனம் தூய்மையடையும்போது, அது, வேறுபாடே இல்லாத, எப்போதும் தூய்மையான, மாற்றமே அற்ற, அழிவே அற்ற தனிப்பரம்பொருளாகத் தோன்றுகிறது.

அப்படியானால் மரணத்திற்குப் பின் மனிதர்களின் மூவகைப் பயணங்களைப்பற்றி துவைதிகள் கூறிய கருத்து, அதாவது மனிதன் இறந்தபின் சொர்க்கத்திற்கோ வேறு உலகங்களுக்கோ போவதாகவும், தீயவர்கள் பேய் பிசாசுகளாகவும் மிருகங்களாகவும் ஆவதாகவும் கூறியவையெல்லாம் என்னாவது? யாரும் வருவதும் இல்லை, போவதும் இல்லை என்கிறான் அத்வைதி. நாம் எப்படி வரவோ போகவோ முடியும்? நாம் எல்லையற்றவர்கள்; நாம் எங்கே போக முடியும்?

ஒரு பள்ளியில் குழந்தைகளுக்குத் தேர்வு நடந்தது. ஆசிரியர் முட்டாள் தனமாகப் பல கஷ்டமான கேள்விகளைக் கேட்டார்; ஏன் பூமி கீழே விழுவதில்லை? என்பது அவற்றுள் ஒரு கேள்வி. ஈர்ப்புச் சக்தி அல்லது வேறு ஏதாவது சிக்கலான விஞ்ஞான உண்மையைப் பதிலாகப் பெற வேண்டுமென்பது அவரது நோக்கம். குழந்தைகளில் பலருக்கு அவரது கேள்வியே புரியவில்லை. ஆகவே பலர் தவறான பதில்களைச் சொன்னார்கள். ஆனால் ஒரு புத்திசாலிச் சிறுமி, பூமி எங்கே விழும்? என்ற எதிர்க்கேள்வியால் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தாள். ஆசிரியர் கேட்ட கேள்வியே பொருளற்றது. மேல்கீழ் என்பதெல்லாம் பிரபஞ்சத்தில் இல்லை. இந்தக் கருத்து வேறு ஒன்றைச் சார்ந்ததே.

ஆன்மாவின் விஷயமும் இப்படித்தான். ஆன்மாவைப் பொறுத்தவரை, பிறப்பு இறப்பு என்பவை எல்லாம் முட்டாள்தனம். யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள்? நாம் இல்லாத இடம் எது? நாம் ஏற்கனவே இல்லாத சொர்க்கம் எங்கே இருக்கிறது? மனிதனின் ஆன்மா எங்கும் நிறைந்தது. அது அங்கே போக முடியும்? எங்கே போகாதிருக்க முடியும்? அது எங்கும் இருக்கிறது. ஆகவே நிறைநிலை அடைந்தவனுக்கு, பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் ஆகிய பொய்த் தோற்றங்களும் சிறுபிள்ளைத் தனமான கனவுகளும் உடனே மறைந்து விடுகின்றன. கிட்டத்தட்ட நிறைநிலை அடைந்தவனுக்கு, பிரம்மலோகம்வரை உள்ள எல்லா காட்சிகளும் தோன்றி, பிறகு மறைகின்றன. அறியாமையில் உழல்பவர்களுக்கு எல்லாம் தொடர்கின்றன.

சொர்க்கத்திற்குப் போவது, பிறப்பது, இறப்பது என்பவற்றை இந்த உலகமே நம்புகிறதே, அது எப்படி? நான் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பக்கமாகப் படித்துவிட்டுத் திருப்புகிறேன். மாறுவது யார்? வருவதும் போவதும் யார்? நானல்ல, புத்தகம் தான். ஆன்மாவின் முன்னிலையில் இயற்கை ஒரு புத்தகமாக உள்ளது. அதன் அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் படிக்கப்படுகின்றன, திருப்பப்படுகின்றன. அவ்வப்போது அந்தப் புத்தகத்தில் ஒரு காட்சி விரிகிறது. அது படிக்கப்பட்டு, திருப்பப்படுகிறது, உடனே புதியதொரு காட்சி வருகிறது. ஆனால் ஆன்மா மாறாமல் எப்போதும் நிலையாக இருக்கிறது. மாறுவது இயற்கையே; மனிதனின் ஆன்மாவல்ல. அது ஒருபோதும் மாறுவதில்லை. பிறப்பும் இறப்பும் இயற்கையில்தான் இருக்கின்றன. ஆன்மாவில் இல்லை. ஆனாலும் அறிவிலிகள் மனமயக்கத்தையே உண்மையென்று நம்புகிறார்கள். மனமயக்கத்தின் காரணமாக சூரியன் நகர்வது போலவும், பூமி நகராதிருப்பது போலவும் நாம் காண்கிறோம். அதுபோலவே இறப்பது நாம்தான், இயற்கை அல்ல என்று நினைக்கிறோம்.

