ஆவி உலகம்-தொடர்-பாகம்-7

 ஆவி உலகம்-தொடர்-பாகம்-7

..

பழைய காலத்தில் ஊர்பகுதிகளில் கிடா(ஆண் ஆடு) நேர்ந்துவிடும் பழக்கம் உண்டு.ஒரு வீட்டில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் மறுநாளே சிறிய ஆண்ஆடு ஒன்றை வாங்கி வந்து வளர்ப்பார்கள்.(ஆண்ஆடு)


இதன் கருத்து என்னவென்றால் இறந்தவரின் ஆவி சில காலம் ஆட்டிற்குள் சென்று வாழும்.இதனால் அந்த ஆவி மனிதர்களை தொந்தரவு செய்யாது.இது மறுபிறவி மாதிரிதான்.சில இடங்களில் காளையை வளர்ப்பார்கள்.

நேர்ந்துவிடுதல் என்று கூறுவார்கள். மனிதனின் பாவத்தை ஒரு ஆட்டின்மேல் ஏற்றுதல்.அல்லது ஆவியை ஆட்டிற்குள் இறக்குதல்.இறந்தவரின் பெயர்கொண்டே அந்த ஆட்டை அழைப்பார்கள்.

இவ்வாறு நேர்ந்து விடப்பட்ட ஆடு, சுதந்திரமாக உலாவரும்.அதை கயிறுகொண்டு கட்டமாட்டார்கள். யாரும் அடிக்க மாட்டார்கள். நேர்ந்துவிடப்பட்ட ஆடு என்பது ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

ஆடு நன்றாக வளர்ந்த பிறகு கோவில் திருவிழாவின்போது பலி கொடுத்து,அதன் இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள்.

..

இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவரின் பாவம் பங்கிடப்படும். அவருக்கு சாந்தி ஏற்படும்.

மறுபிறவி ஏற்படாது என்பது கருத்து.

...

முற்காலத்தில் ஆரியர்கள் இறந்தவர்களின் உடலை, திருமணம் ஆனவரின் உடலை எரிப்பார்கள். அந்த ஆவி பித்ருலோகத்திற்கு செல்லும் . திருமணம் ஆகாதவராக இருந்தால்  இறந்த உடலை சுடுகாட்டில் அப்படியே போட்டுவிடுவார்கள்.கை கால்களை நன்றாக இறுக்கி கட்டியிருப்பார்கள்.இரவில் அந்த உடலை நரிகளும் பகவில் கழுகளும் மற்ற பிராணிகளும் சாப்பிடும். சில நாட்களுக்குப்பிறகு எலும்புகளை எரித்து ஆற்றில் கரைப்பார்கள்.

இதன் கருத்து என்னவென்றால் திருமணம் ஆகாமல் இறந்தவர் பித்ருலோகம் செல்ல முடியாது. எனவே ஆவியாக இங்கேயே உலவிக்கொண்டிருப்பார். அந்த உடலை இவ்வாறு நரிகளும் கழுகுகளும் தின்னக்கொடுத்தால் அந்த ஆவிக்கு நற்கதி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை எங்கள் ஊரின் பக்கத்தில் வசித்த பிராமணர்கள்  இப்படிப்பட்ட நடைமுறையை பின்பற்றினார்கள்.

..

இதை கூறும்போது ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.

ஒருமுறை 14 வயதுடைய ஒரு சிறுமி பாம்பு கடித்து இறந்துவிட்டாள். இறந்த உடலை இதேபோல சுடுகாட்டில் கையையும் காலையும் நன்றாக கட்டி போட்டு வைத்துவிட்டு அனைவரும் சென்றுவிட்டார்கள்.

ஆனால் அந்த பெண் மீண்டும் உயிர்பெற்றுவிட்டாள்,இறக்கவில்லை. விடியற்காலையில் சுடுகாட்டிலிருந்து சத்தம்வருவதை கவனித்த ஒருவர்(தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்) அந்த சிறுமியைமீட்டு தூக்கிக்கொண்டு தன்வீட்டிற்கு  சென்று சிகிச்சை அளித்தார். சில நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு அந்த சிறுமி உடல்நலம் பெற்றுவிட்டாள்.

அதன்பிறகு அந்த பெண்ணை மீண்டும் பெற்றோரிடம் கொண்டு சேர்க்க அந்த வீட்டில் உள்ளவர்கள் விரும்பவில்லை.

எனவே அவளை காப்பாற்றிய அந்த இளைஞருக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

..

