மரணமிலாப் பெருநிலை!

மரணமிலாப் பெருநிலை!

மனித ஆன்மாவின் அழிவற்ற தன்மையைத் தவிர வேறு எந்தக் கேள்வி இவ்வளவு அதிகமாகக் கேட்கப்பட்டது? வேறு எந்தக் கருத்து மனிதனைப் பிரபஞ்சம் முழுவதிலும் தேடச் செய்திருக்கிறது? வேறு எந்தக் கேள்வி மனித இதயத்திற்கு இவ்வளவு நெருக்கமானதாகவும் பிரியமானதாகவும் இருக்கிறது? வேறு எந்தக் கேள்வி நம் வாழ்க்கையோடு இவ்வளவு பின்னிப் பிணைந்திருக்கிறது? கவிஞர்கள், ரிஷிகள், புரோகிதர்கள், தீர்க்கதரிசிகள் எல்லோரும் இந்தக் கருத்தை ஆராய்ந்தார்கள். முடி சூடிய மன்னர்கள் இதை விவாதித்தார்கள். பிடி சோற்றுக்குக் கையேந்தும் பிச்சைக்காரர்கள் இதைப் பற்றிக் கனவு கண்டார்கள். மனிதர்களுள் சிறந்தவர்கள் இதை நெருங்கியிருக்கிறார்கள்; சாதாரணமானவர்கள் இதை அடைய விரும்பினார்கள். இந்தக் கருத்தின் மீதுள்ள ஆர்வம் இன்னும் மறையவில்லை; மனிதகுலம் தன் இயல்பை இழக்காத வரையிலும் இது மறையவும் செய்யாது.

பலர் இந்தக் கேள்விக்குப் பலவிதமான பதில்களை அளித்திருக்கிறார்கள். வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் இந்த விவாதத்தை விட்டுவிட்டதும் உண்டு. ஆனாலும் இந்தக் கேள்வி என்றும் புதியதாக எப்போதும் இருக்கிறது. நம் வாழ்க்கையின் போராட்டத்திலும் குழப்பத்திலும் நாம் அடிக்கடி இதை மறந்துவிடத் தலைப்படுகிறோம். திடீரென்று ஒருவர் இறந்துவிடுகிறார். அவர் ஒருவேளை நாம் இதயபூர்வமாக நேசித்து வந்தவராக இருக்கலாம்; இதயத்தோடு இதயமாக இருந்த ஒருவரை மரணம் நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. அப்போது நம்மைச் சுற்றியுள்ள உலகமும் அதன் குழப்பமும் போராட்டமும் ஒரு கணம் நின்றுவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன? ஆன்மா என்ன ஆகிறது? என்ற கேள்வியை மனம் எழுப்புகிறது.

மனித அறிவு எல்லாமே அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது. அனுபவத்திலிருந்து அல்லாமல் நாம் எதையும் அறிந்துகொள்ள முடியாது. நமது பகுத்தறிவு, பொதுமைப்படுத்தப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. அனுபவங்களை இணைத்துப் பார்ப்பதால் உண்டாவதே நமது அறிவு எல்லாம். நம்மைச் சுற்றி நாம் பார்ப்பது என்ன? தொடர்ந்து மாற்றத்தைத்தான். விதையிலிருந்து செடி வருகிறது, மரமாக வளர்கிறது, பின்னர் விதைக்குள்ளேயே ஒடுங்குகிறது. இவ்வாறு வட்டத்தை நிறைவு செய்கிறது. மிருகங்களும் இதேபோல்தான்; பிறக்கின்றன, சில காலம் வாழ்கின்றன, பின்னர் இறக்கின்றன; வாழ்க்கை வட்டத்தை முடித்துக் கொள்கின்றன. மனிதனின் விஷயமும் இதேபோல்தான். மெதுவாக ஆனால் நிச்சயமாக மலைகள் பொடியாகின்றன. ஆறுகள், மெதுவாக ஆனால் நிச்சயமாக வறண்டு போகின்றன. மழை, கடலிலிருந்து தோன்றி கடலுக்குள்ளேயே சங்கமமாகிறது. எங்கு பார்த்தாலும் பிறப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், அழிவு என்று துளிகூடப் பிசகாமல், ஒன்றையொன்று பின்பற்றி வட்டங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றன.

இது நமது அன்றாட அனுபவம். வாழ்க்கை என்று நாம் சொல்லும் இந்தப் பெரிய விஷயம், பல கோடி உருவங்களையும் வடிவங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அதில்தான் எத்தனையெத்தனை வேறுபாடுகள்! அணு முதல் ஆன்மீகச் செம்மல்வரை, அனைத்தும், அனைவரும் இந்த வாழ்க்கைச் சுழலில் அடக்கம். இவை எல்லாவற்றின் ஊடேயும் ஓர் ஒருமைப்பாடு இழையோடுவதை நாம் காண்கிறோம். ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிப்பதாக நாம் நினைத்திருக்கும் சுவர் நாளுக்கு நாள் உடைந்து சிதறிக்கொண்டே போகிறது. எல்லா பொருட்களும் மூலமான ஒரே பொருளின் பல்வேறு வெளிப்பாடுகளே, பல்வேறு தோற்றங்களே, இந்தப் பல்வேறு வெளிப்பாடுகளும் எல்லையற்று நீண்டுள்ள ஒரே தொடர்ச்சியின் பல்வேறு வளையங்களே, இவையனைத்தின் ஊடேயும் இழைவது ஒரே வாழ்வுதான் என்பதை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதைத்தான் பரிணாமம் என்கிறார்கள். இந்தக் கருத்து, மனித சமுதாயத்தைப் போல் அவ்வளவு பழமையானது. ஆனால் மனித அறிவின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்தக் கருத்தும் மெருகேறி வருகிறது.