இவையெல்லாம் பொய்த் தோற்றங்களே. ரயிலில் போகும்போது, நிலம் ஓடுவது போலவும், வண்டி ஓடாதது போலவும் தோன்றுவதுபோல், பிறப்பு, இறப்பு ஆகியவையும் பொய்யாகத் தோன்றுகின்றன. மனிதர்கள் ஒரே பிரபஞ்சத்தையே, ஒரு குறிப்பிட்ட மனநிலையில் பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று பல நாமரூபங்களாகப் பார்க்கிறார்கள். அதே மனநிலையில் உள்ள எல்லோரும் அவற்றையே பார்க்கிறார்கள். அதே மனநிலையில் உள்ள எல்லோரும் அவற்றையே பார்க்கிறார்கள். உங்களுக்கும் எனக்கும் இடையில் பல்வேறு நிலைகளில் வாழும் பல உயிர்கள் இருக்கலாம். அவற்றால் நம்மைப் பார்க்கவே முடியாது. நம்மாலும் அவற்றைப் பார்க்க முடியாது. நம்முடைய மனநிலையிலும் இருப்புநிலையிலும் உள்ளவர்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். ஒரே சுருதியுள்ள இசைக் கருவிகளில் எழும் நாதம்தான் ஒத்துப் போகிறது. மனித அதிர்வு என்று சொல்லப்படும் அதிர்வுநிலை மாறிவிட்டால் இங்கே மனிதர்களைப் பார்க்க முடியாது. மனிதப் பிரபஞ்சம் முழுவதுமே மறைந்து, அதற்குப் பதிலாக வேறு காட்சிகள் தோன்றும். ஒருவேளை, தெய்வங்கள், தெய்வப் பிரபஞ்சம் இவையெல்லாம் தோன்றலாம். தீயவர்களின் கண்ணுக்குப் பேய்பிசாசுகளும் பேயுலகமும் தோன்றலாம். ஆனால் எல்லாமே ஒரே பிரபஞ்சத்தின் வேறுபட்ட தோற்றங்களே.

மனித நிலையிலிருந்து பார்க்கும்போது இதே பிரபஞ்சம் பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களாகத் தெரிகிறது. இதே பிரபஞ்சம் தீயவர்களின் கண்ணிற்கு நரகமாகத் தெரிகிறது. இதே பிரபஞ்சத்தைச் சொர்க்கமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு, இது சொர்க்கமாகத் தெரிகிறது. ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சிபுரியும் கடவுள் ஒருவரின் பக்கத்தில் நின்று கொண்டு, எப்போதும் அவரைத் துதித்தபடியே இருப்பதை விரும்புபவர்கள் இறக்கும்போது, தங்கள் மனத்தில் இருப்பதைத் தோற்றங்களாகக் காண்கிறார்கள். அவர்கள் இறக்கும் தறுவாயில், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் கடவுள், அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் தேவதைகள் இவர்கள் நிறைந்த சொர்க்கமாக இதே பிரபஞ்சம் அவர்களுக்குத் தோன்றுகிறது.

இந்தச் சொர்க்கங்களெல்ல்õம் மனிதர்களின் கற்பனையே. துவைதி சொல்வது சரிதான், ஆனால் அவை அவனுடைய கற்பனை என்று அத்வைதி கூறுகிறான். சொர்க்கம், நரகம், பேய்பிசாசுகள், தேவர்கள், மறுபிறவிகள் எல்லாமே புராணக்கதைகள். மனித வாழ்வும் அப்படியே. இந்தவாழ்க்கை மட்டுமே உண்மை என்று மனிதர்கள் நினைப்பதுதான் அவர்கள் செய்யும் பெரிய தவறு. வேறு எதையாவது புராணம் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் நிலையும் அப்படியேதான் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதே இல்லை. நாம் கேட்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, நாம் வெறும் உடல்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய். நாம் என்றுமே வெறும் உடல்களாக இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. நாம் வெறும் மனிதர்கள் என்று சொல்வது, பொய்களிலெல்லாம் மிகப்பெரிய பொய்.

இந்தப் பிரபஞ்சத்தின் கடவுளே நாம்தான். நாம் கடவுளை வழிபடும்போது, நம்முள் மறைந்திருக்கும் நமது ஆன்மாவையே வழிபடுகிறோம். நாம் பிறவியிலேயே பாவிகள், தீயவர்கள் என்று சொல்வதுதான் நீங்கள் சொல்ல முடிந்தவற்றுள் மிகப் பெரும் பொய். மற்றவர்களைப் பாவிகளாகப் பார்ப்பவர்களே உண்மையில் பாவிகள். ஒரு குழந்தை இங்கே இருப்பதாகவும், இங்கே உள்ள மேஜையின்மீது தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பையை வைப்பதாகவும் வைத்துக் கொள்வோம். ஒரு திருடன் வந்து, தங்கக் காசுகளைத் திருடிச் செல்கிறான். குழந்தையைப் பொறுத்தவரை, அதற்கு எந்த வேறுபாடுகளும் தெரிவதில்லை. அதன் உள்ளத்தில் திருடன் என்ற கருத்து இல்லாததால், வெளியிலும் அது திருடனைக் காணவில்லை. பாவிகளுக்கும் தீயவர்களுக்கும் உலகில் தீமையே கண்ணுக்குத் தெரிகிறது. நல்லவர்களுக்கு அப்படி இல்லை. ஆகவே தீயவர்களுக்கு இந்தப் பிரபஞ்சம் நரகமாக இருக்கிறது. ஓரளவு நல்லவர்களுக்கு இது சொர்க்கமாகத் தெரிகிறது.