சில ஆண்டுகள் கழிந்தபிறகு அந்த பெண் கருவுற்றாள். குழந்தை பிறப்பதற்கு முன்பு தன் பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.மனைவியின் ஆசையை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்காக கணவன் அவளை அங்கே அனுப்பிவிட்டு சிறிது தூரத்தில் காத்திருந்தார்.

..

முற்காலத்தில் ஒரு சட்டம் இருந்தது. அது என்னவென்றால் பிராமணப்பெண்ணை சூத்திர ஆண் திருமணம் செய்யக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்தால் சூத்திரனின் தலையை வெட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

இந்த சட்டம் பற்றி இருவருக்குமே தெரியாது.

..

தனது மகள் உயிரோடு வந்திருப்பதைக்கண்டு பெற்றோர்கள் மகிழ்நதார்கள். இதற்குள் அந்த செய்தி அனைவரின் காதுகளையும் எட்டிவிட்டது. 

உடனடியாக அந்த இளைஞனைப்பிடித்து தலையை வெட்டிவிட்டாரகள்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அந்த பிராமணப்பெண் உடனேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு இறந்துவிட்டாள். இறப்பதற்கு முன்பு அப்பாவியான என் கணவனின் உயிரை எடுத்த இந்த ஊரில் உள்ள அனைவரையும் கொல்வேன் என்று கூறிவிட்டு இறந்துபோனாள்

..

அவளது ஆவி மிகவும் உக்கிரமாக இருந்ததால் எந்த மந்திரத்திற்கும் கட்டுப்படவில்லை. படிப்படியாக அந்த ஊரில் உள்ளவர்களை அது பழிவாங்க ஆரம்பித்தது.இனி இந்த ஊரில் இருந்தால் உயிர் பிழைக்கமாட்டோம் என்று கருதிய பிராமணர்கள் அனைவரும் அந்த ஊரை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

..

இந்த சம்பவம் எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமாக பேசப்படும்.நான் இருக்கும் இடத்திலிருந்திருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் இந்த சம்பவங்கள் முற்காலத்தில் நடைபெற்றிருக்கின்றன.

..

வெறும் புறஆசாரங்களை மட்டுமே பார்க்கக்கூடாது. அந்த இளைஞன் மிகவும் நல்லவன். நல்லவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்? யார் தமோ குணம் நிறைந்தவனோ அவன்தான் சூத்திரன் என்று சாஸ்திரம் கூறுகிறது. தமோ குணம் நிறைந்தவன் என்றால் மதுவுக்கு அடிமையாக இருப்பவன்,சூதாடுபவன், திருடன், பிறரை ஏமாற்றி பிழைப்பவன்,எப்போதும் தூங்கும்சோம்பேரி, பிறருக்கு தீமைசெய்வதில் இன்பம் காண்பவன், கொலைகாரன்.

இவர்கள்தான் தமோகுணம் நிறைந்தவன், இப்படிப்பட்டவன்தான் சூத்திரன்.

இவர்களை நல்வழிக்கு கொண்டுவருவதற்காகத்தான் பல கடுமையான சட்டங்களை முற்காலத்தில் இயற்றினார்கள்.

பிறருக்குகீழ் அடிமையாக வேலைசெய்தால்தான் இப்படிப்பட்டவர்கள் திருந்துவார்கள் என்பதற்காக கடும் சட்டங்களை இயற்றினார்கள்.

ஆனால் ரஜோகுணமோ,சத்வகுணமோ நிறைந்த ஒருவரை சூத்திரன் என்றுகூறி கொடுமைப்படுத்துவது சாஸ்திரத்தை அறியாதவர் செய்யும் செயல். 

..

ஆவி பழிவாங்குமா என்று முன்பு ஒருவர் கேட்டிருந்தார் அதற்கான பதில் இந்த சம்பவத்தில் உள்ளது.

அதேபோல பாவத்தை நீக்குவதற்காக உடலை மிருகங்களுக்கு இரையாக்குவது என்ற கருத்தையும் இங்கே காணலாம்.

இந்த பழக்கம் இன்னும் திபெத்தில் உள் புத்தமதத்தினரிடம் உள்ளது. அங்குள்ளவர்களை உயர்ந்த மலைப்பகுதிக்கு கொண்டு சென்று இதேபோல கழுகுகளுக்கு இரையாக்குகிறார்கள்.

..

மிருகங்களுக்கு ஆவி உண்டா? மனிதனுக்கு மட்டும்தான் ஆவி உண்டா? 

..

தொடரும்...

..

இன்னும் நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

அடுத்துவரும் பதிவுகளில் பதில் சொல்கிறேன்.

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.


..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (15-4-2025)


Comments