பழங்காலத்தினர் இன்னும் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். தற்காலத்தவர்களின் சிந்தனையில் அது இன்னும் சரியாக எட்டவில்லை. அதுதான் ஒடுக்கம். விதைதான் செடியாகிறது, மணற்துகள் செடியாவதில்லை. தந்தைதான் குழந்தையாகிறான், ஓர் உருண்டைக் களிமண் குழந்தையாவதில்லை. இந்தப் பரிணாம வளர்ச்சி எதிலிருந்து வருகிறது என்பதுதான் கேள்வி. விதை என்பது என்ன? விதை என்பது மரம்தான். எதிர்கால மரத்தின் எல்லா சாத்தியக்கூறுகளும் அந்த விதைக்குள் இருக்கின்றன. எதிர்காலத்தில் மனிதனாவதற்குரிய சாத்தியக்கூறுகள் அனைத்தும் குழந்தையில் இருக்கின்றன. எதிர்கால உயிரினத்தின் குணங்களெல்லாம் உயிரணுவில் இருக்கின்றன. இது என்ன? இந்தியாவின் பண்டைய தத்துவ ஞானிகள் இதை ஒடுக்கம் என்றார்கள். ஆகவே ஒவ்வொரு விரிவிற்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஏற்கனவே ஒடுங்கியிருக்காத ஒன்று விரிவடைய முடியாது. இங்கேயும் தற்கால விஞ்ஞானம் நம் உதவிக்கு வருகிறது. பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள சக்தியின் அளவு, எப்போதும் ஒரேபோல் இருக்கிறது என்பதைக் கணிதபூர்வமாக நாம் அறிந்திருக்கிறோம். ஓர் அணுவளவு ஜடப்பொருளையோ, ஒரு துளி சக்தியையோ நம்மால் பிரபஞ்சத்திலிருந்து எடுத்துவிட முடியாது. அதேபோல் ஓர் அணுவையோ துளி சக்தியையோ பிரபஞ்சத்தில் சேர்க்கவும் முடியாது.

எனவே பரிணாமம் அல்லது விரிவு சூன்யத்திலிருந்து வருவதில்லை. அப்படியானால் அது எங்கிருந்து வருகிறது? அதற்கு முந்திய ஒடுக்கத்திலிருந்துதான். மனிதனின் ஒடுக்கமே குழந்தை; குழந்தையின் பரிணாமமே மனிதன். மரத்தின் ஒடுக்கமே விதை; விதையின் விரிவே மரம். உயிரின் சாத்தியக்கூறுகளெல்லாம் உயிரணுவில் இருக்கின்றன. பிரச்சினை இப்போது சிறிது தெளிவாகிறது. உயிரின் தொடர்ச்சியான இருப்பைப் பற்றிய முதல் கருத்தை இதனுடன் சேர்த்துக் கொள்வோம். முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் அடைந்த மனிதன் வரையில் உண்மையில் ஒரே உயிர்தான் இருக்கிறது. ஒரு வாழ்க்கையில் பல்வேறு நிலைகளைப் பார்க்கிறோம். அது போல் இந்த ஒரே உயிரணுதான் குழந்தையாகி, வாலிபனாகி, கிழவனாவது போல், முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் பெற்ற மனிதன்வரை ஒரே உயிர்தான் பரிணமிக்கிறது. எல்லாம் ஒரே தொடர் சங்கிலிதான். இதுதான் பரிணாமம். ஆனால் ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்று நாம் பார்த்தோம். ஒரே உயிர்தான் தன்னைத்தானே நிதானமாக வெளிப்படுத்திக் கொள்கிறது. முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் பெற்ற மனிதன்வரை விரிவடைந்து, பூமியில் கடவுளின் அவதாரம்வரை வருகின்ற இந்தச் சங்கிலித் தொடர் முழுவதுமே ஒரே உயிர்தான். இந்த வெளிப்பாடு முழுவதுமே அந்த முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கியிருந்திருக்க வேண்டும். இந்த வாழ்க்கை முழுவதுமே, ஏன், இந்த மனிதக் கடவுள்கூட அதிலேயே ஒடுங்கியிருக்க வேண்டும்; அந்த ஒடுக்கத்தில் இருந்து மெதுவாக வெளிவந்து, மிகவும் மெதுவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறது. மிக உயர்ந்த வெளிப்பாடும் அங்கே நுட்பமான வடிவில் இருந்திருக்க வேண்டும். எங்கும் நிறைந்துள்ள பிரபஞ்ச வாழ்வு என்பதன் ஒடுக்கமே இந்தத் தொடர் சங்கிலி முழுவதுமான அந்த ஒரே சக்தி. இந்தப் பேரறிவுதான் முதல் உயிரணுவிலிருந்து நிறைமனிதன் வரை நிதானமாக விரிவடைகிறது. அது வளர்கிறது என்பதில்லை. வளர்ச்சி என்ற கருத்தையே மனத்திலிருந்து நீக்கிவிடுங்கள். வளர்ச்சி என்றாலே எப்போதும் வெளியிலிருந்து வருகின்ற ஒன்றுடன் தொடர்புடையது. எல்லா உயிர்களுள்ளும் அடங்கியிருக்கும் எல்லையற்ற பொருள், புறத்திலுள்ள எதையும் சார்ந்ததல்ல என்ற உண்மையை, வளர்ச்சி என்ற கருத்து பொய்யாக்கிவிடும். அது வளரவே முடியாது. அது எப்போதும் இருக்கிறது; தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது, அவ்வளவுதான்.