ஆனால் நிறைநிலை பெற்றவர்களுக்கோ இந்தப் பிரபஞ்சம் கடவுளாகவே தெரிகிறது. கண்ணை மறைத்த திரை அப்போது, அப்போது மட்டுமே விலகுகிறது. தூய்மையடைந்த மனிதனுக்குக் காட்சி முழுவதுமே மாறி விடுகிறது. கோடிக்கணக்கான வருடங்களாக அவனைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த கெட்ட கனவுகள் எல்லாம் மறைகின்றன. தன்னை மனிதனாகவோ தேவனாகவோ பேயாகவோ நினைத்துக்கொண்டு, தான் பூமியிலோ நரகத்திலோ சொர்க்கத்திலோ வாழ்வதாக எண்ணிக் கொண்டிருந்தவன். தான் உண்மையில் எங்கும் நிறைந்தவன் என்பதை உணர்கிறான். தான் காலத்திற்குக் கட்டுப்பட்டவன் அல்ல, காலம் தனக்குக் கட்டுப்பட்டது என்பதை உணர்கிறான். எல்லா சொர்க்கங்களும் தனக்குள்ளேயே இருக்கின்றன, தான் எந்தச் சொர்க்கத்திலும் இல்லை என்பதை உணர்கிறான். மனிதன் வழிபட்ட தெய்வங்கள் எல்லாமே தனக்குள்ளேயே இருக்கின்றன. தான் எந்தத் தெய்வத்திற்கு உள்ளேயும் இல்லை என்பதை உணர்கிறான். தேவர்கள், பிசாசுகள், மனிதர்கள், தாவரங்கள், மிருகங்கள், கற்கள் எல்லாவற்றையும் படைத்தவன் தானேதான், தனது உண்மையான இயல்பு சொர்க்கத்தை விட உயர்ந்தது, இந்தப் பிரபஞ்சத்தைவிட முழுமையானது, எல்லையற்ற காலத்தைவிட எல்லையற்றது, எங்கும் நிறைந்த ஆகாசத்தைவிட எங்கும் நிறைந்தது என்பதை உணர்கிறான்.

இவ்வாறு மட்டுமே மனிதன் அச்சம் அற்றவனாகவும் சுதந்திரனாகவும் ஆகிறான். அப்போது எல்லா பொய்த் தோற்றங்களும் துன்பங்களும் மறைகின்றன; என்றும் பயமற்ற நிலையை அவன் அடைகிறான். அவனுக்குப் பிறப்பு இல்லை, இறப்பு இல்லை; துன்பமும் இல்லை, அதனுடன் இன்பங்களும் இல்லை; பூமி இல்லை, சொர்க்கங்களும் இல்லை; உடலும் மனமும் இல்லை. அவனுக்குப் பிரபஞ்சம் முழுவதுமே மறைந்தது போலாகிவிடுகிறது. இந்தத் தேடல், ஓடல், ஆற்றல்களின் இந்த இடையறாத போராட்டம் எல்லாம் நின்று விடுகின்றன. எந்தப் போராட்டமும் அவனுக்கு இல்லை. சக்தியாக, ஜடப்பொருளாக, இயற்கையின் போராட்டங்களாக, இயற்கையாக, சொர்க்கங்களாக, பூமிகளாக, தாவரங்களாக, மிருகங்களாக, மனிதர்களாக, தேவதைகளாக இதற்குமுன் தோன்றியவை இப்போது, வேறுபடாத, மாற்றமற்ற எல்லையற்ற ஒன்றாக அவனுக்குத் தெரிகிறது. இவ்வாறு அனுபவம் பெற்றவன், அந்த ஒன்று, தானே என்பதை உணர்கிறான்.

பல வண்ண மேகங்கள், ஆகாயத்தில் தோன்றி, சிறிதுநேரம் இருந்துவிட்டு மறைகின்றன. அதுபோல் பூமிகள், சொர்க்கங்கள், சந்திரன், தேவர்கள், இன்ப துன்பங்கள் எல்லாம் காட்சிகள் போல் ஆன்மாவின் முன் தோன்றுகின்றன. மேகங்கள் மறைந்ததும் என்றும் மாற்றமடையாத, எல்லையற்ற ஒரே நீல வானம் வெளிப்படுகிறது. வானம் மாறுவதே இல்லை; மேகங்களே மாறுகின்றன. வானம் மாறுகிறது என்று நினைப்பதே தவறு. நாம் தூய்மை அற்றவர்கள், எல்லைக்கு உட்பட்டவர்கள், தனித்தனியானவர்கள் என்றெல்லாம் நினைப்பது தவறு. உண்மை மனிதன் ஒன்றேயான பரம்பொருள்.

இப்போது இரண்டு கேள்விகள் எழுகின்றன. இதை உணர்வது சாத்தியமா? இதுவரை இது கோட்பாடாக, தத்துவமாக இருந்தது. ஆனால் இதை உண்மையில் உணர முடியுமா? என்பதே முதல் கேள்வி. நிச்சயம் முடியும். மாயையின் பிடியிலிருந்து நிரந்தரமாக விடுபட்ட மனிதர்கள் இன்றும் உலகில் இருக்கிறார்கள். இந்த அனுபூதி வந்தவுடனேயே அவர்கள் இறந்து விடுகிறார்களா என்ன? நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சீக்கிரம் அவர்கள் இறப்பதில்லை. ஒரே அச்சில் இணைந்த இரு சக்கரங்கள் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு, ஒரு கோடாரியால், அச்சை நான் வெட்டிவிடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் பிடித்துக் கொண்டிருக்கும் சக்கரம் நின்றுவிடுகிறது. ஆனால் மற்றொரு சக்கரம், ஏற்கனவே உள்ள உந்துசக்தியால் சிறிது தூரம் ஓடி, பிறகு கீழே விழுகிறது.

தூய்மையானதும் முழுமையானதுமான இந்த ஆன்மா ஒரு சக்கரம். பொய்த் தோற்றங்களான உடலும் மனமும் இன்னொரு சக்கரம். இவை இரண்டையும் கர்மவினை என்ற அச்சு பிணைக்கிறது. ஞானமே இந்தப் பிணைப்பைத் துண்டிக்கும் கோடரி. ஆன்மாவாகிய சக்கரம் உடனே நின்றுவிடும். தான் வருவதாகவும் போவதாகவும், வாழ்வதாகவும் சாவதாகவும், தான் இயற்கையே என்று நினைப்பதையும் தனக்குத் தேவைகளோ ஆசைகளோ இருப்பதாக நினைப்பதையும் அது நிறுத்திவிடும். தான் முழுமையானதும், ஆசையற்றதுமான ஒன்றே என்பதை அது உணர்ந்துகொள்ளும். ஆனால் உடலும் மனமுமாகிய மற்றொரு சக்கரத்திலோ, கர்மவினையின் உந்து சக்தி இன்னும் ஓயவில்லை. எனவே அது தீரும்வரை வாழ்ந்து, கர்ம வினையைத் தீர்த்துவிட்டுப் பிறகு நின்று விடுகிறது; உடலும் மனமும் வீழ்கிறது, ஆன்மா விடுதலை அடைகிறது.

இதற்குப் பின் ஏதோ ஒரு சொர்க்கத்திற்குப் போவதும் திரும்பி வருவதும் இல்லை. பிரம்மலோகத்திற்கும் வேறெந்த மிக உயர்ந்த உலகங்களுக்கும் போவதோ வருவதோ இல்லை. அவன் எங்கே போவது? எங்கிருந்து வருவது? இந்த உலகில் வாழும்போதே, ஒரு நிமிட நேரமாவது இந்த நிலையை அடைந்தவனுக்கு உலகின் சாதாரணத் தோற்றம் மறைந்து, உண்மை உள்ளபடி தெரிகிறது. அவன் ஜீவன் முக்தன் என்று அழைக்கப்படுகிறான். வாழும்போதே முக்தி பெறுகின்ற இந்த நிலைதான் வேதாந்திகளின் குறிக்கோள்.

ஒருமுறை மேற்கு இந்தியாவில் இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்திலுள்ள ஒரு பாலைவனப் பிரதேசத்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். நாட்கணக்கில் அந்தப் பாலைவனத்தின் வழியாக நான் நடந்து சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால் அழகிய ஏரிகள் அங்கே தினமும் என் கண்களில் தென்படும். சுற்றிலும் மரங்கள் உயர்ந்து நிற்கும். அந்த மரங்களின் நிழல்கள், ஏரிகளில் தலைகீழாக அசைந்து கொண்டிருப்பதையும் நான் பார்த்தேன். ஆகா எத்தனை அற்புதமாக இருக்கிறது! இதைப் போய் பாலைவனம் என்கிறார்களே! என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இவ்வாறு அழகிய ஏரிகளையும் மரங்களையும் பார்த்தவாறே ஒரு மாதம் பயணம் செய்தேன். ஒருநாள் எனக்கு மிகவும் தாகமெடுத்தது. தண்ணீர் குடிப்பதற்காக இந்தத் தெளிந்த நீர் நிறைந்த அழகிய ஏரிகளுள் ஒன்றை நோக்கிச் சென்றேன். நான் அதை நெருங்கியபோதோ அது மறைந்துவிட்டது. ஆ, வாழ்நாள் முழுவதும் நான் கேள்விப்பட்ட கானல்நீர் இதுதான் என்று எண்ணிக் கொண்டேன். ஒரு மாதமாகத் தினந்தோறும் கானல்நீரையே பார்த்தும், அது கானல்நீர் என்று தெரியவில்லையே என்ற எண்ணம் தோன்றுகிறது. அடுத்தநாள் காலையில் மறுபடியும் பயணத்தைத் தொடங்கினேன். மறுபடியும் ஏரிகள் தெரிந்தன. ஆனால் அது வெறும் கானல்நீரே, ஏரியல்ல என்ற அறிவும் கூடவே தோன்றியது.

இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய விஷயமும் இப்படித் தான். கானல் நீராகிய இந்த உலகில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக, அது கானல்நீர் என்று தெரியாமலேயே பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இந்த தோற்றம் மறையும். ஆனால் மறுபடியும் வரும். வினைப்பயனின் சக்திக்குக் கட்டுப்பட்டே உடல் இயங்குகிறது. எனவே அது தீரும்வரை இந்தக் கானல்நீர் தோன்றவே செய்யும். முன்பிருந்தது போலவே ஆண், பெண், மிருகங்கள், தாவரங்கள், ஆசாபாசங்கள், கடமைகள் என்று எல்லாம் வந்துசேரவே செய்யும். ஆனால் இவையெல்லாம் முன்னைப்போல் அவ்வளவு சக்தி உடையவையாக இருக்காது. இந்தப் புதிய ஞானத்தால் கர்மவினையின் வலிமை முறிந்துவிடும்; விஷத்தன்மை மறைந்துவிடும். அது முற்றிலும் மாறிவிடும். ஏனென்றால், கானல்நீரைப் பார்க்கும்போதே, அதற்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்.