காரணத்தின் வெளிப்பாடே காரியம். காரணத்திற்கும் காரியத்திற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் எதுவுமில்லை. இந்த டம்ளரை எடுத்துக் கொள்வோம். டம்ளரின் மூலப்பொருளும், டம்ளரை உருவாக்கிய நிமித்த காரணமாகிய மனிதனின் சித்தமும் சேர்ந்து, அதனை உருவாக்கியிருக்கின்றன. இந்த இரண்டுமே டம்ளருக்குக் காரணம். அவை இந்த டம்ளரில் இருக்கின்றன. அவை எந்த உருவத்தில் டம்ளரில் இருக்கின்றன? இணைக்கும் சக்தியாக. இந்தச் சக்தி இல்லாவிட்டால் டம்ளர் தூள்தூளாகப் பிரிந்துவிடும். அப்படியானால் காரியம் என்பது என்ன? காரணத்தைப் போன்றதுதான் காரியமும்; ஆனால் வேறு உருவத்தில் இருக்கிறது, வேறு அமைப்பில் இருக்கிறது. காரணம் உருமாறி கால வரையறைக்குள் வரும்போது காரியமாகிறது. நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்தை உயிர் பற்றிய நம் கருத்தோடு பொருத்திப் பார்த்தால், முதல் உயிரணுவிலிருந்து நிறை மனிதன்வரை உள்ள ஒரே உயிர்தான் பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு உயிர்களாகத் தோற்றம் அளிக்கிறது என்பதை உணரலாம். முதலில் அது ஒடுங்கி நுட்ப உருவாகியது. பின்னர், காரணமாகிய அந்த நுட்ப உருவிலிருந்து விரிவடைந்து, பரிணமித்தபடி, தூலமாக வெளிவருகிறது.

ஆனால் மரணமற்ற நிலைபற்றிய கேள்விக்கு நாம் இன்னும் ஒரு முடிவு காணவில்லை. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எதற்குமே அழிவில்லை என்பதைப் பார்த்தோம். புதிதாக எதுவும் இல்லை, புதிதாக எதுவும் வராது. ஒரே சங்கிலித் தொடரான வெளிப்பாடுகள்தான் சக்கரம்போல் மேலும்கீழுமாகச் சுழன்று வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே அலைகள் போல் எழுவதும் விழுவதுமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. நுட்ப உருவங்களிலிருந்து புதுப்புது அமைப்புகள் தங்களை விரிவுப்படுத்திக் கொண்டு, தூல வடிவம் எடுத்து, மறுபடியும் கரைந்து, பழைய நுட்பநிலையை அடைகின்றன. மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது. எல்லா உயிர்களின் விஷயமும் இப்படித்தான். உயிரின் வெளிப்பாடு ஒவ்வொன்றும் விரிவதும் ஒடுங்குவதுமாகவே இருக்கிறது. ஒடுங்குவது எது? உருவம்தான். உருவம் சிதறிவிடுகிறது. ஆனால் மறுபடியும் உருவெடுக்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால், உடல்களும் உருவங்களும்கூட நிலையானவைதான். எப்படி? நாம் பல பகடைக்காய்களை எடுத்து உருட்டுவதாக வைத்துக் கொள்வோம்; 6-5-3-4 என்று ஏதோ எண்கள் வருகின்றன. மறுபடியும் அந்தக் காய்களை உருட்டிக்கொண்டே இருந்தால் அதே எண்கள் மறுபடியும் வரும்; அதே சேர்க்கை வந்தேயாக வேண்டும். இந்த நியதியைப் பிரபஞ்சத்திற்குப் பொருத்திப் பார்த்தால், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஒரு பகடைக்காய் போன்றது. இவற்றின் ஒவ்வொரு சேர்க்கையின்போதும் புதிய உருவங்கள் தோன்றுகின்றன. இப்போது நம் முன் இருக்கும் உருவங்கள் இத்தகைய சேர்க்கைகளில் ஒன்று. இங்கே ஒரு டம்ளர், ஒரு மேஜை, ஒரு தண்ணீர்க் கூஜா ஆகிய உருவங்கள் இருக்கின்றன. இது ஒருவகைச் சேர்க்கை. இந்த சேர்க்கை காலப்போக்கில் சிதறிவிடும். ஆனால் மறுபடியும் இதே உருவச் சேர்க்கை எப்போதாவது வந்தே தீரும். அப்போது நாம் இங்கே இருப்போம்; இந்த உருவங்களெல்லாம் இங்கே இருக்கும்; இப்போது நாம் பேசும் விஷயத்தையே அப்போதும் பேசிக் கொண்டிருப்போம். இதே தண்ணீர்க் கூஜா அப்போதும் இருக்கும். இந்த மாதிரிச் சேர்க்கை கணக்கில்லாத முறை நிகழ்ந்திருக்கிறது; கணக்கில்லாத முறை நிகழும். தூல உருவங்களைப் பொறுத்தவரை இவ்வளவுதான். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? தூல உருவங்களின் ஒரே மாதிரிச் சேர்க்கைகளும்கூட முடிவில்லாமல் திரும்பத்திரும்ப நடந்து கொண்டிருக்கின்றன என்பதுதான்.