இனி, இந்த உலகம் முன்னைப்போல் நம் கண்ணுக்குத் தென்படாது. இங்கே ஓர் ஆபத்து உள்ளது. எல்லா நாடுகளிலும் சிலர் இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, நான் தர்மம், அதர்மம் எல்லாவற்றையும் கடந்தவன். எந்த ஒழுக்கவிதியும் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் என் விருப்பம்போல் செய்வேன் என்று சொல்லித் திரிவதைக் காணலாம். நான் கட்டுப்பட்டவன் அல்ல. நானே கடவுள்; நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சொல்கின்ற பல முட்டாள்களை இந்த நாட்டிலும் காணலாம். பவுதீக, மன, ஒழுக்க விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா என்பது உண்மையாக இருந்தாலும், இவர்கள் சொல்வது சரியல்ல. விதிகளுக்குக் கட்டுப்பட்டது பந்தம், விதிகளுக்கு அப்பாற்பட்டது சுதந்திரம். சுதந்திரம் ஆன்மாவின் இயல்பு; அது ஆன்மாவின் பிறப்புரிமை என்பது உண்மைதான். அந்தச் சுதந்திரமே ஜடப்பொருள் என்னும் திரை வழியாக போலிச் சுதந்திரமாக ஒளிவிடுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் சுதந்திரமானவர்கள் என்று உணர்கிறோம். அந்த உணர்வு இல்லாமல் நம்மால் ஒரு கணம்கூட வாழவோ, பேசவோ, மூச்சுவிடவோ முடியாது. அதேவேளையில், சிறிது சிந்தித்தாலே நாம் வெறும் எந்திரங்களைப் போல் தான் இருக்கிறோம், சுதந்திரமாக இல்லை என்பது விளங்கி விடும்.

அப்படியானால் எது உண்மை? சுதந்திரம் என்ற கருத்து வெறும் பிரமைதானா? ஆம், பிரமைதான் என்று ஒரு பிரிவு கூறுகிறது. இல்லை, பந்தம் என்ற கருத்துதான் பிரமை என்று மற்றொரு பிரிவு கூறுகிறது. இது எப்படி நடக்கிறது? மனிதன் உண்மையில் சுதந்திரனே; உண்மையான மனிதன் சுதந்திரனாகத்தான் இருக்க முடியும். மாயையின் இந்த உலகத்திற்குள் நுழைந்தவுடன் தான். நாமரூபத்திற்கு உட்படும்போதுதான் அவன் கட்டுப்படுகிறான். சுதந்திர சுயேச்சை என்பதே தவறு. சுயேச்சை ஒருபோதும் சுதந்திரமாக இருக்க முடியாது. அது எப்படி இருக்க முடியும்? உண்மையான மனிதன் பந்தத்திற்கு உள்ளாகும் போதுதான் சுயேச்சை தோன்றுகிறது; அதற்கு முன் இல்லை. மனிதனின் சுயேச்சை கட்டுப்பட்டது; ஆனால் அந்தச் சுயேச்சைக்கு அடிப்படையாக இருப்பது என்றென்றும் சுதந்திரமானது.

பூமியிலோ, சொர்க்கத்திலோ, மனித வாழ்க்கை அல்லது தேவ வாழ்க்கை என்று நாம் சொல்லும் கட்டுப்பட்ட நிலைகளிலோகூட, நமது தெய்வீக உரிமையான சுதந்திரத்தின் நினைவு நமக்கு இருந்துகொண்டேதான் இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அதை அடைவதற்காகவே நாம் போராடுகிறோம். ஒரு மனிதன் தனக்கே உரித்தான சுதந்திர நிலையைப் பெற்றுவிட்டால், எந்த விதித்தான் அவனைக் கட்டுப்படுத்த முடியும்? இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்த நியதியும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் இந்தப் பிரபஞ்சமே அவனுடையதுதான்.

அவனே பிரபஞ்சம். அவனே பிரபஞ்சம் என்றோ, அவனைப் பொறுத்தவரை பிரபஞ்சம் என்பது இல்லை என்றோ, எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். பால் வேறுபாடு, நாடு போன்ற குறுகிய கருத்துக்கள் அவனுக்கு எப்படித் தோன்ற முடியும்? நான் ஆண், நான் பெண், நான் குழந்தை என்று அவன் எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்? அவை பொய்கள் அல்லவா? அவை பொய்களே என்பது அவனுக்குத் தெரியும். இவை ஆணின் உரிமைகள், இவை பெண்ணின் உரிமைகள் என்று எப்படிப் பிரித்துச் சொல்ல அவனால் முடியும்? யாருக்கும் உரிமைகள் இல்லை; தனித்தனியாக யாரும் இல்லை. ஆணோ பெண்ணோ இல்லை; ஆன்மாவிற்குப் பால்வேறுபாடே இல்லை. அது நிரந்தரமாகத் தூய்மையானது. நான் ஆண், நான் பெண், நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன், அந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். இந்த உலகம் முழுவதுமே எனது நாடு. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே என்னுடையது. ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தையே நான் என் உடலாகக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சிலர் இந்தக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்கின்ற அதேவேளையில், கேவலமானவை என்று சொல்லத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அது உங்கள் மனமயக்கமே தவிர, நான் தவறே செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். அவர்களைச் சோதித்தறிவது எப்படி? இதோ இப்படித்தான்:

தீமையும் நன்மையும் ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வெளிப்பாடுகள். ஆனால் தீமை என்பது ஆன்மாவைச் சுற்றியிருக்கும் உறைகளுள் எல்லாவற்றிற்கும் வெளியில் இருக்கும் உறை; ஆன்மாவிற்கு மிகவும் அருகிலுள்ள உறை நன்மையே ஆகும். தீமையாகிய வெளியுறையைக் கிழித்துச் சென்றால்தான் உள்ளுறையாகிய நன்மையை அடைய முடியும். தீமை, நன்மை ஆகிய இரு உறைகளையும் கிழித்துச் சென்றால்தான் ஆன்மாவை அடைய முடியும். ஆன்மாவை அடைந்தவனுக்கு என்ன பந்தம் இருக்கிறது? ஏதோ சிறிது கர்மவினை, கடந்த பிறவியிலுள்ள உந்துசக்தியின் ஏதோ சிறு இயக்கம் அவ்வளவுதான். ஆனால் இது நல்ல கர்மவினை மட்டுமே. தீய வினைகளாகிய மாசுகள் முழுவதையும் எரித்து அழிக்காமல் யாராலும் உண்மையைக் காணவோ உணரவோ முடியாது. ஆகவே ஆன்மாவை அடைந்து, உண்மையை உணர்ந்தவனிடம் ஒட்டிக்கொண்டிருப்பதெல்லாம் நல்வினைகளின் மிச்சம் மட்டுமே.

இந்த உடலிலேயே அவன் வாழ்ந்து, இடையறாது வேலை செய்தாலும், அது நற்பணியாகவே இருக்கும். அவனது வாயிலிருந்து எல்லோருக்கும் ஆசீர்வாதமே வெளிவருகிறது. அவனுடைய கைகள் நற்பணியை மட்டுமே செய்கின்றன. அவனுடைய மனத்தால் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்க முடிகிறது. அவன் போகும் இடங்களெல்லாம் ஆனந்தம் நிறைவு பெற்றதாகிறது. அவன் ஆசிகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறான். அத்தகையவனின் திருமுன்னிலையில் மிகவும் கொடியவர்கள்கூட மகான்களாகி விடுகிறார்கள். அவன் வாய் திறந்து பேசாதிருந்தால்கூட, அவனுடைய சான்னியத்தியமே மக்களுக்குப் பெரும்பேறாக விளங்குகிறது. அத்தகையவன் தீமை செய்ய முடியுமா? கொடிய செயல்கள் செய்ய முடியுமா? வெறும் பேச்சும் ஆன்ம அனுபூதியும் இரண்டு துருவங்கள். எந்த முட்டாளாலும் பேச முடியும். கிளிகள் கூடப் பேசுகின்றன. பேசுவது வேறு, உண்மையை உணர்வது வேறு. தத்துவங்கள், கோட்பாடுகள், வாதங்கள், புத்தகங்கள், கொள்கைகள், கோயில்கள், மதப் பிரிவுகள் இவையெல்லாம் தத்தம் வழியில் சிறந்தவையே. ஆனால் அனுபூதி வரும்போது இவை விலகி விடுகின்றன.

உதாரணமாக, தேசப் படங்கள் பயனுள்ளவைதாம். ஆனால் நாட்டை நேரடியாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகு படத்தைப் பார்த்தால் எவ்வளவு வேறுபாடு தெரிகிறது! ஆகவே உண்மையை உணர்ந்தவர்களுக்கு, தர்க்கவாதத்தின் சிக்கலான முறைகளோ கடுமையான அறிவுப் பயிற்சிகளோ தேவையில்லை. உண்மை அவர்களுடைய ரத்தத்தோடு ரத்தமாக ஊறிவிட்டது. அவர்கள் உண்மையின் உருவமாகவே இருக்கிறார்கள். வேதாந்த ரிஷிகள் சொல்வது போல், உண்மை அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இருக்கிறது. நீங்கள் எழுந்து நின்று இதோ இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதேபோல், உண்மையை உணர்ந்தவர்கள், இதோ, ஆன்மா இருக்கிறது என்று தைரியமாகச் சொல்ல முடியும்.

நாம் அவர்களோடு வருடம் முழுவதும் வாதாடலாம். ஆனால் அவர்கள் நம்மைப் பார்த்துப் புன்னகை செய்வார்கள். நம்முடைய வாதங்களையெல்லாம் குழந்தையின் உளறலாகவே அவர்கள் மதிப்பார்கள். குழந்தைதானே, உளறட்டும் என்று விட்டுவிடுவார்கள். அவர்கள் உண்மையை உணர்ந்துவிட்டார்கள், நிறைநிலையை அடைந்துவிட்டார்கள். நீங்கள் ஒரு நாட்டைப் பார்த்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வேறொருவன் வந்து அப்படி ஒரு நாடே இல்லை என்று வாதாடுகிறான். அவன் தொடர்ந்து வாதாடிக்கொண்டே போகலாம், அவ்வளவுதான். உங்களைப் பொறுத்தவரை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்ற எண்ணம்தான் உறுதியாக இருக்கும். உலகில் மனிதர்கள் இந்தச் சிறிய மதங்களைப் பற்றியெல்லாம் பேசுவது வெறும் உளறலே; மதம் என்பதன் முழு சாரம் ஆன்ம அனுபூதிதான் என்று ஆன்ம ஞானி கூறுகிறான். ஆன்ம அனுபூதியை நாம் பெற முடியும். அதற்குத் தயாராக இருக்கிறீர்களா? அதை விரும்புகிறீர்களா? விரும்புவீர்களானால், நிச்சயம் அதனைப் பெறுவீர்கள்; உண்மையான ஆன்மீகவாதிகள் ஆவீர்கள். அனுபூதி பெறும்வரை உங்களுக்கும் நாத்திகர்களுக்கும் வித்தியாசமில்லை.,நாத்திகர்கள் வேஷம் போடுவதில்லை. ஆனால் ஆன்மீகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே, அதை அனுபூதியில் அடைய முயலாதவன் வேஷதாரிகளே.