இந்தக் கொள்கையிலிருந்து ஒரு சுவாரஸ்யமான முடிவு வெளிவருகிறது. கீழ்க் காண்பவை போன்ற சில உண்மைகளுக்கான விளக்கங்களே அது: உங்களில் சிலர், இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து சொல்லக்கூடியவர்களைப்பார்த்திருக்கலாம். எதிர்காலம் நிர்ணயிக்கப்படவில்லை என்றால், எதிர்காலத்தைப் பற்றி ஒருவர் எப்படிச் சொல்ல முடியும்? இறந்தகாலத்தின் விளைவுகளே எதிர்காலத்தில் வருகின்றன. நாமும் அவ்வாறே காணவும் செய்கிறோம். நீங்கள் சிகாகோவிலுள்ள பிரம்மாண்டமான ரங்கராட்டினத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் சக்கரம் சுழலும் போது அதில் இணைக்கப்பட்டிருக்கும் தொட்டில்கள், ஒன்றன்பின் ஒன்றாக, வரிசையாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அந்தத் தொட்டில்களில் மக்கள் உட்காருகிறார்கள். அவர்களுக்கான சுழற்சி முடிந்ததும் அவர்கள் இறங்கிவிடுகிறார்கள். புதிய ஆட்கள் அமர்கிறார்கள். ஒவ்வொரு முறை ஏறும் குழுவும், முதல் உயிரணுவிலிருந்து பரிபூரணத்துவம் பெற்ற மனிதன்வரை உள்ள வெளிப்பாடுகள் போன்றது. ரங்க ராட்டினத்திலுள்ள சுழற்றும் சங்கிலி போன்றதுதான் முடிவற்ற எல்லையற்ற இயற்கை. உடல்களும் உருவங்களும் இந்தத் தொட்டில்களைப் போன்றவை. இந்த உடல்களில் புகுந்து இயங்கும் ஆன்மாக்கள், இந்தத் தொட்டில்களில் அமர்ந்திருக்கும் மனிதர்களைப் போன்றவை. இந்தத் தொட்டில்கள் உயரே போவதுபோல், ஆன்மாக்களும் படிப்படியாக முன்னேறி முழுமை பெற்று, தங்கள் முறை முடிந்தவுடன், தொட்டிலிலிருந்து வெளியேறும் மனிதர்களைப் போல் வெளியேறுகின்றனர். ஆனால் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்தச் சுழற்சியில் உடல்கள் இருக்கும்வரை அவை போகும் இடத்தைத் துல்லியமாகக் கணித முறையில் முன்னறிந்து சொல்ல முடியும். ஆனால் ஆன்மாக்களைப்பற்றி அப்படிச் சொல்ல முடியாது. இதுபோல், இயற்கை நிகழ்ச்சிகளின் இறந்த மற்றும் எதிர்காலங்களைப்பற்றித் துல்லியமாகச் சொல்லிவிடலாம். ஆகவே சில நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட சில காலங்களில், மறுபடியும் மறுபடியும் முன்போலவே மாறாமல் நடைபெறுகின்றன என்பதையும் இத்தகைய சேர்க்கைகள் முடிவில்லாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பதையும் காண்கிறோம். ஆனால் அது ஆன்மாவின் அமரத்துவம் அல்ல. எந்தச் சக்தியும் அழிய முடியாது. எந்த ஜடப்பொருளும் அழிய முடியாது. அவை என்ன ஆகின்றன? அவை முன்னும் பின்னுமாக இயங்கியபடி தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. கடைசியில், தோன்றிய இடத்திற்கே திரும்பிப் போகின்றன.

எந்த இயக்கமுமே நேர்கோட்டில் இல்லை. எல்லாமே வட்ட வடிவில்தான் சுழல்கின்றன. ஒரு நேர்கோட்டை எல்லையற்ற தூரம் நீட்டினால் அது வட்டமாகிறது. இது உண்மையானால் யாருக்குமே நிரந்தரமான தாழ்வு இல்லை; இருக்கவும் முடியாது. எல்லாருமே வட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டு, தோன்றிய இடத்திற்குத் திரும்பி வந்துதான் தீர வேண்டும். நீங்கள், நான், இவர்கள் எல்லாம் யார்? விரிவு, ஒடுக்கம் பற்றிய நம் விவாதத்தில், நாம் எப்படிப் பிரபஞ்ச உணர்வு அல்லது பிரபஞ்ச உயிர் அல்லது பிரபஞ்ச மனத்தின் பகுதிகளாக இருந்தாக வேண்டும் என்பதைப் பார்த்தோம். இந்த உணர்வு முதலில் தன்னை ஒடுக்கிக் கொள்கிறது. இதன் விரிவாகிய நாம், வட்டத்தை முடித்துக்கொண்டு, கடவுளாகிய பேரறிவிடம் திரும்பிப் போக வேண்டும். இந்தப் பிரபஞ்சப் பேரறிவையே இறைவன், கடவுள், கிறிஸ்து, புத்தர், பிரம்மம் என்றும், உலகியல்வாதிகள் ஆற்றல் என்றும், ஆஜ்ஞேயவாதிகள் எல்லையற்ற, எல்லாவற்றிற்கும் அப்பாலிருக்கின்ற, விளக்க முடியாத ஒன்று என்றும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் அதனுடைய பகுதிகளே.

இதுதான் இரண்டாவது கருத்து. ஆனால் இதுவும் போதாது. இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. எந்த ஆற்றலுக்கும் அழிவு இல்லை என்று சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நாம் காணும் சக்திகள் மற்றும் உருவங்களெல்லாம் பலவற்றின் சேர்க்கையே ஆகும். நமக்கு முன்னே இருக்கும் உருவங்கள் பல தனித்தனிப் பகுதிகள் சேர்ந்து ஆனவை. அதைப் போலவே ஒவ்வோர் ஆற்றலும் பல பகுதிகளால் ஆனவை. ஆற்றலைப் பற்றிய விஞ்ஞானக் கருத்தை நாம் எடுத்துக்கொண்டு, ஒவ்வோர் ஆற்றலும் பல்வேறு ஆற்றல்களின் மொத்த விளைவே என்று சொன்னால் உங்கள் தனித்துவம் எங்கே இருக்கும்? பலவற்றின் சேர்க்கையால் ஆன எதுவுமே, கடைசியில் அதன் பகுதிகளாகப் பிரியத்தான் வேண்டும். ஜடப்பொருளின் சேர்க்கையாக இருந்தாலும், ஆற்றலின் சேர்க்கையாக இருந்தாலும் அது அதன் பகுதிகளாகப் பிரிந்துதான் ஆகவேண்டும். காரணங்களின் விளைவுகளான எதுவும் அழியத்தான் வேண்டும். அது சிதறிப் பரவி அதனுடைய பகுதிகளாக ஆகிறது.

ஆன்மா ஓர் ஆற்றல் அல்ல; அது எண்ணமும் அல்ல. எண்ணத்தைத் தோற்றுவிப்பது அது. ஆனால் அதுவே எண்ணம் அல்ல. உடலைத் தோற்றுவிப்பது அது. ஆனால் அதுவே உடல் அல்ல. ஏன் அப்படி? உடல் ஆன்மாவாக இருக்க முடியாதது என்பதை நாம் காண்கிறோம். ஏன் அப்படி? ஏனென்றால் உடலுக்கு அறிவு இல்லை. ஒரு பிணத்திற்கு அறிவில்லை; கசாப்புக் கடையிலிருக்கும் ஒரு மாமிசத் துண்டிற்கு அறிவில்லை. நாம் அறிவு என்று சொல்வதன் பொருள் என்ன? எதிர்ச்செயலாற்றும் சக்தி. நாம் இதைப்பற்றி இன்னும் சற்று ஆழ்ந்து ஆராய வேண்டும். இதோ ஒரு கூஜா இருக்கிறது. நான் அதைப் பார்க்கிறேன். எப்படி? கூஜாவின்மீது பட்டுப் பிரதிபலிக்கும் ஒளிக் கதிர்கள் என் கண்ணுக்குள் போய், விழித்திரையில் ஒரு காட்சியை உருவாக்குகின்றன. அது மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அப்போதும் நான் கூஜாவைப் பார்க்க முடிவதில்லை. உணர்ச்சியை எடுத்துச் செல்லும் நரம்புகள் என்று உடலியல் வல்லுனர்கள் அழைக்கிறார்களே, அவை மூலமாகத்தான் இந்தப் பதிவு மூளைக்குப் போகிறது. ஆனால் இதுவரை எதிர்ச் செயல் எதுவும் இல்லை. மூளையிலுள்ள நரம்பு மையம், இந்தப் பதிவை மனத்திற்கு எடுத்துச் செல்கிறது. மனத்திலிருந்து எதிர்ச்செயல் எழுகிறது. இந்த எதிர்ச் செயல் எழுந்தவுடன் கூஜா கண்ணிற்குத் தெரிகிறது.

இன்னும் சாதாரணமான உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். நான் பேசுவதை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு கொசு உங்கள் மூக்கு நுனியில் அமர்ந்துகொண்டு, அதற்கே இயல்பான அந்த இன்ப உணர்ச்சியை உங்களுக்கு உண்டாக்குவதாக வைத்துக் கொள்வோம்! உங்கள் கவனம் முழுவதும் என் பேச்சின் மீதே இருப்பதால், நீங்கள் அந்தக் கொசு இருப்பதை உணர்வதில்லை. என்ன நடந்தது? கொசு உங்கள் தோலில் ஒரு பகுதியைக் கடிக்கிறது. அங்கே சில நரம்புகள் இருக்கின்றன. அவை உணர்ச்சியை உங்கள் மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. மூளையில் அந்த உணர்ச்சியின் பதிவு இருக்கிறது. ஆனால் மனம் வேறொரு காரியத்தில் ஈடுபட்டிருப்பதால் இந்தச் செயலுக்கு எதிர்ச்செயல் புரிவதில்லை. ஆகவே கொசு இருப்பது உங்களுக்குத் தெரிவதில்லை.

ஒரு புதிய பதிவு ஏற்படும்போது,மனம் எதிர்ச்செயல் புரியாவிட்டால், அந்த உணர்ச்சியை நாம் அறிவதில்லை. மனம் எதிர்ச்செயல் புரிந்துவிட்டால் நாம் உணர்கிறோம், நாம் பார்க்கிறோம், நாம் கேட்கிறோம். இந்த எதிர்ச் செயலின் மூலம்தான் அறிவொளி உண்டாகிறது என்று சாங்கியத் தத்துவ வாதிகள் கூறுகிறார்கள். உடல் அறிவொளியைக் கொடுக்க முடியாது. ஏனென்றால் கவனம் இல்லையென்றால் உணர்ச்சிகளை அறிய முடியாது. ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு மனிதன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அந்த மொழியைப் பேசிய நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. தொடர்ந்து அதனை ஆராய்ந்தபோது, அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது, அந்தமொழி பேசும் மனிதர்களிடையே வாழ்ந்தான் என்பது தெரிய வந்தது. அந்த மொழியின் பதிவுகள் அவனது மூளையில் இடம் பெற்றுவிட்டன. அவை அவனது மூளையில் பத்திரமாக இருந்தன. ஏதோ காரணத்தால், அவனது மனம் இந்தப் பதிவுகளோடு தொடர்புகொண்டபோது அறிவொளி வந்தது; அந்த மொழியைப் பேசும் திறமை அவனுக்கு வந்துவிட்டது. எனவே மனம் மட்டுமே காரணமல்ல, மனம்கூட யாரோ ஒருவரின் கைக்கருவி என்பதையே இது காட்டுகிறது. மேலே சொன்ன உதாரணத்தில், அந்த மனிதனின் மனத்தில் அந்த மொழி இருந்தது. ஆனால் அதை அவன் அறியவில்லை. பின்னால் அவன் அதை அறியும் நேரம் வந்தது. ஆகவே மனத்தைத் தவிர யாரோ ஒருவர் இருப்பது தெரிய வருகிறது. அந்த மனிதன் குழந்தையாக இருந்தபோது, அந்த யாரோ ஒருவர் தன் சக்தியைப் பயன்படுத்தவில்லை. அவன் வளர்ந்த பின், அவர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவன் அந்த மொழியைப் பேசுவதற்குத் தன் சக்தியை உபயோகித்தார்.