அனுபூதிக்குப் பிறகு என்ன என்பதே அடுத்த கேள்வி. இந்தப் பிரபஞ்சத்தின் ஒருமையை, ஒன்றேயான எல்லையற்ற பரம்பொருள் நாமே, இருப்பது ஆன்மா ஒன்றுதான், பல்வேறு உருவங்களாக வெளிப்பட்டுத் தோன்றுவது அதுவே என்பதையெல்லாம் அனுபூதியில் நாம் உணர்ந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு நமக்கு என்ன நேர்கிறது? நாம் செயலற்றுப் போய், ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு, அப்படியே இறந்து விடுவோமா? அதனால் உலகிற்கு என்ன நன்மை? அதே பழைய கேள்வி! முதலில் உலகிற்கு இது ஏன் நன்மை செய்ய வேண்டும்? இது உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்குக் காரணம் ஏதாவது இருக்கிறதா? இதனால் உலகிற்கு என்ன நன்மை? என்று கேட்பதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? அதற்கு என்ன பொருள்?

ஒரு குழந்தைக்கு மிட்டாய் பிடிக்கிறது. நீங்கள் மின்சார சம்பந்தமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை, இதனால் மிட்டாய் கிடைக்குமா? என்று கேட்கிறது. கிடைக்காது என்று பதில் சொல்கிறீர்கள். அப்படியானால் உன் ஆராய்ச்சியால் என்ன நன்மை? என்று கேட்கிறது. குழந்தை. அனுபூதியினால் உலகிற்கு என்ன நன்மை? எங்களுக்கு இதனால் பணம் கிடைக்குமா? என்று கேட்பதும் அது போன்றதே. அதற்கு கிடைக்காது என்ற பதில்கிடைத்ததும்,, அப்படியானால், இதனால் என்ன நன்மை? என்று கேட்கிறார்கள். உலகிற்கு நன்மை செய்வது என்பதை இந்தப் பொருளில்தான் நினைக்கிறார்கள். ஆனாலும், ஆன்ம அனுபூதி உலகிற்குப் பெரும் நன்மை தருகிறது.

அந்த நிலையை அடைந்தால், இருப்பது ஒன்றே என்பதை அனுபூதியில் உணர்ந்தால் அன்பின் ஊற்றுக்கள் எல்லாம் வற்றிவிடும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விடுவோம், இந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல், வரப்போகும் வாழ்க்கையிலும் தங்களுக்குப்பிடித்த எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்று மனிதர்கள் பயப்படுகிறார்கள். தங்களைப்பற்றி மிகச் சிறிதே நினைத்தவர்கள்தாம், உலகின் மிகப்பெரிய செயல்வீரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை.

தான் அன்பு செலுத்தும் பொருள், சாதாரணமான, சிறிய, அழியக் கூடிய பொருளல்ல என்று உணரும்போது தான் மனிதன் அன்பு செலுத்துகிறான். தான் அன்பு செலுத்தும் பொருள் ஒரு மண்கட்டியல்ல, கடவுளே என்று உணரும்போதுதான், ஒரு மனிதன் அன்பு செலுத்துகிறான். கணவன் கடவுளே என்று நினைத்தால் மனைவி கணவனை அதிகமாக நேசிப்பாள். மனைவியே கடவுள் என்று உணரும்போது கணவன் மனைவியை அதிகமாக நேசிப்பான். குழந்தைகள் கடவுளே என்று நினைக்கும் தாய் குழந்தைகளை அதிகமாக நேசிப்பாள். தன்னுடைய மிகப் பெரிய எதிரி கடவுளே என்று உணர்பவன் எதிரியையும் நேசிப்பான். ஒரு சாது கடவுளே என்று அறிபவன், அவரை மிகவும் நேசிக்கிறான். அதே மனிதன், மிகக் கொடிய பாவியையும் நேசிக்கிறான்; ஏனெனில் பாவியில் உறைவதும் கடவுளே என்பதை அவன் உணர்கிறான்.

அத்தகைய மனிதனால் உலகத்தையே அசைக்க முடியும். அவனிலுள்ள சாதாரண மனிதன் அழிந்து, அந்த இடத்தில் கடவுள் மட்டுமே நிற்கிறார். இந்தப் பிரபஞ்சமே அவனுக்கு முற்றிலும் மாறிவிடுகிறது. துன்பமான துயரமான எல்லாமே அழிந்துவிடுகின்றன; எல்லா போராட்டங்களும் மறைந்து விடுகின்றன. ஒரு கவளம் சோற்றிற்காகத் தினமும் ஈடுபடும் போராட்டங்களும் சண்டைகளும் நிறைந்த சிறைச்சாலையாக இல்லாமல், இந்தப் பிரபஞ்சம் ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிடும். அப்போது இந்தப் பிரபஞ்சமே மிக அழகாக இருக்கும். அத்தகைய மனிதனுக்கு மட்டுமே, இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று சொல்ல உரிமை உண்டு. எல்லாம் நல்லனவாகவே இருக்கின்றன என்று சொல்லும் உரிமை அவனுக்கு மட்டுமே உண்டு.