முதலில், இதோ உடல் இருக்கிறது; இரண்டாவதாக, எண்ணத்தின் கருவியான மனம் இருக்கிறது; மூன்றாவதாக, மனத்திற்குப் பின்னால், மனிதனின் ஆன்மா இருக்கிறது. இதை சம்ஸ்கிருதத்தில் ஆத்மன், ஆன்மா என்கிறார்கள். தற்காலத் தத்துவவாதிகள், எண்ணம் என்பது மூளையிலுள்ள மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றமே என்று சொல்கிறார்கள். ஆகவே மேலே சொன்னதைப் போன்ற நிகழ்ச்சிக்கு அவர்களால் விளக்கம் காண முடிவதில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அவர்கள் மறுக்கிறார்கள். மனம், மூளையோடு மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது, உடல் இறந்துவிட்டால் அதனால் இயங்கவும் முடியாது. ஆன்மாதான் அறிவொளி உண்டாக்கும் சக்தி; மனம் ஆன்மாவின் கருவி மட்டுமே. மனமாகிய கருவியின்மூலம் அது பொறிகளாகிய புறக்கருவிகளைத் தூண்டி அனுபவங்களைப் பெறுகிறது. பொறிகள், உணர்ச்சிகளைப் புலன்களுக்கு எடுத்துச் செல்கின்றன. கண், காது முதலியவை வெறும் பொறிகளே; உண்மையான அனுபவத்திற்குக் காரணமானவை மூளை மையங்களான அகப்புலன்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் புலன்களை சமஸ்கிருதத்தில் இந்திரியங்கள் என்று சொல்கிறார்கள். இவை உணர்ச்சிகளை மனத்திற்கும், மனம் அவற்றைப் படிப்படியாகச் சித்தத்திற்கும், சித்தம் அவற்றை ஆன்மாவிற்கும் எடுத்துச் செல்கின்றன. இந்த ஆன்மாதான், அரியணையில் அமர்ந்து ஆளும் சக்கரவர்த்தி. தகுந்தபடி கட்டளைகளைப் பிறப்பிப்பது இந்த ஆன்மாதான், பிறகு மனம் புலன்களுக்கும் புலன்கள் பொறிகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பிக்கின்றன. உண்மையில் அனைத்தையும் அனுபவிப்பவர், ஆள்பவர், அரசாட்சி புரிபவர், படைத்தவர், அனைத்தையும் இயக்குபவர் மனிதனின் ஆன்மாவே. ஆகவே உடல், ஆன்மா அல்ல, எண்ணமும் ஆன்மாவல்ல என்பதைப் பார்க்கிறோம். அதுஒரு சேர்க்கைப் பொருளாக இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால் சேர்க்கையாக இருக்கும் எதையுமே பார்க்கவோ கற்பனை செய்யவோ முடியும். நம்மால் பார்க்கவோ கற்பனை செய்யவோ சேர்த்துக்கட்டவோ முடியாத ஒன்று, ஆற்றலாகவோ ஜடப்பொருளாகவோ காரணமாகவோ காரியமாகவோ பலவற்றின் சேர்க்கையாகவோ இருக்க முடியாது. சேர்க்கையால் உண்டான எதுவும் நமது மனப்பிரபஞ்சம் மற்றும் எண்ணப் பிரபஞ்சத்திற்குள்தான் இருக்க முடியும். இவற்றிற்கு அப்பால் இவை இருக்க முடியாது. நியதி என்ற ஒன்று இருக்கும் வரைதான் கூட்டுப் பொருட்கள் இருக்க முடியும். நியதிகளைக் கடந்த நிலையில் கூட்டுப் பொருள் இல்லை. காரணகாரிய விதிகளுக்கு அப்பாற்பட்டிருப்பதால், மனிதனின் ஆன்மா கூட்டுப்பொருள் அல்ல. அது எப்போதும் சுதந்திரமானது, நியதிகளுக்குக் கட்டுப்பட்ட எல்லாவற்றையும் ஆட்சி புரிவது. அதற்கு மரணமே இல்லை. ஏனென்றால் மரணம் என்றால் மூலக்கூறுகளாகப் பிரிவது என்று அர்த்தம். எப்போதுமே மூலக்கூறுகளால் சேர்ந்து கூட்டுப் பொருளாகாத ஒன்றிற்கு மரணம் இல்லை. ஆன்மா மரணமடைகிறது என்று சொல்வது முட்டாள்தனம்.

நாம் இப்போது மிகமிக நுட்பமாகச் சென்று கொண்டிருக்கிறோம். உங்களுள் சிலர் பயப்படலாம். ஜடப்பொருள், சக்தி, எண்ணம் இவற்றாலான இந்தச் சிறிய பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கின்ற தனிப்பொருள் ஆன்மா என்பதைக் கண்டோம். தனிப்பொருளான ஆன்மா மரணமடையமுடியாது. மரணமடைய முடியாத ஒன்று வாழவும் முடியாது. ஏனென்றால் வாழ்வும் சாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். மரணத்தின் மறு பெயரே வாழ்வு; வாழ்வின் மறு பெயரே மரணம். ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டை வாழ்வு என்கிறோம்; அதே பொருளின் வேறுவிதமான வெளிப்பாட்டை மரணம் என்கிறோம். அலை உயரே எழும்போது வாழ்வு என்கிறோம்; கீழே விழும்போது மரணம் என்கிறோம். எனவே மரணத்தைக் கடந்து நிற்கும் எதுவும் வாழ்க்கையையும் கடந்தே நிற்க வேண்டும் என்பது தெரிகிறது.