இந்த அனுபூதியால் உலகிற்கு ஏற்படும் நன்மை இதுதான். அதாவது, சண்டையும் பூசலும் நிறைந்த இந்த உலகில், அந்த உயர்ந்த உண்மையின் ஒரு சிறு பகுதியையாவது மனிதகுலம் உணருமானால், உலகின் பார்வை முழுவதும் மாறி, சண்டையும் பூசலும் இருந்த இடத்தில், அமைதி ஆட்சி புரியும் என்பதே இந்த நன்மை. மற்றவர்களை முந்த வேண்டும் என்ற இந்த நாகரீகமற்ற, மிருகத்தனமான வேகம் அப்போது உலகிலிருந்து நீங்கி விடும். அதனுடன் எல்லா போராட்டங்களும் நீங்கும். எல்லா வெறுப்புகளும் விலகும், எல்லா பொறாமைகளும் நீங்கும், எல்லா தீமைகளும் திரும்பி வராமல் மறைந்துவிடும். இந்தப் பூமியில் தெய்வங்களே வசிப்பார்கள். பூமியே சொர்க்கமாகிவிடும். தெய்வங்களே தெய்வங்களோடு விளையாடும்போது, தெய்வங்களே தெய்வங்களோடு சேர்ந்து பணி புரியும்போது, தெய்வங்களே தெய்வங்களிடம் அன்பு செலுத்தும்போது என்ன தீமை இருக்க முடியும்? தெய்வீக அனுபூதியின் மிகப்பெரிய பயன் இதுதான்.

அப்போது சமுதாயத்தில் நீங்கள் பார்க்கும் எல்லாமே முற்றிலுமாக மாறிவிடும். தீயவன் என்று யாரையுமே நினைக்க முடியாது. இதுவே முதல் பெரிய லாபம். தவறு செய்தவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களை அவமதிக்க மாட்டார்கள். இரவில் தெருவில் நடக்கும் ஏழைத் தாசியைக்கூடப் பெண்கள் கேவலமாகப் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவளிடமும் கடவுளையே காண்பார்கள். பொறாமை, தண்டனை என்ற எண்ணங்களே எழாது. அவை எல்லாமே மறைந்துவிடும். அப்போது அன்பு, மிக உன்னதமான லட்சியமாகிய அன்பு மிகச் சக்தி வாய்ந்ததாகிவிடும். எனவே மனிதகுலத்தைச் சரியான பாதையில் செலுத்துவதற்குச் சாட்டையும் சவுக்கும் தேவையாக இருக்காது.

இந்த உலக மக்களுள் கோடியில் ஒரு பங்கு மனிதர்கள் ஓரிடத்தில் அமர்ந்து, ஓ மனிதர்களே, ஓ மிருகங்களே, ஓ உயிருள்ள பிராணிகளே, நீங்கள் எல்லோரும் வாழும் இறைவனின் வெளிப்பாடுகளே என்று சில நிமிடங்கள் சொன்னால் போதும். அரைமணி நேரத்தில் இந்த உலகமே மாறிவிடும். வெறுப்பாகிய வெடிகுண்டுகளை மூலைக்கு மூலை எறிவதற்குப் பதிலாக, பொறாமையை, தீமையை உலகில் பரப்புவதற்குப் பதிலாக, எல்லாம் அவனே என்று உலகம் முழுவதுமுள்ள மக்கள் நினைப்பார்கள்.

நீங்கள் பார்க்கின்ற, உணர்கின்ற எல்லாம் அவரே. உங்களுள் தீமை இல்லாமல் வெளியில் எப்படித் தீமையைப் பார்ப்பீர்கள்? உங்கள் இதயத்தில் எங்கோ மூலையில் திருடன் இல்லாவிட்டால் வெளியில் எப்படித் திருடனைப் பார்ப்பீர்கள்? நீங்களே கொலைக்காரர்களாக இல்லாவிட்டால் வெளியில் எப்படி கொலைக்காரர்களைப் பார்ப்பீர்கள்? நல்லவர்களாக இருங்கள், உங்களுக்குத் தீமை மறைந்துவிடும். இவ்வாறு பிரபஞ்சம் முழுவதுமே மாறி விடும். சமுதாயத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய லாபமும் இது. மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய லாபமும் இதுதான்.

இந்தியாவில், மிகப் பழங்காலத்தில், இந்த எண்ணங்களை ஆராய்ந்து, முறைப்படுத்தி வைத்திருந்தார்கள். போதிய ஆசிரியர்கள் இல்லாமை, அன்னியர் படையெடுப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த எண்ணங்கள் பரவுவது தடைப்பட்டது. ஆனால் இவை மகோன்னதமான உண்மைகள். எங்கெல்லாம் இந்த உண்மைகள் கடைப்பிடிக்கப்பட்டனவோ அங்கெல்லாம் மனிதன் தெய்வம் ஆனான். இத்தகைய தெய்வ மனிதர் ஒருவரின் சேர்க்கையால் என் வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது. இந்தச் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவும் காலம் வந்து கொண்டிருக்கிறது. மடங்களிலும் ஏதோ சில பண்டிதர்கள் மட்டுமே படிக்கக்கூடிய தத்துவ நூல்களிலும், குறிப்பிட்ட பிரிவினருடையவும் பண்டிதர்களுடையவும் ஏகபோக உரிமையாகவும் மட்டுமே இல்லாமல், உலகம் முழுவதும் அவை பரவும். பாவி, புண்ணியவான், ஆண், பெண், குழந்தை, படித்தவன், பாமரன் எல்லோருடையவும் பொதுச் சொத்தாகி விடும். அதன்பின்னர் அவை உலகத்தின் சூழ்நிலையோடு கலந்து ஒன்றாகிவிடும். நாம் விடும் ஒவ்வொரு மூச்சும், நீயே அது என்று ஒலிக்கும். கோடிக் கணக்கான சூரிய சந்திரர்களைக் கொண்ட இந்தப் பிரபஞ்சம், எல்லாவற்றின் மூலமாகவும், ஒரே குரலில் நீயே அது என்றே சொல்லும்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,