கடவுளாகிய பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியே மனிதனின் ஆன்மா என்ற முதல் முடிவை இங்கு நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மா வாழ்வையும் சாவையும் கடந்தது என்பதை இப்போது காண்கிறோம். நாம் பிறக்கவும் இல்லை; நமக்கு மரணமும் இல்லை. நம்மைச் சுற்றி நாம் காணும் வாழ்வு சாவு இவையெல்லாம் என்ன? இவையெல்லாம் உடலுக்கு மட்டுமே. ஆன்மா எங்கும் நிறைந்தது. அது எப்படி? என்ற கேள்வி எழலாம். இங்கே இத்தனை பேர் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் என்னடாவென்றால், ஆன்மா எங்கும் நிறைந்தது என்று சொல்கிறீர்களே? என்று நீங்கள் கேட்கலாம். விதிகளுக்கும் காரணகாரியங்களுக்கும் அப்பாலிருக்கும் ஒன்றை எது எல்லைக்கு உட்படுத்த முடியும்? இந்த டம்ளர் எல்லைக்கு உட்பட்டது. அது எங்கும் நிறைந்தது அல்ல. ஏனெனில் சுற்றியிருக்கும் ஜடப்பொருள் அதனை, இப்போது அது பெற்றிருக்கும் உருவத்தை எடுத்துக் கொள்ளுமாறு செய்திருக்கின்றன; அந்த டம்ளர் தன்னை விரிவு படுத்திக்கொள்ளவும் அவை அனுமதிக்கவில்லை. சுற்றியிருக்கின்ற ஒவ்வொன்றும் அதைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே அது எல்லைக்கு உட்பட்டதாக இருக்கிறது. ஆனால் விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று, தன்னைப் பாதிக்க வேறு எதுவும் இல்லாத ஒன்று, எப்படி எல்லைக்கு உட்பட்டிருக்க முடியும்? அது எங்கும் நிறைந்ததாகத்தான் இருக்க முடியும். நாம் பிரபஞ்சம் முழுவதிலுமே நிறைந்திருக்கிறோம். அப்படியானால், நான் பிறந்திருக்கிறேன், நான் சாகப் போகிறேன் என்பனவெல்லாம் எப்படி உண்மையாகும்? அவை அறியாமையால் பேசும் பேச்சுக்கள்; மன மயக்கங்கள்! நாம் பிறப்பு, இறப்பு அற்றவர்கள். நாம் பிறப்பதும் இல்லை, நமக்கு மறுபிறவியும் இல்லை, வாழ்வும் இல்லை, அவதாரமும் இல்லை, எதுவுமே இல்லை. பிறப்பது இறப்பது என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்? எல்லாமே வடிகட்டின முட்டாள்தனம். நாம் எங்கும் நிறைந்திருக்கிறோம். அப்படியானால் பிறப்பதற்கும் இறப்பதற்கும் பொருள் என்ன? மனம் என்று நாம் சொல்கிறோமே, அநதச் சூட்சும சரீரத்தில் ஏற்படும் மாறுதலால் தோன்றும் மயக்கங்களே இவை.

இது நடந்துகொண்டே இருக்கிறது. வானத்தில் மிதந்து செல்லும் சிறிய மேகத் துணுக்கைப் போன்றதே இது. அது மிதந்து போகும்போது ஆகாயமே நகர்ந்து செல்வது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில், சந்திரனுக்கு முன்னால் ஒரு மேகம் நகர்ந்து செல்கிறது. சந்திரனே நகர்ந்து செல்வது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. ரயிலில் பயணம் செய்யும்போது, நிலம் ஓடுவதைப் போன்ற பிரமை உண்டாகிறது. படகில் பயணம் செய்யும்போது, தண்ணீர் ஓடுவதைப்போன்ற பிரமை உண்டாகிறது. உண்மையில், நாம் போவதுமில்லை, வருவதுமில்லை. நாம் பிறப்பதுமில்லை, மறுபிறவி எடுப்பதுமில்லை. நாம் எல்லையற்றவர்கள்; எப்போதும் இருப்பவர்கள்; காரண காரியத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்; எப்போதும் சுதந்திரமானவர்கள். ஆகவே நாம் பிறக்கிறோமே, இறக்கிறோமே என்று கேட்பதெல்லாம் அப்பட்டமான முட்டாள்தனம். பிறப்பே இல்லாதபோது, இறப்பு எப்படி இருக்க முடியும்?

இன்னுமொருபடி மேலே போனால் தர்க்கபூர்வமான முடிவுக்கு வந்துவிடுவோம். தங்குமிடம் எதுவும் வழியில் இல்லை. நாமெல்லாம் தத்துவ நாட்டம் கொண்டவர்கள். நாம் எதற்கும் தயங்கக் கூடாது. ஆகவே நாம் எல்லா விதிகளையும் கடந்தவர்களானால், எல்லாம் அறிந்தவர்களாக எப்போதும் ஆனந்த மயமானவர்களாக இருக்க வேண்டும். எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா ஆனந்தமும் நம்முள்ளே இருக்க வேண்டும். இது நிச்சயமான உண்மை. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்தவர் நாமே. ஆனால் அத்தகையோர் ஒருவருக்கு மேல் இருக்க முடியுமா? எங்கும் நிறைந்த கோடிக்கணக்கானோர் இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அப்படியானால் நம் எல்லோருடைய கதியெல்லாம் என்ன? நாம் எல்லோரும் ஒருவரே. ஆன்மா ஒன்றே. அந்த ஒரே ஆன்மா நம்முள்ளேயே உள்ளது. இந்தச் சிறிய இயற்கைக்குப் பின்னால் நிற்பது நாம் ஆன்மா என்று அழைக்கின்ற பொருள்.

உள்ளது ஒருவர்தான்; பிறப்பு இறப்பற்றவரான, சச்சிதானந்தப் பொருளான ஆன்மா அவர். அவரது ஆட்சியால்தான் வானம் விரிகிறது, காற்று வீசுகிறது, சூரியன் பிரகாசிக்கிறது. எல்லா உயிர்களும் வாழ்கின்றன. இயற்கையில் பொதிந்துள்ள உண்மை அவரே. அவரே உங்கள் அந்தராத்மா. இல்லையில்லை, இன்னும் மேலாக, நீங்களே அவர். நீங்கள் அவருடன் இரண்டறக் கலந்திருக்கிறீர்கள். இரண்டு இருந்தாலே அங்கு பயம் தான்; ஆபத்துதான்; சண்டை, பூசல், எல்லாம்தான். ஒன்றே என்னும்போது யாரை வெறுப்பது? யாரோடு போராடுவது? எல்லாம் அவராகவே இருக்கும்போது யாரோடு சண்டை போடுவீர்கள்? வாழ்க்கையின் உண்மை இயல்பை இது விளக்குகிறது, ஆன்மாவின் உண்மை இயல்பை விளக்குகிறது.

இதுவே நிறைநிலை. இதுவே கடவுள். பன்மையைப் பார்க்கும் வரை மனமயக்கத்திலேயே உள்ளோம். பன்மை நிறைந்த இந்த உலகில் ஒன்றையே பார்ப்பவன் யாரோ, இடையீடற்று மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகில், மாறுதலே அற்ற பரம்பொருளைப் பார்ப்பவன் யாரோ; அந்தப் பரம்பொருளையே தனது ஆன்மாவின் ஆன்மாவாக, தனது ஆன்மாவாகக் காண்பவர் யாரோ அவரே சுதந்திரமானவர்; ஆனந்த மயமானவர்; குறிக்கோளை அடைந்தவர். நீங்கள் அந்தப் பரம்பொருளே என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் கடவுள் நீங்கள். தத் த்வம் அஸி-நீயே அது.

நான் ஆண், பெண், நோயாளி, ஆரோக்கியமானவன், வலியவன், எளியவன், நான் வெறுக்கிறேன், அன்பு செலுத்துகிறேன், எனக்கும் சிறிது சக்தி உள்ளது என்பன வெல்லாம் வெறும் மனமயக்கங்கள். இவற்றை எல்லாம் ஒதுக்கிவிடுங்கள். உங்களைப் பலவீனர்கள் ஆக்குவது எது? பயப்படச் செய்வது எது? பிரபஞ்சத்தில் இருப்பது நீங்கள் மட்டுமே. எது உங்களை அச்சுறுத்த முடியும்? எனவே எழுந்து நில்லுங்கள். சுதந்திரமாக இருங்கள். உங்களைப் பலவீனர்களாக ஆக்கும் எண்ணங்களும் சொற்களும் மட்டுமே உலகிலுள்ள ஒரே தீமை. உங்களைப் பலவீனர்களாக, பயந்தவர்களாக ஆக்குபவைதாம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய தீமைகள். உங்களை எது பயப்படுத்த முடியும்? சூரியர்கள் கீழே விழுந்தாலும், சந்திரர்கள் பொடிப்பொடியானாலும், நட்சத்திர மண்டலங்கள் வீசி எறியப்பட்டுச் சிதறினாலும், அதனால் உங்களுக்கு எனன் வந்தது? பாறையைப்போல் உறுதியாக நில்லுங்கள். உங்களுக்கு அழிவே இல்லை. நீங்களே பிரபஞ்சத்தின் கடவுள். நீங்களே ஆன்மா. நானே சச்சிதானந்த சொரூபம், நானே அவன் என்று சொல்லுங்கள். கூண்டை உடைத்துக் கொண்டு வெளியேறுகின்ற சிங்கம்போல் சங்கிலிகளை அறுத்தெறிந்து, நிரந்தரச் சுதந்திரராகுங்கள்! உங்களைப் பயப்படுத்துவது எது? மேலே வரவிடாமல் உங்களைத் தடுப்பது எது? அறியாமையும் மனமயக்கமுமே. வேறு எதுவும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. தூய்மையும் ஆனந்தமயமுமான பரம்பொருள் நீங்களே!

அறிவிழந்த முட்டாள்கள் உங்களைப் பாவிகள் என்று சொல்கிறார்கள். நீங்களும் அதை நம்பி ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள் . நாமெல்லோரும் பாவிகள் என்று சொல்வது முட்டாள்தனம், அயோக்கியத்தனம், கொடுமை. நீங்கள் எல்லோரும் கடவுளே! உங்களைக் கடவுளாகக் காணாமல் மனிதன் என்று அழைப்பதா? துணிவிருந்தால் அந்தக் கருத்தின்மீது நின்று உங்கள் வாழ்க்கையை அதற்கேற்ப அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு மனிதன் உங்கள் கழுத்தை வெட்டினால் தடுக்காதீர்கள். ஏனெனில் நீங்களேதான் உங்கள் கழுத்தை அறுத்துக் கொள்கிறீர்கள். ஓர் ஏழைக்கு உதவி செய்ததற்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். அது வழிபாடேயன்றி, பெருமைக்குக் காரணமல்ல. இந்தப் பிரபஞ்சமே நீங்கள் அல்லவா! நீங்கள் அல்லாத ஏதாவது இங்கே இருக்கிறதா என்ன? இந்தப் பிரபஞ்சத்தின் ஆன்மா நீங்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாமே நீங்கள்தாம். நீங்களே எங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரபஞ்சம் முழுவதுமே நீங்கள்தாம். யாரை வெறுக்கப் போகிறீர்கள்? யாருடன் சண்டையிடப் போகிறீர்கள் நீங்களே அவன் என்பதை உணர்ந்து, உங்கள் வாழ்க்கையை அதற்கேற்ப அமைத்துக் கொள்ளுங்கள். இதனை உணர்ந்து, அவ்வாறே வாழ்பவர்கள் இருளில் உழல மாட்டார்கள்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,